• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

மீட்டாத வீணை 2

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
மீட்டாத வீணை

அத்தியாயம் 2

அடுத்த நாள் காலைப் பொழுது எப்போதும் போல சாதாரணமாகத் தான் விடிந்தது. நாதன் வேகமாக எழுந்து, தனக்கும், பவித்ராவிற்கும் காலை உணவைத் தயாரித்தார். டப்பாக்களில் மதிய உணவை அடித்தான். அசுர வேகத்தில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, பவித்ராவை எழுப்பப் போனான். பவித்ரா அதற்குள் எழுந்து குளித்து பள்ளிச் சீருடை அணிந்து தயாராக நின்றாள். வாடியே இருந்த முகம் நேற்றைய நிகழ்ச்சியை நாதனுக்கு நினைவூட்டி அவனை வருந்த வைத்தது.

சாதாரணமாக ஆரம்பித்த அன்றைய தினம் நிறைய சங்கடங்களையும், சோதனைகளையும் தரப்போவது நாதனுக்கு என்னவோ அப்போது தெரிந்திருக்கவில்லை.

" ஸ்கூல் பேக் எடுத்து வச்சிட்டயாம்மா? ஜியோமெட்ரி பாக்ஸ் எடுத்து வச்சுக்கிட்டயா? அப்புறம் மென்டல் மேத்ஸ் புக், போஸி ஆஃப் போயம்ஸ்? "

" எல்லாம் வச்சுட்டேன்பா" குரலில் ஆயாசம் இருந்தது. வழக்கமான உற்சாகம் என்னவோ மிஸ்ஸிங் அன்று. தன்னைத்தானே நொந்து கொண்டு அவளைப் பள்ளிக்கு அனுப்பிவைத்த நாதன் தானும் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போனான். அன்று தான் அவர்களுடைய ஆடிட்டிங் முடிவடையும் நாள். அதனால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வேலைப்பளு குறைந்து விடலாம்.

நாதன், அன்றாட வேலையில் மூழ்கிப் போயிருந்தான். ஃபைல்களின் பக்கங்களிலும், கணினித் திரையிலும் மாற்றி மாற்றி கவனத்தைத் திருப்பியபடி தன்னை மறந்து தொலைந்து போயிருந்தான். வேலைப்பளு அதிகமாக இருந்ததும் ஒருவிதத்தில் நல்லதாகப் போயிற்று. கவலையை மறக்க அதுவே உதவி செய்தது.

சில மணிநேரங்கள் கழித்து அவனுக்கு பவித்ராவின் பள்ளியில் இருந்து வந்த தகவல் அவனைப் பரபரப்பாக்கி பயங்கர டென்ஷனைத் தந்து விட்டது.

" மிஸ்டர். நாதன், பவித்ரா உங்க பொண்ணு தானே? நான் பவித்ராவின் ஸ்கூலில் இருந்து பேசறேன்" என்றது ஒரு பெண்ணின் குரல்.

" ஆமாம் மேடம். என்ன ஆச்சு பவித்ராவிற்கு? " பயமும் பரபரப்பும் சேர்ந்து நாதனைத் தொற்றிக் கொண்டன.

" பவித்ரா கிளாஸ் ரூமிலேயே மயக்கம் போட்டு விழுந்துட்டா. உடம்பு அனலாகக் கொதிக்குது. உடனடியாக மெடிக்கல் அட்டென்ஷன் அவளுக்குத் தேவை. ஆம்புலன்ஸில் அவளோட கிளாஸ் டீச்சரோட, பக்கத்தில் இருக்கற ஹாஸ்பிடலுக்கு அனுப்பியிருக்கேன். நீங்க உடனே கிளம்பி அந்த ஹாஸ்பிடலுக்கு வந்திருங்க " என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் அந்தப் பெண்.

அவசர அவசரமாக, அலுவலகத்தில் மேலதிகாரியிடம் தெரிவித்து விட்டுக் கிளம்பினான்.

" ரொம்பப் பதட்டமாக இருக்கே நாதா. நீ தனியாப் போகவேண்டாம். நானும் கூட வரேன்" என்று சொல்லியபடி, அவனுடன் கூடவே கிளம்பினான் நாதனின் நண்பன் மாதவன். உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களையும் நட்பு இருப்பவனுக்கு வையகத்தில் வேறென்ன வேண்டும்?

நல்லவேளையாக நாதனும் மாதவனும் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே பவித்ராவுக்கு சிகிச்சையை ஆரம்பித்து விட்டார்கள். ஸ்கூலில் இருந்து பவித்ராவுடன் வந்திருந்த டீச்சர், நாதனைப் பார்த்ததும் நடந்தவற்றை விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

" திடீர்னு கிளாஸில் மயக்கம் போட்டு விழுந்திருக்கா பவித்ரா. அவளை ஸ்கூலில் இருந்த ஸிக் (sick ) ரூமுக்குக் கூட்டிட்டு வந்தபோது உடம்பு அனலாக் கொதிச்சுட்டு இருந்தது. உடம்பில் ஒரே நடுக்கம். ஏதோ உளறிக்கிட்டே வேற இருந்தா. உடனே ஒரு பாரசிடமால் மாத்திரை மட்டும் கொடுத்துட்டு இங்கே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வந்துட்டோம். நல்லவேளை டாக்டர் உடனே அட்டன்ட் பண்ணிட்டாரு. இனிமேல் பயமில்லைன்னு நினைக்கிறேன்" என்று சொன்ன போது தான் நாதனுக்கு நின்ற மூச்சு திரும்பி வந்தது.

பவித்ராவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அதற்குள் வெளியே வந்து விட்டார். " ஷி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நௌ. அவளுக்குக் காய்ச்சல் குறைய இஞ்செக்ஷன் போட்டிருக்கோம். ஈவினிங் வரை பாத்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனதுக்கு அப்புறமும் கவனமாப் பாத்துக்குங்க. லிக்விட் டயட்டா நிறையக் கொடுங்க. அவ எதையோ பாத்து பயந்து போயிருக்கற மாதிரி எனக்குத் தோணுது. அவளுக்கு நினைவு வந்து கொஞ்சம் உடம்பு சரியானதும் அவ கூடப் பேசி, அவ மனசில இருக்கற பயத்தைப் போக்கப் பாருங்க" என்று சொல்லி விட்டுப் போனார்.

நாதனுக்குத் தன்னைத்தானே அறைந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. முதன்முறையாக பவித்ராவிடம் கோபத்தைக் காட்டியதன் விளைவுகளைத் தானே இப்போது அனுபவிக்கிறான்? தன்னைத் தானே வெறுப்பதைத் தவிர வேறு ஒன்றும் அவனால் அந்த சமயத்தில் செய்ய முடியவில்லை. நடந்ததை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லையே?

அன்று மாலையில் பவித்ராவிற்குக் காய்ச்சல் நன்றாகக் குறைந்திருந்தது. டாக்டர் அவளை டிஸ்சார்ஜ் செய்ய அனுமதி தந்ததும் கவுன்டரில் பில்லில் தரப்பட்டிருந்த தொகையைச் செலுத்திவிட்டு நாதன் கிளம்பினான். ஸ்கூல் டீச்சர் மதியம் நாதன் வந்து சிறிது நேரத்தில் கிளம்பிப் போய் விட்டார். மாதவன் மட்டும் நாதனுடன் கூடவே இருந்து அவர்களை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டுத் தான் கிளம்பிப் போனான்.

" நாதா, நீ குழந்தையை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ. ஆஃபீஸில் நான் லீவு சொல்லிடறேன். பவித்ராவுக்குக் கொடுக்க வேண்டிய மருந்தெல்லாம் ஹாஸ்பிடலில் இருந்த மெடிக்கல் ஷாப்பில் வாங்கியாச்சு. வேற ஏதாவது உதவி தேவைன்னா உடனே தயங்காமல் ஃபோன் பண்ணு. ரெண்டு நாட்களுக்கு நான் சாப்பாடு கொண்டு வந்து தரேன். நீ சமையலறையில் டயத்தை வேஸ்ட் பண்ணாம, பவிக்குட்டியைப் பாத்துக்கோ, போதும் " என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

நாதன் இருந்த மனநிலையில் நண்பன் செய்த உதவிகள் அனைத்தும் அவனுக்கு வேண்டியிருந்தது. சரி, சரி என்று தலையாட்டி விட்டு உள்ளே சென்றான்.

பவித்ராவுக்குக் கஞ்சி மட்டும் போட்டுக் கொடுத்துக் குடிக்க வைத்தான். மாத்திரையைக் கொடுத்து அவளைப் படுக்கையில் படுக்க வைத்து அன்று இரவு முழுவதும் அவள் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். பவித்ரா கண் விழித்து அப்பாவைப் பார்க்கும் பார்வையில் ஒரு பயம் தெரிந்தது. நடுக்கத்துடன் உடனுக்குடன் கண்களை மூடிக் கொண்டாள்.

'பாவி, பாவி, உற்சாகமா ஓடியாடித் திரிஞ்சிட்டு இருந்த குழந்தையை நல்லா பயமுறுத்தி இப்படிப் படுக்கையில் தள்ளி விட்டுருக்கயே? உனக்கே நியாயமா? அப்படியென்ன கேட்கக் கூடாத விஷயத்தைக் கேட்டா அவ? உனக்கு ம்யூசிக் பிடிக்காதுன்னா அவளுக்கும் பிடிக்கக் கூடாதுன்னு என்ன கட்டாயம்? எந்த ஊர் நியாயம் இது? பட்டாம்பூச்சியாத் திரிஞ்ச குழந்தை இப்போ நத்தையாச் சுருண்டு கிடக்கறாளே? அவளுக்கு ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருந்தா என்ன செஞ்சிருப்பே? ' என்று நாதனின் மனசாட்சி அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து அடுக்கடுக்கான குறற்ச்சாட்டுகளை அவன் மீது சாட்டி வதைத்தது.

" அப்பா, அப்பா" என்ற பவித்ராவின் குரல் கேட்டு நாதன் கண்விழித்தான். பவித்ராவின் படுக்கைக்கு அருகே இருந்த நாற்காலியில் சாய்ந்தபடியே கண்ணசந்து போயிருந்தான். இரவு முழுவதும் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தவன் அதிகாலையில் தன்னை மறந்து தூங்கிப் போயிருந்தான்.

" என்னம்மா கண்ணா வேணும்? இப்போ எப்படி இருக்கு? " என்று கேட்டுக் கொண்டே பவித்ராவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் நாதன். காய்ச்சல் நன்றாகவே விட்டிருந்தது.

" சரியாயிடுச்சுப்பா இப்போ. ராத்திரி முழுக்க தூங்காம இப்படித் தான் சேரிலயே உக்காந்திருந்தீங்களாப்பா? என்னால தானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்? " என்ற பவித்ராவின் குரலில் வருத்தமும், சோர்வும் தெரிந்தன.

" அய்யோ அதெல்லாம் இல்லை கண்ணம்மா. உனக்கு உடம்பு சரியானா, எனக்கு அதுவே போதும். இரு நான் போய்க் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்" என்று சொல்லி விட்டு எழுந்து போனான்.

நல்லவேளையாகக் காய்ச்சல் அதற்குப் பிறகு திரும்ப வரவில்லை. இரண்டு நாட்களில் பவித்ரா உடல்நலம் சீரானது. டாக்டரிடமும் நாதன் கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தான்.

" குட் கேர்ள், இனிமேல் எதுக்கும் பயப்படக் கூடாது, சரியா? தைரியமா எதையும் எதிர்கொள்ளணும். அது தான் உங்கப்பா உன் கூடவே இருக்காரே? எங்கே சிரி பாக்கலாம் " என்று சொல்லி பவித்ராவின் கன்னத்தில் தட்டினார் அந்த வயதான மருத்துவர். ' அதே அப்பாவால் தானே அவளுக்குக் காய்ச்சலே வந்தது?' என்று நினைத்து வருந்தினான் நாதன்.

அன்று மாலை பவித்ராவை அருகிலிருந்த சிறுவர் பூங்காவிற்கு அழைத்துச் சென்ற நாதன், அவளுடன் உட்கார்ந்து நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினான். அவள் மனதில் இருந்த பயத்தை அகற்ற முயற்சி செய்தான்.

" அப்பா கோவிச்சுக்கிட்டதை நினைச்சு வருத்தப்படாதே பவித்ரா. ஆஃபீஸில் வேலை ஜாஸ்தி. ரொம்ப டயர்டா இருந்தேனா? கன்ட்ரோல் பண்ண முடியலை. இனிமேல் அப்படி செய்யமாட்டேன். நீ உடம்பு முடியாம சுருண்டு கெடந்ததைப் பாத்து பயந்து போயிட்டேன். ஸாரிடா கண்ணா! "

" நீங்க ஒண்ணும் ஸாரி சொல்ல வேணாம்பா. நான் தான் தப்புப் பண்ணிட்டேன். இனிமேல் உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைப் பத்தி நான் பேசவே மாட்டேம்பா. ஜாக்கிரதையா இருக்கேன். உங்களுக்கு ஏதோ காரணத்தால நான் ம்யூசிக் கத்துக்கணும்னு சொன்னது பிடிக்கலை. அது எனக்கு நல்லாப் புரிஞ்சுடுச்சுப்பா" என்று சொன்ன மகள், அவன் கண்களுக்கு அன்று வித்தியாசமாகத் தெரிந்தாள். சட்டென்று இரண்டே நாட்களில் மனதளவில் அவள் முதிர்ச்சி அடைந்து விட்டது போலத் தோன்றியது நாதனுக்கு.

சொன்னது போலவே அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பவித்ரா, இசை கற்றுக் கொள்வதைப் பற்றிப் பேசவேயில்லை. நாதனும் விட்டு விட்டான். முதலில் பவித்ரா, காய்ச்சலில் கிடந்த போது, தனது விருப்பத்தை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு அவளை ம்யூசிக் கிளாஸில் சேர்த்து விடலாம் என்று தான் முடிவு செய்திருந்தான்.

"அவளே அதை மறந்துட்டா. அதனால நான் அவளுக்கு ம்யூசிக் வேணாம்னு முடிவு பண்ணிட்டா" என்று நாதன், தன் நண்பன் மாதவனிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

" நீ ரொம்பத் தான் கவலைப்படறேன்னு எனக்குத் தோணுது. அவ ம்யூசிக் கத்துக்கறதுனால என்ன பெருசா ஆயிடப் போகுது? நீ பயப்படற மாதிரில்லாம் ஒண்ணும் நடக்காது. அவளாத் திரும்பக் கேக்கலைன்னா என்ன? நீயாவே அந்த டாபிக்கை ஆரம்பி. அவ ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவா. பவித்ராவுக்கு வயசுக்கு மீறின மெச்சூரிட்டி இருக்கு. நீ ம்யூசிக் கிளாஸில் சேத்துவிட்டேன்னா , அவளுக்கு உன் மேல இருக்கற பாசம் இன்னும் அதிகமாகுமே ஒழியக் குறையாது" என்று மாதவன் எடுத்துச் சொன்னான்.

' அப்படியெல்லாம் என்னால ரிஸ்க் எடுக்க முடியாது மாதவா. எனக்கு இருக்கற ஒரே சொந்தம் என்னோட பவிக்குட்டி தான். என் மனைவியைப் பறிச்ச மியூசிக், என் மகளையும் என் கிட்டேருந்து பிிரிக்க ஆசைப்படுது. நான் நிச்சயமா வாய்ப்பே தரமாட்டேன். உனக்கெல்லாம் என் பயம் புரியாது மாதவா. ஏன்னா உனக்கு என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் தெரியாது. தெரியவும் வேண்டாம்' என்று மனதில் நினைத்தவன், " ஓகேடா, முயற்சி பண்றேன்" என்று சொல்லி அந்த உரையாடலுக்குத் தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

பவித்ராவோ அவனுக்கு இந்த விஷயத்தில் எந்தச் சங்கடமும் தரவில்லை. மியூசிக் கற்றுக் கொள்வதைப் பற்றி அதற்குப் பிறகு அவள் பேசவேயில்லை.

திடீரென்று மனதளவில் முதிர்ச்சி அடைந்து விட்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பவித்ராவின் குணமும் நடவடிக்கைகளும் பெருமளவில் மாறிவிட்டன. உற்சாகமாகத் துள்ளித் திரிந்த பட்டாம்பூச்சி இப்போது அமைதியாகி விட்டது. அப்பாவுக்கும், மகளுக்கும் நடுவில் ஒரு மௌனச்சுவர் எழுந்து நிற்பதாக நாதனுக்கு முதலில் தோன்றியது.

' சேச்சே, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவளை அடிச்சதில் இருந்து என் மனசில் இருக்கற குற்ற உணர்ச்சி என்னை இந்த மாதிரி நினைக்க வைக்கிறது. அவள் எப்போதும் போல இயல்பாத் தான் இருக்கா. குழந்தைகள் வளர வளர இந்த மாதிரி மாற்றங்கள் வருவது இயல்பாக இருக்கலாம். எனக்குத் தான் இதெல்லாம் தெரியாதே? பவித்ராவுக்கு அப்பாவின் மேல் உள்ள பாசம் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதெல்லாம் குறையாது' என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.

பவித்ராவும் அப்படியே வளர்ந்து வந்தாள். காலம் உருண்டு முன்னால் வேகமாக ஓடியது. பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள் பவித்ரா.

சென்னையில் இருக்கும் ஒரு பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரியில் தான் சேர்ந்திருக்கிறாள். மூன்றாவது வருடப் படிப்பு முடியப் போகிறது.

நடுவில் நாதனின் அம்மா இறந்து போன போது நாதனால் பவித்ராவைத் தன்னுடன் அழைத்துப் போக முடியவில்லை. பவித்ராவுக்கு அப்போது பள்ளி இறுதித் தேர்வு நடந்து கொண்டிருந்ததால் பவித்ராவை, தனது நண்பன் மாதவனின் வீட்டில் விட்டு விட்டுப் போனான். மாதவனின் மகள் அதிதியும், பவித்ராவும் ஸ்கூல் காலத்தில் இருந்தே தோழிகள் என்பதால் சௌகரியமாக இருந்தது. இப்போது இரண்டு பேரும் ஒரே கல்லூரியில் ஒரே பிரிவில் தான்
படிக்கிறார்கள்.

கல்லூரிக் காலத்தில் பவித்ராவின் வாழ்வில் இசை மீண்டும் எட்டிப் பார்த்தது. அவளைக் கைதட்டி அழைத்து அவள் வாழ்வில் நுழையப் பார்த்தது. கூடவே சோதனைகளையும் வேதனைகளையும் அழைத்துக் கொண்டே வந்தது.

பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே!
அள்ளி அணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே!



தொடரும்,

புவனா சந்திரசேகரன்.
 

Author: Puvana
Article Title: மீட்டாத வீணை 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
சூப்பர், 👌👌👌👌, பவிதான் பெரியவளாகிட்டாளே, நாதன் அவளிடம் உட்கார்ந்து பேசி தன் பயத்தை புரிய வைத்திருக்கலாமே
 

Puvana

Active member
Joined
Jun 19, 2024
Messages
138
சூப்பர், 👌👌👌👌, பவிதான் பெரியவளாகிட்டாளே, நாதன் அவளிடம் உட்கார்ந்து பேசி தன் பயத்தை புரிய வைத்திருக்கலாமே
நன்றி
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
இந்த பேசும் பொற்சித்திரம் இசையை கற்றுக்கொள்வதால் வரப்போகும் சோதனைகளும் வேதனைகளும் என்னென்னவோ ?!
 
Top Bottom