Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 10
“அண்ணா, இன்னைக்கு என் ஃப்ரெண்ட்டோட அக்காக்குக் கல்யாணம். பூ வாங்கினேன். ஆனா மறந்து போய் வெளிலேயே வச்சுட்டேன். இப்போ வாடிடுச்சு பாருங்க. பிளீஸ்ண்ணா பக்கத்துல இருக்குற கடைக்குப் போய் பூ வாங்கிட்டு வருவீங்களா?” எனப் பவித்ரா தன் அண்ணன் நிரஞ்சனிடம் கேட்டாள்.
உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த நிரஞ்சன் அவள் அப்படிக் கேட்டதும் முகம் சுளித்தான். “எதையும் ஒழுங்கா பிளான் பண்ணாம உன் வேலையை என் தலையில கட்டப் பார்க்கறியா? உனக்காக நான் டைம் வேஸ்ட் பண்ணி, போய்ப் பூ வாங்கிட்டு வர முடியாது.
அந்த டைம்ல நான் ஆபீஸ்ல போய் வேலை செஞ்சா லட்சம் லட்சமா சம்பாதிப்பேன். நந்தா இப்போ வந்திடுவான். நான் போய்க் கிளம்பணும். இதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை” எனக் கறாராகப் பேசினான் நிரஞ்சன்.
அதைக் கேட்டதும் பவித்ராவின் முகம் தீயிலிட்ட பூவைப் போல் சுருங்கிக் கருகியது. அதைக் கூடக் கண்டுகொள்ளாமல் விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்குச் சென்றான் நிரஞ்சன்.
“அவன்கிட்ட கேக்காதன்னு நான் அப்பவே சொன்னேனே கேட்டியா?” என மகளிடம் கௌரி குறைப்பட்டுக் கொள்ள,
“அம்மா இது ஒரு சின்ன உதவி. லேட் ஆச்சுன்னு தானே கேட்டேன். இதுக்குப் போய் என்னவோ வட்டமேஜை மாநாடுல பேசற மாதிரி பேசிட்டுப் போறார். ஊர்ல இருக்கிற எல்லோரும் பல அண்ணன்களை வச்சிட்டு சந்தோஷமா இருக்காங்க. நான் ஒரே ஓர் அண்ணனை வச்சுட்டு படற பாடு இருக்கே? ச்சே...” என இயலாமையில் சலித்துக் கொண்ட பவித்ரா,
“கல்யாணத்துக்கு எல்லாரும் பூ வச்சிட்டு வருவாங்க. நான் மட்டும் வெறும் தலையோட போகணும்” என இயல்பான ஆதங்கத்தில் கண்களில் நீர்த் தளும்பப் பேசினாள்.
“என்ன பண்ணறது? போற வழில எங்கேயாவது பார்த்து வாங்கிட்டு போ. நான் டிரைவர் அண்ணா வந்ததும் சொல்லறேன்” எனச் சமாதானமாகப் பேசினார் கௌரி.
அவர்களின் கார் ஓட்டுநர் இன்னும் வந்திருக்கவில்லை. அவள் தந்தையோ ஊரில் இல்லை. திருமணத்திற்குக் கிளம்புவதற்கு நேரமாகி விட்டதால் தன் அண்ணனின் உதவியை நாடினாள் பவித்ரா.
ஆனால் அவனோ எடுத்தெறிந்து முகத்தில் அறைந்ததைப் போலப் பேசிவிட்டுச் செல்லவும் ஏமாற்றத்தில் மனம் வேதனையுற்றது. இந்தச் சிறு உதவியைக் கூட உடன் பிறந்தவன் செய்ய மாட்டானா?
“போங்கம்மா ரொம்பவும் லேட்டாயிடும்” எனச் சலித்துக் கொண்டவள், “அண்ணனுக்கு வரப்போற வொய்ஃப் ரொம்பவும் கொடுமைக்காரியா இருக்கணும். அவங்க கையில மாட்டிட்டு நல்லா திருதிருன்னு முழிக்கணும்” எனப் பவித்ரா மூண்ட எரிச்சலில் சத்தமாகவே முணுமுணுத்தாள்.
தண்ணீர்ப் பாட்டிலை நிரப்பக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த நிரஞ்சனின் காதுகளில் அவள் பேசியதனைத்தும் விழுந்தது.
“உன் சாபம் எப்போதும் பலிக்காது. நீ கவலைப்படுற அளவுக்கு எல்லாம் அஞ்சனா கிடையாது. என் மனசறிஞ்சு நடத்துக்குவா” எனச் சொன்னவாறே தண்ணீரை எடுத்துக் கொண்டு மேலே சென்றான்.
“ம்க்கும்... மனசுன்னு ஒன்னு இருந்தா தானே?” எனச் சத்தமாகவே முணுமுணுத்தவள், அவன் பார்க்க மாட்டான் என்ற தைரியத்தில் அவன் முதுகை நோக்கி, ‘வெவ்வெவ்வே’ எனச் சத்தம் போடாமல் தன் எரிச்சலைக் காட்டினாள் பவித்ரா.
அஞ்சனா அவள் அண்ணனின் காதலி. அவளைப் பவித்ராவிற்கு அறவே பிடிக்காது. நிரஞ்சனின் மறு உருவம் அவள். இவனைப் பார்த்து அஞ்சனா கற்று கொண்டாளா, இல்லை, அவளைப் பார்த்து நிரஞ்சன் கற்று கொண்டானா என்று தெரியவில்லை.
இரண்டு பேருக்குமே பணம் மட்டுமே பிரதானம். ‘காசு துட்டு மணி மணி...’ என அவளும், “காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது’ என இவள் அண்ணனும் டூயட் பாடாத குறையே.
பணம் பணத்தோடு சேர வேண்டும் என்ற பெரும் கொள்கையை நிரஞ்சனும் அஞ்சனாவும் தினந்தோறும் தவறாது கடைப்பிடிப்பவர்கள். அதனாலேயே இருவருக்கும் பத்து என்ன பத்துக்கு நூறு பொருத்தம் கூடப் பொருந்தும்.
நிரஞ்சன் அவளுக்கு அண்ணனாகப் போய்விட்டான். அவள் பொறுத்துப் போக வேண்டும். ஆனால் அந்த அஞ்சனா சொல்வதை எல்லாம் அவள் ஏன் கேட்க வேண்டும்? அவளைப் பார்த்தாலே பவித்ராவிற்குத் தீயைப் பற்றி வைத்ததைப் போல் திகுதிகுவென்று உள்ளம் கொதிக்கும்.
பவித்ராவின் ஒரே லட்சியம், சீக்கிரம் படித்து முடித்து அவள் அண்ணனின் கண் பார்வையிலிருந்து வெகுதூரம் சென்று விட வேண்டும் என்பதே. அதைப் பலமுறை அவனிடம் சொல்லியும்விட்டாள்.
அஞ்சனாவை ஒரு தொழில்முறை சந்திப்பின் போது நிரஞ்சன் சந்தித்திருக்கிறான். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகத் தொடர்ந்து நட்பு பாராட்டினர். அவர்களின் சிந்தனைகள் ஒன்றாக இருக்க, வாழ்க்கையில் அவர்கள் இணைந்தால் என்ன என்ற முடிவுக்கு வந்தனர்.
பவித்ராவின் வீட்டில் யாருக்கும் அஞ்சனாவைப் பிடிக்கவில்லை. ஆனால் மகன் விரும்பிவிட்டானே என எதுவும் சொல்லாமல் அவளுடன் சுமூகமாகவே இருக்க முயன்றனர்.
நிரஞ்சன் கணினி துறையில் பொறியியல் பட்டம் பெற்று, மேலும் படித்து முதுகலைப் பட்டத்தையும் பெற்றான். படிக்கும் பொழுது அவனுக்குச் சொந்தமாகக் கணினி நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற வெறி இருந்தது.
அதற்கு ஏற்றாற்போல் அவன் மிகவும் புத்திசாலியாகவே இருந்தான். அதனால் படித்து முடித்த உடனேயே தன் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து, அத்தொழிலில் முதலீடு செய்வதற்கு ஆளைப் பிடித்து, உழைத்துப் படிப்படியாக முன்னேறினான்.
நிரஞ்சன் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி விரைவிலேயே அனைவரும் வியந்து பார்க்கும் பணக்காரர்களில் ஒருவனாக ஆகிவிட்டான். மிகவும் திறமை வாய்ந்தவன். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதில் அவனுக்கு மிகுந்த பெருமையே. ஆனால் என்ன ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவியைப் போல் கூடவே கர்வமும் சேர்ந்து கொண்டது.
அவன் மட்டும் அப்படிக் கர்வத்துடன் இருந்தால் போதுமா? அவன் குடும்பமும் அப்படியே நினைக்க வேண்டும் அல்லவா?
அதுவரையில் நிரஞ்சனின் குடும்பம் ஒரு மத்திய ரகக் குடும்பத்தைச் சார்ந்ததாக இருந்தது. அவன் தந்தை வங்கி ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். அன்னை கௌரி பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார்.
அவர்களுக்கு மகனின் அசுர வளர்ச்சி கண்டு பெருமையாக இருந்தாலும் அவனின் பேச்சும் நடவடிக்கையும் வேறு திசையில் செல்ல ஆரம்பித்தது குறித்துச் சற்று பயமாகவும் இருந்தது. மகன் இந்தளவுக்கு முன்னேறியது பாராட்டக் கூடிய ஒன்றாக இருந்தாலும் இந்தக் குணம் மட்டும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. மகன் புரிந்து கொண்டு கூடிய விரைவில் மாறிவிடுவான் என்று நம்பினர்.
பவித்ராவுக்கும் அவன் செய்வது எதுவும் பிடிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவள் அப்படி இருந்திருந்தால், ‘சரி... இதுவே வாழ்க்கை, இதுவே நம் பழக்கம்’ என்று கேட்டுக் கொண்டிருந்திருப்பாள்.
ஆனால் திடீரென்று இப்பொழுதெல்லாம் அவள் அண்ணன் எதற்கெடுத்தாலும் தகுதியறிந்து நடந்துகொள், தகுதி பார்த்து பழகு, நட்பை வளர்த்துக் கொள் என அனைத்துக்கும் நிபந்தனையிட்டுக் கொண்டிருந்தால் கேட்கத் தோன்றுமா என்ன?
தகுதி பார்த்தா நட்பு வருகிறது? தகுதியறிந்து மனிதர்களிடம் பழகினால் பிறகு அந்த உறவிற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? இத்தனை வருடங்களாகப் பழகிய மனிதர்களைத் தகுதி பார்த்து அப்படியே எப்படித் துண்டிக்க முடியும்?
அப்போது, “ஆன்ட்டி” என யாரோ அழைக்கும் சத்தம் கேட்க, கௌரியும், பவித்ராவும் திரும்பிப் பார்த்தனர். பளீரென்ற புன்னகையுடன் நிரஞ்சனின் நண்பன் நந்தகுமார் நின்று கொண்டிருந்தான்.
“வாப்பா” என கௌரி அவனை இன்முகத்துடன் வரவேற்க, “இந்தாங்க ஆன்ட்டி பூ. அம்மா கொடுத்துவிட்டாங்க” என அவர் கையில் ‘பிளாஸ்டிக் பை’ ஒன்றை தந்தான் நந்தகுமார். அதைப் பார்த்ததும் பவித்ராவின் முகம் தாமரையாய் மலர்ந்து போனது.
அவ்வப்போது நடப்பதே. நந்தகுமாரின் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகைப்பூ செடி இருக்கிறது. அதில் பூக்கள் பூத்துக் குலுங்கும். அவன் அக்கா அவர்களுடன் வீட்டில் இருந்த வரையில் அவள் தலையில் வைத்து அலங்காரம் செய்து கொண்டாள்.
அவளுக்குத் திருமணம் என்று நடந்ததோ அன்றிலிருந்து அவ்வப்பொழுது அந்த மல்லிகைப் பூக்களைக் கோர்த்து நந்தகுமாரின் அன்னை பவித்ராவுக்குக் கொடுத்தனுப்புவார். இன்றும் அதுவே நடந்தேறியது.
எதையோ சாதித்துவிட்ட உணர்வில் முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க அதை வாங்கிக் கொண்ட பவித்ரா, “ரொம்ப தேங்க்ஸ்! பூ இல்லாம எப்படிக் கல்யாணத்துக்குப் போறதுன்னு நினைச்சிட்டு இருந்தேன்” எனப் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாள்.
அவள் மலர்ந்து போய்ச் சிரிப்பதைப் பார்த்த நந்தகுமார், “நல்லதை நினைச்சுட்டு இருக்கிறவங்களுக்கு நல்லதே நடக்கும்” என்றான். அதற்குள் அவர்களின் கார் ஓட்டுநர் வந்து சேரவும் பவித்ரா அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
வரவேற்பறையில் வந்தமர்ந்த நந்தகுமாரைப் பார்த்த கௌரி, “இவ்வளவு சீக்கிரமா கிளம்பிப் போகணுமா என்ன? சாப்பிட்டியாப்பா? வா வந்து சாப்பிடு” என அவனை உபசரித்தார்.
“சாப்பிட்டுட்டேன் ஆன்ட்டி. நிரஞ்சன் வந்ததும் நாங்க கிளம்புறோம்” என அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்துவிட்டான்.
நந்தகுமாரும் நிரஞ்சனும் ஒரே கல்லூரியில் பொறியியல் படித்தனர். அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் இன்று வரையில் தொடர்கிறது. நந்தகுமாரும் நிரஞ்சனைப் போலவே அதீத புத்திசாலி. ஆனால் நிரஞ்சனைப் போலெல்லாம் சொந்த நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற துணிச்சல் அவனிடம் கிடையாது.
படித்து முடித்ததும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது மட்டுமே அவனின் கனவாக இருந்தது. ஆனால் இப்பொழுது நிரஞ்சனின் நிறுவனத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறான்.
நந்தகுமாரின் அக்காவுக்குக் கிட்டதட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர்த் திருமணம் நடக்கையில் அவர்களுக்குப் பணம் பற்றாக்குறையாக இருக்க அவன் நிரஞ்சன் உதவியை நாடினான். அந்தச் சமயத்தில் நிரஞ்சனும் புதிதாக நிறுவனம் ஆரம்பிப்பதில் தீவிரமாக இருந்தான்.
நிரஞ்சனின் தந்தை வங்கியில் வேலையில் இருப்பதால் அவர் ஏதாவது வழி காட்டுவார் என்று நினைத்தே நந்தகுமார் பண உதவி கேட்டான். அதற்கு நிரஞ்சனோ அவன் அக்காவின் திருமணத்திற்காக அவனே பண உதவி செய்வதாகச் சொன்னான்.
அதற்குப் பதிலாக நந்தகுமார் தான் ஆரம்பிக்கப் போகும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்றான் நிரஞ்சன். நந்தகுமாரின் அறிவு நிரஞ்சனுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. நந்தகுமாருக்குப் பணம் தேவையாக இருந்தது. எனவே நந்தகுமாரும் உடனே சம்மதித்துவிட்டான்.
அதற்காக அவனுக்குக் குறைந்த சம்பளம் எல்லாம் நிரஞ்சன் தரவில்லை. தாராளமாகவே சம்பளம் தந்தான். அன்றிலிருந்து கடந்த மூன்றரை வருடங்களாக நிரஞ்சன் அயராது உழைக்க, நந்தகுமாரும் அதே அளவு உழைப்பை அந்த நிறுவனத்தில் கொட்டினான்.
கல்லூரி படிக்கும் காலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் என்றாலும் நிரஞ்சனின் பொருளாதாரம் வேறு நிலைக்குச் செல்ல, அவர்களுக்குள் இருந்த நட்பு நிலையும் மாறியது. இப்பொழுது தான் மேலதிகாரி, நந்தகுமார் தனக்குக் கீழ் பணிபுரிபவன் என்ற நிலையில் மட்டுமே நிரஞ்சன் பழகினான்.
எப்பொழுது நிரஞ்சன் சொந்த நிறுவனம் ஆரம்பித்து முன்னேற ஆரம்பித்தானோ அப்போதிலிருந்தே நிரஞ்சனின் போக்கு அறவே மாறிவிட்டதை உணர்ந்து கொண்டான் நந்தகுமார். அதனால் அவனிடம் சற்றுத் தள்ளி நின்றே பழகினான்.
அதனாலேயே கௌரி சாப்பிட அழைத்தும், சாப்பிட்டுவிட்டதாகச் சொல்லி மறுத்துவிட்டான் நந்தகுமார். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே நிரஞ்சனும் கீழே இறங்கி வர, வெளியில் சாப்பாட்டை முடித்துக் கொள்ளவதாகச் சொல்லிவிட்டு நந்தகுமாருடன் அங்கிருந்து கிளம்பினான்.
காரில் ஏறியதுமே அஞ்சனாவிடம் இருந்து நிரஞ்சனுக்கு அழைப்பு வந்தது. இன்முகத்துடன் நிரஞ்சன் அழைப்பை ஏற்க, “ரஞ்சு, அப்பா இன்னைக்கு உங்களை ஈவினிங் டின்னருக்கு வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். மறந்துடாதீங்க. நம்ம கல்யாணம் பத்திப் பேச நினைக்கிறார் போல” எனக் குதூகலத்துடன் சொன்னாள்.
அதைக் கேட்டதும் நிரஞ்சனுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள, “கண்டிப்பா வரேன்” என வாக்குறுதி தந்துவிட்டு, சற்றுநேரம் பொதுவான விஷயங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டவன், “மிஸ் யூ” என அழைப்பை வைத்தான்.
அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த நந்தகுமார், கேட்கலாமா, வேண்டாமா எனச் சோழியை உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் நினைத்ததைக் கேட்காமல் அப்படியே விடவும் மனமில்லை.
“நிரஞ்சன் ஒரு ஃஃப்ரெண்டா கேக்குறேன். உனக்கு அஞ்சனாவை நிஜமாவே பிடிச்சிருக்கா? காலம் முழுவதும் அவளோட வாழணும்னு நினைக்கிறியா?” எனக் கேட்டான்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த நிரஞ்சன் அருகில் அமர்ந்திருந்த நந்தகுமாரைத் திரும்பி மேலும் கீழும் பார்த்தான்.
பின்பு சாலையில் பார்வையைப் பதித்தவன், “கண்டிப்பா... அவ இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் அந்தஸ்துக்கும் எத்தனையோ பேர் லைன்ல நிக்கறாங்க. ஆனா அவளுக்கு என்னை மட்டுமே பிடிச்சிருக்கு. அவ என்னை மட்டுமே விரும்பறா. எனக்கு இதைவிட வேற என்ன வேணும்?” என்றான்.
தன்னை விடத் தன் தகுதி, பணம், அந்தஸ்த்து போன்றவற்றில் மட்டுமே அஞ்சனாவுக்கு மோகம் அதிகமாக இருக்கிறது என்று நிரஞ்சனுக்குப் புரியவில்லையா?
நடக்காது தான். ஆனால் நாளையே நிரஞ்சன் இதையெல்லாம் இழந்துவிட்டால் அவளுக்கு அப்பொழுதும் இவனை இந்தளவுக்குப் பிடிக்குமா என்ன? இவனில்லாமல் அவளால் வாழ முடியாது என்ற உணர்வு அவளுக்குத் தோன்றுகிறதா என்ன? அவளுக்கு அவன் குணம், மனம் பற்றிய அக்கறையே இருப்பதாகத் தெரியவில்லை.
முதலில் நிரஞ்சனுமே அவன் உறவில் எந்தளவுக்கு வலுவாக இருக்கிறான் என்றே தெரியவில்லை. அவனுமே உண்மையான காதலுடன் இருக்கிறானா என்ன?
ஆரம்பத்தில் கூட நிரஞ்சன் இப்படியெல்லாம் இல்லை. என்று அஞ்சனாவுடன் பழக ஆரம்பித்தானோ அன்றிலிருந்து அவனது குணங்களும் நடவடிக்கைகளும் அறவே மாற ஆரம்பித்தன. அவனின் பணக்கர்வமும், அகந்தையும் மேலேற ஆரம்பித்தன.
பலமுறை வசதியைக் காரணம் காட்டி நந்தகுமாரை மட்டம் தட்டியிருக்கிறாள் அஞ்சனா. அதைக் கேட்டும் நிரஞ்சன் இதுவரையில் அவளிடம் கடிந்து எதையும் சொன்னதில்லை. அதன்பிறகு நிரஞ்சனின் எண்ணங்களும் மாற ஆரம்பித்தன. எதற்கெடுத்தாலும் வசதி, தகுதி, அந்தஸ்து எனப் பிதற்ற ஆரம்பித்தான்.
“எங்க ரெண்டு பேருடைய கொள்கைகளும் கனவுகளும் லட்சியமும் ஒரே மாதிரியாக இருக்குது” நிரஞ்சன் தொடர்ந்து பேச,
“லட்சியம், கனவு, கொள்கை அதெல்லாம் ஒத்து வந்ததுன்னா கூடச் சேர்ந்து தொழில் வேணா ஆரம்பிக்கலாம். வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது. அது இயந்திரத்தனமா இருக்கும் நிரஞ்சன்.
காதல், பாசம், உறவு, அன்பு எதுவுமே இல்லாம எப்படி வாழ்க்கை இனிக்கும்? அவளில்லாம உன்னால இருக்க முடியாது அப்படிங்கிற உணர்வு இருக்கணும். அப்படி உனக்குத் தோணுதா?” என நண்பனைக் கூர்ந்து பார்த்தான் நந்தகுமார்.
“கனவுகளும் லட்சியமும் கொள்கைகளும் ஒரே மாதிரி இருந்தா தன்னாலேயே அன்பும் காதலும் வந்துடும். எங்க ரெண்டு பேருக்குள்ள நிறையப் புரிதல் இருக்குது. எங்க ரெண்டு பேருக்கும் காதல், அன்பு, தாண்டி பேச நிறைய விஷயங்கள் இருக்கு.
உன்னோட மிடில் கிளாஸ் மெண்டாலிட்டிக்கு இது எதுவும் புரியாது. என்னோட வசதிக்கும் அந்தஸ்திற்கும் அஞ்சனா ஒருத்தி மட்டுமே சரிப்பட்டு வருவா” எனச் சற்றுக் கர்வத்துடன் சொன்னான் நிரஞ்சன்.
“எதுக்கும் முடிவெடுக்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சுக்கோ” என நந்தகுமாரும் அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டான்.
இதற்கு மேல் ஏதாவது சொன்னால் நிரஞ்சன் கண்டிப்பாக இடக்குமடக்காகப் பேசி விடுவான் என்று நந்தகுமாருக்குத் தெரியும். ஏற்கனவே பலமுறை ‘மிடில் கிளாஸ் மென்டாலிட்டி’ என அவனிடமே சொல்லியிருக்கிறான்.
ஆகவே எங்கே எப்போது எந்தப் புள்ளியில் நிறுத்த வேண்டும் என்பதில் நந்தகுமார் மிகவுமே ஜாக்கிரதையாக இருந்தான். இப்பொழுதெல்லாம் நிரஞ்சனுடன் நட்பு பாராட்டுவது கண்ணாடித் துண்டுகளின் மேல் நடப்பது போலவே. சில நேரங்களில் நந்தகுமாரைக் கூட மட்டம் தட்டி விடுவான் அவன்.
அஞ்சனா மட்டம் தட்டுகையில் அவனுக்குப் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஆனால் நிரஞ்சன் அப்படிச் செய்கையில் ஆரம்பத்தில் நந்தகுமாருக்குச் சுருக்கென்று தைத்தது. எனினும் அவன் எல்லையைக் கடக்கப் போய் அல்லவா நிரஞ்சன் இப்படியெல்லாம் பேசுகிறான் எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்டான்.
ஆகவே ஓர் எல்லைக்கோட்டுக்குள் நின்று கொள்ளலாம் என நிரஞ்சனை விட்டுச் சற்று எட்டியே நிற்க ஆரம்பித்தான்.
“நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் எப்பவுமே சரியா இருக்கும். எந்தக் காலத்திலும் தவறாக இருக்கவே இருக்காது” எனச் சற்றுக் கர்வத்துடன் சொன்னான் நிரஞ்சன். ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்?
அத்துடன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் நந்தகுமார். நபிகள் நாயகம் கண்ணாடியின் குணத்தைத் தோழமைக்குக் உவமானப்படுத்தியிருப்பார். அதுவே நந்தகுமாரின் குணம்.
அதாவது நண்பர்களின், சுகதுக்கங்களில் பங்கெடுத்து, அவர்களின் அன்பில் அனைத்தையும் கரைக்க வேண்டும். சக மனிதர்களிடம் நிலவும் நட்பும், தோழமையும் அன்பின் வடிவமாகவும், நலன்விரும்பியாகவும் இருக்க வேண்டும்!
ஆகையினால் தான் அஞ்சனாவைப் பற்றிப் பேசினான். அவர்கள் இணைவது ஏதோ பணமும் பணமும் இணைவதைப் போலிருந்தது நந்தகுமாருக்கு. அதனால் ஒரு நல்ல நண்பனாக அவனிடம் எடுத்துச் சொன்னான்.
பிற்காலத்தில் ஒரு நல்ல நண்பனாக அவன் எச்சரிக்கவில்லையே என அவனும், அவன் நண்பன் நிரஞ்சனும் மருகக் கூடாதே!
தொடரும்...
Last edited:
Author: Pochampalli
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆடியிலே முத்தெடுத்து - 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.