அத்தியாயம்-10
கௌசல்யா முடிவு எடுக்கும் நிலையில் இல்லை என்பதால், கிருஷ்ணன் ஸ்ரீதரனுக்கு அழைத்தார். எப்படியும் அவரிடம் மகன் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும், அதோடு ராகவனின் அறிவுரையைக் கூறி மருத்துவமனை செல்ல வேண்டும். தாமதப் படுத்துவது ஆபத்தில் முடியலாம் என்ற எண்ணத்தில் அவர் அழைக்க, மறுபுறம் கைபேசி அணைத்து வைக்கப் பட்டு இருந்தது. ஸ்ரீநிதி, அவரது மற்றொரு எண்ணுக்கு முயற்சிக்க அதுவும் அதே பதிலைச் சொன்னது.
யோசிக்க நேரமில்லை என்பதால், கிருஷ்ணனும் ராகவனுமே முடிவெடுத்து ஸ்ரீவத்ஸனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளைக் கவனிக்கலானார்கள். அவன் நினைவில்லாது இருப்பதால், ஆம்புலன்சில் இருந்து "ஸ்டெரச்சரை" எடுத்து வருமாறு ராகவன் சொல்ல, அதைப் பலமாக ஆட்சேபித்த அவனது நண்பர்கள், தாங்கள் தூக்கி வருவதாகச் சொல்ல, அது இயலாத காரியம் என்பதால் கிருஷ்ணன், குழந்தையைத் தூக்குவது போல் அவனைத் தூக்கி வந்து, ஆம்புலன்சில் படுக்க வைத்தார்.
ஆம்புலன்சில் தானும் வருவதாக அடம்பிடித்த ஸ்ரீநிதியைத் தடுத்துவிட்டு அபிமன்யு, சரண் மற்றும் ராகவன் உடன் அந்த ஆம்புலன்சில் முன்னே சென்று விட்டான். கௌசல்யாவால், இவை அத்தனைக்கும் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க முடிந்தது. மகனது நிலை அவரை எதையும் மறுத்துப் பேசவும் விடவில்லை.
ஆம்புலன்ஸ் கிளம்பியதும் ராகவியிடம் ஸ்ரீநிதியை அழைத்துக் கொண்டு போய் காரில் அமருமாறு பணித்த கிருஷ்ணன், ராதாவிடம் கௌசல்யாவை அழைத்து வருமாறு ஜாடை செய்து விட்டுத் தானும் காருக்குச் சென்று விட்டார்.
நடந்தவை எல்லாம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியாமல், வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த கௌசல்யாவை ராதா தோளில் தட்டி நிகழ்வுக்குக் கொண்டு வந்தார். டைனிங் டேபிளில் இருந்த தண்ணீரைப் பார்த்தவர் எழுந்து சென்று ஒரு பாட்டிலை எடுத்து வந்து கௌசல்யாவிடம் கொடுத்தார். "கொஞ்சம் தண்ணி குடிங்க கௌசல்யா. வத்ஸன் சீக்கிரம் குணம் ஆயிடுவான். நாமளும் கிளம்பணும் வீட்டு கீ எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, பூட்டிட்டு கிளம்பலாம்" என்றார்.
தன் முன்னே நீட்டப்பட்ட தண்ணீர் பாட்டிலை கண்டதும், பதிலேதும் பேசாமல் ராதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாங்கிக் கடகடவென்று அதை காலி செய்தவர், சட்டென்று எழுந்து சாவியை எடுக்கச் சென்று விட்டார். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் என்னவாக இருக்கும் என்று ஒரு நொடி யோசித்த ராதா, வாசலில் ஒலித்த காரின் ஒலியில் தானும் எழுந்து கௌசல்யாவுடன் வாசலுக்கு வந்தார்.
காரில் எங்கு அமர்வது என்று யோசித்துக்கொண்டிருந்த கௌசல்யாவை, ராகவி அருகில் அமர்த்திவிட்டு ராதா முன்புறம் சென்று அமர்ந்தார். காரில் ஏறி அமர்ந்த கௌசல்யாவின் பார்வை, தனது மகளிடம் சென்றது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த ஸ்ரீநிதி ராகவியின் மடியில் படுத்து இருந்தாள். ராகவியின் கை அவளது தலையை வருடி விட்டுக் கொண்டிருந்தது. மகளும் தன்னை வெறுத்து விட்டாளோ என்று நினைக்கத் தோன்றியது.
ஸ்ரீவத்ஸன் எப்போதுமே தாயிடம் தேவைக்கு மேல் அதிகம் பேச மாட்டான். அதற்கு நேர் மாறாக ஸ்ரீநிதி எப்போதுமே தாயை வம்பு இழுத்துக் கொண்டே இருப்பாள். கௌசல்யா பேசாமல் இருந்தாலும் ஏதாவது பேசி, அவரை கோபப்பட வைத்து, அப்படியாவது அவரை பேச வைத்து விடுவாள்.
ஆனால் இன்று, ஒரு அவசரமான நேரத்தில், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த தந்தைக்கு அழைத்து சொல்லி இருக்கிறாள், அலைபேசியில் மட்டுமே அறிமுகம் ஆன மூன்றாவது நபர்களை அழைத்து உதவி கேட்டிருக்கிறாள். இத்தனைக்கும் வீட்டில் இருக்கும் ஒரே பெரியவராக தாய், பக்கத்து அறையிலேயே இருந்தும் அவரை நாடவில்லை.
ஒரு எதிரியை போல், அவள் தாயைப் பார்த்த பார்வை அவரது ஆயுள் உள்ளவரை மறக்கவே முடியாது. அதுவும் ராகவன், ஸ்ரீவத்சன் ஏதாவது மாத்திரைகளை உட்கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியபோது அனைவரும் அதிர்ந்து நிற்க, ஸ்ரீநிதி தான் முதலில் நிகழ்வுக்கு வந்து "அப்படி எல்லாம் கண்டிப்பா இருக்காது அங்கிள். எங்க அண்ணன் அப்படிப்பட்டவன் இல்ல. அதுவுமில்லாம எங்க வீட்டுல பேராசிட்டாமால் தவிர வேறு எந்த டேப்லெட்டும் கிடையாது. அவன் ரெண்டு நாளா வீட்டைவிட்டு எங்கேயும் போகவும் இல்லை. இதுக்கு காரணமே வேற" என்றவள் தாயை எரித்து விடுவது போல் பார்த்தாள்.
அப்பொழுதும் அவள் மூன்றாவது மனிதர் முன் தாயை வெளிப்படையாகக் காட்டிக் கொடுக்கவில்லை என்றாலும் கௌசல்யாவின் குற்றமுள்ள மனது உறுத்தியது. மகளது பார்வையில் தனது நிலை என்ன என்பது புரியாமல் குழம்பிப் போனார்.
பலவற்றையும் நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டவராய் இருக்கையில் சாய்ந்து, கண்மூடி பலவித யோசனையில் இருந்த கௌசல்யா, "ஹலோ கிருஷ்ணன்! ஸ்ரீதரன் பேசுறேன். என் பையனை பாத்துட்டீங்களா ஒண்ணும் பிரச்சனை இல்ல தானே. அவன் கண்ணு முழிச்சிட்டானா?" என்ற கணவரது குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
ஸ்ரீவத்சனது உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் பல மைல் தூரத்தில் இருப்பவரை கலவரப் படுத்த வேண்டாம் என்று "நாங்க பாத்துட்டோம் ஸ்ரீதரன். பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை. ராகவன் வந்து செக் பண்ணிட்டு இரண்டு நாள் அப்சர்வேஷன்ல இருந்தா நல்லதுன்னு சொல்லி இருக்கார். அவரோட ஹாஸ்பிடல்லயே பார்த்துக்கலாம்னு கூட்டிட்டு போறோம். உங்கள ரீச் பண்ண ட்ரை பண்ணினோம். மொபைல் ஸ்விச் ஆஃப்னு வந்தது. அதனால நாங்களே முடிவு பண்ண வேண்டியது ஆயிடுச்சு" தொடர்ந்து வந்த கிருஷ்ணனின் பதிலில் அது அவரது அலைபேசியில் வந்த அழைப்பு என்பது புரிந்தது.
"நான் உடனே புறப்பட்டு வர முடியாத இடத்தில இருக்கேனே. எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் நான் சென்னை ரீச்சாக நாளைக்கு ஈவினிங் ஆயிடும். என் பையனை நல்லபடியா பார்ப்பேன்ல. அவனுக்கு ஒண்ணும் ஆயிடாதே" என்று தழுதழுத்த ஸ்ரீதரனின் குரல், கௌசல்யாவின் குற்ற உணர்ச்சியை ஆயிரம் மடங்காக்கியது. மற்றவர்கள் முன்னிலையில் கூனிக்குறுகி போனார்.
“பயப்படறதுக்கு ஒண்ணுமில்லைன்னு ராகவன் சொல்லிட்டார். நீங்க நிதானமா கிளம்பி வாங்க நாங்க பாத்துக்குறோம். அவனுக்கு ஒன்னும் ஆகாது. நான் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு உங்களுக்கு போன் பண்றேன்" என்று ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினார் கிருஷ்ணன். ஏற்கனவே மிகுந்த வருத்தத்தில் இருப்பவரிடம், ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்கிறோம், அவன் நினைவில்லாமல் இருக்கிறான் என்றெல்லாம் சொல்லி, அவரது துன்பத்தை மேலும் அதிகரிக்க வேண்டுமா என்று தோன்றியதால் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
"நானும் சீக்கிரமா வர முயற்சி பண்றேன். இன் கேஸ் வேற ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டதுன்னா என் மச்சினன் நம்பர் தரேன். அவரைக் காண்டாக்ட் பண்ண முடியுமா? அவனும் டாக்டர் தான். என்னால காண்டாக்ட் பண்ண முடியல நம்பர் சுவிட்ச் ஆஃப்னு வருது " என்றவர், "குட்டிமா எப்படி இருக்கா? பக்கத்தில இருக்காளா?" என்று கேட்டார்.
கடந்த சில மணி நேரமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த ஸ்ரீநிதி, இப்போது அண்ணன் சரியாகி விடுவான் என்ற நம்பிக்கையாலும் ராகவியின் கை வருடல் தந்த இதத்தினாலும், அவளது மடியிலே அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.
"கண்டிப்பா அவரை காண்டாக்ட் பண்றேன் கிருஷ்ணன். ஆனால் நீங்க சொன்ன ஹெல்ப் பணம் விஷயமா இருந்தா, சுஸ்ருதா ராகவனுடைய சொந்த ஹாஸ்பிடல். பில்லை நீங்க வந்து செட்டில் பண்ணிக்கலாம். அதைப் பற்றி நீங்க கவலையே பட வேண்டாம். நாங்க பாத்துக்குறோம். உங்க பையன் நல்லா இருப்பான். நீங்க அதை மட்டும் நினைச்சுட்டு வாங்க. அப்புறம் நிதி நல்லா தூங்குறாளே, பாவம் ரொம்ப பயந்து போய்ட்டா போல இருக்கு. கொஞ்ச நேரம் அவள் தூங்கட்டுமே. அவ எழுந்ததும் உங்களுக்கு போன் பண்ண சொல்றேன்" என்றவரின் வார்த்தைகளில் இருந்த அக்கறையை உணர்ந்த ஸ்ரீதரன், "ஓகே கிருஷ்ணன், நான் என்னுடைய டிராவல் பிளானைப் பார்க்கிறேன். நீங்க ஹாஸ்பிடல் போயிட்டு ஃபோன் பண்ணுங்க" என்று அழைப்பைத் துண்டித்தார்
அந்த உரையாடலின் மூலம் கணவர் கணக்கில்லாத முறை அழைத்தும், தான் அந்த அழைப்புகளை உதாசீனப் படுத்தியதால் தனது தம்பியை அழைத்திருக்கிறார் என்று புரிந்தது. ஆனாலும் அடுத்த அறையில் இருந்த தன்னை அழைக்குமாறு மகளிடம் அவராவது கூறி இருக்கலாமே என்றுதான் அப்போதும் தோன்றியது. அந்த விஷயத்தில், தந்தையின் அறிவுறுத்தலையும் மீறி, என்ன ஆனாலும் சரி தாயை கூப்பிட மாட்டேன் என்று மகளும் அன்னையைப் போலவே பிடிவாதமாக இருந்தாள் என்பதை அவர் அறிவாரா? மேலும் அவரது தம்பியின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததன் உண்மையான காரணத்தை அறியும் போது அவரது மனநிலை எவ்வாறு இருக்கும்?
ஒரு மினி ஐசியு போல சகல வசதிகளுடன் இருந்த அந்த ஆம்புலன்சில் ஏறிய உடனேயே வென்ஃபிளானைப் பொருத்தி, அதன் மூலம் ஸ்ரீவத்ஸனுக்குத் தேவையான மருந்துகளைச் செலுத்திய ராகவன், கூடவே ஒரு ட்ரிப்ஸ் பாட்டிலையும் மாட்டி விட்டார்.
நடுவில் ஸ்ரீவத்சன் படுத்திருக்க அவனது இடது கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க, அவனுக்கு வலதுபுறம் அபிமன்யுவும் சரணும் அமைதியாக அமர்ந்து தலை, கை, கால் என்று தடவிக் கொடுத்துக்கொண்டு இருந்தனர். தங்களது இருப்பை, ஸ்பரிசம் மூலமாக நண்பன் உணர முடியும் என்பதாக அவர்களது செய்கை இருந்தது. ஜுரம் குறையாத நிலையில் அவனது உடல் நெருப்பாகக் கொதிப்பதை உணர்ந்தவர்கள், வார்த்தைகள் எதுவும் பேச இயலாத நிலையில் மௌனமாக மனதுக்குள் நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
திடீரென்று ஸ்ரீவத்சனிடம் இருந்து ஏதேதோ புலம்பல் ஒலிகள் கேட்க என்னவென்று கூர்ந்து கவனித்தனர் "இப்படி எல்லாம் பேசாதீங்க மா. கவி பாவம்மா அவளை ஒண்ணும் சொல்லாதீங்க....சரண் ரொம்பவே ஸ்வீட்மா... அபி கூட ஒரு தடவை பேசினா விடவே மாட்டீங்க... இவங்க மட்டும் தான் எனக்குனு இருக்கற பிரண்ட்ஸ் மா. ஐயோ அவங்களை இனிமே பார்க்கவே முடியாதா... பேச முடியாதா....அபி என்னைத் தப்பா நினைக்காதே. நீ எனக்கு எப்பவும் வேணும்..." என்று அவனது புலம்பல்கள் நீண்டு கொண்டே செல்ல, நண்பர்கள் இருவரும் மௌனமாகக் கண்ணீர் விட்டபடி செய்வது அறியாது திகைத்து ராகவனை பார்த்தனர்.
இந்த புலம்பல்களின் மூலம் என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு யூகித்த ராகவன், அவனுக்கு எந்த விதமான மருத்துவ முறையை பயன்படுத்த வேண்டும் என்று பிடிபட்டவராய் பேச ஆரம்பித்தார்.
"அபி அண்ட் சரண், இப்போ உங்க ஃபிரண்டு சீக்கிரம் குணமாகிறது உங்க கையில தான் இருக்கு. ரெண்டு பேரும் அவன் கிட்ட பேசுங்க. அவனோட இருக்கோம்னு சொல்லுங்க. நீங்க எப்பவும் ஃபிரண்டா இருப்பீங்க அப்படிங்கறது அவனுக்கு புரியணும். எப்படியெல்லாம் சொல்ல முடியுமோ சொல்லுங்க. அவனோட ஆழ் மனசுக்கு அது புரியணும். அதை பேஸ் பண்ணி தான் அவனோட ரெக்கவரி இருக்கும்" என்று எடுத்துரைத்தார்.
அதன் படி அவர்கள் அவனது கையைப் பிடித்தபடி, அவன் தங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தது முதலான நிகழ்வுகளை பேச ஆரம்பிக்க, அதன் விளைவோ அவர்கள் எதிர்பார்த்தபடி இல்லாமல் முற்றிலும் வேறானதாக இருந்தது. அவனது புலம்பல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நின்றாலும், மிக அதிகமான மன உளைச்சலால் ஜுரம் இன்னும் அதிகமாக அதன் விளைவாக அவனது உடல் வெகுவாக நடுங்க ஆரம்பித்தது. அதற்குள் அவர்கள் மருத்துவமனையை அடைந்து விட்டதால், உடனடியாக அவனுக்குச் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அது ராகவனுக்கு சொந்தமான மருத்துவமனை என்பதாலும், ஸ்ரீவத்சனை இராகவனே நேரடியாக கவனிப்பதாலும், மருத்துவமனைக்கு என்றே உண்டான வேறு எந்த சம்பிரதாயங்களும் இல்லாமல் அவனது சிகிச்சை, கிருஷ்ணன் முதலானோர் வருவதற்கு முன்பே தொடங்கப் பட்டது.
தற்போது செய்து கொண்டிருந்த அகழ்வாராய்ச்சியில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஸ்ரீதரன் அலுவலகத்தில் தனது நிலையை எடுத்துச் சொல்லி, அவர் இருந்த இடத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்த போது மறுநாள் இரவாகி இருந்தது. அதுவரையில் ஸ்ரீவத்ஸனுக்கு ஜூரம் சற்றே குறைந்து இருந்தாலும் அவ்வப்போது வரும் அவனது புலம்பல்கள் குறைந்தபாடில்லை. ஒன்றிரண்டு முறை கண் விழித்தாலும் அவன் இன்னும் முற்றிலுமாக நினைவுக்கு வரவில்லை.
Author: SudhaSri
Article Title: தொட்டுத் தொடரும் -10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: தொட்டுத் தொடரும் -10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.