Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 8
திருமண மண்டபத்திலிருந்து கிளம்பிய மதுமிதா நேராகத் தோழி மதுரவாணியின் வீட்டிற்குச் சென்றாள். ஏற்கனவே அவளைச் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்ததால் மதுரவாணிக்கு எவ்விதச் சந்தேகமும் எழவில்லை. திடீரென்று அழைத்து வீட்டுக்கே வருவதாகச் சொல்லும் போது கூட அவள் எதுவும் நினைக்கவில்லை.
ஆனால் மாலையில் ரிசப்ஷனுக்குக் கிளம்பாமல் அப்படியே நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்த தோழியைப் பார்த்த மதுரவாணி, “என்னாச்சு மது, கிளம்பலையா? ஏன் ரொம்ப டல்லா இருக்க? எனக் கேட்டாள்.
“ஒரே தலைவலியா இருக்குது வாணி. மாத்திரை இருக்கா? நான் ரிசப்ஷனுக்குப் போகலை” என்றாள் மதுமிதா.
அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவள், “கல்யாணத்துக்கு வந்துட்டு அப்படிப் போகாம இருக்க மாட்டியே. சொல்லு என்னாச்சு?” எனக் கேட்க, அதற்குமேல் அவளால் அடக்கி வைத்துக் கொண்டிருந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நடந்ததை ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள்.
மதுரவாணிக்கு அதைக் கேட்டதும் முதலில் தன் மேலேயே கோபம் எழுந்தது. ‘சும்மா இருந்த சங்கை அவள் அல்லவா ஊதிக் கெடுத்தாள்.’ சிறு பொறியை ஆரம்பத்தில் கொளுத்திப் போட்டது அவளே.
“உனக்குள்ள இந்த மாதிரி ஒரு நினைப்பைத் திணிச்சதுக்குச் சாரி மது...” என மதுரவாணி இப்போது அழ ஆரம்பித்துவிட்டாள். அதைப் பார்த்ததும் தேவையில்லாமல் தோழியைக் கவலையில் ஆழ்த்திவிட்டோம் என மதுமிதாவிற்குப் புரிந்தது. அதன்பிறகு ஓரளவுக்கு மதுமிதா சகஜமாகி விட்டாள்.
“விடுடி... ஆரம்பத்துலேயே தெளிஞ்சுட்டேன். கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்” என அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
பின்னர், “இதுல கூட நமக்கு எவ்வளவு ஒற்றுமை பாரு. ரெண்டு பேருக்கும் காதல்ல லக் இல்லை. அதான் ஃப்ரெண்ட்ஸா இருக்கோம் போல” எனச் சொல்ல, மதுரவாணி புன்னகைத்தாள்.
அதன்பிறகு ஆனந்த்தை அழைத்துத் தன்னால் ரிசப்ஷனுக்கு வர முடியாது என்றும் அன்றிரவு அவர்களுடன் ஹைதராபாத்திற்கு வரவில்லை என்றும் சொன்னாள். அவன் எவ்வளவு கேட்டும் தன் தோழிக்கு ஓர் அவசர வேலையிருக்கிறது என அதற்கு மேல் எந்த விஷயத்தையும் அவள் பகிரவில்லை.
எவ்வளவு முயற்சித்தாலும் அவள் இதற்குமேல் எதையும் சொல்ல மாட்டாள் என ஆனந்த்துக்கு அவளைப் பற்றித் தெரியுமாதலால், “சரி பத்திரமா வந்து சேரு. ஏதாவது தேவைன்னா தயங்காம கூப்பிடு” என அக்கறையாய் உரைத்துவிட்டு அழைப்பை வைத்தான்.
ஒரு முக்கிய வேலை வந்துவிட்டது என்றும் அன்றிரவு ரயிலில் அவர்களுடன் வரவில்லை என்றும் பவித்ராவுக்கும் குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பினாள். பவித்ராவும் அவளது அலைபேசியை அணைத்து வைத்திருந்ததாள் எனப் புரிந்தது. ஏனென்றால் இரவு உறங்கும் வரையிலும் அவளிடம் இருந்து எவ்விதப் பதிலும் வரவில்லை.
மறுநாள் காலையில் விமானத்தில் செல்வதற்குப் பதிவு செய்துவிட்டு மதுரவாணியின் வீட்டிலேயே உறங்க ஆரம்பித்தாள் மதுமிதா. எதற்கும் இருக்கட்டும் என்று ரயிலில் வந்த குழுவுக்கு என்று ஒரு வாட்ஸ்ஆப் அணியை உருவாக்கியிருந்தாள்.
அதில், ‘அன்று இரவு அவளால் வர இயலாது. நாளை அலுவலகத்தில் சந்திக்கலாம்’ என ஒரு குறுஞ்செய்தியை மட்டும் மாலையில் தட்டி விட்டிருந்தாள்.
பிரேம், ‘டேக் கேர்’ எனப் பதில் அனுப்பியிருந்தான். பவித்ரா, பத்து மணியளவில் அவள் அனுப்பிய செய்தியைப் படித்திருப்பாள் போல, ‘தம்ஸ் அப்’ ஸ்மைலியை மட்டும் அனுப்பியிருந்தாள். ஆனந்த் ஏதாவது சொல்லியிருப்பான் என்று புரிந்தது.
நிரஞ்சனும் ஏதோ சமாதானவாதியைப் போல் ‘தம்ஸ் அப்’ ஸ்மைலியை தட்டியிருந்தான்.
மதுமிதாவிற்கு அவன் மேல் ஆத்திரம் வந்தது. பின்னே, மரியாதை நிமித்தமாகக் கூட அவனால் அவளை அழைத்துப் பேச முடியவில்லையா? எவ்வளவு பெரிய விஷயத்தை அவனிடம் சொல்லியிருக்கிறாள். அதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என்ற இங்கிதம் கூட அவனுக்கு இல்லையா?
அலைபேசியைப் பார்க்கவில்லை என்றும் சொல்ல முடியாது. அதற்கு அத்தாட்சியாய் குழுவில் பதில் சொல்லியிருந்தானே. கோபத்தை யாரிடம் காட்டுவது? அல்லது, எதில் காட்டுவது?
ஆகவே சாதுவாய் அமர்ந்திருந்த கைபேசி மட்டுமே அவள் பிடியில் சிக்கியது. அதை முற்றிலுமாக அணைத்து வைத்துவிட்டுப் படுக்கையில் சரிந்தாள்.
மதுரவாணி நேரத்திலேயே எழுந்துவிடுவாள். அதனால் அவள் எப்படியும் எழுப்பிவிடுவாள் என்ற தைரியத்தில் அலைபேசியின் மூச்சை நிறுத்தி வைத்தாள். ஆனால் அவளுக்குச் சாமானியமாக உறக்கம் வரவில்லை.
மீண்டும் மீண்டும் நிரஞ்சனைப் பற்றிய எண்ணங்களே அவள் சிந்தையை ஆக்கிரமித்துக் கருப்பு வெள்ளை வண்ணங்களைப் பூசிக் கொண்டிருந்தன.
‘எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறாள்? அவனின் நோக்கம் கூடப் புரியாமல் இப்படி வெகுளியாக இருந்திருக்கிறாளே? அவள் அண்ணன் தன்னை மட்டம் தட்டுவதில் எந்தத் தவறுமில்லை’
அதுவும் எப்படியெல்லாம் முழு முட்டாளாக இருந்திருக்கிறாள்? அவனின் ஒவ்வொரு செயலையும் தனக்குச் சாதகமாக உருவகப்படுத்தித் தன் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்திருக்கிறாள். ஆனால் அவனோ ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல் தன்னை உபயோகித்து வீச நினைத்திருக்கிறான். அவள் பவித்ராவுடன் நெருக்கமாகப் பழகுவதால் தன்னிடம் நட்பு பாராட்டி நெருங்கியிருக்கிறான்.
அவன் செயலால் அவளுள் தோன்றிய அந்த உருவத்தை முற்றிலும் உருக்குலைத்துவிட்டான்.
உயிரற்ற அந்த உருவத்துக்கு இனி யாரால் உயிர் ஊற்ற முடியும்? அழுகை அவளைக் கேட்காமலேயே நியாயவாதியாக விழிகளில் ஆஜாரானது.
அவளுக்கு இன்னுமே பல வினாக்களுக்கு விடை தெரியவில்லை. அவனுக்கும் பவித்ராவுக்கும் என்ன உறவு? என்ன சம்மந்தம்? எப்படித் தெரியும்? எந்த வகையில் பழக்கம்? எத்தனை வருடங்களாகப் பழக்கம்?
கேள்விகளின் எண்ணிக்கை தீராமல் பட்டியல் நீண்டு கொண்டே போக, அவள் மனதின் கொள்ளளவு போறாமல் போனது. அதற்கு மேல் எதையும் யோசிக்கத் தெம்பில்லை அவள் மனதுக்கு.
ஆனால் எதைப் பற்றி நினைக்கக் கூடாது என மனதுக்குக் கடிவாளம் போட நினைத்தாளோ, அந்த நினைவுகளே தாரைத் தப்பட்டையுடன் தாளம் போட்டுக் கொண்டு அவளைத் துன்பத்தில் தள்ளியது.
அவளுக்காக நிரஞ்சன் பார்த்து பார்த்து மெனக்கெடுகிறான் என அவள் நினைத்திருக்க அவன் பவித்ராவுக்காக மெனக்கெட்டிருக்கிறான்.
அன்று அலுவலகத்தில் வேலைப்பளுவின் பொழுது உணவு வரவழைத்ததாகட்டும், பிறந்தநாளன்று அவளுக்குப் பிடித்த உணவை உணவகத்தில் ஆர்டர் செய்ததாகட்டும் எல்லாமே பவித்ராவுக்காகச் செய்திருக்கிறான்.
பவித்ராவுக்கும் அவளுக்கும் கிட்டதட்ட ஒரே மாதிரி உணவு வகைகளே பிடிக்கும். அது இப்பொழுதல்லவா இந்த மரமண்டைக்குப் புரிகிறது. அவளையுமறியாமல் கண்கள் மீண்டும் நீரை வெளியேற்றின.
அன்று இரவு வெகு நேரமாகிவிட்டது என வீடு வரையில் வந்து அக்கறையுடன் இறக்கிவிட்டானே அதுவும் பவித்ராவுக்காகவே செய்திருக்கிறான். நிரஞ்சன் தன்னை ஏமாற்றிவிட்டான் என ஒரு கணம் கோபப்பட்டாள். ஆனால் அடுத்த நொடியே அவன் மீது கோபப்பட்டு எதுவும் ஆகப் போவதில்லை. அவனாக வந்து அவளிடம் எதையும் இதுவரையில் சொன்னதில்லை.
இவளாகவே அனைத்தையும் ஊகித்துக் கொண்டாள். அவளின் பொருளை அவளே பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டும். அவளே இதயத்தைக் களவு போக விட்டுவிட்டாள். வேறு யாரையும் குற்றம் சொல்லி எதுவும் ஆகப் போவதில்லை.
நல்லவேளை! முழுவதுமாகத் தொலையாமல் இருந்தாளே. இப்போதாவது சுதாரித்துக் கொண்டாளே. இப்போது என்ன, யாரும் வழி தெரியாமல் தொலைந்து போனதில்லையா? அது போல் இவளும் சில காலம் தொலைந்து போய்விட்டாள். இனி செல்லும் பாதை தெளிவாகிவிட்டதே. பயணத்தை மேற்கொண்டு இனிதே தொடரலாம்.
அது கண்டிப்பாகக் கடினமான விஷயமாக இருக்கப் போகிறது அவளுக்கு. ஆனால் அவளின் மன தைரியம் பற்றியும், சக்தியைப் பற்றியும் அவள் அறிவாள். அதற்கு மேல் அவள் தன்னைக் குறித்துப் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.
அவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தது அயர்வாக இருந்ததால் அப்படியே மதுமிதா உறங்கிப் போனாள். மறுநாள் அதிகாலையில் மதுரவாணி அவளை எழுப்பிவிட்டு விமானத்திற்கு நேரமாகி விட்டது எனச் சொன்ன பின்னரே கண் திறந்தாள். அதன்பிறகு பம்பரமாகச் சுழன்று, அடித்துப் பிடித்து விமான நிலையம் நோக்கி ஓடினாள்.
தூங்கி எழுந்ததும் ஓரளவுக்கு அவளின் மனம் தெளிந்திருந்தது. நடக்காது என்று தெரிந்த விஷயத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இனி அவளால் என்ன செய்ய முடியும்? நடந்ததையெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
ஆனால் என்ன நிரஞ்சனைக் கண் எதிரிலேயே வைத்துக் கொண்டு சத்தியமாக அது சாத்தியப்படாது. பேசாமல் மீண்டும் சென்னைக்கு மாற்றல் கேட்டுக் கொண்டு வந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
அது சாத்தியப்படவில்லை என்றால் வேலையையே விட்டு விடலாம் என்ற தீர்மானத்துடன் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் ஏறினாள். ஒரு முடிவு எடுத்தவுடன் அவளுக்குத் தெளிவு பிறந்ததும் இப்போது சீராக மூச்சு விட முடிந்தது.
விமான நிலயைத்திலிருந்து நேராக அலுவலகம் சென்றவளுக்கு, அதன்பிறகு வேறு எதிலும் கவனம் செல்லவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் கழுத்தை நெரிக்க, அதில் மூழ்கிவிட்டாள். ஆனால் சற்று நேரமாக ஆக, பவித்ரா ஏன் இன்னும் வரவில்லை என நெருடியது அவளுக்கு.
மெல்லத் தலையை உயர்த்திப் பார்க்க, நிரஞ்சனின் இருக்கையும் காலியாக இருந்தது. ஏனோ அவளையுமறியாமல் மீண்டும் மனதை ஓர் இறுக்கம் பயங்கரமாக அழுத்த ஆரம்பித்தது. ‘வேண்டாம் மது, எதையும் யோசிக்காதே’ எனத் தன்னையே திடப்படுத்திக் கொண்டாள்.
மனம் தாளாமல் பவித்ரா ஏன் வரவில்லை என்று தெரிந்து கொள்வதற்கு அவளை அழைத்துப் பார்த்தாள். ‘நீங்கள் அழைக்கும் நபரின் எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை’ என்ற செய்தியே கிட்டியது.
மீண்டும் மீண்டும் அவளை அழைத்துப் பார்க்க, அதே பதில் கிடைத்தது. அப்போது அங்கே வந்த ஆனந்த், “என்னாச்சு மது, திடீர்ன்னு உன்னையே நீ கிட்நாப் பண்ணிக்கிட்டியா?” என்றான்.
“ஒரு பெர்சனல் அர்ஜண்ட் வொர்க்” என அத்தோடு முடித்துக் கொண்டாள். “ஆமா, ரிசப்ஷன் எப்படிப் போச்சு?” என அவள் பேச்சை மாற்ற,
“ரிசப்ஷன் நல்லாப் போச்சு. ஆனா, நீ அவன்கிட்ட சொல்லாம கிளம்பினதுல அர்ஜூன் செம கோபத்தில இருக்கான். அதையும் விட டின்னர் மெனு செமையா இருந்தது. நீ மிஸ் பண்ணிட்ட?” என்றான்.
“அதான் எனக்கும் சேர்த்து வச்சு நீங்க சாப்பிட்டுட்டீங்க இல்லை” என்றாள்.
“டிரெய்ன் கரெக்ட்டான டைமுக்கு வந்திடுச்சா? பவித்ரா இன்னும் வரலை. கூப்பிட்டா ஃபோனை எடுக்கலை” என மதுமிதா கேட்டதும்,
“ஆமா, கரெக்ட் டைமுக்கு வந்துட்டோம். நானும் பிரேமும் அங்கே எங்க டூ வீலரை நிறுத்தியிருந்தோம். அதனால் எடுத்துட்டு கிளம்பிட்டோம். நிரஞ்சனும், பவித்ராவும் வீட்டுக்குப் போய்க் கிளம்பி வர்றதா சொன்னாங்க” என்றான் ஆனந்த்.
அப்படியே வீட்டுக்குச் சென்றிருந்தாலும் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே என மணியைப் பார்த்தாள்.
ஆனால் அன்று முழுவதும் அவர்கள் இருவருமே அலுவலகத்துக்கு வரவில்லை. ஏனோ மதுமிதாவுக்கு மீண்டும் தான் எங்கோ ஏமாற்றப்பட்ட உணர்வு முளைவிட்டது.
அன்று மாலை வீட்டுக்குச் சென்ற பின்னரும் அதுவே அவள் மனதை அரித்துக் கொண்டிருக்க, பொறுக்காமல் மீண்டும் பவித்ராவுக்கு அழைத்தாள்.
அலைபேசி இன்னுமே அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அவள் அண்ணன் விவேக் அழைக்க, சற்றுநேரம் அவனுடன் வம்பு வளர்ப்பதில் கழிந்தது. அப்படியே எதுவும் செய்யத் தோன்றாமல் படுத்து உறங்கிவிட்டாள்.
மறுநாள் அலுவலகம் செல்ல, அங்கே அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவள் உள்ளே நுழைந்ததும், “மது..” என அவளருகே ஓடி வந்த ஆனந்த்,
“நேத்துக் காலையில் வீட்டுக்குப் போறதுக்காக ‘டாக்சி’ல ஏற ரோடை க்ராஸ் பண்ணறப்போ பவித்ரா மேலே கார்காரன் ஒருத்தன் வந்து மோதிட்டானாம். நல்லவேளை நிரஞ்சன் அங்கேயே இருந்திருக்கார். உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டாராம்” என்றான்.
“ஓஹ்..” என மதுமிதா அப்படியே திகைத்துப் போனாள். மதுமிதாவுக்கு உடலெல்லாம் நடுக்கம் கொண்டது.
“நிறைய இரத்தம் போயிருச்சாம். நல்லவேளை நிரஞ்சனும் அதே வகைனால அவரே ரத்தம் கொடுத்து எல்லாம் நல்லபடியா முடிஞ்சதாம். கைல, கால்ல நல்லா அடி. கால்ல எலும்பு முறிவு ஏற்பாட்டிருக்காம். இன்னைக்கு அதிகாலைல ஆபரேஷன் முடிஞ்சதாம்”என ஆனந்த் சொல்லிக் கொண்டே போக, மதுமிதாவுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
பேசாமல் பவித்ராவின் அன்னையிடம் பேசியிருக்க வேண்டும். பேசியிருந்தால் அவளுக்கு நேற்றே விபத்து பற்றித் தெரிந்திருக்குமே.
மதுமிதா தன் யோசனையில் சிக்கியிருக்க, “நிரஞ்சன் இப்போ ஃபோன் பண்ணியிருந்தார். அவர் ஹாஸ்பிடல்ல இருக்கார்” எனச் சொன்னது அவள் காதில் சற்றும் ஏறவில்லை.
அரக்கப் பறக்க மருத்துவமனை பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டு, “நான் போய் பவியைப் பார்க்கிறேன்” என உடனே மருத்துவமனையை நோக்கிக் கிளம்பிவிட்டாள்.
பவித்ராவின் அன்னைக்கு அழைக்க, அழைப்பை எடுத்தவர், “ஓவென்று கதறி அழுதார்.
“அவளுக்கு ஏன் தான் இப்படி ஒன்னு மாத்தி ஒன்னு நடக்குதோ?” எனச் சற்றுநேரம் புலம்பியவர்,
“நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வீட்டுக்கு வந்தேன் மது. நீ போய் அவ பக்கத்துல இரும்மா. அவளுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும். நான் சமைச்சுட்டேன். அதை எடுத்துட்டுச் சீக்கிரம் அங்கே வர்றேன்” என அழைப்பை வைத்தார்.
நேராக மருத்துவமனைக்குச் சென்று பவித்ரா இருந்த அறைக்குச் சென்றாள். பவித்ரா படுக்கையில் கால் நீட்டி அமர்ந்திருக்க, நிரஞ்சன் அவளுக்கு எதையோ வாயில் புகட்டிக் கொண்டிருந்தான்.
பவித்ரா வாயைத் திறக்காமல் இறுக மூடி சண்டித்தனம் செய்தாள்.
“பவி, பிளீஸ்டா... வாயைத் திற. இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருப்ப. என்னால சத்தியமா முடியலை” என நிரஞ்சன் சொல்வது அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த மதுமிதாவின் செவிகளில் விழ அப்படியே சிலையென நின்றுவிட்டாள்.
“இரத்தம் கொடுத்துக் காப்பாத்திட்டா உடனே என் உயிரை உங்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திடணுமா?” எனப் பட்டாசாய்ப் பொரிந்து தள்ளினாள் பவித்ரா.
அதைக் கேட்டுக் கலகலவென்று சிரித்த நிரஞ்சன், “உயிரெல்லாம் வேண்டாம். ஊட்டி விடறதை மட்டும் சாப்பிடு” என்றான்.
“நான் எப்படிப் போனா உங்களுக்கு என்ன? போங்க, போய் உங்க வேலையைக் கட்டிட்டு அழுங்க” என அப்போதும் பவித்ரா சிணுங்கலாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
எவ்வளவு நேரம் தான் சிலையென மதுமிதாவால் நின்று கொண்டிருக்க முடியும்? சிலை மேல் மலையைப் புரட்டி வைத்தால் சிதிலமடையாதா? மெல்லத் திரும்பி மதுமிதா நகர முயல, அறைவாயிலில் யாரோ அசைவது பவித்ராவுக்குத் தெரிந்தது.
விழிகளைச் சுழற்றி அங்கே நோக்கினாள். அறைக்குள் நுழையாமல் மதுமிதா திரும்பிச் செல்வது தெரிய, “எங்கே போற மது? நில்லு...” என அவளைத் தடுத்து நிறுத்தினாள் பவித்ரா.
தொடரும்...
Last edited:
Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 8
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.