• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 7

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 7


யாரோ ஒருவன் அவளைத் தெரிந்தவன் போல் பார்த்துக் கொண்டிருக்க, ‘யாரிவன்?’ என்ற கேள்வி பிறந்தாலும் அவனைப் பார்த்துச் சின்னச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவனைத் தாண்டி நடக்க ஆரம்பித்தாள் மதுமிதா.

“மது, ஒரு நிமிஷம்... உங்ககிட்ட நான் பேசணும்” என்றான்.

‘இவனுக்கு என்னைத் தெரியுமா? ஆனால் அவன் யார் என்று அவளுக்குத் தெரியவில்லையே’ என யோசித்தவாறே நின்று திரும்பி அவனை நோக்கினாள் மதுமிதா.

“நான் அரவிந்த். அர்ஜுனோட ஃப்ரெண்ட்.” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், “அர்ஜூன் ஏற்கனவே உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கான். அவனோட காதலுக்கு நீங்க ரொம்ப ஹெல்ப் பண்ணினதாச் சொன்னான்” என்றான் அரவிந்த்.

“ஓஹ் அர்ஜூனோட ஃப்ரண்டா நீங்க? என்ன, உங்க காதலுக்கும் நான் தூது போகணுமா?” என மதுமிதா இன்முகத்துடன் கேட்கவும், பக்கென்று சிரித்த அரவிந்த், “கிட்டத்தட்ட அப்படின்னு வச்சுக்கோங்க” என்றான்.

“பேசாம ‘மது மெசஞ்சர் சர்வீஸ்’ அப்படின்னு ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினா ரொம்ப அமோகமா தொழில் போகும் போல” எனச் சிரித்தவள், “சொல்லுங்க, உங்க லவ்வர், ஹைதராபாத்ல இருக்கறாங்களா? உங்களுக்கு ஏதாவது கொடுத்தனுப்பணுமா?” எனக் கேட்டாள்.

“ஆமா, என் லவ்வர் ஹைதராபாத்ல இருக்காங்க” எனக் கிறக்கமாய்ச் சிரித்தவன், “ஆனா நீங்க எதையும் எடுத்துட்டுப் போக வேண்டாம். ஏன்னா அந்த லவர் என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்காங்க” என அரவிந்த் சொன்னதும் அவன் என்ன சொல்கிறான் என ஒரு சில நொடிகள் அவளுக்குப் புரியவில்லை.

அவன் சொன்னதைக் கிரகித்து விஷயம் புரிந்ததும், “வாட்? இதை நான் சத்தியமாய் எதிர்பார்க்கலை” எனத் திகைத்தவள், “நான் உங்க லவ்வர்னு நீங்களா எப்படி முடிவெடுக்க முடியும்?” என மதுமிதா முகபாவனையை மாற்றிக் கொண்டு வினவ,

“அந்த முடிவை எடுக்கறதுக்கு இப்ப உங்க முன்னாடி நின்னுட்டு இருக்கேன்னு வச்சுக்கோங்க. அர்ஜூன் உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கான். அதுலேயே ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன். இன்னைக்கு உங்களை நேர்ல பார்த்ததுமே ரொம்பப் பிடிச்சிருச்சு” என அவன் மனதில் பட்டதைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டான்.

சற்றுநேரம் பேசுவதற்கு மதுமிதாவிற்கு நா எழவில்லை. “என்னை மன்னிச்சுடுங்க அரவிந்த். நீங்க நல்லவர். ஆனா எனக்கு இதுல விருப்பமில்லை. நான் ஏற்கனவே ஒருத்தரை விரும்பறேன்” என அவளும் தன் மனதில் உள்ளதைச் சொல்லி விட்டாள்.

“சும்மா என்னை மறுக்கிறதுக்காகப் பொய்ச் சொல்லாதீங்க மது. நீங்க யாரையும் காதலிக்கலைன்னு அர்ஜுன் ஏற்கனவே என்கிட்டே சொல்லிட்டான்” என அரவிந்த் வாதாடினான்.

‘துரோகி!’ என அர்ஜூனை மனதில் வசை பாடியவள், “உண்மை அரவிந்த். முன்னாடி காதலிக்கலை. ஆனா, இப்போ விரும்பறேன். நான் விரும்புறதை நானே இவ்வளவு நாளா உணரலை. அது இன்னும் சம்பந்தப்பட்டவருக்குக் கூடத் தெரியாது” என மதுமிதா சொல்ல, அரவிந்த் அவளை விடுவதாகயில்லை.

“மது, பிளீஸ் கன்ஸிடர் பண்ணுங்க. என்னை மறுக்கறதுக்காகப் பொய்ச் சொல்லாதீங்க. கொஞ்ச நாள் பழகிப் பார்த்து அப்புறம் உங்க பதிலைச் சொல்லுங்க” என அவள் பொய் சொல்வதாகவே கருதினான் அரவிந்த்.

அதனால் அவனைப் பற்றிய மொத்த விவரங்களையும் மூச்சை நிறுத்தாமல் படபடவென்று அவளிடம் கொட்டிக் கொண்டிருந்தான்.

இவனை எப்படித் தவிர்ப்பது என யோசித்துச் சுற்றுமுற்றும் பார்த்தவளின் விழிகளில் நிரஞ்சன் சற்றுத் தொலைவில் நடந்து வருவது தெரிந்தது.

அவனை அழைத்து, “இங்க கொஞ்சம் வாங்க நிரஞ்சன்” என்றாள். அவளைப் பார்த்த நிரஞ்சன் எப்போதும் போல் புன்னகை முகத்துடன் அவர்கள் அருகில் வந்து நின்றான்.

“என்ன மது, சொல்லுங்க” என நிரஞ்சன் அவளிடம் சொல்ல, “இவர் நிரஞ்சன். எனக்கு பாஸ். ஒரே கம்பெனில வேலை செய்யறோம். இவரை நான் காதலிக்கிறேன். இன்னும் அது அவருக்கே தெரியாது. ஆனா நீங்க அதைப் புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை. அதனால உங்க முன்னாடியே அவர்கிட்ட என் காதலைச் சொல்லறேன். அவருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும்” என அரவிந்த்தைப் பார்த்து சொன்ன மதுமிதா,

நிரஞ்சனின் முகம் நோக்கி, “சாரி, இப்படி என் விருப்பத்தைச் சொல்லணும்னு நினைக்கலை நிரஞ்சன். ஆனா சூழ்நிலை அப்படி ஆகிப் போச்சு. உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்னு தெரியும். நானும் உங்களோட என் வாழ்க்கையைப் பகிர்ந்துக்கணும்னு நினைக்கிறேன்” என மதுமிதா மனதில் இருப்பதையெல்லாம் மடைதிறந்த வெள்ளமெனக் கொட்டிவிட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அரவிந்த் அதிர்ந்து போனானோ இல்லையோ, நிரஞ்சன் மிகவுமே அதிர்ந்து போனான். எந்தப் புள்ளியில் அவளுக்கு அவன் மேல் காதல் தோன்றியது என்று அவனுக்குப் புரியவில்லை. பேச்சற்று நின்றிருந்தான்.

அவள் தன் காதலை வெளிப்படுத்தியதும் நிரஞ்சனின் முகம் சூரியனைப் போல் பிரகாசிக்கும் என்ற ஆசையிலும், அவள் காதலைக் கண்டு ஆர்ப்பரிப்பான் என்ற கனவிலும் அவனை எதிர்பார்ப்புடன் நோக்கிக் கொண்டிருந்தவள் சத்தியமாய் நிரஞ்சனின் அதிர்ச்சி முகத்தை எதிர்பார்க்கவில்லை.

அவனின் இந்த எதிர்வினை அதிரடியாய் அவள் உள்ளத்தில் இறங்கி கிழித்தது. அதுவும் மூன்றாம் நபரான அரவிந்தின் முன்னால் இப்படி ஒரு தலைகுனிவை அவள் சற்றும் எதிர்நோக்கவில்லை.

சற்றுநேரம் அங்கு ஒருவரும் பேசவில்லை. நாழிகைகள் நிசப்தமாய்க் கடந்து போயின.

“நிரஞ்சன் ஏதாவது பேசுங்க... எனக்குப் பயமாயிருக்கு...” எனச் சொன்ன மதுமிதாவின் குரல் அவளுக்கே கேட்கவில்லை. பதில் என்னவாக இருக்கும் என்று அவளுக்கு அவனின் முகப் பாவனையிலேயே புரிந்து போனது

அப்படியென்றால் அவள் மொத்தத்தையும் தவறாக எண்ணிக் கொண்டாளா? ஆனால் அவளுக்கு அவனைப் பிடித்துத் தொலைத்துவிட்டதே. மனதை களவு போக விட்டுவிட்டாள். அது கள்வனிடம் பத்திரமாக இருக்கிறது என்று நினைத்த அவள் நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டானே.

“ரொம்பச் சந்தோசம் மது. உன்கிட்டே இருந்து நான் இதைச் சத்தியமா எதிர்பார்க்கலை” என்ற பவித்ராவின் குரலைக் கேட்டதும் கலவரத்துடன் திரும்பிப் பார்த்தாள் மதுமிதா. அங்கே கோப விழிகளுடன் பவித்ரா நின்று கொண்டிருந்தாள்.

“காதலை மதிக்கத் தெரியாதவங்க மேலே எல்லாம் உனக்குக் காதல் தேவையா? உன்னைப் புத்திசாலின்னு நினைச்சேன். நீயும் எல்லோரையும் போல இப்படி வெளித் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து போவியா?” பவித்ரா தொடர்ந்து இவ்வளவு பேசி மதுமிதா கேட்டதில்லை. அதுவும் கோபத்துடன்.

ஆனால், ‘நிரஞ்சனைப் பற்றி இவளுக்கு எப்படித் தெரியும்?’ எனத் திடீரென்று தோன்றிய கேள்விக்கு, “பவி, நான் இப்போ மாறிட்டேனே. இன்னும் எதுக்குக் கோபத்தைப் பிடிச்சு வச்சிட்டிருக்க?” என நிரஞ்சனின் வாய்ப்பூட்டு அவிழ்ந்து, மதுமிதாவின் கேள்விக்கு உண்டான பதிலைத் தந்தது.

அப்படியென்றால் இவர்கள் இருவருக்கும் முன்பே அறிமுகம் இருக்கிறதா? அதுவும் எப்படிப்பட்ட அறிமுகம்? அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

நிரஞ்சன் சொன்னதைக் கேட்டதும் பவித்ராவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “கத்திரிக்காச் செடியில நெய் வடியுதுன்னு சொன்னா கேனையன் வேணா நம்புவான். நானில்லை” எனச் சொன்ன பவித்ரா அங்கிருந்து விடுவிடுவென்று நகர்ந்துவிட்டாள்.

“பவி, நில்லு” என நிரஞ்சனும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினான். அதைப் பார்த்த மதுமிதாவின் நெஞ்சக்கூடு மொத்தமும் காலியானதைப் போல் இருந்தது. அடிநெஞ்சம் ஓவென்று ஓலமிட்டது. துக்கம் தொண்டையை அடைத்தது.

அவளை விரும்புவதும் விரும்பாததும் வேறு. ஆனால் இப்படி மனதைத் திறந்து அவள் விருப்பத்தை வெளிப்படுத்திய அவளிடம் எதுவுமே சொல்லாமல் சென்றுவிட்டானே.

‘இல்லை, நான் அப்படிப் பழகவில்லை’ என மறுத்திருக்கலாம். இல்லையென்றால், ‘சாரி’ என ஒரே ஒரு வார்த்தைச் சொல்லியிருக்கலாம். ஆனால் எதுவும் சொல்லாமல் அவள் முகத்தில் ஓங்கி அறைந்ததைப் போல அறையாமல் மறைந்துவிட்டானே.

அதுவும் வேறொரு பெண்ணின் பின்னால் சென்றுவிட்டானே. அது அவளது தோழியாகவே இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் தான் ஏமாற்றப்பட்டதைப் போல் உணர்ந்தாள். தன்னை அவன் உதாசீனப்படுத்திவிட்டதாக எண்ணினாள் மதுமிதா.

அவள் அத்தனையையும் தவறாக எண்ணிவிட்டாளா? அப்போது தான் அவளுக்கு வேறொரு சந்தேகமும் எழுந்தது. நிரஞ்சன் தனக்காகத் தன்னிடம் வலிய வந்து பேசவில்லையோ?

பவித்ராவுடன் அவள் நட்புப் பாராட்டுவதை அறிந்து கொண்டே தன்னிடம் நெருங்கி வந்து பழகினானோ? எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. அதுவே அவளின் அறுநிலை. அதற்குமேல் அவளால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நெஞ்சம் சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது. கண்கள் உடைப்பெடுத்து கன்னங்களில் கோலம் வரைந்தது.

நடந்ததைப் பார்த்து அரவிந்தும் திகைத்துப் போயிருந்தான். இப்படி ஒரு திருப்பத்தை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்த நொடியே சுதாரித்து அருகிலிருந்த உணவு பரிமாறும் இடத்திற்குச் சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து மதுமிதாவின் முன்னால் நீட்டினான்.

அப்பொழுதுதான் மதுமிதாவுக்குச் சுயஉணர்வு வந்தது. கலங்கிய முகத்துடன் ஏறிட்டுப் பார்த்தவளைப் பார்த்ததும் அவனுக்குத் தன் மீதே கோபம் எழுந்தது. எத்தனை துள்ளலுடன் காலையிலிருந்து சுற்றிக் கொண்டிருந்தாள். எல்லாம் அவனால் தடைபட்டுப் போனது.

அவன் பேசாமல் இருந்திருந்தால்... அவன் காதலை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால்... அவளும் சந்தோஷமாக இருந்திருப்பாளே. அவன் உள்ளம் வேதனையில் வாடியது.

மதுமிதாவின் நிலையை உணர்ந்து, “சாரி மது, இப்படி ஆகும்னு நினைக்கலை. நீங்க இவ்வளவு வலியும் வேதனையும் அனுபவிக்க நான் காரணமாகிட்டேன்” என மன்னிப்பை வேண்டினான் அரவிந்த்.

“இல்ல அரவிந்த், பார்க்கப் போனா நீங்க எனக்கு நல்லது பண்ணியிருக்கீங்க. இல்லைன்னா நான் முட்டாளின் சொர்க்கத்திலேயே இன்னமும் இருந்திருப்பேன். ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்கு இப்போ என்னோட நிலைமை புரியும்னு நினைக்கிறேன். நான் கிளம்பறேன்” என இமையோரத்தில் துருத்திக் கொண்டிருந்த விழிநீரை இமைகள் கொட்டி, கீழே கொட்டச் செய்தாள்.

“மது” என அவளைத் தடுத்து நிறுத்தியவன்,

“ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க. நீங்க என் காதலை மறுத்துட்டீங்க. அதுக்காக நான் ஒன்னும் உடைஞ்சு போயிடலை. அதே மாதிரி உங்க காதலை அவர் மறுத்துவிட்டார். அதுக்காக ரொம்பவும் உடைஞ்சு போயிடாதீங்க” எனத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டானோ, இல்லை, உண்மையில் அவளுக்குச் சமாதானம் சொன்னானோ அவனுக்கே வெளிச்சம்.

அதைக் கேட்டதும் அவன் சொல்ல வருவது புரிந்தது. “கண்டிப்பா... நான் கிளம்பறேன். அவசர வேலையாக் கிளம்பிட்டேன்னு அர்ஜூன்கிட்ட சொல்லிடுங்க. தேங்க்ஸ்” என வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசினாள் மதுமிதா.

“சொல்லிடறேன் மது. நான் உங்களுக்கு எப்பவும் ஒரு ஃப்ரெண்ட்டா இருப்பேன். மறந்துடாதீங்க. ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க” என அதற்குமேல் அவன் அவளைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கவில்லை. அவளின் நொறுங்கிய நெஞ்சம் பற்றி உணர்ந்து கொண்டான்.

“எங்க போகணும்னு சொல்லுங்க, நானே வந்து கார்ல ஏத்திவிடறேன்” என்றான் அரவிந்த்.

“இல்ல நான் கிளம்புறேன். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நீங்க நினைக்கற அளவுக்கு ஒன்னும் நான் பலவீனமானவ இல்லை” எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“மறுபடியும் சந்திக்கலாம்” என அவனும் விடைபெற்றுக் கொண்டான் அரவிந்த்.

அவசரமாகச் சென்று தன் உடைமைகளைச் சேகரித்தவள் சற்றும் தாமதிக்கவில்லை. மண்டபத்தில் இருந்து வெளியே வந்தாள். வந்த ஆத்திரத்துக்குத் தலையில் சூடியிருந்த மல்லிகையைப் பிடுங்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.

பின்னர் அவள் வரவழைத்திருந்த காரினுள் ஏறிச் சென்றுவிட்டாள். அவளைத் தேடி அவசரமாக அங்கே வந்த நிரஞ்சனின் கண்களில் அவள் பூவைப் பிடுங்கி எறிவது தெரிந்தது.

இப்படித் தேவையில்லாமல் அவள் மனதில் ஆசையை வளர்த்துவிட்டானே எனத் தன்னையே திட்டிக் கொண்டான். மதுமிதா சென்ற கார் புள்ளியாய் மறையும் வரையில் அந்தக் கார் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

தொடரும்...
 
Last edited:

Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
காதல் சொல்ல வந்தால்
காதலிக்கு முன் காதல் இருக்க
காதலனுக்கே தெரியவில்லை
காதல்.....
கலங்கி நிற்கும் நான்கு
கல்லாகீ போன இதயங்கள்.
 
Top Bottom