• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

தொட்டுத் தொடரும் -11

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
300
அத்தியாயம்-11



ஸ்ரீதரன் அப்போது பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் இருந்த லௌரியா-ஆராராஜ் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்த குழுவின் தலைவராக இருந்தார். பண்டைய லௌரியா- நகரம், கிமு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ்பெற்றது.



இந்தியா வரலாற்றில் தற்போதுள்ள மிகப் பழைமையான எழுதப்பட்ட ஆதாரம், அசோகரின் தூண்களில் உள்ள கல்வெட்டுகள் தான். முதலில் பல்வேறு தூண்கள் இருந்திருக்க வேன்டும், ஆனால் தற்போது பத்தொன்பது தூண்கள் மட்டுமே உள்ளன. அதில் பல உடைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அசோகரின் "சாரநாத் சிங்க முகத் தூண்" இந்திய அரசின் தேசிய முத்திரையாகவும் மற்றும் அதன் அடிப்பகுதியில் உள்ள "அசோக சக்கரம்" இந்திய தேசிய கொடி மையச் சக்கரமாகவும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.



2010 -ஆம் ஆண்டு வரை அசோகரது தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் அதனை சுற்றி இருந்த இடங்களில் வேறு எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. தூண்களில் உள்ள கல்வெட்டுகளை பொருத்து 2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு இடமாக அகழ்வாராய்ச்சி நடத்த அரசாங்கம் முடிவு செய்தது. இறை அர்ப்பணிப்பு பற்றியான கல்வெட்டுகள் சில தூண்களில் காணப்படுகின்றன. சிலவற்றில் அசோகரின் ஆணைகள் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டுக் குறிப்புகள் காணப்படுகின்றன. சிலவற்றில் எந்த வகையான கல்வெட்டுகளும் இல்லை.



கிட்டத்தட்ட ஆராய்ச்சி பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், இறுதி அறிக்கையை தயாரிப்பது தான் ஸ்ரீதரனின் அடுத்த கட்ட வேலையாக இருந்தது. தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைகளைப் பெற்று தேவையான மாறுதல்களை செய்து இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பு, குழுவின் தலைவர் என்ற முறையில் ஸ்ரீதரனின் வசம் இருந்தது. வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாத பொறுப்பு அது.



இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று மாத காலம் அவகாசம் உண்டு. எங்கிருந்து வேண்டுமானாலும் அறிக்கையை தயார் செய்யலாம் என்றாலும் சில நேரங்களில் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக மற்ற ஆராய்ச்சியாளர்கள் உடன் கலந்தாய்வு செய்யவேண்டியிருக்கும், ஆராய்ச்சி நடைபெற்ற இடத்திற்கு பயணப்பட வேண்டியது இருக்கும். இவற்றிற்கெல்லாம் இன்றைய வீட்டு சூழ்நிலை ஒத்துழைக்குமா என்ற பல்வேறு குழப்பங்களுடன் இருந்தவர், முதலில் ஊருக்குச் சென்று மகனது நிலையை அறிவோம், மற்றவைகளை சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றதால் பயணத்திற்கான வழிகளை ஆராய்ந்தார்.



பாட்னாவில் இருந்தும் சென்னைக்கு நேரடியான விமான போக்குவரத்து என்பது மிகவும் குறைவே. பாட்னாவில் இருந்து நூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்த தனது பணியிடத்தில் இருந்து, இந்த ராத்திரி வேளையில் எப்படி சென்னை செல்வது என்று பெரிய குழப்பத்தில் இருந்தவர், இப்போது மகனுக்கு மருத்துவ உதவி கிடைத்துவிட்டதால் பாட்னாவில் இருந்து மறுநாள் முன்மாலையில் கிளம்பும் விமானத்திலேயே சென்னை செல்வதாக முடிவு செய்தார்.



தான் இல்லாத நிலையிலும் அவரவர் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று தனது குழுவினரை அறிவுறுத்தியவர், ராத்திரி வேளையில் அழைக்க முடியாத காரணத்தால், உயர் அதிகாரிக்கு ஒரு விரிவான மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். இதற்கிடையே அவ்வப்போது கிருஷ்ணனிடம், மகனது நிலையை விசாரித்துக் கொண்டு இருந்தார். சமாதானம் அடையும் வகையில் பேசினாலும், அவரும் மகனது நிலை பற்றி தெளிவாக எதையும் கூறவில்லை. இவை எல்லாம் சேர்ந்து அவரைக் குழப்பத்திலேயே வைத்திருந்தன



நேற்றிரவு வந்த முதல் அழைப்புக்கு பிறகு, இதுவரை ஸ்ரீநிதியிடம் பேசவே இல்லை. ஸ்ரீநிதியின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் நேரடியாக அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. மகளிடம் பேச நினைக்கும் போதெல்லாம் கிருஷ்ணன் தான் பேசினார். அண்ணனின் நிலை கண்டு பெரும் பயத்தில் இருந்த ஸ்ரீநிதி, தந்தையிடம் எதையாவது சொல்லி அவரை மேலும் கலவரப் படுத்த வேண்டாம் என்று நினைத்த கிருஷ்ணன் அவளைப் பேசவே விடவில்லை என்பதையும், மேலும் ஸ்ரீதரனின் அழைப்புகளைப் பற்றி அவள் அறியாமல் பார்த்துக்கொண்டார் என்பதையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.



ஒருவழியாக மறுநாள் இரவு 7 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தவர், நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்த நிலையில் மகனை பார்த்தவர், மனதின் பாரம் தாங்க முடியாமல் தான் இருக்கும் இடம் ஐசியு என்பதையும் பொருட்படுத்தாது வாய் விட்டு அழத் தொடங்கினார்.



நேற்று இரவிலிருந்து இன்று விமானம் ஏறும் வரை பல முறை கிருஷ்ணனிடம், அலைபேசியின் மூலம் மகனது நிலைமையை கேட்டு அறிந்து கொண்டே இருந்தாலும், நேரில் பார்க்கும் போது மனதை ஏதோ செய்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் போல் படுத்திருந்தவன், அவரது தொடுகையை உணர்ந்தவன் போல ஏதோ புலம்ப ஆரம்பிக்க சூழ்நிலை மிகவும் கனமானதாக மாறியிருந்தது.



ஸ்ரீவத்ஸன் சிறு வயதில் மிகவும் துறுதுறுவென இருந்தவன், எப்போது தனக்குள் ஒடுங்கிப் போனான் என்பதே புரியவில்லை. பதின்வயதில் இருந்த மகனுக்குத் தேவையான நேரத்தில் உடனிருக்க தவறி விட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரை ஆட்டிப் படைத்தது. அவர்கள் சென்னை வந்த பிறகு, அடிக்கடி நேரில் வர முடியாவிட்டாலும் தினமும் அலைபேசியில் பிள்ளைகளுடன் பேசி, ஒரு தந்தையாக அவர்களது மனநிலையை ஆரோக்கியமாக வைப்பதற்கு தன்னால் இயன்ற அளவு ஸ்ரீதரன் முயற்சி செய்து கொண்டிருந்தார்.



அவர்களது ஆராய்ச்சி இறுதிக் கட்டத்தை அடைந்து விட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய கலந்தாய்வில் பங்கு கொள்வதற்காக, கடந்த வாரம் முழுவதும் டெல்லி சென்று இருந்தார். அங்கிருந்த வேலைப் பளு காரணமாக பிள்ளைகளுடன் சரியாக பேச முடியவில்லை. டெல்லியில் இருந்து வந்த பின்பும், தனது குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி அவரவர் அறிக்கையைத் தயாரிப்பதற்கான கால அவகாசத்தை நிர்ணயம் செய்வதில் இரண்டு நாட்கள் சென்றன. ஏறக்குறைய பத்து நாட்கள் இடைவிடாத வேலைகளால் உடல் ஓய்விற்குக் கெஞ்சிய நிலையில், பிள்ளைகளுடன் மறுநாள் நிதானமாகப் பேசிக்கொள்ளலாம் என்று கண்ணயர்ந்த போது வந்த ஸ்ரீநிதியின் அழைப்பு இடி போலத் தாக்கியது.



கடந்த வார அழைப்புகள் யாவும் நான் இங்கு சுகம் நீங்கள் அங்கு சுகமா என்பது போல, மிகவும் சுருக்கமாக இருந்தன. ஒரு வேளை எப்போதும் போல வீடியோ அழைப்பில் பேசி இருந்தால் கூட, மகனது முகம் பார்த்தே அவனது மன வருத்தத்தை அறிந்து கொண்டு இருப்பார். ஸ்ரீவத்ஸன் எதுவும் பேசாவிட்டாலும், வீட்டில் நடந்தவற்றை ஸ்ரீநிதியாவது பகிர்ந்து இருப்பாள். ஸ்ரீதரனும், தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து மகனது மனநிலையைச் சற்றேனும் மாற்றி இருப்பார். இவை எதுவுமே நடக்காமல் போனது விதியின் சதியன்றி வேறென்ன?



தீவிரமான மன அழுத்தம் காரணமாக, ஸ்ரீவத்ஸனது மூளையில் சில சத்துக் குறைபாடுகள் ஏற்பட்டு இருந்தன. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும், சில நாட்களாவது அவனது மூளைக்கு கட்டாய ஓய்வு அவசியமானதாகும் என்று மருத்துவ அறிக்கை தெரிவித்தது.



மகனைப் பழைய மாதிரி மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை வந்தாலும், அவனது மருத்துவக் கனவு என்ன ஆகும், இப்போதைய போட்டித் தேர்வுகளில் அவனால் கலந்து கொள்ள முடியுமா என்பது போன்ற கவலைகள் அலைக்கழித்தன.



மூன்று நாட்கள் முழுமையாக கடந்த நிலையில் அவனது புலம்பல்கள் முற்றிலும் நின்று நினைவு திரும்பியது. இன்னும் காய்ச்சல் குணமாகாத நிலையில் அவனது மருத்துவமனை வாசம் மேலும் சில தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, ஸ்ரீவத்ஸன் ஐசியுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டான்.



ஸ்ரீவத்ஸன் ஐசியுவில் இருந்த மூன்று நாட்களில் கௌசல்யாவைத் தவிர அவனை தெரிந்த அனைவருமே அவ்வப்போது அவனைப் பார்த்து விட்டு வந்தனர். கூடுமானவரை, அவனது நண்பர்களில் ஒருவர் அவனருகில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டே இருந்தனர். ஸ்ரீநிதியும் அண்ணனை நினைவுக்குக் கொண்டு வர தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகச் செய்தாள்.



மருத்துவமனைக்கு வந்த உடனே ராதாவின் வற்புறுத்தல் காரணமாக, மகனைச் சென்று பார்த்த கௌசல்யா அதன் பிறகு அமைதியாக ஐசியு வாசலில் அமர்ந்து கொண்டார். அனைவருமே அன்றிரவு மருத்துவமனை வளாகத்தில் இருந்த ராகவனின் மருத்துவர் குடியிருப்பில் தங்கினார்கள். அங்கே செல்ல மறுத்துவிட்ட கௌசல்யா, அமர்ந்த நிலையிலேயே உறங்கினார்.



சுற்றி நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவை எல்லாம் அவரது புத்தியில் ஏறியதா என்பது அவருக்கே வெளிச்சம். மகனது நண்பர்கள் அவனுக்கு ஒன்று என்று உடன் கலங்கியதையும், அவர்களின் வயதையும் மீறி, அவன் மீண்டுவர எதையும் செய்யக் காத்திருப்பதையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். குறிப்பாக அபிமன்யு மற்றும் ராகவியின் செயல்கள் அவரை பிரமிப்பாக பார்க்க வைத்தன.


அந்த மருத்துவமனையின் விஸ்தீரணத்தையும், சுற்றியிருந்த ஊழியர் குடியிருப்பையும் பார்த்தவருக்கு ராகவனின் செல்வநிலை புரிந்தது. மேலும் கிருஷ்ணனும் ராதாவும் தத்தம் கல்லூரிகளுக்கு விடுப்பு கோரி விண்ணப்பித்ததைக் கவனித்துக் கொண்டு இருந்தவருக்கு அவர்கள் இருவரும் பேராசிரியர்கள் என்பது புரிந்தது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள இன்னோவா காரை கிருஷ்ணன் தானே ஓட்டி வந்ததை பார்த்தவருக்கு அவர்களது செல்வ நிலையும் ஓரளவு பிடிபட்டது.



இவ்வாறு பிள்ளைகளின் நண்பர்கள் பணத்திலும் கல்வியிலும் எப்படிப்பட்ட பின்புலம் உடையவர்கள் என்பது பிடிபட்டாலும், அவர்களைப் பற்றிய தனது கண்ணோட்டம் தவறு என்பது புரிந்தாலும் அதை ஒப்புக்கொள்ள அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. மேலும் ராதா, கிரிஜா இருவரையும் பார்த்தபிறகு, தனது கல்வியறிவு பற்றிய அவரது தாழ்வு மனப்பான்மை இன்னமும் அதிகமானது. அதனாலேயே யாரிடமும் பேசாமல் நத்தை ஓட்டுக்குள் சுருங்குவது போல ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார்.



ஸ்ரீதரன் வந்த பிறகு, அவரது முழு கவனமும் மகன் மேல் இருந்ததால், அவரும் மனைவியை கவனித்ததாக தெரியவில்லை. அவரை முதலில் கவனித்துப் பார்த்தது அபிமன்யு தான். ஸ்ரீவத்சன் அறைக்கு மாற்றப்பட்ட பிறகும் கௌசல்யா அவனை வந்து பார்க்க எந்தவித ஆர்வமும் காட்டவில்லை. அனைவரும் அந்த அறையில் குழுமி இருக்க இவரோ சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் கருத்தில் பதியாதவராய் அமர்ந்திருந்தார். அவரது நிலை கண்டு வருந்தியவன், தனது தாயிடம் தெரிவித்தான்.



ராதாவும் கௌசல்யாவை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆரம்பத்தில் மகனின் நிலை கண்டு வருந்துகிறார் என்று தான் நினைத்தார். ஸ்ரீவத்சனின் புலம்பல்கள், கௌசல்யா தான் அவனது இன்றைய நிலைக்கு காரணம் என்று புரிய வைத்தது. ஒருவேளை அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் வருந்துகிறாரோ என்று அவர்மேல் ஒரு பரிதாபம் தோன்றியது. மூன்று நாட்களாகியும் அவரின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. சொல்லப் போனால், ஸ்ரீதரன் வந்த பிறகு கௌசல்யா இன்னுமும் ஒடுங்கிப் போனார். மகனுக்காக வந்தவர், மனைவியைக் கண்டுகொள்ளவே இல்லை. மகனிடம் நிறைய நேரம் செலவழித்தார், மகளுக்கு சமாதானம் சொன்னார், மகனது நண்பர்களுக்கு கூட ஆறுதல் கூறினார். இவ்வளவும் செய்தவர் மனைவியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பார்வையால் கூட மனைவிக்கு ஒரு ஆறுதல் கூறவில்லை.



அவர்கள் குடும்ப விவகாரம் என்று ஒதுக்கினாலும், ஸ்ரீவத்ஸன் வீடு திரும்பும்போதும் இதே நிலை நீடித்தால் அவனது மனநிலையை மேலும் பாதிக்கும். மேலும், கௌசல்யாவின் விருப்பமின்றி இனி ஒரு முறை தாங்களோ, தங்கள் பிள்ளைகளோ அவர்களது வீட்டிற்கு செல்லக் கூடாது என்று ராதா உறுதியாக நினைத்தார். ஒரு மனைவியாக, தாயாக, கௌசல்யாவின் நிலைகண்டு மிகவும் வருந்தினாலும், இது விஷயமாகத் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் ராதா ஸ்ரீநிதியிடம், சில அறிவுரைகளைக் கூறி தாயிடம் பேசுமாறு அனுப்பினார்.



அவளும் தனது வழக்கமான குறும்புப் பேச்சுக்களால் தாயை திசை திருப்ப முயன்றாள். அதில் ஓரளவு வெற்றியும் கண்டாள். அண்ணனின் நிலை கண்டு தாயின் மேல் கோபம் இருந்தாலும், ஸ்ரீநிதிக்கு தாயின் இளமைப்பருவம் பற்றிய சில விவரங்கள் தெரியும் என்பதால் அவரிடம் என்றுமே அவள் ஒதுக்கம் காட்டியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தாயின் தன்மான உணர்ச்சியை எண்ணி அவளுக்கு என்றுமே பெருமிதம் தான். இவ்வாறாக தாயும் மகளும் ஓரளவு சமாதானம் ஆனார்கள்.
 

Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom