• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நீருக்குள் பூத்த நெருப்பு - நிறைவுப் பகுதி

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
279
நீருக்குள் பூத்த நெருப்பு

அத்தியாயம் 14

நிறைவுப்பகுதி

முகத்தைக் காட்டும் கண்ணாடி
அகத்தைக் காட்டுவதில்லை!
அழகைக் காட்டும் கண்ணாடி
அறிவைக் காட்டுவதில்லை!
தவறுகளைச் சுட்டிக்காட்டி
அறிவுரைகள் தருவதில்லை!
உறுதியான மனம்,
உண்மையான நட்பு,
நேர்மையான சிந்தனை போதும்!
நம்முடைய மனசாட்சியே
நமக்குக் கண்ணாடி என்று
ஏற்று நடப்போம்!
முன்னேறுவோம் நாம்!
முன்னேற்றுவோம் சமுதாயத்தை!

மணிமேகலையின் முகமாற்றத்தைக் கவனித்து விட்டாள் பூரணி. வழக்கத்திற்கு மாறாகப் பேசும் தேவதை அம்மாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் பூரணியும். அவர் பேசியது தவறென்று அவரிடம் எப்படிச் சொல்வது? புரியவில்லை பூரணிக்கு. தேவதை அம்மாவோ, அவர்கள் இருவரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுப் புன்னகை புரிந்தாள்.

“ மணிமேகலைக்கு நான் தேவதை அம்மாவாக முடியாது. ஏன்னா, நான் அவளோட உண்மையான அம்மா. அவளை வயத்துல சுமந்து பெத்தெடுத்த அம்மா” என்று சொல்லி முடிக்க அதிர்ந்து போய்ப் பார்த்தாள் மணிமேகலை.

“ அம்மாவா? நீங்களா? ”

“ ஆமாம். நானேதான். சின்ன வயசுல உன்னை விட்டுப் பிரிஞ்சு போன அம்மா”

“ ஏன் அப்படிப் போனீங்க? என் மேல உங்களுக்குப் பாசம் இல்லையா? அம்மா இல்லாமல் குழந்தை, அதுவும் பெண் குழந்தை வளர்வது எவ்வளவு கஷ்டம்னு தெரியாதா உங்களுக்கு? நீங்க உயிரோட இருக்கற விஷயத்தை யாருமே எங்கிட்டச் சொல்லலையே? அது ஏன்? உங்களோட ஒரு ஃபோட்டோ கூட வீட்டில இல்லை. நான் எத்தனை நாள் அம்மாவைப் பாக்கணும்னு அழதிருக்கேன் தெரியுமா உங்களுக்கு? ”

இப்போது மணிமேகலையின் குரலில் அழுகை எட்டிப் பார்த்தது. சிறு வயதிலிருந்து அம்மாவிற்காக ஏங்கிய அந்த நினைவுகள் உயிர்த்தெழுந்து அவளுடைய உள்ளத்தில் நிரம்பின. துக்கம் தொண்டையின் வழியாக அழுகையாக வெடித்து வெளியேறியது.

மணிமேகலையின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டார் அமுதவேணி, ஆமாம், அதுதான் தேவதை அம்மாவின் பெயர். பூரணியோ, கண்ணெதிரே நடக்கும் நிகழ்வுகளை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தாயும், மகளும் பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட அந்தத் தருணத்தில் உணர்ச்சிகள் பெருகி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தன. அவர்களுடைய உரையாடலில் குறுக்கிடாமல் ஒதுங்கியே நின்றாள் அவள்.

அம்மாவுக்கும் மகளுக்கும் தனிமையில் பேசிக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கும் என்று நினைத்த பூரணி, அந்த அறையை விட்டு வெளியேற எண்ணி நகர்ந்தாள்.

“ பூரணி, இங்கேயே இரு. நீ பக்கத்துல நின்னா உன் ஃப்ரண்டுக்கு ஒரு மாரல் ஸப்போர்ட்டா இருக்கும்” என்று சொல்லி அவளைத் தடுத்து நிறுத்தினார் அமுதவேணி.

“ இப்பக் கேளு மணிமேகலை. உனக்கு என்னை என்னல்லாம் கேக்கணும்னு தோணுதோ கேளு. நான் பதில் சொல்லறேன். என்னை மனசாரத் திட்டணும்னு நினைச்சா நல்லாத் திட்டு. ஐ டிசர்வ் ஆல் தட்”

“ இரண்டு கேள்விகள்தான் கேக்கணும் எனக்கு. அம்மாவோட அரவணைப்பையும், மடியையும் தேடற பச்சைக் குழந்தையா இருந்த என்னை விட்டுட்டுப் போற அளவுக்கு என்ன கட்டாயம் ஏற்பட்டது உங்களுக்கு? இத்தனை வருஷத்துக்கு அப்புறம் என் மேல பாசம் திடீர்னு வந்தது? ”

“ நியாயமான கேள்விகள். உன் மனசுல இருக்கற கோபம் உனக்குப் புரியுது. நீயே முதல் கேள்விக்கு விடையும் சொல்லிருக்கே. கட்டாயம். சூழ்நிலையோட கட்டாயம். இப்போ இருக்கற பல மாற்றங்கள் அப்போ பல வருஷங்களுக்கு முன்னால நம்ம சமுதாயத்துல இல்லை. புரிதலும் இல்லை. பெண்களைப் பிற்போக்குத்தனமான பார்வையில் மட்டுமே பாத்தாங்க. அதுவும் நான் அந்தக் காலத்திலேயே வேலைக்குப் போனவ. வேலைக்குப் போறவங்கன்னா எதுக்கும் துணிஞ்சவங்கங்கற கண்ணோட்டமும் இருந்தது அப்போ.
நான் ஸ்கூல் டீச்சர். பஸ்ஸில் வெளியூர் போயிட்டு வர வேண்டியிருந்ததால் உன்னோட பாட்டி கிராமத்தில் இருந்து உதவிக்காக வந்தாங்க. உன்னை நல்லாப் பாத்துகிட்டாங்க. நானும் கவலையில்லாமல் இருந்தேன்.

ஒரு தடவை பஸ்ஸுக்காகக் காத்துக்கிட்டு இருந்தபோது தெருவில் ஒரு ஆக்ஸிடன்ட். யாருன்னு பாத்தா என்னோட மாமா பையன். ஒருகாலத்தில் எனக்கும் அவனுக்கும் மணப்பேச்சு கூட நடந்து ஏதோ சில காரணங்களால் நடக்கலை. அவனும் அதுக்கப்புறம் கல்யாணமே செஞ்சுக்கலை. அவனுக்கு அந்த ஊரில் யாருமே இல்லைங்கறதுனால நான் அவனை ஹாஸ்பிட்டலில் சேத்து அவன் கூடவே இருந்தேன். வீட்டுக்குத் தகவல் சொல்லி அனுப்ப முடியலை. அப்போ மொபைல் வசதி வரலை. நம்ம வீட்டுக்கு அக்கம்பக்கத்துல எங்கயும் லேண்ட் லைன் ஃபோன் வசதியும் இல்லை. இரவு நேரம் ரொம்ப லேட்டானதால என்னால தனியாக் கெளம்பவும் முடியலை.

அடுத்த நாள் எங்க ஸ்கூலுக்கு ஃபோன் பண்ணி என் கூட வேலை பாக்கற டீச்சருக்குத் தகவல் சொல்லி வீட்டுல சொல்லச் சொன்னேன். அவங்க வீட்டுல ஏதோ பிரச்சினை. அவங்க மறந்தே போயிட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு என் மாமா பையனை வீட்டுல பத்திரமாச் சேத்துட்டு ஊருக்குத் திரும்பினேன். அங்கே பெரிய பிரளயமே வெடிச்சுருச்சு. இரவு நேரத்தில் வேற ஒரு ஆம்பளையோட அதுவும் ஒரு காலத்தில் முறைப் பையனா இருந்தவன் கூடத் தங்கிட்டு வந்ததா என் பேரில் குற்றச்சாட்டு. உன் அப்பாவையும், பாட்டியையும் பேச விடாமல் அக்கம்பக்கத்துல இருந்தவங்களும், நெருங்கின உறவுகளும் அதிகம் பேசிட்டாங்க. கிராமத்துப் பஞ்சாயத்தைக் கூட்டி, என்னை வீட்டை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க. செய்யாத தப்புக்கு எனக்கு தண்டனை. ஆணும், பெண்ணும் இரவு நேரத்தில் ஒண்ணா இருந்தால் தப்புத்தான் செய்வாங்கன்னு நினைக்கற பத்தாம்பசலித்தனம். தப்புப் பண்ணனும்னு நெனைச்சாப் பகல் நேரத்துல பண்ண முடியாதா? இரவு நேரத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே தனியாத் தங்கக் கூடாதுன்னு நெனைச்ச மக்கள்” என்று சொல்லி நிறுத்தினார் அமுதவேணி.

“ அப்பாவும், பாட்டியும் பஞ்சாயத்துத் தீர்ப்பை எதிர்க்கலையா? ”

“ எதிர்க்கற அளவுக்கு அவங்களுக்கு தைரியம் இல்லை. சொல்லிப் பாத்தாங்க. ஆனா அவங்க வாதம் பலமிழந்து போச்சு. தீர்ப்பை மீறி என்னைக் குடும்பத்துல சேத்துக்கிட்டா நாளைக்கு உன் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகாது. நாங்க யாரும் எந்த உதவியும் செய்யமாட்டோம்னு மிரட்டிட்டாங்க. நானும் வேலையை விட்டுட்டு கேரளா பக்கம் போயி என் ஃப்ரண்ட் வீட்டுல தங்கினேன். உன்னைப் பிரிஞ்சு போனதுதான் எனக்குப் பெரிய தண்டனை”

“ இந்த விஷயத்தைப் பத்தித்தான் பாட்டியும், அத்தையும் என் கல்யாணத்துக்கு முன்னால பேசிருக்காங்க. கல்யாணத்துக்கு அப்புறம் கூட நான் மேலே படிச்சு வேலைக்குப் போக ஆசைப்பட்டபோது அத்தை ஏதோ கமெண்ட் அடிச்சாங்க. இப்பத்தான் அதெல்லாம் எதைப் பத்தின்னு எனக்குப் புரியுது. அதுக்கப்புறம் என்னை நீங்க பாக்கணும்னு நினைக்கவே இல்லையா? ”

“ நினைச்சேன். நிறையத் தடவை நினைச்சேன். ஆனால் வெளிநாட்டில் வேலை கெடைச்சுப் போயிட்டேன். ஒரு வயதான அம்மாவைப் பாத்துக்கற வேலை. பத்து வருஷம் கழிச்சு நிறையப் பணத்தோட இந்தியா வந்தேன். பூரணியோட அறிமுகம் கிடைச்சது. அவளோட தேவதை அம்மா ஆயிட்டேன் நான். இந்த ஊரில் வேலைக்கு வந்து சேர்ந்தேன். நிறைய வருஷங்கள் கழிச்சு உனக்குக் கல்யாணம்னு தெரியவந்தது. பாவை குடும்பத்தைப் பத்தி எனக்கு ஓரளவு தெரியும். நான் வந்து உன்னோட உறவு கொண்டாடறதை அவங்க விரும்பமாட்டங்கன்னு எனக்கு நிச்சயமாத் தெரிஞ்சது. நிம்மதியான உன்னோட வாழ்க்கையில் குறுக்கிட்டுக் குழப்பங்களை உண்டு பண்ண விரும்பாமல் ஒதுங்கிட்டேன். இந்த ஸ்கூலோட என்னை இணைச்சுகிட்டேன். ” என்று சொல்லித் தன் நியாயத்தை விளக்கினார் அமுதவேணி.

“ இப்போ எப்படி என்னைப் பாத்ததும் அடையாளம் கண்டுபிடிச்சீங்க? ”

“ நான் சென்னையில் இருந்தபோது பூரணி உன்னைப் பத்திச் சொன்னா. மணிமேகலைங்கற பேரு மனசுல மணியடிச்சது. அவ சொன்ன தகவல்களை வச்சு விசாரிச்சு கன்பஃர்ம் பண்ணிகிட்டேன். சரி, நீ இப்போ என்ன செய்யப்போறே? இந்த ஸ்கூலில வேலை பாத்துட்டு அமைதியா இருக்கப் போறயா? இல்லைன்னா உன் கணவனுக்கு சரியான பதிலடி தரப் போறயா? ” என்று கேட்ட அம்மாவை வியப்புடன் பார்த்தாள் மணிமேகலை.

“ என்ன பாக்கறே? எல்லாம் பிரைவேட் டிடெக்டிவ் வச்சுக் கண்டுபிடிச்சுட்டுத்தான் இங்கே வந்தேன். திருநாவுக்கரசுக்கு உன் அருமை தெரியலை. நிறையப் பணமும் அந்தஸ்தும் வந்ததால் இப்போ ஈகோ ஜாஸ்தி ஆயிடுச்சு. அதைத் தவிர எனக்குச் சொல்லக் கஷ்டமா இருக்கு. நிறையப் பெண்களோட சகவாசமும் இருக்கு அவனுக்கு. நீ அவனை விட்டு வந்ததுல எனக்கு சந்தோஷம்தான். அவனை நீ ஜெயிச்சுக் காட்டணும். என்ன வேணும்னு சொல்லு. நான் உனக்கு உதவி செய்யறேன். என்னோட பிஸினஸ் சாம்ராஜ்யம் சென்னையில் இருக்கு. நாளைக்கு. அது உனக்கும், பூரணிக்கும் தான் வரப்போகுது”

“ இல்லைம்மா. உங்க பணத்தை வச்சோ, இல்லைன்னா உங்களோட பிஸினஸ் இன்ஃப்ளுயன்ஸ் வச்சோ அவனை ஜெயிக்கறதுல எனக்கு இஷ்டமில்லை. கொஞ்சம் லேட்டானாலும் என் வழியில போய் நான் அவனை ஜெயிச்சுக் காட்டறேன்” என்று சொல்லிவிட்டாள் மணிமேகலை. அதன் பிறகு அன்று இரவு முழுவதும் அம்மாவும், மகளும் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

அடுத்த நாள் மாதவிக்கும் உண்மைகள் தெரிந்ததும் சந்தோஷமடைந்தாள்.

“ அக்கா, ஆபரேஷன் அக்னி நட்சத்திரம் மூணு வாரத்துல முடியுமா? மூணு மாதங்களிலா? இல்லை மூணு வருஷங்களிலா? ” என்று கேட்டாள் மாதவி சிரித்துக்கொண்டே.

“ எனக்கே தெரியலையே மாதவி! என்னோட திட்டம் வெற்றிகரமாக முடியும் வரைக்கும் அரசுவுக்கு அக்னி நட்சத்திரம் முடியலைன்னு வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டாள் மணிமேகலை.

இரண்டு மாதங்கள் கழித்து திடீரென்று ஒருநாள் சென்னை வீட்டுக்குப் போனாள் மணிமேகலை. வீடு சரியாகப் பராமரிக்கப்படாமல் களையிழந்து கிடந்தது. பழைய வேலையாட்கள் எல்லோரும் வேலையை விட்டுப் போயிருந்தார்கள். சமையற்கார மாமி மட்டுமே பழைய ஆள். மணிமேகலையைக் கண்டதும் ஓடி வந்தார்.

“ எங்கம்மா போயிருந்தே இவ்வளவு நாள்? லட்சுமிகரமா நீ வச்சிருந்த வீடு இப்போ எப்மடியிருக்குன்னு பாரு நீயே. ஒருநாள் நீ திரும்பி வருவேன்னு உனக்காகக் காத்துக்கிட்டிருந்தேன். நீதானே என்னை வேலைக்கு வச்சே? உன் கிட்ட சொல்லிட்டுத்தான் வேலையை விட்டுட்டுப் போகணும்னு நெனைச்சேன்” என்று புலம்பினார், அங்கிருந்த புதிய வேலையாட்களிடம் மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்தாள்.

“ இவங்கதான் இந்த வீட்டு எஜமானி” என்று சொன்னபோது அவர்கள் பார்த்த பார்வையில் மரியாதை தெரிந்தது.

“ இவங்க எஜமானின்னா, மாடியில் அய்யா ரூமில அவரோட இருக்கிறது யாரு? “ என்று மிகப்பெரிய பூசணிக்காயை மணிமேகலை முன்னால் போட்டு உடைத்தான் அந்தப் புதிய வேலையாள். சங்கடத்துடன் மாமி, மணிமேகலையைப் பார்த்தார்.

“ விடுங்க மாமி. எனக்குப் புரியுது” என்று சொல்லிவிட்டு மற்றவர்களை அனுப்பிவிட்டு மாமியிடம் தனிமையில் சிறிது நேரம் பேசினாள் மணிமேகலை.

இரவு திருநாவுக்கரசுவின் வருகைக்காக வரவேற்பறையில் காத்திருந்தாள்.ஒன்பது மணிக்கு மேல் வந்து நுழைந்தான் அரசு. அவனோடு கொஞ்சிக் குலாவியபடி அவனுடைய இடுப்பைக் கையால் அணைத்தபடி நுழைந்தாள் அந்தப் பெண். அவளுடைய உடையும் அதீத மேக்கப்பும் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ள அவள் எடுத்த முயற்சிகளைப் பறைசாற்றின. தள்ளாடியபடி வந்தவர்களைப் பார்த்து முகம் சுளித்தார் மாமி.

“ அட, மணிமேகலையா ? வந்துட்டயா திரும்பி? என்னோட அருமை இப்பவாவது புரிஞ்சுதா? பட்டாத் தான் தெரியும்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன்” என்று குளறிக் குளறிக் பேசிய கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் மேகலை.

“ யாரு டார்லிங் இவங்க? வீட்டை விட்டு ஓடிப்போன உங்க எக்ஸ் மனைவியா? ” என்றாள் அந்தப் பெண்.

“ எக்ஸும் இல்லை. ஒய்யும் இல்லை. நான் இன்னமும் இவரோட மனைவியே தான். ஆனால் அப்படிச் சொல்லிக்க எனக்குக் கேவலமா இருக்கு. எங்களுக்கு நடுவில புகுந்து பேச நீ யாரு? கெட் அவுட் ஆஃப் மை ஹவுஸ்” என்று மணிமேகலை பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், திருநாவுக்கரசுவைப் பார்த்தாள்.

“ அவர் சொலாலறதால ஒண்ணும் நடக்கப் போவதில்லை. இந்த வீடு என்னோடது. சட்டப்படி என் பேருல இருக்கு. இங்கே யார் வரலாம், போகலாம்னு முடிவு பண்ணற உரிமை எங்கிட்ட மட்டுமே இருக்கு. நீ வெளியே போய்த்தான் ஆகணும். அவரை விட்டுட்டு இருக்கமுடியாதுன்னா அவரையும் சேத்துக் கூட்டிட்டுப் போ. ஆனா இப்போ அவரை உன்னோட அனுப்பமுடியாது என்னால. காலையில் அவரோட பேசணும் எனக்கு. இப்ப எதையும் புரிஞ்சுக்கற நிலைமையில் அவர் இல்லை. நீ கிளம்பு. டிரைவர், இந்த மேடத்தை அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வாங்க” என்று உத்தரவிட்டாள் மணிமேகலை. அரண்டு போன அந்தப் பெண் எதிர்ப் பேச்சு எதுவும் பேசாமல் கிளம்பினாள்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது. மணிமேகலை கணவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவன் வந்ததும் பேச ஆரம்பித்தாள்.

“ என்ன டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்க வந்திருக்கயா? சீக்கிரம் கொடு. ஸைன் பண்றேன். விட்டது சனியன்னு நிம்மதியா இருப்பேன் இனி” என்றான் நக்கலாக.

“ அவ்வளவு ஈஸியா உங்களுக்கு நான் டைவர்ஸ் தரமாட்டேன். என்னை டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கனவு காணாதீங்க. இப்போதைக்கு வி ஆர் ஸெபரேடட். அவ்வளவுதான். டைவர்ஸ் முடிவை அப்புறமா எடுக்கிறேன். அதுவும் உங்களை வாட்டி வதைச்சு ஒரு வழியாக்கிட்டு டைவர்ஸ் வாங்கிக்கறேன். எனக்கும் நம்ம குழந்தைகளுக்கும் உண்டான பங்கை உங்க கிட்டேந்து வாங்கிட்டுத்தான் உங்களை விடுவேன். இட் இஸ் கோயிங் டு பீ வெரி வெரி காஸ்ட்லி ஃபார் யூ. இப்போ வேற ஒரு விஷயம் பேசணும். இந்த வீட்டைக் காலி பண்ணுங்க மொதலில. எங்க மாமியார், மாமனார் வாழ்ந்த புனிதமான இடம் இது. இதை நீங்க கேவலமான இரவு விடுதியா யூஸ் பண்ணறதை இனிமேலும் என்னால பொறுத்துக்க முடியாது. மாட்டேன்னு சொல்ல முடியாது உங்களால. வீடு சட்டப்படி என் பேருல இருக்கு”

“ போலைன்னா என்ன செய்வே? “

“ உங்க சாமான்களை வேலையாட்களை வச்சு வெளியே தூக்கி அறிவேன். அசிங்கப்பட்டுப் போறதைத் தவிர்க்கணும்னா கௌரவமாகக் கெளம்பிப் போங்க. அதுதான் நல்லது உங்களுக்கு “ என்று சொல்லிவிட்டு மாமியின் பக்கம் திரும்பினாள் அந்த எஜமானி.

“ மாமி, நீங்க இந்த வீட்டுல நிரந்தரமாத் தங்கி வீட்டைப் பாத்துக்கங்க. நீங்க தான் இந்த வீட்டோட கேர் டேக்கர் இனிமேல். நான் அப்பப்ப வந்துட்டுப் போவேன். உங்க மகன் வாடகை வீட்டில் இருக்கார் இல்லையா? அவரைக் குடும்பத்தோட நம்ம அவுட்ஹவுஸில தங்க வைங்க. அவங்களும் உங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. நானும், என் பொண்ணுங்களும் சென்னை வரும்போதெல்லாம் இங்கே வந்து தங்குவோம்” என்று கம்பீரமாகப் பேசியபடி தன்னெதிரே நின்ற மணிமேகலையின் விஸ்வரூபத்தைக் கண்டு பிரமித்துப் போய் நின்றார் மாமி.

இரண்டு வருடங்கள் கழித்து ஒருநாள்,
ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் இருந்த அந்த கம்பெனியின் வரவேற்பறையில் கையில் ஃபைலுடன் காத்துக் கொண்டிருந்தான் திருநாவுக்கரசு. வாகனங்களைப் பெருமளவில் தயாரிக்கும் அந்த கம்பெனியின் தலைமை நிர்வாகியைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தான். இந்தியச் சாலைகளில் ஓடும் நான்கு சக்கரவாகனங்களில் பத்தில் ஒன்று இவர்களுடைய தயாரிப்பாக இருக்கும்.

அந்தக் குளிரூட்டப்பட்ட இடத்திலும் அவனுடைய நெற்றியில் முத்து முத்தாகத் துளிர்த்திருந்த வியர்வை, அவனுடைய படபடப்பையும், டென்ஷனையும் காட்டியது. சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞன் அவனை உள்ளே அனுப்பினான்.

“ குட் மார்னிங் மேடம். நான் திருநாவுக்கரசு. அரசு டயர் கம்பெனியின் ஓனர்”

“ தெரியும். என்ன விஷயம் சொல்லுங்க. கட் இட் ஷார்ட். எனக்கு தில்லியில் நிறைய மீட்டிங் அட்டென்ட் பண்ணவேண்டி இருக்கு. கொஞ்ச நேரத்தில் ஏர்போர்ட் போகணும் “

“ வழக்கமா எங்க கம்பெனியில் இருந்து வாங்கற பல்க் பர்ச்சேஸ் ஆர்டரை கேன்ஸல் பண்ணிட்டீங்க. இது மாதிரி செஞ்சா மார்க்கெட்டில் எங்க பேரு போயிடும். ஸ்டாக் தேங்கிப் போயிடும்”

“ வருஷா வருஷம் கண்டிப்பா வாங்கறோம்னு ஏதாவது அக்ரிமென்ட் போட்டிருக்கமா நாங்க? எழுத்து பூர்வமாக கமிட் பண்ணிருக்கோமா? “

“ இல்லை மேடம். எல்லாம் ஒரு அன்டர்ஸ்டாண்டிங்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் ஓரலாச் சொல்லி ஒத்துகிட்ட கமிட்மெண்ட்”

“ அரசு ஸார். உங்களுக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியாது. இவ்வளவு நாட்கள் ஸைலன்ட் பார்ட்னரா இருந்த நான் இப்போ களத்தில் குதிச்சு இந்த கம்பெனியையே ஒட்டுமொத்தமா என் பேருல மாத்திகிட்டேன். இங்கே வேலை பாத்தவங்களையும் நிறையப் பேரை என் விருப்பப்படி மாத்திருக்கேன். எல்லாரும் புதிய திறமையான ஆட்கள். உங்க பிராடக்ட் ரிஜக்ட் ஆயிருக்குன்னா ஏதாவது காரணம் நிச்சயமா இருக்கும். என் கிட்ட வந்து பேசிச் சரிபண்ண முயற்சிக்கறதுக்கு பதிலா என்ன பிராப்ளம்னு ஐடென்டிஃபை பண்ணி அதைச் சரி பண்ணுங்க போங்க. டோன்ட் வேஸ்ட் மை டைம்”

“ அது எப்படி மேடம்? திடீர்னு எப்படி டிஃபக்ட் வரும்? என்ன டிஃபக்ட்னு சொல்லுங்க. நான் சரி பண்ணித் தரேன்”

“ இங்கு பாருங்க மிஸ்டர். என் கிட்டத் திரும்பத் திரும்ப டிஸ்க் பண்ணறதுனால எந்தப் பிரயோஜனமும் இல்லை. எங்களோட ஒரு குவாலிட்டி கன்ட்ரோல் டீம் இருக்கு. அவங்க தரோவா செக் பண்ணி எனக்குக் கொடுக்கற ரிப்போர்ட்படி நாங்க முடிவெடுக்கறோம். எங்க வாகனங்களை நம்பி டிராவல் செய்யற எத்தனையோ மனுஷங்களோட உயிர்களைக் காப்பாத்தற ரெஸ்பான்ஸிபலிடி எங்களோடது. ஏனோ தானோன்னு இதுல முடிவெடுக்க முடியாது” என்றவர், இண்டர்காமை எடுத்து யாரிடமோ பேசினார்.

திருநாவுக்கரசுவை அறைக்குள் அழைத்து வந்த அதே இளைஞன் அங்கு வந்தான்.

“ இவரை நம்ம குவாலிட்டி கன்ட்ரோல் சீஃப் கிட்டக் கூட்டிட்டுப் போங்க” என்று சொன்னதன் மூலமாக, வெளியேறச் சொல்லி மறைமுகமாக உத்தரவிட்டார்.

குவாலிட்டி கன்ட்ரோல் சீஃபின் கேபினும்,
உயர்ந்த ரகத்தில் மாடர்னாகவும், பணக்காரத்தனமாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது. கதவை லேசாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் திருநாவுக்கரசு.

“ யெஸ் ப்ளீஸ்” என்று கூறியபடி கணினியின் திரையில் இருந்து விழிகளின் திசையை மாற்றி அவனை நோக்கிப் பார்வையைச் செலுத்தியது வேறு யாருமில்லை, மணிமேகலையை தான். தன் கேபினில் அமர்ந்தபடி தன் மகளுக்கும், மருமகளுக்கும் நடக்கப்போகும் உரையாடலைத் தன் கற்பனையில் இரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தவர் அமுதவேணி மேடமே தான்.

சிறிது நேரத்தில் அந்த வளாகத்தை விட்டு வெளியேறிய திருநாவுக்கரசுவுக்கு, அவனுடைய எதிர்காலம் இருண்டதாகவே தெரிந்தது.

அன்று இரவு விமான நிலையத்திற்குச் சென்று சுரபியையும், சுடரியையும் வீட்டிற்கு அழைத்து வந்த மணிமேகலைக்கு அவர்களிடம் சொல்லவேண்டிய விஷயங்கள் நிறையவே இருந்தன.

விட்டு விடுதலையாகிய ஒரு பறவையின் பயணத்தையும், அதன் மனநிறைவையும் அவர்கள் சேர்ந்து கொண்டாடட்டும். இனி மணிமேகலை தான் செய்ய விரும்பிய செயல்களை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பாள்.
தன்னுடைய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வாள்.

நிறைவு.

திருபுவனம் நெசவாளி.

( மொத்த வார்த்தைகள் 19295)


 

Author: SudhaSri
Article Title: நீருக்குள் பூத்த நெருப்பு - நிறைவுப் பகுதி
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
174
வார்த்தைகள் எண்ணிக்கை
விரைவில் முடிக்க வைத்து விட்டது.....
❤️❤️👏🏻👏🏻👍🏻💐🤩
 
Top Bottom