மகுடி, படம், நாகரத்தினம்!
வயலில் உளுந்தங்காய் எடுக்கும்போது, அடர்ந்த மல்லிகைச் செடியில் அதிகாலையில் பூ பறிக்கும் போது, மாட்டுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் எடுக்கையில் இப்படி எத்தனையோ நேரங்களில் கைகளில் பாம்பு தீண்டி விடக்கூடும். சில சமயம் வரப்பில் நடக்கும் போது, புதர் மண்டிய சாலை ஓரங்களில் செல்லும்போது கால்களிலும் பாம்பு கடிக்கும். வெகு சில சமயமே என்றாலும் சில முறை காலைக் கடனுக்குத் திறந்தவெளியை பயன்படுத்தும் போது ஆணுறுப்பில், பின்புறத்தில் கடிபட்டு வருபவர்களும் உண்டு.
பாம்பைக் கண்ணால் பார்க்காதவர்கள் 'ஏதோ கடிச்சிருச்சு' என்று வருவார்கள். பெரும்பாலான நேரம் அறிகுறிகளைக் கொண்டு இன்ன விஷப் பூச்சி தான் கடித்திருக்கும் என்று வகைப்படுத்தி விடலாம். இருந்தாலும் 'அன்நோன் பைட்' என்று வகைப்படுத்தி அவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்போம்.
சில வருடங்களுக்கு முன் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரை மயக்க நிலையிலும் அதிகபட்ச வியர்வையில் குளித்த நிலையிலும் கொண்டுவரப்பட்டான். சுயநினைவை முழுதாக இழக்கும் முன் நான் என்ன ஆச்சு என்று கேட்டதற்கு நண்டு கடிச்சிருச்சு என்று கூறிவிட்டு மயங்கிவிட்டான். உடன் வந்தது அவன் தாத்தாவும் பாட்டியும். வினோதமான விஷயமாக அந்தப் பாட்டிக்கு அவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததே பிடிக்கவில்லை. தாத்தாவை திட்டிக் கொண்டே இருந்தார். கடிபட்ட இடம் எது, சூழல் என்ன அங்கு என்ன மாதிரியான விஷப்பூச்சி வர வாய்ப்பு உள்ளது உடன் இருந்தவர் யார் யார் என்று கேட்டால் பாட்டியிடம் சரியான பதில் இல்லை. "என் மக புள்ள பேரன் இவன். இவனோட ஆத்தா சொல்லச் சொல்லக் கேக்காம வேத்து சாதிப் பயலைக் கட்டி இவனைப் பெத்தா. அவன் இவளை விட்டுட்டுப் போயிட்டான். என் மக இந்தச் சனியனை எங்கள்ட்ட விட்டுட்டு இன்னொரு ஆள் கூட ஓடிட்டா. இந்தச் சனியன் கிடந்து என் உசுர வாங்குது. பழி சேட்டை. எங்க போய் என்ன கடி வாங்குச்சோ" என்று இடம் பொருள் தெரியாமல் புலம்பினாள். இப்படி ஒரு சூழலை அதுவரை நாங்கள் சந்தித்ததில்லை. ஒரு சிறிய குழந்தையின் மேல் எவ்வளவு வெறுப்பு? ஆனால் மயக்கம் அடையும் முன் அந்தச் சிறுவன் பேசிய ஒரு நிமிடத்திலேயே அவன் எவ்வளவு நல்லவன் என்று தெரிந்துவிட்டது. பாட்டி சொன்னது போல சேட்டைக்காரன் எல்லாம் இல்லை. ஏதோ அவன் கெட்ட நேரம் ஏதோ கடித்து விட்டது.
அவர்கள் கிராமம் ஒரு வறட்சியான சிறிய ஊர். குடியிருப்பின் அருகில் வயல்கள் ஏதும் இல்லை. வயல் இருந்தாலாவது நண்டு இருக்கலாம்.. அப்படியும் நண்டு கடித்தால் இப்படியான அறிகுறிகள் வராது. அதனால் இது தேள் கடித்ததால் இருக்கலாம். சிறுவன் தேளை இதுவரை பார்த்திராததால் தேளின் கொடுக்கைப் பார்த்து நண்டு என்று சொல்கிறான் என்று முடிவு செய்து தேள் கடிக்கான சிகிச்சையைச் செய்தோம்.
தேள்கடி கடுமையான வலியை உண்டு செய்யும். அது போக தேளின் விஷம் நரம்புகளிலிருந்து பல வேதியியல் பொருட்களை வெளியேறச் செய்து அதிக வியர்வை, வாந்தி, படபடப்பு, இதயத்துடிப்புப் பிரச்சனைகளை உருவாக்கும். அதனால் இதயம் திடீரென செயலிழந்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். நரம்பு மண்டலத்தை விரைந்து தாக்குவதால் குழந்தைகளின் சிறிய உடல் பகுதியை (body surface area) அதிகம் பாதிக்கிறது. தேள்கடி 70 கிலோ அளவு எடை உள்ள மனிதர்களின் உடலில் 20 கிலோ குழந்தையை விட கம்மியான விளைவையே ஏற்படுத்தும்.
அந்தச் சிறுவனுக்குத் தேள் கடிக்கு சிகிச்சைகளை விரைந்து அளித்தோம். இதயத்துடிப்பு ஓரளவுக்கு சீராகி, வியர்வை, படபடப்பு குறைந்திருந்தாலும் சுயநினைவு முழுதாக வரவில்லை. அதனால் மேல் சிகிச்சைக்குப் பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாட்டி தாத்தாவிடம் கூறினோம். இப்போதும் பாட்டிக்கு இஷ்டமில்லை. தாத்தா, "நான் கூட்டிட்டுப் போறேன் தாயி!" என்று கூற, 108 ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும் அனுப்பி வைத்தோம். பாட்டி அங்கேயே நின்றுகொண்டு, "வேற சாதிக்காரனுக்குப் பொறந்த பையன்" என்றே புலம்பிக் கொண்டிருக்க, "பாட்டி பாம்பு தேளெல்லாம் என்ன சாதின்னு பார்த்துக் கடிக்காது.. ஆடு, மாடா இருந்தாலும், மனுஷனா இருந்தாலும் அதோட பாதையில் யாரு வந்தாலும் கொட்டிவிட்டுரும். நீங்க வார்த்தையால அந்தப் புள்ளைய வதைக்காதீங்க. பத்திரமா போயிட்டு வாங்க" என்று கூறி அனுப்பி வைத்தோம். மறுநாள் சிறுவன் நன்றாகி விட்டான் என்று அறிந்த பின் தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.. மிகச் சிறிய குழந்தைகள் தேள் கடியால் மருத்துவமனைக்கு வரும் முன்னே இறந்து போன கதைகளும் உண்டு.
பூரான், பாம்பரணை, எலி போன்றவற்றின் கடிகளில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. நமது நாட்டில் காணப்படும் சிலந்தி, பல்லி வகைகளும் விஷமற்றவையே. சிறிய அளவில் வலி, அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படக்கூடும். சில முதியவர்கள் வேறு ஏதாவது தோல் நோய் ஏற்பட்டால் கூட முன்பு பாம்பு கடித்ததால் தான் ஏற்பட்டது என்று பிடிவாதமாக கூறுவார்கள். அதற்கும் விஷ ஊசி வேண்டும் என்பார்கள். சில வித தோல் நோய்கள் வந்தால் 'உங்க முன்னோர் பாம்பைக் கொன்னுட்டு சரியா பால் ஊத்தல. அதனால் வந்த வியாதி தான் இது' என்று பரிகாரம் செய்யச் சொல்லும் ஆட்கள் உண்டு.
சிலர் பூரான் கடித்தால் கூட விஷ ஊசி போடுங்க என்று மல்லுக்கு நிற்பார்கள் அதுபோல சாரைப் பாம்பு போன்ற விஷமற்ற ஜந்துக்கள் கடித்தால் கூட பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து ஏற்றியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். பெரிய சைஸ் பாம்புகள் என்றால் பரபரப்பு கூடிவிடும். பாம்பை ஊரே கூடி அடித்துவிட்டு அதை ஒரு கவரில் போட்டுக் கட்டி ஊரே சேர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரும்.
நான் பார்த்த வரையில் ஐந்தில் ஒரு நபர் செத்த பாம்புடன் சேர்த்துதான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். ஒருமுறை அப்படி கொண்டுவரப்பட்ட பாம்பு லேசாக அசைந்து விட, மீண்டும் பரபரப்பான உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அந்தப் பாம்பைக் கீழே போட்டு மீண்டும் அடி அடி என்று அடித்தனர். இப்படி ஒரு புறம் அடித்துக் கொன்றுவிட்டு நாகதோஷம் நீங்க வேண்டுமென்று கோவில்களுக்கு அலைகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு உரம் போடுவது போல சில திரைப்படங்களில் இணையைப் பிரிந்த பாம்பு உருமாறி வந்து பழிவாங்கும் என்றெல்லாம் காட்டுகிறார்கள். அதுபோல மகுடிக்கு பாம்பு எங்கெங்கிருந்தோ வரும் என்பதும் கட்டுக்கதை. பாம்புக்கு நிஜத்தில் காது கிடையாது. பாம்பாட்டியின் முன்பு பாம்பு இருந்தால் மட்டுமே அவன் தலையை ஆட்டும் போது தானும் ஆட்டும். கையில் மகுடி இல்லாமல் வெறுமனே தலையை ஆட்டினால் கூட அப்படி ஆட்டும். பாம்பு இசைக்குப் படமெடுத்து ஆடுகிறது என்பது மூடநம்பிக்கைதான்.
பல் பிடுங்கிய பாம்பு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பாம்பின் பற்களை பிடுங்கி விட்டால் அது சரியாக உணவு உட்கொள்ள முடியாது. விரைவில் எடை மெலிந்து இறந்துவிடும். பாம்பின் பல் என்பதே மனிதனுக்கு இருக்கும் எச்சில் சுரப்பியைப் போன்ற ஒரு வேறுபட்ட வடிவம் தான் (modified salivary gland). மனிதனுக்கு எச்சில் சுரப்பதைப் போல பாம்புக்கு விஷமும் அவ்வப்போது தான் உருவாகும். வயதாக வயதாக அந்த விஷம் கெட்டிப்பட்டு நவரத்தினக் கல்லாக மாறும் என்று நம்ப வைப்பது காதில் ஒரு கூடைப் பூவைச் சுற்றுவதற்குச் சமம். விஷம் என்பது ஒரு புரதப் பொருள்தான். அது பிற உயிரினங்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதே இவ்வளவு பாதிப்புக்கும் காரணம்.
பாம்புப் புற்றுக்குள் பால் ஊற்றுவது, பாம்புக்கு முட்டையை உடைத்து ஊற்றுவதும் வீண் செயல். அதற்கு பதில் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். பாம்புகள் பால் அருந்துவதில்லை. முட்டையை முழுதாக விழுங்கி விட்டு பின் அந்த ஓட்டை வெளியே துப்பி விடும். உடைத்து புற்றின் தரையில் ஊற்றப்படும் முட்டையை பாம்பால் சாப்பிட முடியாது.
எப்போதாவது ஒன்றிரண்டு பாம்புகளை கண்கள் கண்ணில் கண்டுவிட்டால் பாம்பு பிடிப்பவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து பாம்புகளை பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அதில் சில ஏமாற்று பேர்வழிகள் ஏற்கனவே எந்த இடத்துக்குப் போக வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து மறைவிடங்களில் தங்கள் வசம் வைத்திருக்கும் பாம்புகளைக் கொண்டு வந்து விட்டுவிட்டு பின் இத்தனை பாம்புகளைப் பிடித்தேன் என்று கணக்குக் காட்டுவார்கள். இப்படி பாம்புக்கடிக்கு எதிரான மக்களின் பயத்தை பயன்படுத்திக்கொண்டு கல்லா கட்டுபவர்கள் அதிகம்.
பாம்புகள் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் மனித இனமே தளைத்திருக்க முடியாது. ஏனென்றால் எலிகள் பல்கிப்பெருகி பல கொள்ளை நோய்களையும் வறட்சியையும் ஏற்படுத்தியிருக்கும். உலகின் சமநிலையைக் காக்க பாம்புகளின் பங்கு மிக முக்கியம். அதனால் அது குறித்த உண்மையான தகவல்களைத் தெரிந்து தெளிந்து கொள்வோம்.
வயலில் உளுந்தங்காய் எடுக்கும்போது, அடர்ந்த மல்லிகைச் செடியில் அதிகாலையில் பூ பறிக்கும் போது, மாட்டுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் எடுக்கையில் இப்படி எத்தனையோ நேரங்களில் கைகளில் பாம்பு தீண்டி விடக்கூடும். சில சமயம் வரப்பில் நடக்கும் போது, புதர் மண்டிய சாலை ஓரங்களில் செல்லும்போது கால்களிலும் பாம்பு கடிக்கும். வெகு சில சமயமே என்றாலும் சில முறை காலைக் கடனுக்குத் திறந்தவெளியை பயன்படுத்தும் போது ஆணுறுப்பில், பின்புறத்தில் கடிபட்டு வருபவர்களும் உண்டு.
பாம்பைக் கண்ணால் பார்க்காதவர்கள் 'ஏதோ கடிச்சிருச்சு' என்று வருவார்கள். பெரும்பாலான நேரம் அறிகுறிகளைக் கொண்டு இன்ன விஷப் பூச்சி தான் கடித்திருக்கும் என்று வகைப்படுத்தி விடலாம். இருந்தாலும் 'அன்நோன் பைட்' என்று வகைப்படுத்தி அவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்போம்.
சில வருடங்களுக்கு முன் எட்டு வயது சிறுவன் ஒருவன் அரை மயக்க நிலையிலும் அதிகபட்ச வியர்வையில் குளித்த நிலையிலும் கொண்டுவரப்பட்டான். சுயநினைவை முழுதாக இழக்கும் முன் நான் என்ன ஆச்சு என்று கேட்டதற்கு நண்டு கடிச்சிருச்சு என்று கூறிவிட்டு மயங்கிவிட்டான். உடன் வந்தது அவன் தாத்தாவும் பாட்டியும். வினோதமான விஷயமாக அந்தப் பாட்டிக்கு அவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததே பிடிக்கவில்லை. தாத்தாவை திட்டிக் கொண்டே இருந்தார். கடிபட்ட இடம் எது, சூழல் என்ன அங்கு என்ன மாதிரியான விஷப்பூச்சி வர வாய்ப்பு உள்ளது உடன் இருந்தவர் யார் யார் என்று கேட்டால் பாட்டியிடம் சரியான பதில் இல்லை. "என் மக புள்ள பேரன் இவன். இவனோட ஆத்தா சொல்லச் சொல்லக் கேக்காம வேத்து சாதிப் பயலைக் கட்டி இவனைப் பெத்தா. அவன் இவளை விட்டுட்டுப் போயிட்டான். என் மக இந்தச் சனியனை எங்கள்ட்ட விட்டுட்டு இன்னொரு ஆள் கூட ஓடிட்டா. இந்தச் சனியன் கிடந்து என் உசுர வாங்குது. பழி சேட்டை. எங்க போய் என்ன கடி வாங்குச்சோ" என்று இடம் பொருள் தெரியாமல் புலம்பினாள். இப்படி ஒரு சூழலை அதுவரை நாங்கள் சந்தித்ததில்லை. ஒரு சிறிய குழந்தையின் மேல் எவ்வளவு வெறுப்பு? ஆனால் மயக்கம் அடையும் முன் அந்தச் சிறுவன் பேசிய ஒரு நிமிடத்திலேயே அவன் எவ்வளவு நல்லவன் என்று தெரிந்துவிட்டது. பாட்டி சொன்னது போல சேட்டைக்காரன் எல்லாம் இல்லை. ஏதோ அவன் கெட்ட நேரம் ஏதோ கடித்து விட்டது.
அவர்கள் கிராமம் ஒரு வறட்சியான சிறிய ஊர். குடியிருப்பின் அருகில் வயல்கள் ஏதும் இல்லை. வயல் இருந்தாலாவது நண்டு இருக்கலாம்.. அப்படியும் நண்டு கடித்தால் இப்படியான அறிகுறிகள் வராது. அதனால் இது தேள் கடித்ததால் இருக்கலாம். சிறுவன் தேளை இதுவரை பார்த்திராததால் தேளின் கொடுக்கைப் பார்த்து நண்டு என்று சொல்கிறான் என்று முடிவு செய்து தேள் கடிக்கான சிகிச்சையைச் செய்தோம்.
தேள்கடி கடுமையான வலியை உண்டு செய்யும். அது போக தேளின் விஷம் நரம்புகளிலிருந்து பல வேதியியல் பொருட்களை வெளியேறச் செய்து அதிக வியர்வை, வாந்தி, படபடப்பு, இதயத்துடிப்புப் பிரச்சனைகளை உருவாக்கும். அதனால் இதயம் திடீரென செயலிழந்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். நரம்பு மண்டலத்தை விரைந்து தாக்குவதால் குழந்தைகளின் சிறிய உடல் பகுதியை (body surface area) அதிகம் பாதிக்கிறது. தேள்கடி 70 கிலோ அளவு எடை உள்ள மனிதர்களின் உடலில் 20 கிலோ குழந்தையை விட கம்மியான விளைவையே ஏற்படுத்தும்.
அந்தச் சிறுவனுக்குத் தேள் கடிக்கு சிகிச்சைகளை விரைந்து அளித்தோம். இதயத்துடிப்பு ஓரளவுக்கு சீராகி, வியர்வை, படபடப்பு குறைந்திருந்தாலும் சுயநினைவு முழுதாக வரவில்லை. அதனால் மேல் சிகிச்சைக்குப் பெரிய மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று பாட்டி தாத்தாவிடம் கூறினோம். இப்போதும் பாட்டிக்கு இஷ்டமில்லை. தாத்தா, "நான் கூட்டிட்டுப் போறேன் தாயி!" என்று கூற, 108 ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும் அனுப்பி வைத்தோம். பாட்டி அங்கேயே நின்றுகொண்டு, "வேற சாதிக்காரனுக்குப் பொறந்த பையன்" என்றே புலம்பிக் கொண்டிருக்க, "பாட்டி பாம்பு தேளெல்லாம் என்ன சாதின்னு பார்த்துக் கடிக்காது.. ஆடு, மாடா இருந்தாலும், மனுஷனா இருந்தாலும் அதோட பாதையில் யாரு வந்தாலும் கொட்டிவிட்டுரும். நீங்க வார்த்தையால அந்தப் புள்ளைய வதைக்காதீங்க. பத்திரமா போயிட்டு வாங்க" என்று கூறி அனுப்பி வைத்தோம். மறுநாள் சிறுவன் நன்றாகி விட்டான் என்று அறிந்த பின் தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.. மிகச் சிறிய குழந்தைகள் தேள் கடியால் மருத்துவமனைக்கு வரும் முன்னே இறந்து போன கதைகளும் உண்டு.
பூரான், பாம்பரணை, எலி போன்றவற்றின் கடிகளில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. நமது நாட்டில் காணப்படும் சிலந்தி, பல்லி வகைகளும் விஷமற்றவையே. சிறிய அளவில் வலி, அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படக்கூடும். சில முதியவர்கள் வேறு ஏதாவது தோல் நோய் ஏற்பட்டால் கூட முன்பு பாம்பு கடித்ததால் தான் ஏற்பட்டது என்று பிடிவாதமாக கூறுவார்கள். அதற்கும் விஷ ஊசி வேண்டும் என்பார்கள். சில வித தோல் நோய்கள் வந்தால் 'உங்க முன்னோர் பாம்பைக் கொன்னுட்டு சரியா பால் ஊத்தல. அதனால் வந்த வியாதி தான் இது' என்று பரிகாரம் செய்யச் சொல்லும் ஆட்கள் உண்டு.
சிலர் பூரான் கடித்தால் கூட விஷ ஊசி போடுங்க என்று மல்லுக்கு நிற்பார்கள் அதுபோல சாரைப் பாம்பு போன்ற விஷமற்ற ஜந்துக்கள் கடித்தால் கூட பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து ஏற்றியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். பெரிய சைஸ் பாம்புகள் என்றால் பரபரப்பு கூடிவிடும். பாம்பை ஊரே கூடி அடித்துவிட்டு அதை ஒரு கவரில் போட்டுக் கட்டி ஊரே சேர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரும்.
நான் பார்த்த வரையில் ஐந்தில் ஒரு நபர் செத்த பாம்புடன் சேர்த்துதான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார். ஒருமுறை அப்படி கொண்டுவரப்பட்ட பாம்பு லேசாக அசைந்து விட, மீண்டும் பரபரப்பான உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் அந்தப் பாம்பைக் கீழே போட்டு மீண்டும் அடி அடி என்று அடித்தனர். இப்படி ஒரு புறம் அடித்துக் கொன்றுவிட்டு நாகதோஷம் நீங்க வேண்டுமென்று கோவில்களுக்கு அலைகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு உரம் போடுவது போல சில திரைப்படங்களில் இணையைப் பிரிந்த பாம்பு உருமாறி வந்து பழிவாங்கும் என்றெல்லாம் காட்டுகிறார்கள். அதுபோல மகுடிக்கு பாம்பு எங்கெங்கிருந்தோ வரும் என்பதும் கட்டுக்கதை. பாம்புக்கு நிஜத்தில் காது கிடையாது. பாம்பாட்டியின் முன்பு பாம்பு இருந்தால் மட்டுமே அவன் தலையை ஆட்டும் போது தானும் ஆட்டும். கையில் மகுடி இல்லாமல் வெறுமனே தலையை ஆட்டினால் கூட அப்படி ஆட்டும். பாம்பு இசைக்குப் படமெடுத்து ஆடுகிறது என்பது மூடநம்பிக்கைதான்.
பல் பிடுங்கிய பாம்பு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பாம்பின் பற்களை பிடுங்கி விட்டால் அது சரியாக உணவு உட்கொள்ள முடியாது. விரைவில் எடை மெலிந்து இறந்துவிடும். பாம்பின் பல் என்பதே மனிதனுக்கு இருக்கும் எச்சில் சுரப்பியைப் போன்ற ஒரு வேறுபட்ட வடிவம் தான் (modified salivary gland). மனிதனுக்கு எச்சில் சுரப்பதைப் போல பாம்புக்கு விஷமும் அவ்வப்போது தான் உருவாகும். வயதாக வயதாக அந்த விஷம் கெட்டிப்பட்டு நவரத்தினக் கல்லாக மாறும் என்று நம்ப வைப்பது காதில் ஒரு கூடைப் பூவைச் சுற்றுவதற்குச் சமம். விஷம் என்பது ஒரு புரதப் பொருள்தான். அது பிற உயிரினங்களுக்கு ஏற்புடையது அல்ல என்பதே இவ்வளவு பாதிப்புக்கும் காரணம்.
பாம்புப் புற்றுக்குள் பால் ஊற்றுவது, பாம்புக்கு முட்டையை உடைத்து ஊற்றுவதும் வீண் செயல். அதற்கு பதில் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். பாம்புகள் பால் அருந்துவதில்லை. முட்டையை முழுதாக விழுங்கி விட்டு பின் அந்த ஓட்டை வெளியே துப்பி விடும். உடைத்து புற்றின் தரையில் ஊற்றப்படும் முட்டையை பாம்பால் சாப்பிட முடியாது.
எப்போதாவது ஒன்றிரண்டு பாம்புகளை கண்கள் கண்ணில் கண்டுவிட்டால் பாம்பு பிடிப்பவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து பாம்புகளை பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அதில் சில ஏமாற்று பேர்வழிகள் ஏற்கனவே எந்த இடத்துக்குப் போக வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து மறைவிடங்களில் தங்கள் வசம் வைத்திருக்கும் பாம்புகளைக் கொண்டு வந்து விட்டுவிட்டு பின் இத்தனை பாம்புகளைப் பிடித்தேன் என்று கணக்குக் காட்டுவார்கள். இப்படி பாம்புக்கடிக்கு எதிரான மக்களின் பயத்தை பயன்படுத்திக்கொண்டு கல்லா கட்டுபவர்கள் அதிகம்.
பாம்புகள் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் மனித இனமே தளைத்திருக்க முடியாது. ஏனென்றால் எலிகள் பல்கிப்பெருகி பல கொள்ளை நோய்களையும் வறட்சியையும் ஏற்படுத்தியிருக்கும். உலகின் சமநிலையைக் காக்க பாம்புகளின் பங்கு மிக முக்கியம். அதனால் அது குறித்த உண்மையான தகவல்களைத் தெரிந்து தெளிந்து கொள்வோம்.
Author: SudhaSri
Article Title: பாம்பென்றால்... - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: பாம்பென்றால்... - 2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.