• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 9

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 9

படக்கென்று நிரஞ்சன் அறைவாயிலை நோக்கிப் பார்வையைத் திருப்பினான். ஒரே நாளில் மதுமிதாவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டதைக் கண்டு மனம் வருந்தினான். தன்னால் அல்லவா அவள் இப்படி ஆகிவிட்டாள் என அவன் உள்மனம் குற்றம் சாட்டியது.

“எங்க கிளம்பிட்ட? உள்ள வா?” எனப் பவித்ரா சொல்ல, அதற்குமேல் மதுமிதா மறுத்துக் கொண்டிருக்கவில்லை. மெல்ல அறைக்குள் நுழைந்தாள். சஞ்சலமடைந்த விழிகளைச் சற்றும் அசைத்து அவன் பக்கம் திருப்பவில்லை.

படுக்கையிலிருந்த பவித்ராவின் கையில், காலில் கட்டுப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து, “என்ன பவி இது? பார்த்து கிராஸ் பண்ணமாட்டியா?” எனக் கடிந்து கொண்டாள்.

உண்மையில் அவள் படக்கென்று பார்க்காமல் சாலையைக் கடந்துவிட்டாள். கார்காரன் மேலே எந்தத் தவறுமில்லை. பார்க்காமல் சென்றது இவளது தவறு தான்.

“அம்மா மாதிரியே நீயும் ஆரம்பிக்காத. நான் என்னவோ வேணும்னு போய் இடிச்சுட்டு இங்க வந்து படுத்துகிட்ட மாதிரி பேசற” எனச் சலித்துக் கொண்டாள் பவித்ரா.

“ஆமாம் ஆன்ட்டி ரொம்பக் கவலைப்பட்டாங்க பவி. இப்போ எப்படியிருக்கு?” எனக் கேட்க, “கால்ல ஆபரேஷன் முடிஞ்சது. கையில எலும்பு முறியலை. அதனால் தப்பிச்சேன். வெறும் மாவு கட்டு போட்டிருக்காங்க. ஆனா வலி உயிர் போயிடுச்சு.

என்ன எல்லாம் சரியாகி நான் ஆபீஸ் வர்றதுக்குக் கொஞ்ச நாளாகும். என் வேலையெல்லாம் இப்போ உன் தலையில விழும்” எனப் பற்கள் தெரிய பளீரென்று புன்னகைத்தாள்.

“அப்போ பிளான் பண்ணி காலை உடைச்சுக்கிட்ட மாதிரி இருக்கே... எத்தனை நாளா என்னை இப்படிச் சிக்கல்ல மாட்டிவிட நினைச்ச பவி? ஐயோ, அப்படி நான் என்ன பண்ணினேன்” என மதுமிதா நாடக பாணியில் கலாய்க்க, நிரஞ்சன் பக்கென்று சிரித்துவிட்டான்.

அதுவரையில் அவன் மதுமிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் பார்வை அவனிடம் சற்றும் திரும்பவில்லை. இவ்வளவு ஏன்? அவன் ஒருவன் அங்கே இருக்கிறான் என்று கூடச் சட்டை செய்யவில்லை. சிரித்தாலாவது தன் பக்கம் திரும்புவாளோ என்றே சத்தமாகச் சிரித்தான்.

ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம். மாறாகப் பவித்ரா அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள். அதற்குள் அவன் கையில் இருந்த கஞ்சியைக் காட்டி, “அதை வாங்கி எனக்கு ஊட்டி விடு மது” என்றாள் பவித்ரா.

அவள் சொன்னதைப் போலவே செய்வதற்கு நிரஞ்சன் கையிலிருந்த கஞ்சியை வாங்க முயன்றாள். ஆனால் அவனோ அதை அவளிடம் தராமல் அழுத்தமாகப் பற்றியிருந்தான்.

‘இப்போது அவள் பார்த்து தானே ஆக வேண்டும்’ என அவன் இறுக்கமாகப் பற்றியிருக்க, “அவர் கொடுக்க மாட்டேங்கிறார் பவி” என அவனைப் பார்க்காமல் பவித்ராவிடம் புகார் வாசித்தாள்.

பவித்ரா மீண்டும் அவனைப் பார்த்து முறைத்து, “நேத்திலிருந்து இங்கேயே இருக்கீங்க. உங்களுக்கு வேற வேலையில்லையா? முதல்ல அதைக் கொடுத்துட்டு போய் உங்க வேலையைப் பாருங்க. நீங்க இல்லாமல் ஆபீஸ்ல எல்லாம் அப்படியே செயலிழந்து நிற்கப் போகுது” எனப் பவித்ரா பரிகாசத்துடன் சொன்னாள்.

நிரஞ்சன் அப்போதும் தயங்க, “எனக்குச் சாப்பாடே வேண்டாம்” எனப் பவித்ரா எரிச்சலுடன் சொன்னாள். உடனே கையிலிருந்த பாத்திரத்தை மதுமிதாவின் முன்னால் நீட்டினான். எதுவும் சொல்லாமல் அவனிடமிருந்து வாங்கி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். இன்னுமே பார்வை அவன் முகத்தைத் தீண்டவில்லை.

“ஹே மது, உன் அண்ணன் ஒரு மாப்பிள்ளை பார்த்ததாச் சொன்னியே. பேசாம அவருக்கு ஓகே சொல்லிடு” எனப் பவித்ரா சொல்லவும், ஊட்டுவதற்கு என்று மேலெழுந்த மதுமிதாவின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டன.

“உன் நல்லதுக்குச் சொல்லறேன். எப்படியும் நடக்காத விஷயத்துக்கு நீ ஏன் காத்திருக்கணும். ரொம்ப எல்லாம் எதிர்பார்ப்புகளை வளர்த்துக்காத. முதல்ல உனக்கு அந்தத் தகுதியே இல்லை” என்றாள் பவித்ரா வெளிப்படையாக.

மதுமிதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. திகைத்துப் போய்க் கண்களில் குளம் கட்ட அவளைப் பார்க்க, “பவி” என நிரஞ்சன் அதட்டல் குரலில் அழைத்தான்.

“ஏதாவது தப்பாச் சொல்லிட்டேனா என்ன? உண்மை இல்லையா?” என அவனிடமே கேள்வி எழுப்பினாள் பவித்ரா.

மெதுவாகத் தலையசைத்த மதுமிதா, “நீ முதல்ல உன் உடம்பை கவனி. என்னைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். ஏதோ அவசரத்துல யோசிக்காம முடிவு எடுத்துட்டேன், நான் அதை அப்போவே மறந்தும் போயிட்டேன், நீ கவலைப்படாத” என மனதை ஒருநிலைபடுத்திக் கொண்டு சொன்னாள்.

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சனுக்கு மனதை யாரோ குத்திக் கசக்கிப் பிழிந்து சாறை வெளியேற்றி சக்கையை மட்டும் விட்டு வைப்பது போலிருந்தது. நுரையீரலையும் சேர்த்துப் பலமாக அழுத்தி நசுக்குவதைப் போல் உணர்ந்தான். மூச்சுக்காற்றுக்குத் திணறினான்.

அவளுடன் பழகிய இத்தனை மாதங்களில், வேலையாகட்டும், சொந்த விஷயமாகட்டும் அப்படியெல்லாம் அவசரத்தில் முடிவெடுப்பவள் இவளில்லை என்று நன்றாகவே தெரியும். எதையும் முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து செயல்படுத்துபவள் மதுமிதா. அதனால் இவளது பேச்சு நம்புவதைப் போலில்லை.

அவனால் அவள் சொன்னதைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அப்படியென்றால் அவள் உன்னையே நினைத்து ஏங்கிக் கசிந்துருகிக் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறாயா?’ அவன் மனசாட்சி அவன் முன்னே சம்மன் இல்லாமல் ஆஜாரானது.

அவன் மனசாட்சியிடம் என்ன சொல்வது எனத் தெரியாமல் திண்டாட, அதே சமயத்தில் கௌரி வந்து சேர்ந்தார். அதனால் அந்தப் பேச்சு அத்தோடு நின்று போனது.

சற்றுநேரம் அங்கேயே இருந்து பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள் மதுமிதா. அவர்கள் பேசுவதை நிரஞ்சன் அமைதியாக ஓர் ஓரத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். காதுகள் அனைவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ தவம் போல் மதுமிதாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

“ஆன்ட்டி, இன்னைக்கு நைட் நான் பவியோட இங்கே வந்து தங்கிக்கிறேன். நீங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க. அப்புறம் நீங்க காலையில சமைச்சு எடுத்துட்டு வாங்க. அப்போ நான் ஆபீஸ் போறேன்” எனச் சொல்லி கௌரியைச் சம்மதிக்க வைத்தாள் மதுமிதா.

“வேலைல போட்டது போட்டபடி இருக்கு. நான் இப்போ கிளம்பறேன். சாய்ந்தரம் வரேன்” எனப் பவித்ராவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

தன்னை நினைத்தே அவளுக்குப் பெருமையாக இருந்தது. பின்னே, வந்ததிலிருந்து ஒரு நொடி கூட அவள் நிரஞ்சனின் பக்கமே திரும்பவில்லையே. எவ்வளவு பெரிய சாதனை அது?!

எனினும் அவளுக்கு நெஞ்சை அடைப்பது போலிருந்தது. சீக்கிரம் வெளியில் சென்று வெளிக்காற்றைச் சுவாசித்தால் இந்த அடைப்பு விடுபடுமோ என்று ஆசைப்பட்டாள்.

பின்னே இரண்டு நாட்களாக மூச்சுக் குழாயில் சுவாசம் தடைபட்டுக் கொண்டு இருப்பதைப் போன்ற உணர்வு தோன்றிவிட்டதே. அத்தோடு அவளுக்கு என்ன தகுதி இல்லை? ஏன் பவித்ரா அப்படிச் சொன்னாள் என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது.

அந்தக் குறுகிய அறையில் அவனை வைத்துக் கொண்டு யோசிப்பதற்கு அவளது மூளை ஒத்துழைக்கவில்லை. அதனாலேயே கிளம்பிவிட்டாள்.

தன் யோசனையில் உழன்று கொண்டு மதுமிதா வாசலை நெருங்க, “மது..” என அழைத்தவாறே நிரஞ்சன் அவளை நோக்கி அரக்க பறக்க ஓடி வந்தான். அவன் குரலைக் கேட்டதும் நின்று திரும்பிப் பார்த்தவள், முகத்தில் எந்தப் பாவனையையும் காட்டவில்லை.

மிகவும் நிதானமாக, “சொல்லுங்க நிரஞ்சன். அந்த ப்ராஜக்ட் கிட்டதட்ட முடிச்சுட்டேன். பவியோட பார்ட்டும் நான் பார்த்துக்கிறேன்” எனப் பட்டும் படாமல் பேசிவிட்டு நகர ஆரம்பித்தாள்.

“மது, அன்னைக்கு உன்னைக் கூப்பிட்டேன். உன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது” எனச் சொல்ல, அர்ஜுனின் ரிசப்ஷன் அன்று இரவு அவள் கைபேசியை அணைத்து வைத்ததைப் பற்றிச் சொல்கிறான் என அவளுக்குப் புரிந்தது.

அன்றே அவனிடம் பேசியிருந்தால் அவளின் மனநிலை எப்படி இருந்திருக்குமோ? ஆனால் இப்போது ஓரளவுக்குத் தெளிவாகிவிட்டது. அவன் மனதைப் பற்றித் தெரியாமல் அவன் விருப்பத்தைப் பற்றி ஆராயாமல் அவள் மனதைத் திறந்தது அவள் தவறே.

“அது என் மேலேயே கொஞ்சம் கோபத்துல இருந்தேன். கோபத்துல எதையும் பேசினா சரி வராது. அதனால ஃபோனை ஆஃப் பண்ணிட்டேன்” என மறைக்காமல் சொன்னாள்.

சற்றுத் தயங்கி நிறுத்தியவள், “ஆனா நிரஞ்சன், பவியோட நெருக்கமாகப் பழகறதுக்கு நீங்க என்னை யூஸ் பண்ணியிருக்க வேண்டாம். என்கிட்டே உண்மையைச் சொல்லியே உதவி கேட்டிருக்கலாம். ஐம் ரியலி ஹர்ட்” என வேதனை நிரம்பிய குரலில் சொல்ல, அதில் அப்பட்டமாக வலி தெரிந்தது.

அவள் கண்கள் பனித்தனவோ? பவித்ராவுடன் அடிக்கடி பேசுவதற்கும் பழகுவதற்கும் வாய்ப்பு கிடைக்கிறதே என்றே மதுமிதாவிடம் நட்பு பாராட்டினான் நிரஞ்சன். உண்மையில் அது தவறு என்று அவனுக்கு அப்போது புரியவில்லை.

ஆனால் கண்களில் நீர்த் தளும்ப அவனை ஏறிட்டுப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்ததும் அவன் செய்தது மிகப் பெரிய தவறு என்று உணர்ந்தான். அவனுள் ஏதோ ஒன்று பலமாக அசைந்தது.

அவளிடம் பழகியதில் அவளின் நட்பு அவனுக்கு மிகவுமே பிடித்திருந்தது. அவன் நட்பில் எந்த நடிப்புமில்லை. பொய்யுமில்லை. அதைச் சொன்னால் நம்புவாளா?

“என்கிட்டே நட்புக்கரம் நீட்டிட்டு வர்றவங்களை நான் எப்பொழுதுமே ஏமாத்தமாட்டேன். நீங்க என் நட்பை மட்டும் உடைக்கலை. என் நம்பிக்கையையும் சேர்த்து உடைச்சுட்டீங்க. இனிமேல் யார்கிட்டேயும் இப்படியெல்லாம் பண்ணாதீங்க. ரொம்ப வலிக்குது” என அவள் சொல்ல, சொல்ல, கசக்கிப் பிழிவதைப் போன்ற வேதனையை அவன் உள்ளம் உணர்ந்தது.

“உங்களை மட்டும் சொல்லி எதுவும் ஆகப் போறதில்லை. என் மேலேயும் தப்பிருக்கு. இப்படிப் பழகின கொஞ்ச நாள்ல தேவையில்லாம நானும் மனசை அலைபாய விட்டுருக்கக் கூடாது” எனத் தன் மேலேயே பழியைப் போட்டுக் கொண்டாள் மதுமிதா.

‘இவளுக்கு இப்போது தன்னைப் பிடிக்கவில்லையா?’ என அவன் நெஞ்சம் பதை பதைக்க ஆரம்பித்தது. அவள் நட்பு ரீதியில் பழகியிருந்தால் அவனுக்கு எதுவும் தெரிந்திக்காது. ஆனால் அவளே அவனிடம் காதலைச் சொன்னாள். இப்போது தேவையில்லாமல் மனதை அலைபாயவிட்டதாகச் சொல்கிறாளே?

“உங்களுக்கும் பவிக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியாது. அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க” என அவள் அங்கிருந்து கிளம்ப, அவளின் கண்ணீர் அவனை அலைப்புறச் செய்தது.

எத்தனை கலகலவென்று இருப்பாள்? அவளை இப்படி மாற்றிவிட்டானே. அதுவும் அவனது சுயநலத்துக்காக.

ஓர் எட்டு எடுத்து வைத்தவள், ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்து, “ஆனாலும் நீங்க உங்க காதலுக்காக இத்தனை சுயநலவாதியா இருந்திருக்க வேண்டாம் நிரஞ்சன்” என அவள் மனக்குமுறலை வெளியிட்டாள்.

அவளின் வார்த்தைகளின் கனம் அவனை ஒரு கணம் தடுமாறச் செய்தது. என்ன? காதலா? என்ன பிதற்றுகிறாள்? தன்னைத் தவறாக எண்ணிவிட்டாளா? அவனால் அதைச் செரிமானம் செய்ய முடியவில்லை.

மதுமிதா தன்னைச் சுயநலவாதி என்று சொன்னதையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் அவனைத் தவறாக வேறு எண்ணிக் கொண்டாளே என மருகினான். அவள் எண்ணத்தை மாற்றியே ஆக வேண்டும் என்ற தீர்மானம் அவனுக்குள் வெகுண்டது.

அவன் ஏதாவது சமாதானம் செய்வான் என விழிகளில் எதிர்பார்ப்பைத் தேக்கி அவள் நோக்க, அவனோ உறைபனியாய் உறைந்து போய் நின்றிருந்தான்.

‘இவனுக்குத் தன்னிடம் சமாதானமாகச் சொல்வதற்குக் கூட எதுவுமில்லை போல’ என்ற முடிவுக்கு வந்தவள் அங்கிருந்து மெல்ல நகர்ந்தாள்.

அவள் அசைவதைக் கிரகித்த நிரஞ்சனின் மூளை, ‘டேய் அவள் உன்னை விட்டுத் தூரம் செல்கிறாள்’ என உரக்க அலறியது.

‘அதுவும் உன்னையும் பவித்ராவையும் தவறாக எண்ணிக் கொண்டு செல்கிறாள்’ எனச் சாட்டையாய் சுழற்றி அடித்தது. அந்த எண்ணத்தை உடனே தகர்த்தெறி எனக் கட்டளையிட்டது.

சுயஉணர்வு பெற்றவன், அவளைத் தேடிக் கொண்டு மருத்துவமனையின் வெளியில் சென்றான்.

மதுமிதா இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்குச் செல்வது தெரிய, அவளைத் துரத்திக் கொண்டு அங்கே ஓடினான்.

“மது நில்லு” எனச் சொல்ல, அவள் கேட்காமல் விறுவிறுவென்று நடந்து சென்றாள். எங்கே தான் அழுவதை இவன் பார்த்துவிடுவானோ என அவள் வேகத்தைக் கூட்ட, அவளை விடவும் வேகத்தைக் கூட்டி இரண்டே எட்டில் அவள் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தியிருந்தான் நிரஞ்சன்.

வெலவெலத்துப் போனவள், “என்னை விடுங்க நிரஞ்சன். என்ன இது இப்படி ரோட்டில நின்னு கலாட்டா பண்ணறீங்க?” எனத் திமிறினாள்.

“நான் சொல்லறதைக் கேளு மது” என அவன் நிதானமாகச் சொல்ல, விழிகளில் தேங்கியிருந்த நீருடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள், “என்ன கேட்கணும்? நான் வேதனைப்படறதைப் பார்த்து நீங்க சந்தோஷப்படணுமா? பாருங்க நான் அழறதை நல்லாப் பாருங்க” எனத் தேம்பி தேம்பி அழுதாள்.

நடுத்தெருவில் நிர்கதியாகத் தள்ளிவிட்டதைப் போல் அவள் உள்ளம் துடித்தது.

“வேணா, வீடியோ எடுத்து வச்சுட்டு உங்களுக்குப் போர் அடிக்கிறப்போ எல்லாம் பார்த்துச் சந்தோஷப்படுங்க” என அவளே தன் கைப்பேசியை எடுத்து தான் அழுவதைப் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.

அவளின் மற்றொரு கையையும் இறுக்கமாக பற்றிக் கொண்டான் நிரஞ்சன். “பிளீஸ் என் கையை விடுங்க. நான் கிளம்பணும்” என அவனிடமிருந்து கையைப் பிரிக்க முயன்றாள் மதுமிதா.

அவனின் பிடி உடும்புப்பிடியாய் இருந்தது. “விடுங்க, இல்லை, கத்தி கலாட்டா பண்ணுவேன்” என அவனை விட்டுப் பிரிந்து போவதிலேயே முனைப்பாக இருந்தாள்.

எங்கே விட்டால் தன்னை விட்டு அவள் நிரந்தரமாய்ப் போய்விடுவாளோ என்ற பயப்பந்து ஒன்று அவனைச் சூழ்ந்து தாக்கியது. அவளை அவன் இழக்க விரும்பவில்லை. இந்த உள மாற்றத்தை அவனே எதிர்பார்க்கவில்லை.

“பவி என்னோட கூடப் பிறந்த தங்கச்சி” என நிரஞ்சன் கத்த, அதுவரையில் திமிறிக் கொண்டிருந்திருந்த மதுமிதா எதிர்வினையாற்றாமல் அப்படியே நின்றுவிட்டாள். திகைத்த விழிகளுடன் அவனை ஏறிட்டு நோக்கினாள்.

தொடரும்...
 
Last edited:

Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 9
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom