• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
54
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 10



இயல்பாகவே எதையும் வெளிப்படையாக பேசிவிடும் ரகுவரன், ஜானகியைப் பார்த்ததும் பிடித்துவிட்டது என்பதை தயங்காமல் சொல்லி விட்டான்.



"பாட்டி! எனக்கு ஏதாவது செய்யணும்னு சொன்னீங்களே, இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்க." அவன் மெதுவாகத் தான் பேசினான் என்றாலும் அருகில் அமர்ந்திருந்த கேசவனின் காதுகளில் தெளிவாகவே கேட்டது.



செண்பகம், பேரனின் அதிரடியில் அதிர்ச்சியடைந்து பதில் சொல்லாமல் இருக்க, ரகுவரனின் கண்கள் இப்போது கேசவனை நோக்கித் திரும்பியது. கேசவனையும் ஜானகி விஷயத்தில் அவரது நிலைப்பாட்டையும் நன்கு அறிந்த ராஜம்மாளுக்கும் ருக்மணிக்கும் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. ரகுவரனின் ஆசை நிறைவேறி ஜானகிக்கு அந்த வீட்டிலிருந்து விடுதலை கிடைத்தால் முதலில் சந்தோஷம் கொள்பவர்கள் அவர்கள் இருவரும் தான். அதனாலேயே ராஜம்மாள் கூட மகனது வாய் திறக்க காத்திருந்தார். தற்போது தனது அபிப்பிராயத்தை சொல்வது உச்சிதமல்ல என்று அவருக்கு நன்றாகவே புரிந்து போனது.



தேவைப்பட்டால் கேசவனால் மீற முடியாத ஒரு முடிவை ராஜம்மாவால் எடுக்க முடியும். அதற்கு முதலில் கேசவனின் நிலைப்பாடு என்ன என்பது என்பதை தெரிந்து கொள்வது அவசியம். செண்பகமோ, தேவையில்லாமல் வந்த இடத்தில் பிரச்சனை எதற்கு என்று வாய்மூடி மௌனமாக இருந்தார். சிறுவயதில் உறவுகளிடம் இருந்து தள்ளியே இருந்து விட்ட பேரன், தற்போது தனக்காக ஒரு விஷயத்தை செய்து கொடு என்று கேட்கும்போது அதை செய்து விட வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாகவும் இருந்தது.



ஆனால், ஜானகியை பற்றியும் அவளது ஜாதகம் பற்றியும் அறிந்திருந்த அவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க விரும்பவில்லை. மேலும், பெண்ணை பெற்றவர்களின் நிலைப்பாடு என்ன என்பது புரியாமல் பெண் கேட்டு அவர்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கி தானும் சங்கடப்படுவதற்கு அவர் விரும்பவில்லை.



ரகுவரனோ தனது விருப்பத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தான். நேரடியாக கேசவனிடமே கேட்டு விட்டான். "மாமா! இப்போ டிஃபன் கொண்டு வந்தாங்களே அவங்க யாரு? உங்க பொண்ணா?" என்று கேட்டு தனது ஆட்டத்தை தொடங்கி வைத்தான்.



"யாரா இருந்தால் என்ன தம்பி. நீங்க டிஃபன் சாப்பிடுங்க." அவனை முறைக்க முடியாமல் ருக்மணியை முறைத்த கேசவன், கழுவும் மீனில் நழுவும் மீனாக இருந்தார். ஆனால் அவரது தாயால் அப்படி விட முடியவில்லை.



"அவ தான் என் முதல் பேத்தி ஜானகி தம்பி. இந்த டிஃபன் அவ செஞ்சது தான். எந்த காரியமா இருந்தாலும் நிறைஞ்ச மனசோட நிறைவா செய்வா. சாப்பிட்டு பாருங்க, தேவாமிர்தமா இருக்கும்" என்று நாலு வரி அறிமுகத்தில் பேத்தியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட்டார்.



சாதாரணமாகவே ரகுவரன் அவள் கையால் கொடுத்ததை பிரசாதமாகப் பாவித்து உண்ண ஆரம்பித்திருந்தான். இப்போது அவனது நிலையைக் கேட்கவே வேண்டாம். பரவச நிலை அடைந்த பக்தனைப் போல மாறிவிட்டான். தேவதையின் தரிசனம் மீண்டும் கிடைக்காதா என்று அவள் வந்த வழியையும் அடிக்கடி பார்த்துக் கொண்டான்.



கையில் இருந்த டிஃபன் காலியான பின்னர் மீண்டும் பாட்டியிடம் தனது கோரிக்கையை வைத்தான். இதற்கு முன் அவனை இத்தனை பிடிவாதத்துடன் பார்த்திராத செண்பகம் செய்வதறியாது திகைத்தார்.



"ராகவா! கல்யாண விஷயமெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவெடுக்க முடியாது. நாம வீட்டுல போய் பேசிக்கலாம். கொஞ்சம் பேசாமல் இரு" என்று அவரால் முடிந்த வேலையாக பேரனின் வாயை மூட முயற்சி செய்தார். ஆனால் ரகுவரனின் கேள்வி இப்போது கேசவனிடம் சென்று விட்டது.



"மாமா! நீங்க ஒன்னு பண்ணுங்களேன். உங்க பொண்ணு கிட்ட என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்களேன். அவங்களுக்கு பிடிக்கலேன்னா நான் இதுக்கு மேல எதுவும் பேசலை. ஒரு வேளை பிடிச்சிருந்தா, கேட்காமல் போயிட்டேனேன்னு எனக்கும் தோணும், அவங்களுக்கும் தோணும்"



பல வருடங்களாக பார்த்து பழகியது போல அவன் பேசி வைத்ததில் அதுவரையில் கரையைக் கடக்கத் துடித்த கேசவனின் பொறுமை சூறாவளியாக மாறியது.



"தம்பி! நீங்க நிறைய படிச்சிருக்கலாம், பெரிய வேலைல இருக்கலாம். நகரத்து நாகரிகம் எல்லாம் கத்துட்டு இருக்கலாம். அதனால, உங்க கல்யாண விஷயத்தை நீங்களே பேசறது தப்பில்லைன்னு தோணலாம். ஆனால் என் பொண்ணு அப்படி இல்லை, இங்கேயே பொறந்து வளர்ந்தாலும் நாங்க சொல்றத மீறி எதுவும் செய்ய மாட்டா. இப்போ என்ன? உங்களுக்கு அவளைப் பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு தோணுது. ஆனால் ஒரு கல்யாணத்துக்கு அது மட்டும் போதாது. ஜாதகம் பொருந்தணும், யாருக்கும் பாதகம் இல்லாமல் இருக்கணும். பார்ப்போம்.. ஆண்டவன் சித்தம் அதுதான்னா கண்டிப்பா நடக்கும். நீங்க பாட்டியோட இருந்து சாப்பிட்டு போங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு."



நண்பனின் மகனிடம் கோபம் வேண்டாம் என்று கஷ்டப்பட்டு வார்த்தைகளைக் கோர்த்தவர் எழுந்து சென்று விட்டார். போகும் போது மனைவியை கண்டிப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டே சென்றார். "உன் பொண்ணு கோடு தாண்டி வரக்கூடாது, சொல்லி வை" என்று ஆணையிடும் பார்வை அது.



புயலுக்குப் பின்னான அமைதி அங்கே நிலவியது. "நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க கூடாது மதினி. அவன் ஏதோ சொந்தம் தானேன்னு ஆசைப்பட்டு கேட்டுட்டான். நான் சுந்தரம் கூட பேசி என்ன செய்யலாம்னு பார்க்கிறேன்" என்று ராஜம்மாளிடன் சமாதானமாகப் பேசினார் செண்பகம்.



"கேசவனுக்குப் பிடிச்சிருக்கிற ஜோசியப் பைத்தியத்தை எப்படி தெளிய வைக்கிறதுன்னு எங்களுக்கு புரியவே இல்லை. எப்போ பார்த்தாலும் அந்த பொண்ணை வார்த்தையால வதைக்கிறான். நீ சுந்தரத்துக்கு எடுத்து சொல்லு. இந்தப் பொண்ணுக்கு உன் மூலமா ஒரு நல்லது நடந்தால் ரொம்ப சந்தோஷம். என் பேத்தியைப் பத்தி நானே சொல்லக் கூடாது. பத்தரை மாத்து தங்கம் மாதிரி அவ. ஹூம்.. ஆண்டவன் அவ தலைல என்ன எழுதி இருக்கானோ?"



ராஜம்மாள் கிடைத்தது வாய்ப்பு என்று ஜானகி பிறந்த நாள் முதல் இதோ இந்த கணம் வரை அவளது ஜாதகம் அவளைப் படுத்தும் பாட்டை புட்டு வைத்துவிட்டார். கூடவே, சகலகலா வல்லியான அவளைத் திருமணம் செய்பவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் புகழாரம் சூட்டினார்.



"அப்போ நாங்க கிளம்பறோம் மதினி. கல்யாண விஷயம் முடிவாகாமல் கை நனைக்க எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க தப்பா எடுத்துக்க கூடாது" என்று எழுந்த செண்பகம் பேரனைப் பார்க்க, அவனும் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டான்.



"நல்ல பையனா தெரியறான், இந்த கேசவன் ஏன் தான் இப்படி பிடிவாதம் பிடிக்கிறானோ?" என்று பெருமூச்சு விட்டார் ராஜம்மாள்.



"ஏன் அத்தை, நம்ம ஜானகியோட ஜாதகப்படி மாமியார் இல்லாமல் இருப்பாங்கன்னு தானே சொல்லி இருக்காங்க. இந்த பையனுக்கு தான் அம்மா கிடையாதே.. அப்புறம் ஏன் இவங்க யோசிக்கிறாங்க" ருக்மணி சரியான முறையில் யோசித்து, இந்த கல்யாணம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தார்.



"நீ சொல்றதும் சரி தான். உன் புருஷன் வரட்டும்.. இன்னைக்கு இரண்டுல ஒன்னு பாத்துடறேன்" என்று ராஜம்மாள் சபதம் போட்டார்.



இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த வேளையில் ஜானகி தனது எதிர்கால கனவுகளில் மூழ்கி இருந்தாள். கல்யாண கனவுகள் காணும் வயது வந்து சில வருடங்கள் கடந்த போதும் அது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்து விட்டாள். இது நாள் வரையில் வயதுக்கேற்ற ஆசைகளை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்தாள்.



அவளை விட இரண்டு வயது இளையவளான அவளது சித்தப்பா மகளுக்கு திருமணம் ஆன போது கூட அந்த விஷயம் தன்னைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டாள். உண்மையில் அந்த வரன் ஜானகியைக் கேட்டு வந்தது, கேசவன் தான் தம்பி மகளைக் கை காட்டி விட்டார். யாருக்குத் தெரியும், இப்போது கூட அது போன்ற ஒரு சம்பவம் நடக்கலாம். கேசவனுக்குத் தான் நிறைய தம்பிகளும் அவர்களுக்கு பெண்களும் இருக்கிறார்களே..



இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஜானகியின் உடன்பிறந்த தங்கைகளும் இந்த போட்டியில் வந்துவிடுவார்கள். எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் இருந்தவளின் மனதில் இன்று ஒருவன் குடியேற அனுமதி கேட்டு நிற்கிறான். ஒரு மனது, இவன் தான் உனக்கானவன் என்றது.. இன்னொரு மனதோ அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தை நினைத்துப் பயந்தது. எது நடந்தாலும் கனவுகள் காண்பதை யாராலும் தடுக்க முடியாதே.. ஜானகியும் கனவு காணத் தொடங்கினாள்.



இவள் இப்படி இருக்க, அங்கே ரகுவரன் தனது முடிவில் தீவிரமாக இருந்தான். வீட்டுக்கு வந்து சேரும் வரை பாட்டியும் பேரனும் அவரவர் யோசனையில் மூழ்கி அமைதியாக வந்து சேர்ந்தனர். உள்ளே நுழைந்ததுமே செண்பகம் ஆரம்பித்து விட்டார்.



"ராகவா! நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. கல்யாணம்னா உனக்கு விளையாட்டா போச்சா? பெரியவங்க பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை நீ பட்டுனு பேசிட்டு வந்தா, அவங்க என்ன நினைப்பாங்க. நாளைப் பின்ன அதே பொண்ண கல்யாணம் பண்ணினா அந்த வீட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கும்? கேசவனோட பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கும். உங்க அப்பாவால உன் கூட பொறுமையா பேசி இருக்கான்" என்று பொரிந்து தள்ளி விட்டார்.



அவர் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தவன் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையில் பல உணர்ச்சிகள் வெளிப்பட்டன.

"ஓ.. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் பண்ண அவங்க குடும்பத்தில் உள்ள பெரியவங்க முடிவு செஞ்சா நல்லது. சம்பந்தப்பட்ட இரண்டு பேரோட சம்மதம் தேவையில்லை.. அப்படித்தானே"



"நான் அப்படியா சொன்னேன்.. கல்யாணம் பேசறது பெரியவங்க வேலைன்னு சொன்னேன். தான் பெத்த பொண்ணுக்கோ பையனுக்கோ யாராவது கெடுதல் நினைப்பாங்களா? நல்ல வரன்னு நாலும் யோசிச்சு முடிவு செஞ்சா தான் கல்யாணம் நிலைக்கும். குழந்தை குட்டின்னு பெறுகி அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்."



"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி தான். ஏன்.. பாட்டி.. ப நடந்த உங்க மூத்த பையனோட கல்யாணம் எது வரைக்கும் நிலைச்சது? எங்க அம்மா உங்க பையன கல்யாணம் பண்ணிட்டு வந்து குழந்தை குட்டி பெத்ததைத் தவிர வேறென்ன அனுபவிச்சாங்க"



தவளை தன் வாயால் கெடும்னு தானே லட்டு மாதிரி விஷயங்களைப் பேரனுக்கு எடுத்துக் கொடுத்து மாட்டிக் கொண்ட செண்பகம் பேச முடியாமல் அமைதி காக்க, பல வருடங்களாக தன் மனதை அரித்த விஷயங்களை விட்டுவிட மனமில்லாமல் ரகுவரன் தொடர்ந்தான்.



"ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுங்கோங்க பாட்டி.. பொண்ணு கூட வரும் காசு பணமோ, நகை நட்டோ, வேற சீர் வகையே கல்யாண வாழ்க்கைக்கு போதாது. கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர பிரியம் இருக்கணும். அதை அவங்க குடும்பமோ சீரோ தராது, தானா வரணும். ஆரம்பத்தில் வெளி அழகு தான் இரண்டு பேருக்கும் ஒரு பிடித்தத்தை ஏற்படுத்தும். அப்பா விஷயத்தில் அது இல்லாமல் போனதால் அவங்க வாழ்க்கை மட்டும் இல்லாமல் எங்க வாழ்க்கையும் திசை மாறிப் போச்சு. முன்ன மாதிரி இல்லை.. இப்போ காலம் மாறிப் போச்சு பாட்டி.. பொண்டாட்டிய அடிமையா நடத்தினா குடும்பமா போய் ஜெயில்ல கம்பி எண்ணனும்" என்று நன்கு உளவியல் தெரிந்தவனாகப் பேசினான் ரகுவரன்.



"இப்போ எங்க அப்பாவை எடுத்துக்கோங்க.. இரண்டு முறை கல்யாணம் பண்ணியும் தனியா இருக்காங்க. ஏன்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்க. எனக்கு அந்தப் பெண்ணைப் பார்த்த உடனே பிடிச்சது. அதைத் தான் வெளிப்படையாக சொன்னேன். ஜாதகம் பொருந்தணும்னு யோசிக்கிறதை விட மனசு பொருந்தணும்னு யோசிங்க. அப்போ தான் ஒரு கல்யாணம் நிலைக்கும்" என்று கடைசியாக முடித்தான்.



செண்பகத்திடம் அவன் சொன்ன விஷயங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தாய்க்காக நியாயம் கேட்டு நின்ற பேரனின் முன் குற்றவாளியாக நின்றார். எப்படியாவது அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார். ஆனாலும் அவரால் என்ன செய்ய முடியும். சுந்தரம் வேண்டுமானால் தாயின் பேச்சைக் கேட்கலாம். கேசவனை அவரால் சமாளிக்க முடியுமா?



இருவரும் அவரவர் சிந்தனையில் இருக்க, சுந்தரம் வரும் அறிகுறி தென்பட்டது. எத்தனை நாள் பழக்கம் என்று தெரியவில்லை, நிற்க முடியாமல் நடை தள்ளாடி நடந்து வந்தார். ரகுவரன் அவரைப் பார்த்த பார்வையில் அவர் பஸ்மமாகாமல் இருந்ததே ஆச்சரியம் தான். அந்த நேரத்தில் மகனை அங்கே எதிர்பார்க்காத சுந்தரம், தலைகுனிந்து நடந்தார். அவசரமாக ஒரு குளியலைப் போட்டு முடிந்தவரை தெளிவாக வந்து அமர்ந்தார். இப்போது ரகுவரனின் பார்வை செண்பகத்திடம், "என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் தெரிகிறதா?" என்று கேள்வி கேட்டது.



"ராகவா! நீ ஒன்னும் கவலைப் படாதே. ஜானகி தான் என் மூத்த மருமகள். கேசவன் என்ன தரமாட்டேன்னு சொல்றது. அவன் ஒரு கிறுக்கன்.. ஜாதகம்.. அது இதுன்னு உளறுவான். இத்தனை நாள் மாமியாருக்கு ஆகாதுன்னு சொல்லிட்டு இருந்தான்.. இப்போ மாமியாரே இல்லைன்னு சொன்னா, மாமனாருக்கு ஏதாவது ஆகிடும்னு புதுசா கதை சொல்றான். எனக்கென்ன நான் கல்லு மாதிரி இருக்கேன். ராஜாத்தி மாதிரி மருமகள் வந்த பிறகு எனக்கென்ன கவலை."



சுந்தரம் பேசப் பேச அவரைப் பெற்றவரும் அவர் பெற்ற மகனும், இவர் போதையில் பேசுகிறாரா இல்லை நிதானத்தில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகத்துடன் பார்த்தனர்.



இவர்களது பார்வையை உணர்ந்தவர், சாதாரணமாக பேசத் தொடங்கினார். "நான் நல்ல நிதானத்தோட தான் இருக்கேன். கேசவன் என்னைப் பார்க்க வந்திருந்தான். உங்க இரண்டு பேர் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் பொருத்தம் பார்த்தானாம். அந்த ஜோசியர் இவனுக்கு ஜால்ரா போட்டு சம்பாதிப்பார் போல. பையனுக்கு அம்மா இல்லேன்னா என்ன, அவங்க வீட்டுல ஓரு உயிருக்கு கண்டம்னு சொல்லி இருக்கான். இவன் உடனே அதைப் பிடிச்சிட்டு தொங்கறான். அப்படியே எனக்கு ஏதாவது ஆனாலும் என்ன, நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்னு நிம்மதியா போயிடுவேன். நீ.. நீ.. சந்தோஷமா இருந்தால் போதும் எனக்கு."



மகனைக் கட்டிக் கொண்டு தழுதழுத்தார் சுந்தரம். மகனோ தந்தையின் வார்த்தைகளில் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. "அப்படி நான் இல்லாமல் போனால் தான் என் மகனுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கும்னு சொன்னா.. நான் சந்தோஷமா போவேன்.." என்ற அவரது வார்த்தைகள் ரகுவரனைக் கூறு போட்டது. செண்பகம், மகனது மற்றொரு பரிமாணத்தில் ஆடிப் போனார்.



நீண்ட நேரம் அங்கே நிலவிய அமைதியை சுந்தரமே கலகலப்பாக மாற்றினார். "பயப்பட ஒன்னும் இல்லை ராகவா! இந்த ஜாதகம், ஜோசியம் இதெல்லாம் தாண்டி ஒரு சக்தி இருக்கே. அதன்படி தான் எல்லாம் நடக்கும். உனக்கு அந்தப் பொண்ணு தான்னு எழுதி இருந்தா, எந்த ஜாதகமும் ஒன்னும் செய்ய முடியாது. நல்லதே நடக்கும்னு நம்பு.. நடக்கும்" என்று மகனைத் தட்டிக் கொடுத்தார்.



"இனிமேலாவது ஒரு பெரிய வீடு பாரு. எல்லாரும் சேர்ந்து இருக்கலாம். உனக்கு வேலை இருக்கு, அலைய முடியாதுன்னா சொல்லு. நான் பார்த்து வைக்கிறேன். குடும்பமா வாழணும்னு மனசு ஏங்குது ராகவா" சுந்தரத்தின் குரலில் வழிந்த ஏக்கம் ரகுவரனை ஏதோ செய்தது.



"நீங்களே பாருங்கப்பா. என்னால முன்னூறு ரூபாய் வரை வாடகை கொடுக்க முடியும். தண்ணி பிரச்சினை இல்லாத இடமா பாருங்க." தந்தையும் மகனும் எதிர்காலத்தைத் திட்டமிட செண்பகம் சந்தோஷமாக வேடிக்கை பார்த்தார்.



மகனிடம் சொன்னது போலவே நடையாய் நடந்து நண்பனின் மனதைக் கரைத்து ஜானகியை ரகுவரனின் மனைவியாக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றார் சுந்தரம். அரைகுறை மனதுடன் என்றாலும் கேசவன் தனது பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்தினார். அந்த வெற்றியைக் கொண்டாடும் வேளையில் ஜோசியர் சொன்ன விஷயம் பலித்திருந்தது.



அடுத்த முகூர்த்தத்திலயே சுற்றம் சூழ ஜானகி, ரகுவரனின் நிச்சயதார்த்தம் ரகுவரனின் அன்னை வாழ்ந்த வீட்டில் கோலாகலமாக நடந்தேறியது. லக்னப் பத்திரிகை வாசிக்கப்பட்டு அடுத்த நாற்பது நாட்களில் மெட்ராஸில் வைத்து திருமணம் நடத்துவது என்று இருவீட்டாரும் ஒப்பந்தம் செய்தனர்.
 

Author: SudhaSri
Article Title: நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா - 10
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

kothaisuresh

Member
Joined
Jun 19, 2024
Messages
80
ஒரு வழியா கல்யாணம் நிச்சயமாயிடுத்து, ஆனா போன உயிர் யாரோடது?
 

VPR

Member
Joined
Jun 21, 2024
Messages
62
ஜானகி தேவி
ரகுவரனைத் தேடி
ஒரு படி காஃபி கலந்து வந்தாள் (பேக்கிரவுண்ட் மியூசிக் நீங்களே போட்டுக்கோங்க பிளீஸ்)
 
Top Bottom