• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அரங்கம் 1

Paithani

Member
Joined
Jun 19, 2024
Messages
30

அரங்கமேறும்

அரங்கம் 1

அரங்கமேறும்

அரங்கம் 1

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம் , மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா !

உன் சேவடி செவ்வித்திருக்காப்பு -

அடியோமோடும் நின்னோடும்

பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு

வடிவார் சோதிவலத்துறையும்

சுடராழியும் பல்லாண்டு

படைப்போர்புக்கு முழங்கும்

அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே .

காலை ஐந்து மணிக்கு அடுக்களையில் வேகமாக வேலை செய்து கொண்டே திருப்பல்லாண்டை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள் கோதை. அவள் மனம் முழுவதும் இப்போது இருக்கும் அவர்களது வீட்டு சூழ்நிலையை சுற்றி சுழன்று கொண்டிருந்தது. அவர்களது ஒரே மகன் சுந்தரம் . இங்கே இதே திருவரங்கத்தில் பிறந்து , படித்து, இதோ இங்கே பள்ளிகொண்டிருக்கும் திருவரங்க நாதனை நாள்விடாமல் சென்று தரிசித்து ,காவிரியில் நீந்தி நண்பர்களுடன் விளையாடி ..என்று வளர்ந்தவன் தான். திருச்சியில் இருக்கும் ஒரு பிரபலமான முன்னணி பொறியியல் கல்லூரியில் கணிணித் துறையில் பட்டம் பெற்றவன், கை நிறைய சம்பளத்தில் இரண்டு வருஷங்கள் வேலை செய்தான். மீண்டும் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றான்.

சுந்தரம் மனம் மிகவும் மென்மையானவன்.அதிர்ந்து பேசி யாராலும் பார்த்திருக்க முடியாது. கோவம் என்றால் வீசை என்ன விலை என்பான். புத்திசாலித்தனமும்,முன் யோசனையும் அதிகம். படிப்பிலும்,வேலையிலும் கெட்டி.அதனாலேயே அவன் அப்பா திருவேங்கடம் மேற்கொண்டு அவன் வெளிநாடு சென்று படிக்க எதுவும் சொல்லவில்லை. கோவிலில் அர்ச்சகராக வேலை பார்க்கும் அவருக்கு மகன் மீது அலாதி பிரியம் மட்டும் அல்ல,அவன் மீதான கர்வமும் உண்டு. சுந்தரம் வேலைக்கு சென்றிருந்ததில் கொஞ்சம் பணம் சேர்த்திருந்தான் அமேரிக்கா சென்று படிக்க தேவையான தகுதித் தேர்வுகளை நல்லபடியாக முடித்து அங்கே சான் டியாகோவில் இருக்கும் பல்கலை கழகத்திலும் சேர்ந்துவிட்டான். இங்கே இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் வாங்கி இருந்ததில் பணம் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இல்லை.

படிப்பை நல்லபடியாக முடித்தவன் அங்கேயே வேலைக்கும் சேர்ந்து விட்டான். அவனது சொந்த அத்தை பெண் மாலதிக்கும் அவனுக்கும் திருமணம் செய்யலாம் என்று ரொம்ப வருஷங்களுக்கு முன்பே வீட்டில் பேசி வைத்திருந்ததில் சுந்தரம் -மாலதி இருவருக்கிடையில் நல்ல புரிதலும், அத்தை பெண் - மாமன் மகன் என்ற உறவை தாண்டிய உணர்வுகளும் ஏற்பட தொடங்கி இருந்தது. சுந்தரம் என்ற தனது அன்பனின் விருப்பத்துக்காக மட்டுமே மாலதி பொறியியல் எடுத்து படித்தாள். அந்த அளவுக்கு சுந்தரம் அவளின் வாழ்க்கையில் முக்கியம் என்றானான். மாலதிக்கு சென்னைதான் இருப்பிடம். அவர்கள் குடும்பம் சென்னைக்கு வந்து முப்பது வருஷங்கள் ஆகிறது.அதனாலேயே மாலதி முழு சென்னைவாசி. தனக்கென ஒரு நபரை பெரியவர்கள் தெரிவு செய்து அவன் பார்க்கவும் பழகவும் இனிமையானவனாக இருந்தால் மறுக்க காரணம் இல்லையே!

சுந்தரம் சென்னையில் வேலை செய்யும் பொழுது மாலதி நான்காம் வருஷம் படித்துக்கொண்டிருந்தாள். இப்போது ஒரு ஸ்டார்ட் அப் கம்பனியில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சுந்தரம் அமேரிக்காவில் வேலை செய்ய ஆரம்பித்த இரண்டாம் வருஷத்தில் அவனே பெற்றவர்களிடம் சொல்லிவிட்டான்."அப்பா, எனக்கு இங்கே தனியா இருக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு. மனசு விட்டு பேசவும் யாரும் இல்ல. வீடு விட்டா ஆபிஸ் ,கொஞ்சம் அவுட்டிங். இங்கே வீட்டுக்குள்ள வந்தா யாருமில்லாத தனிமை.சீக்கிரம் மாலதி வீட்டுல பேசி கல்யாணம் பிக்ஸ் பண்ணிடுங்க ப்ளீஸ் " .

மகன் சொல்லவருவது பெற்றவர்களுக்கு நன்றாகவே புரிந்து போனது. இருபத்தெட்டு வயது திருமணம் முடிக்க சரியான வயது தான். கல்விக்கடனை பெரும்பாலும் அடைத்து விட்டான்.இங்கே ஏற்கனவே இருக்கும் அவர்களது வீட்டை சரி செய்து தந்துவிட்டான். கடமைகளை சரியாக செய்து கொண்டு வரும்பொழுது ஆறுதலுக்கு நிச்சயம் ஆள் தேவை என்று மாலதி வீட்டில் பேசி கல்யாணம் முடிவானது.

பூர்வீகம் திருவரங்கம் தான் என்பதால் திருமணமும் திருவரங்கத்தில் வைத்தார்கள். மாலதியின் முகம் அத்தானை பார்த்ததிலிருந்து தாமரையானது.மனதிற்க்கு பிடித்த வரன். சந்தோசம் கொள்ள தடை என்ன? மாலதி சுந்தரத்தை எவ்வளவு விரும்புகிறாள் என்பதற்க்கு வார்த்தைகள் கிடையாது. சுந்தரத்திற்கும் அதே நிலைதான். மாலதியுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் அவனது ஆண்மை விழித்தெழுவதையும், அவனது பேடடையை ஆட்கொள்ள அக்கணமே தவிப்பதையும் அவன் மட்டும் அறிவான்.இதோ ,கனவு கை சேர்ந்தது. இதோ மணமக்கள் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் அவர்கள் இருவருக்கும் பிடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மாலதியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டும் பொழுது பெண்ணின் கண்களில் லேசாக திரை இட்டது.அவள் கன்னத்தை தொட்ட நீர் மணாளனின் கைகள் சேர அத்தனைபேர் அங்கிருக்கும் பொழுதும் அவளை இழுத்து அணைத்து உச்சியில் முத்தம் இட்டான். மாலதி மனம் சொல்லொணா ஆறுதல் கொண்டது. அவள் வருஷக்கணக்காக காத்துக்கிடந்த அற்புத தருணமிது.

சிறியவர்கள் ஆரவரிக்க,சுற்றி இருந்த பெரியவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளில் இறங்கினார்கள். வாரணமாயிரம் சூழ வலம் செய்து என்று அங்கிருந்த வாத்தியார் மாமா பாட திருமணம் முடிந்த அந்த இளம் தம்பதியர் தேங்காய் உருட்டி விளையாடினார்கள்.குடத்தில் மோதிரத்தை போட்டு எடுக்க சொல்ல இருவரும் ஒன்றாகவே எடுத்தார்கள்.

திருமணம் முடிந்து பத்து நாட்களில் சுந்தரம் கிளம்பி சென்றான். விசா வரும் வரை வேலைக்கு செல்கிறேன் என்று மாலதியும் சென்னை சென்றுவிட்டாள்.அதில் மாலதியின் சொந்த தாய் மாமனான திருவேங்கடத்திற்கு ஏமாற்றம் தான்.விடுமுறையில் வந்து விட்டு மீண்டும் சென்னை செல்ல மாட்டேன் என்று அழுது தீர்க்கும் பெண்,இப்போது திருமணம் முடிந்து தங்களுடன் இருப்பாள் என்று நினைத்திருக்க சென்னை சென்றது கஷ்டமாக இருந்தது.

திருவேங்கடமும் கோதையும் முதன்முதலாக சில நிதர்சனங்களை உணர்ந்த தருணமிது.என்னதான் மிக நெருங்கிய உறவாக இருந்தாலும்,மருமகளாகவோ மருமகனாகவோ அவர்களது உறவு முறை அடுத்த கட்டத்தை அடையும் பொழுது உறவின் பரிமாணமும் மாறித்தான் போய்விடுகிறது. எவ்வளவு அன்பான பெண் இந்த மாலதி.மருமகளானதும் வேற்றாளாகிவிட்டாளே என்று தடுமாறினார்கள் சுந்தரத்தின் பெற்றவர்கள்.

சென்னை சென்ற மாலதிக்கு மூன்று மாதங்களில் விசா கிடைத்துவிட்டது. அவளாக இந்த விஷயத்தை மாமியார் மாமனாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.திருவேங்கடத்தின் தங்கை கணவர்தான் அலைபேசியில் அழைத்து சொன்னார். இப்போதெல்லாம் திருவேங்கடத்தின் தங்கையிடம் கூட நிறைய மாறுதல்களை உணர்கிறார் திருவேங்கடம். முன்பெல்லாம் வாரம் ஒரு முறையாவது அழைத்து அண்ணா -மன்னியிடம் பேசிக் கொண்டிருந்தவள் இப்போதெல்லாம் இவர்களாக அழைத்தால் கூட சரியாக பேசுவதில்லை. இன்னமும் மாறாமல் இருப்பவர் தங்கையின் கணவர்தான். பொதுவாகவே பெண்களுக்குள் அமிழ்ந்து கிடக்கும் மமதை ஆண்களை பொறுத்தவரை ஒன்றுமில்லாத உப்பு பெறாத விஷயமாக இருக்கும்.

திருவேங்கடமும் கோதையும் மாலதி கிளம்பும் முன் சென்னை வந்து அங்கே சமைப்பதற்காக என்று பொடி வகைகள்,தளிர் வடகம், சுண்டைக்காய் என்று கடை பரப்ப ,ஏதோ போட்டி நடப்பது போல் மாலதியின் அம்மா,"நீங்க இதெல்லாம் எடுத்துண்டு வந்திருக்கவே வேண்டாம் மன்னி. மாப்பிள்ளைக்கு பிடிச்சது,இவா ரெண்டு பேரும் குடித்தனம் ஆரம்பிக்க தேவையானது எல்லாத்தையும் நா ஏற்கனவே ரெடி பண்ணிட்டேன் .நீங்க வேணும்னா ஊருக்கு எடுத்துண்டு போய் யுஸ் பண்ணிக்கோங்களேன் " என்றாள். அதில் பெருமளவு உரிமையுணர்வு தெரியவே கோதை போர்க்கொடி உயர்த்த ஒன்றும் தயாராக இல்லை. அமைதியாக நகர்ந்துவிட்டாள். நாட்டுப்பெண்ணாவது " நீங்க குடுங்கோ மாமி" என்று சொல்லியிருந்திருக்க வேண்டும். அவளும் அம்மா சொல்வது சரி என்று இருக்கவே வேறு என்ன சொல்ல முடியும்? பிள்ளை நாட்டுப்பெண் உறவு வேண்டுமே!

ஒருவழியாக மாலதி தனது உடைமைகளுடன் அமெரிக்க மண்ணை மிதித்து விட்டாள். அவளுக்கு எதிலோ ஜெயித்த உணர்வு.ஆரம்பத்தில் சுந்தரத்துடன் திருமணம் என்று பேசும்பொழுது அவளுக்கு பெரியதாக எதுவும் தோன்றவில்லை. சுந்தரம் சொல்லி பொறியியல் படிப்பை முடித்தவளிடம் சுந்தரத்திற்கு காதல் பெருகியிருந்தது.மாலதி ஐ டி கம்பனியில் சேர்ந்த பிறகு அவளது அமெரிக்க கனவு நீண்டது. இன்னமும் சொல்ல வேண்டும் என்றால் அதற்கும் முன்பே அவள் சுந்தரத்திடம் இது பற்றி பேசியிருந்தாள். "அத்தான், எவ்ளோ வருஷம் இங்கே குண்டு சட்டியில் குதிரை ஓட்டறது? நீங்க மேல எம் எஸ் படிக்க அமெரிக்க போகணும்.அங்கேயே வேலையையும் தேடிக்கணும். நாம கல்யாணம் நடக்கறதுக்கு முன்னாடி நானும் எக்ஸாம் க்ளியர் பண்ணி அங்கே மேல படிக்க தயாராகிறேன் " என்று சொன்னவளின் வார்த்தைகளை மீற சுந்தரத்திற்கு விருப்பம் இல்லை. இருவரும் நன்றாக வாழத்தானே வழி சொல்கிறாள் என்பது.

கலிபோர்னியாவில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் மாலதிக்கு இடம் கிடைக்க சுந்தரம் தனது வேலையை அங்கே மாற்றிக்கொண்டு வந்திருந்தான். மாலதிக்கு இன்னமும் கல்லூரி திறக்கவில்லை. ஒருமாதம் இருக்கிறது.அதற்குள் ஒரு குட்டி தேன்நிலவை இருவரும் கொண்டாடினார்கள். படித்து முடித்து வரும் வரை குழந்தை வேண்டாம் என்றாள் மாலதி .மனதார அதற்க்கு ஒத்துக்கொண்டான் சுந்தரம். அந்த ஒரே மாதத்தில் மனைவியின் கையில் பொம்மையென ஆனான் சுந்தரம்.உலகமே அவள்தான் எனும் அளவுக்கு அவனது காதல் அவள்பால் நீண்டிருந்தது.

மோகம் முப்பது நாள் என்று எழுதியவன் மடையன் எனும் அளவுக்கு மாலதி மீதான மோகம் வேறு . ஆணின் தேவையை பரிபூரணமாக்கும் பெண்ணின் மீது ஆணுக்கு காதலுடன் ,பரிவும் இருக்கும் தானே! அவன் கேட்டு பெண்ணவள் படுக்கையை மறுத்தது இல்லை.இருவருக்கும் என்றாவது வாக்குவாதங்கள் வந்தாலும் அது படுக்கையில் பிரதிபலிக்க இருவருமே அனுமதிக்கவில்லை. மனைவிக்கு விட்டுக்கொடுப்பதை தனது கடமை என்று நினைத்தான் சுந்தரம்.

மாலதிக்கு கல்லூரி ஆரம்பித்துவிடவே ,அவள் தனது பாடங்களில் பெரும்பாலும் ஐக்கியமானாள். இங்கே படிப்பதும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்று சுந்தரத்திற்கு நன்றாகவே தெரியும்.அதனால் வீட்டு வேலைகளை அநேகமாக அவனே செய்தான். அவளது படிப்புக்கான செலவுகளும் சுந்தரத்துடையது. அவன் மனைவிக்கு அவன் செய்கிறான். இதில் தவறு ஏதாவது உண்டா ?

மாலதி வந்து எட்டாவது மாதத்தில் அவளது அம்மா வந்து ஆறுமாதங்கள் தங்கியிருந்தாள். அதன் பிறகு அவளது அப்பா வந்து மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். சுந்தரம் மனதில் ," நா இங்கே வந்து நாலு வருஷம் ஆறதே .இப்போ வரைக்கும் அப்பாம்மாவை இங்கே கூப்பிட்டு வச்சுக்கலியே " என்று தோன்றியது.அதை மனைவிடம் சொல்லவும் செய்தான். அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. அடுத்த மூன்று மாத இடைவெளியில் மீண்டும் மாலதியின் அம்மா வந்து நின்றாள்.

குடும்பமாக இவர்கள் எடுத்துக்கொள்ளும் படங்களை முகநூலில் பதிவதுடன், திருவேங்கடத்திற்கும் அனுப்பி வைத்தாள் மாலதியின் அம்மா. திருவேங்கடமும் கோதையும் எதையும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை .

அதற்குப்பிறகு சுந்தரமும் மாலதியும் விடுமுறைக்காக இந்தியா வந்தார்கள்.பெயருக்கு திருவரங்கம் செண்டு நான்கு நாட்கள் இருந்தவர்கள் , கோவா சென்று வருகிறோம் என்று கிளம்பி,கோவாவிலிருந்து நேரே சென்னையில் மாலதியின் பெற்றவர்கள் வீட்டுக்கு சென்று தங்கி விடுமுறையை கழித்தார்கள். இருவரும் அமேரிக்கா சென்று ஒருவாரம் கழித்து சுந்தரம் தனது அப்பாவுக்கு வாட்டசாப்பில் வந்து சேர்ந்து விட்டதாக தகவல் அனுப்பினான்.

திருவேங்கடம் கோதை இருவருக்கும் ஏதோ ஒன்று இடறியது.கைப்பொருள் காணாமல் போனது போல , எதிலோ தோற்றது போல... கோதை கண்களில் நீர் திரையிட்டது.திருவேங்கடம் ஒன்றும் சொல்லவில்லை.

மக்களே , கதையோட முதல் அத்தியாயத்தை இங்கே பதிவு செய்கிறேன். உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்நது கொள்ளுங்கள். இந்தக்கதை எந்த தனிமனிதரையும் குறிப்பிட்டு எழுதலன்னு உறுதி சொல்றேன்.

 

Author: Paithani
Article Title: அரங்கம் 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
222
பண்பும் ஒழுக்கமும்
படிப்பும் வேலையும்
பெற்றவர்கள் தந்தது
பிள்ளைகளின் கடமை
பின்னாளில் அவர்களை
பார்த்துக் கொள்வது....

பெரும்பாலும் இதில்
பையன்கள் தோற்றங்கள்
பெண் பிள்ளைகள்
பெருமை சேர்க்கிறார்கள்....

பொண்டாட்டியாக வந்து
பெற்றவர்களை இப்படி
பிரித்து விட்டாள் மாலதி...
 
Top Bottom