• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 11

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 11



பேத்தியின் கல்யாணம் முடிவானதில், ராஜம்மாளின் மனம் அடைந்த நிம்மதியை அவரே அறிவார். அது ஒரு புறம் இருக்க, இன்னும் சில நாட்களில் அடுத்த வீட்டுப் பெண்ணாகி விடுவாளே என்று வருத்தமும் இருந்தது. வழக்கம் போல ஜானகியைச் சீண்டும் விதமாக எதையாவது பேசி பொழுது போக்கினார்.



ருக்மணி தனது பெண்ணின் வாழ்வு இனிமேலாவது சிறக்க வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டார். ஜானகியின் உடன்பிறந்தாரும் வீட்டில் இருந்த மற்ற சொந்தங்களும் தங்கள் மகிழ்ச்சியை அவரவர் பாணியில் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். கல்யாண வேலைகள் பங்கு பிரிக்கப்பட்டு மளமளவென நடந்தன.



ஜானகியின் நிலையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. வண்ணமயமான கனவுகளுடன் வலம் வந்தாள். இப்போதெல்லாம் அவள் முணுமுணுக்கும் பாடல்கள் மாறி இருந்தன.



"கூந்தலிலே நெய் தடவி

குளிர் விழியில் மை தடவி

காத்திருக்கும் கன்னி மகள்

காதல் மனம் ஒரு தேனருவி –

இளம்வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்து வர

கல்யாண ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ"

என்று ஒரு முறை பாடினால், மற்றொரு முறை,

"மணமகளே உன் மணவறை கோலம்

நாளை வருகின்றது மாலை விழுகின்றது" என்று பாடினாள்.



மணமகள் தனியாகத் தனது கனவுகளைக் காண, மணமகனுக்கு கனவு காணவும் துணை தேவைப்பட்டது. சில வருடங்கள் நகரத்தில் கழித்தவனது சிந்தனை பரந்து விரிந்திருந்தது.



கடற்கரைக்குப் போனபோது, "என்ன பார்வை.. உந்தன் பார்வை" என்று பாட ஜோடியைத் தேடியது. பூங்காவில் பொழுதைப் போக்கலாம் என்று வந்தால் மனம், "அனுபவம் புதுமை…" என்றது. என்ன செய்வது, யாரைத் தூது அனுப்புவது என்று யோசித்தவன் வழக்கம் போலத் தானே அதிரடியில் இறங்கினான்.



வருங்கால மாமனாரிடம் சென்று, அவனது வருங்காலத்துடன் டூயட் பாட அனுமதி வேண்டினான். அதாவது ஜானகியை, பார்க், பீச், சினிமா தியேட்டர் என்று அழைத்துச் சென்று அவனது காதல் மனதுக்கு மருந்திடலாம் என்று நினைத்தான். ஆனால் டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் போல அவனது மாமனிடம் போன வேகத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டான்.



அதை எதிர்பார்த்திருந்தவன் சோர்ந்து விடவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்று இரண்டாம் வகுப்பில் படித்த பாடத்தைச் சோதிக்க விரும்பினான். கஜினி முகமது போல மீண்டும் மீண்டும் படையெடுத்தான். வேண்டுமானால், ஜானகியின் தம்பி அவளுடன் துணைக்கு வரட்டும் என்று அவன் சொன்ன யோசனை பரிசீலிக்கப்பட்டு சில பல நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.



எங்கே செல்வதானாலும் சேர்ந்து செல்லக் கூடாது. ரகுவரன் முதலில் அந்த இடத்துக்குச் சென்று விடவேண்டும், ஜானகி தம்பியுடன் வந்து இணைந்து கொள்வாள். எங்கே சென்றாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு முன் ஜானகி வீட்டுக்கு வந்து விடவேண்டும். ஹோட்டலில் சாப்பிடுவது என்பது கூடவே கூடாது.



முக்கியமாக, திருமணத்திற்கு முன் ரகுவரன் மாமனார் வீட்டில் காலடி வைத்து விடக் கூடாது என்பது போன்ற பத்து கட்டளைகள். விதியை நொந்து கொண்டு அனைத்திற்கும் தலையாட்டிய ரகுவரன் முதலில் தேர்ந்தெடுத்த இடம் மெரினா கடற்கரை. காந்தி சிலை அருகே அமர்ந்து ஜானகிக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, அவளும் வந்தாள். உடன் வந்த சுந்தரத்தைப் பார்த்து ரகுவரன் மயங்கி விழாமல் இருந்தது ஜானகி போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்.



"நீயே கொண்டு போய் அவங்க வீட்டில் விட்டுடு ராகவா. கேசவன் கிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன். ரொம்ப நேரம் இங்கே இருக்க வேண்டாம். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடுங்க" என்று சுந்தரம் உடனே கிளம்பி விட, அவர் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்த ரகுவரன், சற்று நேரம் தூரத்தில் தெரிந்த கடலை வெறித்துப் பார்த்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து கொண்டான். அது வரைக்கும் ஒரு பொம்மை போல அமர்ந்து இருந்த ஜானகிக்கு உணர்வு வந்தது.



"என்ன ஆச்சு?" என்று பார்வையால் வினவியவளுக்கு, "ஒன்றுமே இல்லை" என்று தலையசைப்பில் பதில் கொடுத்தான். அமைதியாக நடக்க ஆரம்பித்தவனை அவளும் பின் தொடர்ந்தாள். அன்றோடு இனிமேல் டூயட் பாடுவதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான் என்று முடிவு செய்து விட்டான். ஜானகியை அவளது வீட்டுக்கு அழைத்துச் சென்றவன் வாசலோடு திரும்பி விட்டான்.



கேசவனே வந்து வருந்தி அழைத்த போதும் வீட்டினுள் செல்லவில்லை. ஒரு வேளை இது போலத் தான் நடக்கும் என்று நினைத்துக் கொண்டு தான் கேசவன் சுந்தரத்தை அனுப்பினாரோ என்று ரகுவரனுக்கு சந்தேகமாக இருந்தது. அதற்கு பெண்ணை அனுப்பி இருக்க வேண்டாமே, ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டும் என்று நினைத்தவன் எதையும் வெளிக்காட்டாமல் திரும்பி விட்டான்.



அன்றைய நிகழ்வில் ஜானகி தான் தம்பி தங்கைகளின் கேலியில் மாட்டிக் கொண்டு திண்டாடிப் போனாள். 'ம்ச். வான்னு சொல்லிட்டு, அவர் ஒரு வார்த்தை கூட வாயைத் திறந்து பேசலை. ரொம்ப நாள் கழிச்சு பீச்சுக்கு போனேன். கடல்ல கால் நனைக்க கூட இல்லை' என்று குறைப்பட்டுக் கொண்டாள். இப்படிப்பட்ட அரிய சம்பவங்களுடன் அவர்களின் திருமண வேலைகள் நடந்தன.



மெட்ராஸில் சுந்தரத்தின் மொத்த குடும்பமும் தங்கும் அளவுக்கு ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டார் அவர். பால் காய்ச்சுவதற்கு ஊரிலிருந்து செண்பகமோ வள்ளியோ வரவேண்டாமா என்ற கேசவனின் கேள்வியை சுந்தரம் கண்டுகொள்ளவே இல்லை. இங்கேயே என் மருமகள் இருக்கும் போது அவங்க எதுக்கு ஊரில இருந்து அலையணும் என்று அவரது வாயை அடைத்து விட்டார்.



இப்போதே பால் காய்ச்சிவிட்டால் திருமணத்திற்கு வருபவர்கள் தங்க வசதியாக இருக்கும் என்று சுந்தரம் சொன்ன காரணம் நியாயமாக இருக்க, மறுப்பேதும் சொல்லாமல் ஜானகியை அழைத்து வந்துவிட்டார். அவளுக்கு கொடுக்க இருக்கும் சீதனங்களை இங்கேயே கொண்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தார்கள். பால் காய்ச்சும் போது வந்த ரகுவரன் ஜானகியைக் கண்டு ஒரு புன்னகையுடன் நகர்ந்து விட்டான்.



'பார்வையாலயே பேசறாளே.. இவ வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேச மாட்டாளாம். நான் பேசணும்னு எதிர்பார்ப்பாங்களாம். நான் வாயைத் திறக்க மாட்டேன் போடி." தனது முகத்தையே ஆர்வமாகப் பார்த்தவளுக்குத் தானும் பார்வையில் பதில் சொன்னான் ரகுவரன். சினிமாவில் வரும் விஷயங்களைக் கற்பனையில் கண்டு அதை நேரில் எதிர்பார்த்து வந்த ஜானகிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.



அன்றிலிருந்து ரகுவரனும் சுந்தரமும் அந்த வீட்டில் தங்கிக் கொண்டார்கள். தந்தையின் அறையில் இருந்த பாட்டிலும் சிகரெட்டும் அவனுக்கு அதிருப்தி அளித்தது. சீக்கிரமே அவரை இந்தப் பழக்கங்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.



திருமணத்திற்கு பத்து பதினைந்து நாட்கள் இருக்கையில் ஊருக்குக் கிளம்பிச் சென்றார் சுந்தரம். ரகுவரனுக்குத் தனியாக அவ்வளவு பெரிய வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தாலே கஷ்டமாக இருந்தது, இன்னும் கொஞ்ச நாள் தானே என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.



"இப்போ எதுக்குப்பா ஊருக்குப் போறீங்க? இன்னும் நாலு நாளில் எல்லாரும் இங்க வரப்போறாங்க. கல்யாணம் முடிஞ்சு நேரா அங்கே தானே போகப் போறோம். எதுக்கு இப்போ ஒரு தேவையில்லாத அலைச்சல்?" என்று தந்தையிடம் தனது விருப்பமின்மையைச் சொல்லி விட்டான்.



"மருமகள் வரும் போது நம்ம வீடு நல்லா இருக்க வேண்டாமா? எப்படி இருக்குன்னு போன தடவை வந்த போது நீ பார்த்த தானே. அதான், நான் இப்போ போய் கொஞ்சம் மராமத்து செஞ்சு, வெள்ளையடிச்சிடலாம்னு நினைக்கிறேன். ஏற்கனவே ஆளுங்களுக்கு சொல்லி இருக்கேன். இரண்டே நாள் தான், வேலையை முடித்த கையோட திரும்பிடுவேன். சின்னவங்க இரண்டு பேரையும் அழைச்சிட்டு வந்துடலாம்னு பாக்கிறேன்" என்று சுந்தரம் தனது திட்டத்தைத் தெளிவாக உரைத்தார்.



"ம்ம்.. அப்படியே.. வள்ளி.. இல்லை.. இல்லை.. சித்தியையும் கூப்பிட்டு வந்துடுங்க. மத்தவங்க அப்புறம் வரட்டும்" என்று தயங்கித் தயங்கி தனது சிற்றன்னையை பல வருடங்கள் கழித்து அங்கீகரித்தான் ரகுவரன். இத்தனை வருடங்களில் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசியதே இல்லை. இப்போது தாயின் ஸ்தானத்தில் இருப்பவளை உதாசீனம் செய்ய மனம் வரவில்லை.



"ரொம்ப சந்தோஷம் பா. எது எப்படி இருந்தாலும் நீயும் மருமகளும் பல்லாண்டு சந்தோஷமா வாழணும். அந்தப் பொண்ணு பட்ட கஷ்டத்தை எல்லாம் நீ மறக்க வைக்கணும். நம்பி வர்றவளை சக மனுஷியா மதிச்சு நடந்துக்கோ. உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.. என்னை மாதிரி இல்லாமல் ஒரு நல்ல கணவனா நடந்துக்கோ.. " என்று மகனை அணைத்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர் சற்றே உணர்ச்சிவசப்பட்டார்.



"இப்போது எதுக்குப்பா இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்புக்கு ஏதாவது செய்யுதா? பாட்டிலைத் தேடறத இன்னும் நீங்க விடலையா? வீட்டிலயே சிகரெட் வேற பாக்கெட் பாக்கெட்டா இருக்கு.. கவனமா இருங்கப்பா " என்றவனுக்கு மனதை ஏதோ செய்தது. அவரை இப்படி ஒரு மனநிலையில் ஊருக்கு அனுப்ப மனமே இல்லை.



"நான் நல்லா தான் இருக்கேன் ராகவா. என்னவோ உன் கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. அதான் உடனே சொல்லிட்டேன், அப்புறம் சொல்ல வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ?"



"அதெல்லாம் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.. நாங்க எப்படி இருக்கோம்னு நீங்களும் கூட இருந்து பார்க்கத் தானே போறீங்க?" என்ற மகனுக்கு ஒரு புன்னகையைப் பதிலாக்கி ஊருக்குக் கிளம்பிச் சென்றார்.



அவர் சொன்னது போல் இரண்டு நாட்களில் வேலை முடிந்து விட, மூன்றாவது நாள் அவருக்கு பதிலாக ஒரு தந்தி வந்து சேர்ந்தது. "Father passed away. Start immediately - Sundaram Ramachandran"



தந்தை இறந்து விட்டார், உடனே கிளம்பவும் என்று சொன்ன தந்தியில் இருந்து சுந்தரம் தான் அனுப்பி இருக்க வேண்டும், அவரது தந்தை, அதாவது ரகுவரனின் தாத்தா இறந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு எதற்காக ராமச்சந்திரன் என்ற பெயரும் அதில் இருக்கிறது என்று புரியவில்லை.‌ ராமச்சந்திரன் அவனது தம்பி. பெயர் எழுதுவதில் ஏதோ குழப்பம் என்று நினைத்தவன் இறந்தது தாத்தா தான் என்று உறுதியாக நம்பினான். ஊருக்குச் சென்று அந்தப் பெயர் குழப்பத்தை தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து ரயில் ஏறினான்.



ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் ரயில் நிலையத்திற்கு அவனை அழைத்துச் செல்ல தந்தை வருவார் என்று நினைத்தான். ஆனால் வந்தது அவர்கள் வீட்டின் உதவியாளர். அப்போது கூட அவனுக்கு எந்த வித்தியாசமும் தோன்றவில்லை. இவனைப் பார்த்ததும் வாயில் துணியை வைத்துக் கொண்டு அழுத உதவியாளரைச் சமாதானம் செய்யும் விதமாக பேசினான்.



"இப்போ என்ன நடந்து போச்சு அண்ணே. வயசானா எல்லாரும் ஒரு நாள் போறவங்க தானே" என்று சொல்லிக் கொண்டு வந்தவன் வீடு வந்து சேர்ந்ததும் அதிர்ந்து நின்று விட்டான். இறந்து விட்டதாக அவன் நினைத்த தாத்தா வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போ, இறந்தது யார் என்று யோசித்தவன், மறந்தும் தனது தந்தையாக இருக்கக் கூடும் என்று நினைக்கவே இல்லை. அங்கே இருந்த கூட்டத்தில் அவரைத் தேடியவனை யாரோ கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்



ரகுவரன் சற்றும் எதிர்பாராத விஷயம் அங்கே அரங்கேறி இருக்க, வாழ்க்கையில் முதல் முறையாக செய்வதறியாது திகைத்து நின்றான் அவன்.



கண்கள், ஐஸ் கட்டிகளின் உதவியுடன் நிரந்தர தூக்கத்தில் ஆழ்ந்துவிட்ட சுந்தரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போ ராமச்சந்திரன் தான் தந்தி கொடுத்தானா? பேரு சரியா தான் போட்டிருக்காங்களா? ரகுவரனின் உலகம் சுழலுவதை நிறுத்திக் கொண்டது.

*****



"மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்.. அதில்

மல்லிகைச் செண்டு கொஞ்சும்

காதலி உள்ளம் வெள்ளம் அதில்

காதலின் ஓடம் செல்லும்" குப்புறப் படுத்துக் கொண்டு மணிமாலாவைப் போல காலை ஆட்டியபடி பாடிக் கொண்டு இருந்தாள் ஜானகி.



"எங்க அந்த தரித்திரம் பிடிச்சவ? நான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேனே.. யாராவது கேட்டீங்களா? அதையும் இதையும் சொல்லி என்னைச் சமாதானம் செஞ்சீங்களே.. அவனும் கூட சேர்ந்து ஆசையா எல்லாம் செஞ்சானே.. இப்போ அல்பாயுசுல போயிட்டானே.." கேசவனின் குரல் வீடெல்லாம் எதிரொலிக்க என்னவோ என்று பயந்து மெதுவாக கூடத்தில் காலெடுத்து வைத்தாள் ஜானகி.



மகளைக் கண்டதும் வேகமாக வந்து ஓங்கி ஒரு அறை வைத்தார். எட்டிப் போய் விழுந்த ஜானகிக்கு தலை சுற்றியது. இது நாள் வரை வாய் வார்த்தையாக வதைத்திருக்கிறாரே தவிர கேசவன் கை நீட்டியதில்லை. ஆனால் இன்று இடி போல் விழுந்தது அடி. என்ன காரணம் என்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்த ஜானகியை, "நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்க? இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்கப் போறியா.. சே.. தப்பித் தவறி என் கண்ணு முன்னாடி வந்துடாத.. அப்படியே கழுத்தைத் திருகிப் போட்டுடுவேன்.. சனியன்.. சனியன்.. " என்று பல நாட்கள் மறந்திருந்த அர்ச்சனைகளை எல்லாம் மொத்தமாக வழங்கி விட்டு போகிற போக்கில் ஆத்திரம் மேலிட அவளை எட்டி உதைத்து விட்டுப் போனார்.



ராஜம்மாளும் ருக்மணியும் காதால் கேட்டு விஷயத்தைக் கிரகித்துக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, கேசவனின் சத்தம் கேட்டு கூடிய குடும்பத்தினர் ஆளாளுக்கு ஜானகியின் ராசி பற்றியும் இனி என்ன ஆகும் என்பது பற்றியும் தீவிரமாக பேசத் தொடங்க, சம்பந்தப்பட்ட ஜானகியின் நிலையைக் கண்டு கொள்ளவே ஆளில்லாத நிலைமை அங்கே. அதிர்ச்சியில் இருந்து சீக்கிரமே வெளிவந்த ராஜம்மாள் பேத்தியைப் பார்த்து பயந்து போனார்.



"அடி ஆத்தீ..‌ ராஜாத்தி மாதிரி இருந்த பொண்ண இப்படி ராட்சசன் மாதிரி வதைச்சுட்டானே. இவனே போய் என் பொண்ணு கொலைகாரின்னு சொன்னாலும் சொல்லுவான். கேட்க ஆளில்லைன்னு நினைச்சானா? இந்தா.. ருக்கு! இவளைப் பாரு.. எழுப்பி ஏதாவது சாப்பிட கொடு.. நான் அவனை என்னன்னு கேட்கிறேன்" என்று பேத்தியைக் கவனிக்குமாறு மருமகளைப் பணித்துவிட்டு மகனைத் தேடிச் சென்றார்.



போகும் போதே கூடியிருந்த அனைவரையும் அவர் பார்த்த பார்வையில் அனைவருக்கும் அவரவருக்கு காத்திருக்கும் வேலைகள் ஞாபகம் வந்துவிட்டதில் வேகமாக இடத்தைக் காலி செய்தார்கள்.



வாசல் திண்ணையில் முகத்தை இரண்டு கைகளிலும் புதைத்துக் கொண்டு கேசவன் அமர்ந்திருந்த தோற்றம் அவரது மனதைப் பிசைந்தாலும் பேத்தியின் நிலை ராஜம்மாளை சும்மா இருக்க விடவில்லை.



"கேசவா! எதுக்கு இப்படி ஆத்திரம் வருது உனக்கு.. என்ன நடந்திருந்தாலும் நம்ம பொண்ணை நாம விட்டுக் கொடுக்கலாமா.. வயசுக்கு வந்த பொண்ணுன்னு கூட பார்க்காமல் எட்டி உதைக்கிற.. ரொம்ப தப்புப்பா.. " கோபமாகக் கேட்க வேண்டிய கேள்விகளை மகனது முகம் தன்மையாகவே மாற்றி இருந்தது.



"என்னன்னு சொல்றதும்மா.. மருமக வரும் போது வீடு பளிச்சுன்னு இருக்கணும்னு ஊருக்குப் போன சுந்தரம், செத்துப் போயிட்டான்னு சேதி வந்திருக்கு. அவன் பையனுக்கு தந்தி வந்து கிளம்பி போயிருக்கான். நமக்கு யாரும் சொல்லக் கூட இல்லை. சொந்தம்றதை தாண்டி எத்தனை வருஷப் பழக்கம் எங்களுக்கு? எந்த மூஞ்சிய வச்சிட்டு அங்கே போய் நிக்கச் சொல்றீங்க? சாக வேண்டிய வயசா அவனுக்கு? நான் சொன்னதை யாரு கேட்டீங்க? அந்தப் பையன் வேற ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் வியாபாரம்னு வியாக்கியானம் பேசினான். இப்போ என்ன செய்வான்?"



கேட்க ஆள் கிடைத்தது என்று தன் போக்கில் புலம்பும் வேலையைத் தெளிவாகச் செய்தார் கேசவன். கேட்ட ராஜம்மாளுக்கும் கஷ்டமாகவே இருந்தது, ஆனால், பழங்காலத்து மனுஷியாக இருந்தாலும் அவர் ஜாதகத்தை மீறிய சக்தி உண்டு என்று நம்புபவர். கேசவனை இப்போதைக்கு எந்த வார்த்தையும் சமாதானப் படுத்தாது என்று அறிந்து அவரிடம் சுந்தரத்தின் இறுதி காரியத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.



"ஜாதகம், கல்யாணம் இதையெல்லாம் ஒரு ஓரமா வச்சிட்டு கிளம்பு கேசவா. ஒரு சிநேகிதனா நீ சுந்தரத்தோட காரியத்துல கலந்துக்கத் தான் வேணும். மத்ததை எல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இப்போ மனசைப் போட்டு உழப்பாம கிளம்பு."



"எனக்கு அங்கே போறதுக்கே பயமா இருக்கேம்மா. யாராவது என் பொண்ணு ஜாதகம் தான் காரணம்னு பேசிட்டா.. நான் எத்தனை வேணும்னாலும் சொல்லுவேன்.. மத்தவங்க சொல்றதை எப்படித் தாங்க முடியும்? செண்பகம் அத்தை சாதாரணமாவே தேள் மாதிரி தான் கொட்டுவாங்க.. கல்யாண விஷயத்துல அவங்க பேரன் தான் அவங்க வாயைத் திறக்க விடாமல் பண்ணிட்டான். இப்போ அவனே என்ன நினைக்கிறான்னு தெரியலையே.. என் பொண்ணு வாழ்க்கை அந்தரத்தில் தொங்கும் போது நான் என்ன செய்வேன்?"



கேசவனது நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லவோ அவரது கவலைகளுக்கு ஆறுதல் சொல்லவோ ராஜம்மாளுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.



"எதுவானாலும் அங்கே போய் பார்த்தால் தான் தெரியும். இது மாதிரி நேரத்தில் நமக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. விஷயம் யார் மூலம் தெரிஞ்சாலும் போயிடணும். அங்கே போனால் தான் சுந்தரத்துக்கு என்ன ஆச்சுன்னு கூட தெரியும். அவனைப் பத்தி சொன்னா உனக்கு கோபம் வரும்.. உன் சிநேகிதனுக்கு புகை, தண்ணின்னு இருந்த நல்ல பழக்கங்களுக்கு உடம்பு உள்ளுக்குள்ளே செல்லரிச்சுப் போயிருக்கும்.. யாருக்கும் தெரியாமல் மறைச்சு வச்சிருப்பான்.. இப்போ வேற மாதிரி முடிஞ்சிருக்கு. இதுல நம்ம பொண்ணு எங்கேயும் இல்லை. இதைத் தெளிவா புரிஞ்சிக்கோ. இப்போ கிளம்பு."



வீட்டை விட்டு வெளியே செல்லாத அன்னையின் தெளிவான பேச்சில் ஆடிப் போனார் கேசவன்

"உனக்கும் அந்த பழக்கங்கள் இருக்குன்னு எனக்குத் தெரியும். என்னை விடு, படிச்சு, நாலு பேர் கிட்ட பழகற புள்ளைக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும். அவன் அப்பன் விஷயத்தை உன் மாப்பிள்ளைப் பையன் பார்த்துப்பான். அங்கே என்ன நடந்தாலும் நீ வாயைத் திறக்காமல் வந்து சேரு. அது போதும்" என்று மகனுக்கு ஒரு கொட்டு வைத்து பேத்தியைக் கல்யாணம் செய்ய இருக்கும் மாப்பிள்ளையின் புகழ் பாடி முடித்தார் ராஜம்மாள்.



அவரது எண்ணப் படியே சுந்தரம் வீட்டில் நடந்த நிகழ்வுகள் இருக்க, கேசவனைக் கண்டதும் ஆளாளுக்கு வஞ்சனை இல்லாமல் விமர்சனம் செய்ய, அத்தனை பேரையும் னனகேள்வி கேட்டு வாயை அடைத்தான் ரகுவரன். மற்ற எல்லாவற்றையும் விட, "இப்படி அல்பாயுசுல என்னை விட்டுப் போயிட்டாங்களே! இது வரைக்கும் ஒரு தலைவலின்னு கூட படுக்காத மனுஷன்.. நெஞ்சு வலி வந்து போயிட்டாரே.. வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே இப்படி ஆட்டிப் படைக்குதே" என்று அழுத வள்ளியை அவன் பார்த்த பார்வையில் அவளது வாய் தன்னால் மூடிக்கொண்டது.



"எங்க அப்பா இப்படி திடீர்னு இறந்ததுக்கு ஜானகியோட ஜாதகம் தான் காரணம் இல்லையா? அவரு வருஷக்கணக்கா குடிக்கிறது, சிகரெட் பிடிக்கிறது இதெல்லாம் வியாதியை வரவழைக்காது.. எல்லாம் உடம்புக்கு சத்து டானிக் மாதிரி.. ஜானகிக்கும் எனக்கும் கல்யாணம் பேசிய உடனே அவளோட ஜாதகம் போய் நெஞ்சு மேல உட்கார்ந்து அழுத்தின வலியை வரவச்சிடுச்சு.. அதுக்கு முன்னாடி அவருக்கு ஒரு தலைவலி கூட வந்ததில்லை.. அப்படித்தான?



ஏன் பாட்டி, ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி மஞ்சள் காமாலை வந்து மூணு மாசத்துக்கு மேல அவஸ்தைப் பட்டாரே.. அப்போ அந்த டாக்டர் என்ன சொன்னார்னு ஞாபகம் இருக்கா உங்களுக்கு?



இல்லேன்னா நான் ஞாபகப் படுத்தறேன். இதுக்கு மேல அவரு பாட்டிலைக் கண்ணால கூட பார்க்கக் கூடாது, சிகரெட்டை தூக்கித் தூரத்தில வைக்கணும்னு சொன்னாரே.. அதுக்கு அப்புறம் உங்க மகன் என்ன செஞ்சார்.. அதையெல்லாம் செய்யாதேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கைகட்டி வேடிக்கை பார்த்த நீங்க இப்போ இப்படி ஒரு கேள்வி கேட்கிறீங்க.



அப்புறம் இன்னொரு விஷயம் சொல்றீங்களே.. அல்பாயுசுல போயிட்டாருன்னு.. நாற்பத்தஞ்சு வயசு சாகிற வயசில்லை தான்.. ஆனால் இதுவே அல்பாயசுன்னா இருபத்து நாலு வயசுல எங்க அம்மா செத்தது என்ன கணக்குல வரும். அதுக்கு யாரோட ஜாதகம் காரணம்.. அன்னைக்கு இந்த வீட்டுல யாரும் இவ்வளவு வருத்தப்பட்ட மாதிரி எனக்கு ஞாபகம் இல்லையே.. திண்ணை எப்போ காலியாகும்னு காத்திருந்தவங்க எல்லாம் இப்போ நியாயம் பேசுறது தான் ஆச்சரியமா இருக்கு.."



இத்தனை வருடங்களாக மனதுக்குள் வைத்துப் புழுங்கிய விஷயங்கள் அனைத்தும் மடை திறந்த வெள்ளமாக வெளிவந்துவிட்டது. இவ்வளவும் போதாது என்று, "சரி வாங்க.. ஒரு ஆஸ்பத்திரியில போய் எங்க அப்பா சாகுறதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிட்டு வந்துடுவோம். போஸ்ட் மார்ட்டம் பண்ணினா உடம்பு முழுசா கிடைக்காது.. அதனால என்ன.. நமக்குக் காரணம் தெரிஞ்சிடுமே!" என்று கிளம்பி நின்றான்.



கேசவன் அவனிடம் இத்தனை தெளிவான சிந்தனையை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த நொடியில் மகளைப் பற்றிய அவரது கவலையைத் தள்ளி வைத்து விட்டார். நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.



"என்ன போகலாமா?" என்று அவன் மறுபடியும் கேட்க, "ராகவா! போதும் நீ பேசியது. அப்பாவை நல்லபடியா அனுப்பி வை.. வா.. புரோகிதர் வந்தாச்சு பாரு" என்று அழைத்துக் கொண்டு போனார் ஒருவ
ர்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 11
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom