• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Arangam 4

Paithani

New member
Joined
Jun 19, 2024
Messages
17

அரங்கம் 4

சீரங்கத்திற்கு பிடித்தம் இல்லாமல் வந்து சேர்ந்த மாலதி அங்கே கணவனோடும்,மாமா மாமியோடும் சரிவர பேசாமல் கடுப்பை காட்டிக் கொண்டிருந்தாள். அவளை அங்கே யாருமே கண்டுகொள்வதாக இல்லை. பிறந்து நான்கு வருஷங்களுக்கு பிறகு தங்களை பார்க்க வந்திருக்கும் ஒரே பேரன் ரங்கராஜனுடன் பெரியவர்கள் இருவருவம் ஐக்கியம் ஆகிவிட,சுந்தரமோ காலை நேரங்களில் தனது அப்பாவோடு பஞ்சகச்சம் திருமண காப்பு சகிதமாக கோவிலுக்கு சென்று உதவிகள் செய்பவன் ,மாலையில் தானே அங்கிருக்கும் பிரபந்தம் சேவிக்கும் குழுவுடன் அமர்ந்து சேவிப்பதை வழக்கம் ஆக்கிக்கொண்டான்.

அவனது செயல்களை பார்த்த மாலதிக்கு மனதுக்குள் பயமே வந்துவிட்டிருந்தது. 'அமெரிக்காவிலிருந்து இந்த மனுஷன் நிரந்தரமா இங்கேயே வந்து கோவில்ல உண்டக்கட்டி வாங்கி திண்ணுண்டு ,மணியாட்டிண்டு உக்காந்துடுவாரோ ' என்று மனதுக்குள் புலம்பினாள். வாய் திறந்து கேட்கவும் பிடிக்கவில்லை.எங்காவது தான் சொன்ன நேரம் 'அட ,இந்த ஐடியா நன்னா இருக்கே ' என்று சுந்தரத்திற்கு தோன்றிவிடக்கூடுமோ எனும் எண்ணம்.

யார் என்ன நினைத்து எதை மாற்ற முடியும்? மாலதியால் எதுவும் செய்ய முடியவில்லை. இரண்டு மாதங்கள் முடியும் சமயம் தருணம்.அப்பொழுதும் சுந்தரம் ஒன்றும் கிளம்புவதாக இல்லை. முன்புபோல் புலம்புவதும்,அறைக்குள் சென்று பொருட்களை உடைப்பதும் இல்லை..ஆனால் ஒருவித இறுக்கம்.

ஒருநாள் மாலையில் தனது மனைவியிடம் வந்தவன்,"மாலு ,நீ ரங்கனை கூட்டிண்டு போய் கொஞ்சநாள் உங்க அம்மாவத்துல இரு. நா இங்கே இருந்துட்டு அங்கே வந்துடறேன் " என்று சொன்னான்.

கணவனை ஆராய்ச்சியாக பார்த்தவள்,"அது சரி,நாம மூணுபேரும் நம்மாத்துக்கு போறது எப்போ ?" என்றாள். அவளது கேள்விக்கு சட்டென சுந்தரம் பதில் சொல்லவில்லை. கொஞ்சம் நேரம் எடுத்தவன்,"போலாம், சீக்கிரம் கிளம்பலாம் என்று மட்டும் சொன்னான். மாலதிக்கு எங்கோ இடறியது. ஒன்றும் கேட்காமல், அடுத்த நாளே தெரிந்தவர்களிடமிருந்து ஒரு வாடகை காரை எடுத்து மனையையும்,மகனையும் சென்னை அனுப்பி வைத்தவன் அன்றிலிருந்து நான்காம் நாள் திருச்சியிலிருந்து அமெரிக்கா கிளம்பி சென்றுவிட்டான்.

அவர்களது பழைய வீட்டை ஏற்கனவே விற்றுவிட்டு அதிலிருந்து வந்த பணத்தைக்கொண்டு அவன் வாங்கி வைத்திருந்த அநேக கடன்களை அடைத்தான். அவன் எதற்காக அவ்வளவு கடன் வாங்கினான்,அந்த பணம் என்னவாயிற்று,அவனது சம்பளப்பணத்தின் கதை என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.அது அவனுக்கு மட்டுமே வெளிச்சம். மனைவியிடம் கூட சொல்லாத விஷயத்தை நாம் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

ஆனாலும் சொல்கிறேன்.அவனைப்பற்றி யாரும் தவறாக யோசிக்க நான் இடம் தரப்போவது இல்லை. புதியதாக சீரங்கத்தில் ஒரு வீடு வாங்க அப்பாவுக்கு நிறைய பணம் அனுப்பியிருந்தான். இங்கே சியாடலில் புது வீடு அதுவும் அடுக்ககம் இல்லை.தனிவீடு... ம்ஹும்..ஐய்யாயிரம் சதுர அடிகள் கொண்ட பங்களா. மனைவி மாலதி வேலையை விட்டுவிட்டாள். வாங்கிய கடன்களின் கதை இதுதான்.

சரி சம்பளம்? நிறைய வருமானம் உண்டே ? என்றால் இவன்தான் வேலையிலிருந்து தூக்கப்பட்டு இது மூன்றாவது மாதம் ஆயிற்றே .பின்னே சம்பளம் எங்கிருந்து வரும் ? அதுவும் எவ்வளவு நெருக்கடிகள்,எவ்வளவு சீண்டலுடன் கூடிய பேச்சுகள். கூடவிருந்து குழிபறித்த நண்பர்கள். அளவுக்கு அதிகமான உருவாக்கப்பட்ட மன அழுத்தம். அதற்க்காக அவன் எடுத்துக்கொண்ட மன நல மருத்துவ ஆலோசனைகள். எதற்க்காக அவன் வலையில் சிக்க வைக்கப்பட்டான் என்று இந்த நொடி வரை அவனுக்கு புரியவில்லை.

நடந்த விஷயங்கள் அவனது மனதுக்குள் அமெரிக்க மண்ணின் மீதே ஒரு வெறுப்பையும், தான் எதற்குமே தகுதி இல்லாதவன் என்பது போன்ற ஒரு மாய எண்ணத்தையும் அவனுக்குள் விதைத்திருந்தது. மனதில் உள்ள பிரச்னைகளையோ ,அலுவலகத்தில் நடந்த கசப்பான சம்பவங்களையோ பகிர்ந்து கொள்ள மனைவி மாலதி தகுதியான நபர் அல்ல என்பதை இத்தனை குடும்பவாழ்க்கையின் பயனாக முழுமையாக நம்பினான். இதோ இப்போது இவன் செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் ,அவ்வளவு ஏன் கிளம்பி அமெரிக்கா வந்திருப்பது பற்றிக்கூட மனைவியிடம் சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை.

இந்த வாழ்க்கை முறையை அணுவணுவாக ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மாலதிக்கு அவன் சொல்வதும் அவனது கஷ்டங்களும் நிச்சயம் புரியாது.இருவருமாக சேர்ந்து சரி செய்வோம் என்பதற்க்கு பதிலாக இவனையே குற்றம் சாட்டி அலைக்கழிப்பாள் என்பது சுந்தரத்தின் எண்ணம்.

சரி,மீண்டும் அங்கே இந்தியா செண்டு சொல்லத்தான் வேண்டும் எனும் பொழுது ..என்ற கேள்வியை இந்த நேரத்தில் அவன் விரும்பவில்லை. சியாடல் வீட்டை ஐந்து வருஷ லீஸுக்கு கொடுத்து வந்த பணத்தை எடுத்துக்கொண்டு,மீண்டும் இந்தியா கிளம்பிவிட்டான்.

அவன் மனம் முழுவதும் பாரம்.எவ்வளவு கனவுகளை சுமந்து கொண்டு இந்த மண்ணை மிதித்திருந்தான் என்று அவனுக்கு தெரியும். பெற்றவர்களை மனம் தவிக்கவிட்ட பாபமோ என்று கூட யோசித்திருக்கிறான். மீண்டும் இந்தியா சென்று விரைவாக புதிய வேலையை தேடிக்கொள்ளமுடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்ச மாதங்கள் கழித்து ஒரு ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க எண்ணமுண்டு .தனியாக செய்ய முடியாது. மாலதி தன்னுடன் நின்றால் பரவாயில்லை என்று தோன்றியது.

அதோடு வேறு நண்பர்கள் யாரும் உடன் நின்று தொழில் ஆரம்பிக்க வருவார்களா என்று வேறு பார்த்தாக வேண்டும் போன்ற எண்ணங்களுடன் ஏறத்தாழ ஒன்னரை மாதங்கள் கழித்து இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பயணம். இனிமேல் இங்கே இப்போதைக்கு திரும்பிவரப் போவதுமில்லை என்றும் நினைத்துக்கொண்டான்.

இந்த ஒன்னரை மாதங்களில் நிறைய முறை மாலதி அழைத்து விட்டாள். இருவருக்குள்ளும் ஒரு பனிப்போர் ஓடிக்கொண்டிருப்பதால் இவன் அவளது அழைப்புகளை நிராகரித்தான்.மீண்டும் மீண்டும் அவள் அழைத்துகொண்டு இருக்கவே ஒரு நாள் அவளது அழைப்பை ஏற்றவன் ," நா உன்கிட்ட அமைதியா பேசுற நிலைமைல இப்போ இல்ல மாலு. இப்போ பேசினா ஏதாவது வார்த்தைகளை கொட்டிடுவேன். வெயிட். நானே கொஞ்சம் தெளிஞ்சப்புறம் கூப்பிடறேன் "என்று அவள் பதில் பேசவே நேரம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்தான்.

இந்திய பெண்ணான மாலதிக்கு கணவன் இப்படி நடந்து கொள்வதில் கோவம். அமெரிக்க வாசியான மாலதிக்கு,' அவரவர் தனிப்பட்ட்ட இடத்துக்குள் அத்துமீறி நுழையக்கூடாது' என்று நாகரீகம் பார்த்து ஒதுங்கும் மன பக்குவம். இரண்டுக்குமிடையே மீண்டும் கணவனை அழைத்து என்னவென்று கேட்கமுடியாத பரிதவிப்பு.

அவளது இந்த பரிதவிப்பு சுந்தரத்துக்கு ஏதுவாக இருந்தது என்றால் எவ்வளவு எண்டு சொல்லவியலாது . நிம்மதியாக தனது வேலைகளை முடித்துவிட்டு சத்தம் இல்லாமல் மீண்டும் தாய் மண்ணை அடைந்தான். இவ்வளவு விஷயங்கள் நடக்கிறன்றது . ஆனால் திருவேங்கடத்திற்கும்,கோதைக்கும் நாட்டுப்பெண் குழந்தையுடன் சென்னை சென்றதும், மகன் அமேரிக்கா சென்றதும் தவிர வேறெதுவும் விஷயங்கள் தெரியாது. சிறியவர்கள் அதுபற்றி பெற்றவர்களிடம் ஏதும் தெரியப்படுத்தவும் இல்லை. அவர்களுக்கு தங்கள் காதுகளை அடையாத விஷயங்கள் பற்றிய கவலைகளும் இல்லை. அவரவர் வாழ்க்கை .நமக்கென்ன பாடு. ஏதாவது நம்மிடம் உதவி கேட்டால் செய்வது..இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்வது என்றுதான் இருந்தார்கள். (இப்படி இருந்தால் வீட்டில் பல பிரச்சனைகள் குறைந்து விடும் ..என்ன சரிதானே?)

கொஞ்சநாள் சீரங்கத்தில் இருந்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்றான் சுந்தரம்.மாலதியை எப்படி சமாளிப்பது ,அவளை என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது ? என்றெல்லாம் ஆயிரம் விஷயங்கள் சுந்தரத்தை குடைந்தது. சென்னை வந்தவன் மனைவியுடன் திருவல்லிக்கேணி கோவிலுக்கு சென்று வந்தான்.அவனது அத்தை அத்திம்பேர் இருப்பது அங்கே கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் வீதியில் தான். விவேகானந்தர் இல்லத்திலிருந்து ஐந்து நிமிஷ நடை. கோவிலுக்கு வந்தவன் வேங்கட க்ரிஷ்ணனின் அழகில் மயங்கி நின்றானே தவிர வேறேதும் மனதில் பிரார்த்தனைகள் இல்லை.

இருவரும் நடந்தே கடற்கரைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணிகாரர்களுக்கு இது ஒரு வசதி. நீலக் கண்ணனும்,நீல கடலும் அவர்களுக்கு அருகே. கடற்கரையில் வார நாள் என்பதாலோ என்னவோ வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் தவிர அதிகம் கூட்டமில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் வெகுநேரம் கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கணவனிடம் மாலதி என்னவென்று கேட்க விரும்பவில்லை.ஏதுவாக இருந்தாலும் தனது மனதுக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கும் என்று அவள் மனது மாலை முதலே அழுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறது. பூனை தானாக வெளியே வரட்டும் என்று இருக்கிறாள்.

தொண்டையை கணைத்துக்கொண்டு மெள்ள ஆரம்பித்தான் சுந்தரம்.தான் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள், கடன்கள், என்று சொல்லிக்கொண்டே வந்தவனை பதில் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் மாலதி. அவளுக்கு அவன் சொல்வதை நம்பவே முடியவில்லை. அவன் பழைய வீட்டை விற்று கடன்களை அடைத்து கொஞ்ச பணம் மீதமிருப்பதையும்,இப்போது இருந்த சியாடேல் வீட்டை லீசுக்கு விட்டதையும் சொல்லக் கேட்டவளுக்கு கணவன் மீது தீராத ஆத்திரம் வந்தது.தன்னிடம் கேட்டிருக்க வேண்டாமா..நான் ஆசை பட்டு வாங்கிய சொத்துக்கள் என்று ஆற்றாமை அடைத்துக்கொண்டு வந்தது. அது ஆத்திரமாக வெளிப்பட்டது.

ஏனோ தான் மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றதை சொல்ல சுந்தரத்திற்கு வாய் வரவில்லை. இருவரும் வீடுவந்து சேர்ந்தார்கள். மாலதி அன்றிலிருந்து சுந்தரத்துடன் பேசுவதை குறைத்துக்கொண்டாள்.சண்டை எதுவும் போடவில்லை.ஆனால், மனைவியை சுந்தரத்தால் நெருங்கவும் முடியவில்லை. அடுத்தவர் கண்களுக்கு புலப்படா ஒரு மாயக்கோட்டை அவன் மனைவி வரைந்திருந்தாள்.

சுந்தரம் தனது ஸ்டார்ட்டப் கம்பனி பற்றி மாலதியிடம் பேச நினைத்திருந்தான். அவள் கேட்க தயாராக இல்லை. எம் என் சி கம்பெனிகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தாள். அவளிடம் எச் ஒன் பி விசா உண்டு. கடந்த வருஷத்தில்தான் அதை மீண்டும் புதுப்பித்திருந்தாள். சுந்தரம் பேசியதிலிருந்து அவன் மீண்டும் அமேரிக்கா வர விரும்பவில்லை என்று அவளுக்கு தெளிவாகவே புரிந்து போனது. அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களையும் விடாமல் விண்ணப்பித்தாள். அமெரிக்க நேரத்தில் வேலை செய்யவும் அவள் தயாராக இருந்தாள்.எப்படியாவது மீண்டும் அங்கே சென்றுவிடவேண்டும் என்று அவள் மனம் தவித்தது. குழந்தை பற்றிய யோசனையே அவளுக்கு அந்த நேரத்தில் இல்லை. ஒரு வேளை தன்னுடன் கூட்டி சென்றுவிடும் எண்ணம் இருக்கலாம்.

அவள் எதிர்பார்த்தபடிக்கு அமெரிக்க நிறுவனம் எதிலும் நேரடியாக அவளுக்கு வேலை அமையவில்லை.ஆனால் இங்கிருக்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது.

மனைவி தனக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்று உணர்ந்த சுந்தரம் தனது பழைய நண்பர்களை தொடர்பு கொண்டான். யாருக்கும் இதிலெல்லாம் பெரியதாக உடன்பாடு இல்லை. யார் துணையும் இல்லாமல் தானே தொழில் தொடங்குவது என்று முடிவுக்கு வந்தவன் அதற்க்கான வேலைகளில் இறங்கினான். மாலதி சுத்தமாக இப்போது கணவனிடம் பேசுவதை நிறுத்தி இருந்தாள். தனியாக செல்லலாம் என்று சுந்தரம் அழைத்து பார்த்ததற்கு அவளிடமிருந்து பலத்த எதிர்ப்புதான் வந்தது.

முன்பு அத்தை வீடாக மட்டும் இருந்தது..இப்போது மாமியார் வீடும் ஆகிவிட்டதில் ,வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதில் அவன் அவமானமாக உணர்ந்தான். மனைவியையும்,குழந்தையையும் விட்டு அவனால் எங்கே செல்ல முடியும்?

 

Author: Paithani
Article Title: Arangam 4
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
164
மனம் திறந்து பேசமுடியாத
மணப்பந்தம் பயன் இல்லை....

மனைவி என்பவள்
மன்னவனின் பாதி இல்லையா????

மாலதியின் செயலால்
மனதளவில்
மறித்த சுந்தரம்....

மாலதி என்ற
மனைவியின் மேல் உள்ள
மணல் கோட்டை
மண்ணாகி போனது
 
Top Bottom