• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 6

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 6

மாலையில் ரயிலேறியவர்கள் சற்றுநேரம் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாகக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். பிறகு சிறிது நேரம் ஏற்கனவே சென்னைக்குச் சென்றிருந்த அர்ஜூனுக்கு ‘வீடியோ காலில்’ அழைத்து அவனைக் கலாய்த்து ஒரு வழி செய்தனர்.

இரவு அனைவரும் அவரவர் வீட்டில் தயாரித்துக் கொண்டு வந்திருந்த உணவைப் பகிர்ந்து உண்டனர். நடப்பதை எல்லாம் பார்க்கையில் நிரஞ்சனுக்கு உண்மையில் உள்ளத்தில் உவகை ஊறியது. மனதில் சட்டென்று எழுந்த உவப்பை மிகுந்த சிரமத்துடன் வெளிக்காட்டாமல் பாதுகாத்தான்.

ஆனாலும் இன்னும் முழுமனதாக அவனால் அந்த உவகையை அனுபவிக்க முடியவில்லை. கூடிய விரைவில் அது நடக்கும் என்று நம்பினான். இது போன்ற எத்தனை எத்தனை வாய்ப்புகளை இழந்திருக்கிறான். நடு மண்டையில் நச்சென்று அடித்து வாழ்க்கை அவனுக்குப் புரிய வைத்துவிட்டது. அதற்காக அவன் இழந்ததும் ஏராளம். இனி அவனால் எந்த இழப்பையும் தாங்கிக் கொள்ள முடியாது.

உணவுக்குப் பின்னர் சற்றுநேரம் அந்தாக்ஷரி விளையாடினார்கள். பிரேம் மற்றும் மதுமிதா ஒரு குழுவாகவும், பவித்ரா – ஆனந்த் இருவரும் எதிர் அணியாகவும் சேர்ந்து கொண்டனர். நிரஞ்சன் தனக்குப் பாட வராது என ஒதுங்கிக் கொண்டான்.

அப்படியிருந்தும் அவனைத் தன் குழுவில் சேர்த்துக் கொண்டான் ஆனந்த். ஆனால் அவனுக்கு எந்தப் பாட்டுமே தெரியாது எனத் தெரிய வருகையில், ‘டேய், நீ என்னை விட டம்மி பீசா? நானாவது தமிழ்ல முழுசா படிக்கலை. உனக்கென்ன?’ என்பதைப் போல் பார்த்து வைத்தான்.

மதுமிதாவின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது என நிரஞ்சன் மனதுக்குள் எண்ணி ரசித்தான். அதெப்படி பெண்களுக்கு மட்டும் குரல் இவ்வளவு இனிமையாக இருக்கிறது எனப் பட்டிமன்றம் நடத்தினான். அதையும் விட இவர்களுக்கு மட்டும் எப்படிப் பாடல் வரிகள் அத்தனையும் அத்துபடி என வியந்தான்.

தன்னை விடப் பவித்ராவின் குரல் இன்னுமே இனிமையாக இருக்கும் என்றே பவித்ராவை எதிர் அணியில் சேர்த்துவிட்டாள் மதுமிதா. பவித்ராவின் குரலும் தேனில் முக்கியெடுத்ததைப் போல் மிகவுமே இனிமையாக இருந்தது. அவர்களின் கொண்டாட்டத்தில் ரயிலில் உடன் பயணம் செய்த மற்றவர்களும் சேர்ந்து கொள்ள, கச்சேரி களைகட்டியது.

இந்தக் குறுகிய சமயத்தில் எப்படி மதமிதா அனைவரையும் தன் வசம் இழுத்துவிட்டாள் என அவளை ஆச்சரியத்துடன் நோக்கினான் நிரஞ்சன்.

சிறிதுநேரத்தில் ரயிலிலுள்ள மற்ற பயணிகள் உறங்க ஆரம்பிக்க, அதற்குமேல் சத்தம் போட கூடாது என மதுமிதாவின் குழுவும் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தது.

மறுநாள் காலையில் ரயில் சென்னைக்குப் போய்ச் சேர, நேராக மதுமிதாவின் வீட்டுக்குச் சென்றனர். அவள் வீடு திருமண மண்டபத்துக்கு அருகிலேயே இருந்ததால் அங்கே சென்று குளித்துக் கிளம்பச் சரியாக இருக்கும் என ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர்.

அதன்பிறகு அப்படியே மண்டபத்தில் இருந்தே கிளம்பி நேராக ரயில்நிலையம் சென்றுவிடலாம் என எண்ணினர்.

பட்டுச் சேலையில் கிளம்பி வந்த மதுமிதாவைப் பார்த்த ஆனந்த், இரண்டு கைகளையும் இதயம் இருக்கும் இடத்தில் வைத்துக் கொண்டு, “என்னடா இன்னைக்குப் புயல் புடவையைச் சுத்தி நம்ம மனசுல புயலை உண்டாக்குது” எனக் கேலி பேசினான்.

அதைக் கேட்டு சட்டென்று அவளை ஏறிட்டுப் பார்த்த நிரஞ்சனுக்குச் சத்தியமாய் ஒரு சில கணங்கள் விழிகளை அப்படி இப்படி என்று விலக்க முடியவில்லை. அவள் அதரங்களில் பிரகாசம் மிக்கச் சிறு புன்னகை கீற்றொன்று ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது.

‘கண்டிப்பா மனசை மயக்கற மாதிரி இருக்கா’ என அவன் நெஞ்சத்தில் புத்துணர்வு குடி கொண்டது. ஏதோ நினைத்தவனாகப் பட்டென்று ஆனந்த்தைத் திரும்பிப் பார்த்தான். அவன் விகல்பமில்லாமல் பேசுகிறான் என்று புரிந்தது.

மீண்டும் பார்வை மதுமிதாவின் பக்கம் திரும்ப, “இப்படியே பேசிட்டு இரு, அடுத்து சூறாவளி வரும்” எனச் சொன்னவளின் அலைபேசி ஒலித்தது. அவள் அண்ணன் விவேக் அழைத்திருந்தான். அவள் பத்திரமாகச் சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டாளா என அவன் விசாரிக்க, “பத்திரமா வந்துட்டேன்” எனப் பதிலளித்தாள்.

அவள் பதிலில் எதிர்முனையிலிருந்து வந்த கேள்வியை ஊகித்த ஆனந்த், “ஹலோ, தப்பான ஆள்கிட்ட அந்தக் கேள்வியைக் கேட்கறீங்க. அவளோட வந்த நாங்க பத்திரமா இருக்கோமான்னு நீங்க கேட்கணும்” என உரக்கக் கத்தினான்.

அவன் சொன்னதைக் கேட்டு எதிர்முனையில் இருந்த விவேக் சிரித்தவாறே, “வேலையில் இருக்கறவங்களையும் விடலையா? இப்படிப் பயப்படறாங்க. ஆமா, ஏதோ லவ் பேர்ட்ன்னு சொன்னியே. அது இவனா?” எனக் கேட்டுவிட்டு, “சாரி, இவ...ர்ராஆஆ?” என நக்கலாக இழுத்து முடித்தான்.

அவசரத்துடன் அவள் விழிகள் நிரஞ்சனைத் திரும்பிப் பார்க்க, அவனும் அவளையே விழியகலாமல் நோக்கிக் கொண்டிருந்தான்.

ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தெரியவில்லை. முதலில் அவளை அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே அவனுக்குப் புரியவில்லை. ஆனாலும் அந்தப் பார்வை அவனுக்கு இதமளித்தது.

‘எதற்காக இப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான்?’ என யோசித்தாலும், ‘அண்ணா’ என அவனுக்கு உதடுகள் அசைத்து சொல்லிவிட்டு விழிகளைத் திருப்பிக் கொண்டாள். ஏற்கனவே தன் அண்ணனிடம் பேசியிருக்கிறானே என்ற மரியாதை நிமித்தம் அவள் நிரஞ்சனிடம் தகவல் சொன்னாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. உன்னை அப்புறம் வச்சுக்கிறேன். இப்போ லேட்டாச்சு. கிளம்பணும்” எனத் தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் வைக்கவும், அலங்காரம் செய்து முடித்த பவித்ரா வெளியில் வரவும் சரியாக இருந்தது.

மிதமான ஒப்பனையுடன் பெரிய விழிகளுடன் பார்க்க அழகாக இருந்தாள் பவித்ரா. நிரஞ்சன் அவளைப் பார்த்துப் புன்னகைக்க, அவனைக் கண்டுகொள்ளாமல் மதுமிதாவின் பக்கம் சென்றாள்.

செல்லும் வழியில் பூ வாங்கிக் கொள்ளலாம் எனத் திட்டமிட்ட பெண்கள் இருவரும் காரில் ஏறியதும் அதைப் பற்றி மறந்து போயினர். திருமண மண்டபம் சென்றடைந்த பின்னரே, “அய்யோ மது, பூ வாங்க மறந்துட்டோமே” என மதுமிதாவிடம் சொன்னாள் பவித்ரா.

மதுமிதாவுக்கும் அப்போது அது ஞாபகத்துக்கு வர, “அச்சோ, முகூர்த்ததுக்கு வேற லேட்டாச்சே” எனக் கைகளைப் பிசைந்தாள்.

“அப்படியே அந்தப் பூவை வச்சாலும் பெருசா அங்க அழகு கூடப் போறதில்லை. வந்ததே கல்யாணத்துக்கு. அதுக்கும் லேட்டா போவியா? சாப்பாட்டு வாசனை வேற வயிறு வரையில் தீண்டுது. வா உள்ளே போகலாம்” எனப் பறந்தான் ஆனந்த்.

“சும்மா இருடா” என எப்போதும் போல் பிரேம் அவனை அடக்க முயல, “சும்மாவே சாப்பாட்டை விட மாட்டேன். இதுல ஓசி சாப்பாடு வேற... முதல் பந்தில உட்கார்ந்து கடைசிப் பந்தில எழுந்திருக்கணும்” எனக் கூசாமல் சொன்னான் ஆனந்த்.

“என்னமோ புயல், முயல்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கவிதையாக் கொட்டுனீங்க” என மதுமிதா முறைக்க,

“அது உங்க ஊர் கவிஞர் திருவள்ளுவர் ஒன்னு சொல்லுவாரே...” என ஆனந்த் இழுக்க, “வஞ்சப்புகழ்ச்சி அணி” என எடுத்துக் கொடுத்தான் நிரஞ்சன்.

“கரெக்ட்... அதே அதே.. அதைக் கூடப் புரிஞ்சுக்காம” என்றான் ஆனந்த் அசராமல்.

“நீங்களுமா?” என மதுமிதா நிரஞ்சனைப் பார்த்து முறைக்க, கலகலவென்று பேசியவாறே திருமண மண்டபத்துக்குள் நுழைந்தனர். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய, மதுமிதாவும் பவித்ராவும் அங்கிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர்.

பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். யாரோ மதுமிதாவின் முன்னால் மல்லிகைப் பூவை நீட்ட, படக்கென்று திரும்பிப் பார்த்தாள். பளீரென்ற புன்னகையுடன், “ரொம்ப ஃபீல் பண்ணினீங்களே. பக்கத்துல வித்துட்டு இருந்தாங்க” என்றவாறே அதைக் கையில் ஏந்திக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.

மலர்ந்திருந்த மல்லிகையைப் பார்த்த மதுமிதாவின் நெஞ்சம் அதற்குப் போட்டியாய்க் குப்பென்று மலர்ந்தது. மல்லிகைப் பூவின் வாசனை அடி ஆழம் வரையில் ஊடுருவி அவளைக் கிறங்கச் செய்தது. அந்தப் பூவை மறுக்கத் தோன்றவில்லை.

புன்னகையுடன் கையை நீட்டி, “ரொம்பத் தேங்க்ஸ். ஆனா, உங்களுக்கு எதுக்குச் சிரமம்?” எனச் சொன்னவாறே அதை வாங்கிக் கொண்டாள்.

அதே சமயத்தில், “எனக்கு வேண்டாம். தலைவலிக்குது” என்றாள் பவித்ரா.

அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த மதுமிதா, “ஏய் பவி, என்ன விளையாடறியா? பூவைப் பத்திக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டது நீ. அவர் கஷ்டப்பட்டு நமக்காக வாங்கிட்டு வந்திருக்கார். கூடவே ஹேர்ப்பின் வேற வாங்கிட்டு வந்திருக்கார். திரும்பு நான் வச்சு விடறேன்” என அவளே அவள் தலையை வலுக்கட்டாயமாகத் திருப்பி, அந்தப் பூவை அவள் தலையில் சூட்டிவிட்டாள்.

அதற்குமேல் பவித்ராவால் மறுக்க முடியவில்லை. ஏனோ இதமாகவும், உரிமையுடனும் பழகும் மதுமிதாவிடம் எதிர்பதமாக எதையும் சொல்ல அவளுக்கு இதுவரையில் நா எழுந்ததில்லை. அவளே சிறிது நேரத்தில் மதுமிதாவின் மேல் கோபப்படப் போகிறாள் என்று இருவருமே அப்போது அறியவில்லை.

மீதியைத் தன் தலையில் வைத்துவிடச் சொல்லி பவித்ராவிடம் தர, அதற்குப் பிறகு அவள் வேறு எதுவுமே சொல்லவில்லை. அவள் கேட்டபடியே செய்தாள். அதுவரையில் அங்கேயே நின்று கொண்டிருந்த நிரஞ்சன், “இப்போ ரொம்ப நல்லாயிருக்கு” எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்று மற்ற அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டான்.

அவன் நடவடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதாவுக்கு அவளையும் அறியாமல் கன்னங்கள் சிவந்து போனது. கண்டிப்பாக இவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது. தன் உள்ளத்தில் இருப்பதைத் தன்னிடம் எப்போது சொல்வான் எனக் கள்ளுண்ட வண்டாகக் கிறுகிறுத்துப் போய் அவள் மனம் அலைந்தது.

விழிகள் அவ்வப்பொழுது அவனையே வட்டமிட்டு அகம் மகிழ்ந்தது. அவனின் புன்னகை காந்தமாய் இழுத்து அவளின் மென்னகையை வெளிக் கொணர்ந்தது. அவன் விழியீர்ப்பு விசையில் அவளின் நெஞ்சம் அவன் திசை நோக்கியே பாய்ந்தது.

திருமணம் நல்லநேரத்தில் அரங்கேறி அனைவரும் உணவு பரிமாறும் இடத்திற்குச் சென்றனர். தெரிந்தோ தெரியாமலோ நிரஞ்சன் மதுமிதாவின் அருகிலேயே வந்து அமர்ந்து கொண்டான்.

உணவு பரிமாறுகையில் கூடப் பரிமாற வந்தவர்களிடம், “அவங்களுக்கு இது பிடிக்கும். இதை அவங்களுக்கு வைங்க” என மதுமிதா இருந்த திசையை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தான்.

மதுமிதாவிற்கு இப்போது தெளிவாகவே புரிந்து போனது. அவனது செய்கைகள் அனைத்தும் அவனுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறதே. நிரஞ்சன் சும்மா ஒன்றும் தன்னைச் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. அவன் தன்னிடம் அதீத உரிமை எடுத்துப் பழகுகிறான் எனத் தெரிந்தது.

அவள் எங்கே இருந்தாலும் தவறாமல் அவனும் அங்கே இருந்தான். சற்றுமுன்னர் மேடையேறி அர்ஜுனனுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் புகைப்படம் எடுக்கையில் கூடத் தவறாமல் அவளுக்கு அருகிலேயோ பின்னாலேயோ நின்று கொண்டிருந்தான் நிரஞ்சன்.

அவள் மேல் பிடித்தமில்லாமலா இதையெல்லாம் செய்கிறான்? டீன்ஏஜ் பெண்ணைப் போல அவள் அக உணர்வுகள் பொங்கின. உள்ளம் கிளர்ந்தது. உவகையில் தத்தளித்தது. அவள் இதயம் டொம் டொம்மென்று அடிக்க ஆரம்பிக்க மூச்சுக்காற்றுக்குத் திணறுவதைப் போல் உணர்ந்தாள்.

எங்கே அவள் உள மாற்றங்களை உளவாளி அவன் கண்டுபிடித்துவிடுவானோ என அஞ்சிய மதுமிதா, அங்கே வைத்திருந்த தண்ணீரை எடுத்து அருந்தி தன்னைச் சமன்படுத்திக் கொண்டாள். வெகுநாட்கள் அவனுடன் பழகியதைப் போன்றதொரு உணர்வை அவளிடம் இந்தக் குறுகிய காலத்திலேயே விதைத்துவிட்டான் வித்தைக்காரன்.

ஏனோ இவ்வளவு வருடங்களாக அவள் நாட்கள் எப்படி இயங்கியது என்றே அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இனி அனுதினமும் அவனைப் பார்க்கவில்லை என்றால் அவள் இயங்காமல் போகக் கூடும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டாள். அவளுக்கும் காதல் மொட்டுவிட்டு அரும்பிவிட்டதா? இதுவா காதல்?! இதுவே காதல்!

சாப்பிட்டு முடிந்ததும் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மதுமிதாவிற்கு அவளின் தோழி, மதுரவாணியிடமிருந்து அழைப்பு வர, துள்ளலுடன் அங்கிருந்து எழுந்து சற்றுதூரம் நகர்ந்து சென்று அழைப்பை ஏற்றாள்.

அன்று திருமண வரவேற்பிற்கு முன்னர் அவளைச் சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்தாள் மதுமிதா. ஆகவே எப்போது எங்கே சந்திக்கலாம் என்பதைப் பற்றிக் கேட்பதற்கு மதுரவாணி அழைத்திருந்தாள்.

அவளிடம் பேசிவிட்டு சீக்கிரமே அழைப்பை வைத்த மதுமிதா அங்கிருந்து நகர்வதற்குத் திரும்ப, அவளுக்கு அருகில் ஒருவன் பளீரென்ற புன்னகையுடன் அவளைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.

தொடரும்...
 
Last edited:

Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 6
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
பத்திரமாக பெண்களை
பார்த்துக் கொள்கிறான்
புன்னகையுடன்
பின் சுற்றுகிறான்
பூக்கள் தருகிறான்
பூகம்பம் எப்போ வெடிக்க
போகுதோ????
 
Top Bottom