• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 15

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 15
ஏன் அப்படி மதுமிதா சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நிற்கிறோம் என நிரஞ்சனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு அப்படி நிற்கப் பிடித்திருந்தது. ஒருவேளை கும்மிருட்டில் தத்தளிப்பவனுக்கு மின்னல் கீற்றாய் உதித்து வழி காட்டினாளோ? அவள் செல்லும் திசையில் அவன் வாழ்க்கைக்கான பாதை தெரிகிறதோ?

எது எப்படி இருந்தாலும் அவனுக்கு இந்த உணர்வு பிடித்திருந்தது. யாருக்காகவும் அவன் இப்படி இதுவரையில் நின்று கொண்டிருந்ததில்லை. தொழிலாகட்டும், சொந்த விஷயமாகட்டும் அவனுக்காக மட்டுமே நிறையப் பேர் காத்திருந்தனர்.

இவ்வளவு ஏன்? அஞ்சனாவுடன் பழகிய சமயத்தில் கூட அவளுக்காக அவன் இப்படிக் காத்துக் கொண்டிருந்ததில்லை. அவள் நேரம் தவறினால் அவனுக்கு எரிச்சலே சுரக்கும். இவன் நேரத்தை அவள் விரயம் செய்தால் அவன் கோபம் விர்ரென்று இமயமலை உச்சிக்கு ஏறிவிடும்.

ஆனால் இப்போது மதுமிதாவுக்காக நேரத்தை விரயம் செய்தால் ஏனோ தன் மனம் லேசாகிப் பறப்பதைப் போல் உணர்ந்தான் நிரஞ்சன். அப்படியே அவன் உணர்வுகள் அதே இமயமலைக்கு விர்ரென்று ஏறியது. ஆனால் கோபத்தில் அல்ல. பனிச்சாரலின் குளுமையில் குளித்தவாறே!

தன் பிரச்சனைகளுக்கு எல்லாம் கூடிய விரைவில் தீர்வு கிட்டிவிடும் என்ற நம்பிக்கையும் தைரியமும் பிறந்தது. அவை தந்த பலத்தில் நிரஞ்சன் பம்பரமாய்ச் சுழல ஆரம்பித்தான்.

பவித்ராவின் காலில் போடப்பட்டிருந்த கட்டு மட்டும் தெரியுமாறு புகைப்படம் எடுத்து, அழுகின்றதைப் போன்ற ஸ்மைலியுடன் முதல் முறையாகத் தன் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தான் நிரஞ்சன்.

விஷயமறியாத பவித்ரா அதைப் பார்த்ததும், ‘பரிதாபக் கடலில் முக்கி எடுத்து நம்ம மூச்சைத் திணற வைக்கப் போகிறானா என்ன?’ எனத் தன் அண்ணனைப் பற்றிக் கேலியாக நினைத்துக் கொண்டாள். பின்னே திடீரென்று இப்படிச் செய்தால் அவளுக்கு அதிர்ச்சியில் மூளை பிசகிவிடாதா?

மதுமிதாவின் ஆலோசனைப் படி அனைத்துப் பத்திரிக்கையிலும் பவித்ராவின் விபத்து குறித்து உருக்கமாக வருவதைப் போல் செய்தியை வெளியிடச் செய்தான்.

இது கடலில் கரைத்த பெருங்காயத்தைத் தேடுவதைப் போன்ற செயலே. ஆனால் நிரஞ்சனுக்கு அதுவே கடலில் அலையும் துரும்பு போலிருந்தது. அதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான். இதனால் அவனுக்கு எந்த இழப்பும் வரப் போவதில்லை.

மாறாகப் பலன் கிடைத்தால் வாழக்கையையே புரட்டிப் போடுகின்ற அளவுக்கு நன்மையில் முடியும் அல்லவா. ஆகவே துணிந்து அதில் இறங்கிவிட்டான்.

மதுமிதா ஊகித்ததைப் போலவே விளம்பரம் கொடுத்த அன்றே நந்தகுமாரிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. தன் தங்கைக்கு ஒன்று என்றதும் பதறிக் கொண்டு அழைக்கிறானே!

அப்படியென்றால் அவனுக்கும் தன் தங்கையைப் பிடித்திருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது என நிரஞ்சனின் மனம் வேதனையில் துடித்தது.

உள்ளுக்குள் அன்பிருந்தும் நந்தகுமார் தன் தங்கையிடம் மனதைத் திறக்கவில்லையே. தனக்காகப் பார்த்திருக்கிறான். நடைமுறையில் அது சாத்தியப்படாது என்று விலகி நின்றிருக்கிறான். அவனைப் போய் என்னவெல்லாம் சொல்லிவிட்டான்?

அழைப்பை உடனே எடுத்த நிரஞ்சன், “நீ என்னை ஃப்ரெண்ட்டா கொஞ்சம் கூட நினைக்கலை இல்லை நந்தா?” என வலி நிறைந்த குரலில் கேட்க,

“என்னடா இது? நான் எப்பவுமே உன்னை ஒரு நல்ல நண்பனா மட்டுமே நினைச்சிருக்கேன். ஆனா நீ எப்பவுமே என்னை உனக்குக் கீழே வேலை செய்யறவனா பார்க்கிறப்போ நான் எப்படி மற்றதை எதிர்பார்க்க முடியும்?” என அவன் நிதர்சனத்தை மண்டையில் உறைக்குமாறு அடித்துக் கேட்டான் நந்தகுமார்.

உண்மையே! அந்த ஒற்றை வாக்கியத்தில் நான் எதையும் உன்னிடமோ உன் குடும்பத்திடமோ இருந்து எதிர்பார்க்கவில்லை என்று புரிய வைத்துவிட்டான் நந்தகுமார்.

அது மட்டுமா அவனுக்குப் புரிந்தது? தான் அவனைத் அடித்துத் துன்புறுத்த நினைக்கவில்லை என்றாலும் அவன் பொருட்டு அஞ்சனா சற்றுக் கூடுதலாகவே நந்தகுமாரைத் தரக்குறைவாகப் பேசி, வன்முறையைக் கையிலெடுத்தும் நண்பனுக்குத் தன் மேலே சற்றும் வெறுப்பில்லையே.

நிரஞ்சனுக்கு எதைச் சொல்லி நண்பனிடம் வாதாடுவது என்று கூடத் தெரியவில்லை. பின்னே நந்தகுமார் சொன்னதைப் போல் அவன் அப்படிப் பழகியது உண்மையல்லவா.

“பவித்ரா என்கிட்டே வந்து அவளோட காதலைச் சொன்னதும், இது சரிபட்டு வராது. உனக்கு உன் அண்ணன் என்னை விட நல்லவனா பார்ப்பான்னு சொல்லி அனுப்பிட்டேன்” என நந்தகுமார் சொல்ல,

“எனக்குப் புரிஞ்சது நந்தா. வேண்டாம் விடு” என நிரஞ்சன் இடையிட, “என் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல நீ எனக்கு வாய்ப்பே தரலை. இப்போவாவது பேச விடு” என நண்பனைத் தடுத்து நிறுத்தினான் நந்தகுமார்.

“பவித்ரா அழுதுட்டே போனா. பார்க்க ரொம்பவும் கஷ்டமா இருந்தது. ஆனாலும் இது நடக்காதுன்னு தெரிஞ்சும் அவளுக்கு எந்த நம்பிக்கையும் நான் கொடுக்க விரும்பலை. அத்தோட உன்கிட்டே பேச நினைச்சேன். ஆனா நீ அவசரப்பட்டுட்ட. அப்புறம் என்னென்னவோ நடந்திடுச்சு... ப்ச்...” என நந்தகுமார் பெருமூச்சொன்றை வெளியிட்டான்.

“நீ இப்போ எப்படி இருக்கடா நந்தா? உன் உடம்புக்கு இப்போ எப்படியிருக்கு?” என நிரஞ்சன் கேட்க,

“கொஞ்ச நாள் ட்ரீட்மெண்ட் எடுத்தோம். அப்புறம் இந்த ஊர்லேயே ஒரு வேலைக்குச் சேர்ந்துட்டேன். அப்படியே வாழ்க்கைப் போயிட்டிருக்கு” என நந்தகுமார் தன்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னான். ஆனால் மறந்தும் எந்த ஊரில் இருக்கிறான் என்று சொல்லவில்லை.

“சாரிடா நந்தா. இப்படியெல்லாம் ஆகும்னு நான் கனவுலேயும் நினைக்கலை. ஆனா உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின அந்த ஆளை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துட்டேன்” என்றான் நிரஞ்சன்.

“சும்மா சும்மா சாரி சொல்லாதடா. எனக்குக் கஷ்டமா இருக்கு?” என நந்தகுமார் சங்கடத்துடன் சொல்ல, “அஞ்சனாவோட நான் கடைசியா அன்னைக்குப் பேசினது. அதுக்கப்புறம் அவளைப் பார்க்கவுமில்லை... பேசவுமில்லை” எனப் பகிர்ந்து கொண்டான்.

அவளைப் பிரிந்துவிட்டேன் எனச் சொல்லாமல் சொல்கிறான் எனப் புரிந்துகொண்டான் நண்பன். “ஆமா அம்மா-அப்பா எப்படி இருக்காங்க?” என நந்தகுமார் நலம் விசாரிப்பதில் இறங்கினான்.

பவித்ராவைப் பற்றிக் கேட்க வாய் வரையில் வார்த்தைகள் வந்தாலும் அவன் நா புரளவில்லை. நிரஞ்சன் இவ்வளவு நிதானத்துடன் பேசுவதைப் பார்த்தால் அவள் உயிருக்கு எந்தப் பயமுமில்லை எனப் புரிகிறது என ஆசுவாசமடைந்தான் நந்தகுமார்.

“நான் கூப்பிடறப்போ எல்லாம் ஃபோனைக் கூட எடுக்கலை. சரியான கல்நெஞ்சுக்காரன்டா நீ” என நிரஞ்சன் அங்கலாய்த்துவிட்டு,

“ஒரு வருஷமா என்ன பாடுபட்டேன் தெரியுமா நந்தா. எனக்கு ஃப்ரெண்ட்டுன்னு நீ மட்டும் தான் இருந்திருக்க. அப்போ தான் உன் அருமையை நான் முழுசா உணர்ந்தேன். எனக்கு யார்கிட்டே பேசறதுன்னு கூடத் தெரியலை. எல்லோரையும் தூரத் தள்ளி நிறுத்தியிருக்கேன். அப்பாவும் இல்லாம, அம்மாவும் பவியும் என்னோட பேசாம...” என அவன் மேற்கொண்டு பேசும் முன்னால்,

“அப்பாவுக்கு என்னாச்சு?” என நந்தகுமார் அதிர்ந்தான்.

அவன் நடந்ததைச் சொல்லி, “அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்... அவர் வேலை செய்யற பாங்க்ல பெரிய பிரச்சனையில சிக்கி அந்த மனஅழுத்தத்துல இருந்திருக்கிறார். அது கூட தெரியாம இருந்திருக்கேன். ஒரு மகனா நான் அப்பாக்கு உருப்படியா எந்தக் கடமையையும் செய்யலை” என நிரஞ்சன் வேதனை நிரம்பிய குரலில் பேசிக் கொண்டிருக்க,

“சாரிடா நிரஞ்சன். நான் உன்னோட பேசியிருக்கணும்... உனக்குப் பிடிக்காதுன்னு விட்டுட்டேன். உனக்குப் பிடிக்காததை ஏன் செய்யணும்னு நினைச்சேன்” என நந்தகுமார் மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான்.

“நந்தா, நான் முன்ன மாதிரி இல்லைடா. ரொம்ப மாறிட்டேன். சாரிடா.. உன்னை ரொம்ப மட்டம் தட்டிட்டேன் இல்ல. என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு. பிளீஸ் டா என்னை மன்னிச்சிடுடா.” வருத்தமான குரலில் நிரஞ்சன் நண்பனிடம் மன்றாடினான்.

வெகுநாட்கள் கழித்து நிரஞ்சனுக்கு நண்பன் உருவில் ஒரு வடிகால் கிட்டியது என எண்ணினான் போல. மனதில் உள்ளதையெல்லாம் மடைதிறந்த வெள்ளமெனக் கொட்டிக் கொண்டிருந்தான்.

என்னிடம் இனி எந்தத் தயக்கமுமில்லை என மறைமுகமாகச் சொல்ல முயன்றானோ? நீ என் உண்மையான நண்பன் என அவனுக்குப் புரிய வைக்க முயன்றானோ?

நந்தகுமார் எத்தனை உண்மையான நண்பன் என அவன் உள்ளம் பொங்கியது. அவன் மதிப்பை, நட்பை அவன் உணரவுமில்லை. மதிக்கவுமில்லை. இனியாவது அவன் நட்பைப் பொக்கிஷமாய் மதித்துப் போற்ற வேண்டும்.

“எத்தனை தடவை மன்னிப்பு கேட்ப? விடுடா” என நந்தகுமார் சொல்ல, “நந்தா... அன்னைக்கு உன்னை அடிக்கணும்னு நினைக்கலை. உன்னைத் திட்டி கொஞ்ச நாள் வேற ஊர்ல இருக்கச் சொல்லணும்னு நினைச்சு கோபமா வந்தேன். ஆனா...”என அவன் இழுத்துத் தயங்க,

“தெரியும்டா... நடந்ததையெல்லாம் மறந்துட்டேன். நீயும் என்னை அடிக்க நினைக்கலையே. உன் கை மீறி நடந்துடுச்சு. அதுக்கு நீ என்ன பண்ணுவ? உன் இடத்துல நான் இருந்திருந்தா நானும் அப்படியே நடந்திருப்பேன்” என அனுசரணையாகப் பேசினான் நந்தகுமார்.

“பவி இப்போ ஆளே மாறிட்டா. எவ்வளவு கலகலப்பா இருப்பா? இப்போ ரொம்ப அமைதியா, எதிலுமே ஒரு பிடிப்பில்லாம இருக்கா. என்னால உனக்கு இப்படி ஒரு நிலைமை வந்துடுச்சுனு ரொம்பக் கவலப்படறா.

நீ ஆரோக்கியமா நல்லாப் பத்திரமா இருக்கேன்னு அவ கண்ணு முன்னாடி ஒரே ஒரு தடவை வந்து நில்லு. உன்னைப் பார்த்தா அவளோட பிடிவாதம் கொஞ்சமாவது குறையும்” என்றான் நிரஞ்சன்.

தனக்காகப் பார்த்து நந்தகுமார் வாய் திறந்து தங்கையைப் பற்றி எதுவும் கேட்கப் போவதில்லை என்று புரிந்தது. அதனால் நிரஞ்சனே அவளைப் பற்றிய பேச்சை ஆரம்பித்து அனைத்தையும் கொட்டிவிட்டான்.

“என்னை மன்னிச்சிட்டேன்னா நீ எங்கே இருக்கேன்னு சொல்லு நான் உன்னைப் பார்க்க வரேன்” எனத் தொடர்ந்து பேசினான் நிரஞ்சன்.

“பெங்களூர்ல இருக்கேன்” என்றவன் ஏன் அங்கே சென்றான் என்ற காரணத்தையும் சொன்னான். அவன் அத்தையின் குடும்பம் அங்கே இருந்தது. அதனால் சென்னையில் இருக்க முடியாது என்று தெரிந்தவுடன் அவன் குடும்பம் அங்கே கிளம்பிச் சென்றது.

“நீ வர வேண்டாம் நிரஞ்சன். நானே வர்றேன்” என்றான். பின்னே அவன் பவித்ராவை நேரில் பார்க்க வேண்டுமே. அவள் பத்திரமாக ஆரோக்கியமாக இருக்கிறாள் என அவன் கண் கூடாகக் காண வேண்டும். ஒருமுறை அவளைக் கண்ணால் பார்த்து உறுதி செய்து கொண்டால் போதும்.

நந்தகுமாருக்கு அப்படிப் பவித்ரா தன் மேல் விருப்பத்தை வைத்ததே அதிர்ச்சியாக இருந்தது. அதைச் சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக நடக்காது என்று தெரிந்தும் மனதை அலைபாய விடக் கூடாது என்று உணர்ந்து அவளுக்கு எந்த நம்பிக்கையும் அவன் தரவில்லை.

நண்பனிடம் அதைப் பற்றிச் சொல்வதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. கடந்த ஒன்றரை வருடங்களாகப் பவித்ரா இயந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என நிரஞ்சன் வழியாகக் கேள்விப்பட்டதும் அவனுள் ஏதோ ஒன்று அசைந்தது.

அதுவும் தனக்காக அவள் அண்ணனிடமே பேசாமல் பிடிவாதமாக இருந்திருக்கிறாள் எனத் தெரிந்ததும் பாதுகாப்புக்காகப் போட்டு வைத்திருந்த அரண் மொத்தமும் தகர்ந்து போனது.

“ஏமாத்திட மாட்டியே...” என நிரஞ்சன் சந்தேகத்துடன் வினவ, “கண்டிப்பா இல்லடா. இந்த வாரக் கடைசியில வரேன். புதுசா சேர்ந்த கம்பெனில உடனே அப்படி லீவு எடுக்க முடியாது. ஆனா கண்டிப்பா வரேன்” என வாக்குறுதி தந்தான்.

கேட்பதா வேண்டாமா எனச் சற்றுத் தயங்கிய நிரஞ்சன், “நந்தா என்கிட்ட ஒரே ஓர் உண்மையை மட்டும் சொல்லுவியா?” எனப் பீடிகையாக ஆரம்பித்து, “உனக்குப் பவியைப் பிடிக்குமா?” எனக் கேட்டான்.

நந்தகுமார் இந்தக் கேள்வியை அவனிடமிருந்து சற்றும் எதிர்பார்க்கவில்லை. நந்தகுமாரின் சற்று நீண்ட மௌனத்திலேயே அவனுக்கு விடை கிடைத்துவிட்டது. அவனுக்குப் பிடித்தமில்லை என்றால் ‘இல்லை’ என்று ஒரே வார்த்தையில் பதிலளித்து இருப்பான்.

அவனின் தயக்கமே நிரஞ்சனுக்கு அவனின் மயக்கும் மனதை புரிய வைத்தது.

“பிடிக்காது...” என நந்தகுமார் சொல்ல, “ப்ச்... பொய்” என அதை மறுத்தவன், “பவிக்கு ஒன்னுன்னதும் என்னைக் காண்டாக்ட் பண்ணறியே. இதுலேயே எனக்கு விஷயம் புரிஞ்சது நந்தா” என்றான் நிரஞ்சன் உண்மையை உணர்ந்தவனாக.

“அப்படி எதுவுமில்லை” என நந்தகுமார் மறுக்க, “அதைப் பத்தி அப்புறம் பேசலாம்” என அதற்குமேல் நிரஞ்சன் அதைப் பற்றி ஆராய விரும்பவில்லை. ஏற்கனவே தெள்ளத் தெளிவாகப் பதில் தெரிந்த விஷயத்துக்கு ஆராய்ச்சியை மேற்கொண்டு நேரத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்?

“எனக்காக இல்லைன்னாலும் பவிக்காக நேர்ல வாடா” என நிரஞ்சன் இறைஞ்சுவதைப் போல் சொல்ல, “கண்டிப்பா வரேன். வாக்குக் கொடுத்தால் நான் வாக்கு மாற மாட்டேன் என உனக்குத் தெரியுமில்ல. டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்லுறேன்” என நந்தகுமார் உறுதியாகச் சொன்னான்.

தொடரும்...
 
Last edited:

Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 15
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
நம்மை விரும்பிய
நல் உள்ளத்தை எண்ணி
நந்தா ஆடிய கண்ணாமூச்சி
நிரஞ்சனிடம் நட்பாக சரண் அடைந்து மீண்டும்
நட்பு துளிர் விட்டு
நம்பிக்கையை தந்தது....
 
Top Bottom