• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

டெங்கு -2

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
275
கொசுக்களில் இத்தனை வகைகளா?

டெங்குவைப் பற்றிய கட்டுரை என்றதும் சுமார் முப்பது பேரிடம் 'கொசு வராமல் தடுப்பது எப்படி?' என்ற கேள்வியைக் கேட்டேன். இவர்களில் பெரும்பாலானோர் டெங்கு பாதிப்பிற்காக சிகிச்சையில் இருப்பவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள்.

ஆல் அவுட் போடுவேன், கொசுவர்த்தி கொளுத்துவேன், கொசு வலை கட்டுவேன், நகராட்சியில் இருந்து வந்து கொசு மருந்து அடிக்கச் சொல்வேன் என்று பல பதில்கள் வந்தன. வேப்பிலையைக் கொளுத்தி வைத்து புகை மூட்டம் போடுவது, ஓடோமாஸ் தேய்ப்பது போன்ற பதில்களும் வந்தன.
இவற்றில் கொசுக்களை ஒழிக்க சிறப்பான வழி எது? கட்டுரையின் இறுதியில் இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

உலகின் மோசமான நோய்க் காரணிகளுள் கொசுக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. உலகின் பழமையான நோய்களுள் ஒன்று என்று மலேரியா நோயைக் குறிப்பிடுகின்றனர். மாபெரும் படை, பலகட்ட பேச்சுவார்த்தைகள், கொடும் ஆயுதங்கள் இவற்றால் நிறுத்த முடியாத பெரும்போர்களைக் கூட கொசுக்கள் நிறுத்திவிட்டதாக வரலாறு கூறுகிறது. அப்படி படைகளையே நடுங்கச் செய்யும் ஆற்றல் மிக்கவை கொசுக்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை போன்ற சில பகுதிகளில் அனாஃபிலிஸ் வகைக் கொசுக்கள் மலேரியாவைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன. கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானைக்கால் வியாதி அதிகம் காணப்படுகிறது. இதைப் பரப்புபவை க்யூலக்ஸ் (Culex) கொசுக்கள்.

புறநகர்ப் பகுதிகளில் குண்டு குண்டான கொசுக்களைப் பார்த்திருப்பீர்கள். காலை 6 மணி, மற்றும் மாலை 6 மணி.. இந்த நேரங்களில் படையாக வீட்டுக்குள் வரும். பகல் முழுவதும் கூட ஒன்றிரண்டு கொசுக்கள் சுற்றிச் சுற்றி வந்து கடிக்கும். இவ்வகைக் கொசுக்கள் க்யூலக்ஸ் வகையைச் சார்ந்தவையே.

க்யூலக்ஸ் கொசு கடித்தால் அதிக வலி ஏற்படுவதாலும், 'ஙொய்' என்ற ஒலியைத் தரும் அதன் சிறகடிப்பு எரிச்சலைத் தருவதாலும், விரட்டி விட்டாலும் போகாமல் சுற்றிச் சுற்றி வந்து கடித்தே தீருவேன் என்று இருப்பதாலும் இவற்றிற்கு தொந்தரவுக் கொசு (nuisance mosquito) என்ற பெயர். சில ஊர்களில் இந்தக் கொசுக்கள் மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

டெங்கு நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் (yellow fever) நோய்களையும் பரப்பும் காரணிகளாக (vectors) இருக்கின்றன. கொசுக்கள் தூதுவர்களாக இருந்தாலும் நோய்க்கான அடிப்படைக் கிருமி ஒரு வைரஸ்ஸாகவோ அல்லது ஒட்டுண்ணியாகவோ இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட ஒருவரைக் கொசுக்கள் கடிக்கும்போது வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் கொசுக்களின் உடலுக்குள் புகுந்து கொள்கின்றன. அங்கு அவை எண்ணிக்கையில் பெருகி கொசுவின் உணவுக் குழாயை அடைத்துக் கொள்கின்றன. கொசுவானது அடுத்த மனிதனைக் கடித்து அவன் இரத்தத்தை உறிஞ்சும் போது அடைத்துக் கொண்ட கிருமிப்பந்தினை வெளியே உமிழ்ந்து அடுத்த மனிதனுக்குள் செலுத்தி விடுகிறது. இப்படித்தான் ஒரு மனிதரிடமிருந்து அடுத்த மனிதனுக்கு நோயைப் பரப்பும் செயலை செவ்வனே செய்கின்றன கொசுக்கள்.

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆப்பிரிக்கா கண்டத்தில் குறிப்பாக தான்சானியா நாட்டில் மட்டும் இருந்து வந்த சிக்குன்குனியா நோய் கடந்த பதினைந்து பதினாறு வருடங்களாக இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளில் காணப்படுகிறது. ஒரு நாட்டில் ஒரு கண்டத்தில் மட்டும் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து உலகெங்கும் வியாபித்து நிற்க பல காரணங்கள் உள்ளன. அந்த நோய்க்கிருமிக்குத் தேவையான உணவு, தட்பவெப்பநிலை, வாழிடம் இவை எங்கு இருந்தாலும் அந்த நுண்ணுயிரி அங்கே தங்கி விடும். புவி வெப்பமயமாதல் மற்றும் பரவலாகிவிட்ட அயல்நாட்டுப் பயணங்கள் இவையும் இத்தகைய பரவலுக்குக் காரணம். மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டால் தான் தங்கள் நாட்டிற்குள் வரமுடியும் சொல்லும் நாடுகளும் உண்டு.

தொற்றுக்களால் ஏற்படும் பெரும்பாலான வியாதிகளின் பிரதான அறிகுறி காய்ச்சலாக இருக்கிறது. அதனால் எந்த நோய் முதன்முதலில் ஒரு பகுதியில் பரவினாலும் முதலில் அது மர்மக் காய்ச்சல் என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. அதன் பின் அந்த மர்மக் காய்ச்சலின் காரணியை, தன்மையை அறிய பல ஆய்வுகளும் பரிசோதனைகளும் நடக்கின்றன. எங்கள் மாவட்டத்தில் 2006ஆம் ஆண்டு சில பகுதிகளில் கை, கால் முட்டி வீக்கத்துடன் காய்ச்சலும் வந்து பலரையும் முடக்கிப் போட்டது. அதன்பின் அந்தக் காய்ச்சல் பக்கத்து ஊர்களுக்கும் வேகமாகப் பரவி நிறைய பேரை பாதிப்புக்கு உள்ளாகியது. அந்த நோய் பாதித்த மக்களின் ரத்தத்தை சேகரித்து புனே தேசிய வைரஸ் நோய் ஆய்வு மையத்துக்கு (National virology institute, Pune) அனுப்பினோம். வழக்கமாக எந்த நோய் அதிகம் பரவினாலும் சில தடுப்பு முறைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும்.‌ நீர் சேகரிப்புத் தொட்டியில் க்ளோரின் கலப்பது, வீடுகளில் கொசுப்புழுவுக்கான மருந்து தெளிப்பது போன்றவை பரவலாகத் தொடங்கப் பட்டன.

எந்த நோய் வந்தாலும் முதலில் சுயமருத்துவம் செய்வது நம் மக்களின் ரத்தத்தில் ஊறிய வழக்கம். இந்த நோய் வந்த போதும் அப்படித்தான் பலர் மெடிக்கல் ஸ்டோர்களில் 'செட்டு மாத்திரை' என்றழைக்கப்படும் மூன்று அல்லது நான்கு மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை வாங்கி விழுங்கினார்கள். இந்த 'செட்'டில் ஒரு ஸ்டீராய்டு, ஒரு அதிதீவிர வலிநிவாரணி, ஒரு ஆன்டிபயாட்டிக் இவற்றைப் போட்டு வைத்திருப்பார்கள். அதனால் பலருக்கு இரைப்பையில், குடலில் ஓட்டை விழுந்தது. அந்தக் காலகட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட எங்கள் சிறுநகரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் குடலில் ஓட்டை விழுந்து மூன்று பேராவது அவசர அறுவை சிகிச்சைக்கு உள்ளானார்கள்.

புனேவுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் அந்த மர்மக் காய்ச்சலை சிக்குன்குனியா என்று அடையாளப்படுத்தின. ஏற்கனவே துவங்கியிருந்த கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து நோயின் தன்மை, அதன் போக்கு, அதற்கான மருத்துவம் இவற்றை எடுத்துச் சொல்லி கொசு ஒழிப்பிற்கு சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

கொசுவால் ஒரு மர்ம நோய் பரவுகிறது என்று அறிந்தவுடன் எந்தக் கொசுவை பார்த்தாலும் பயம் வருவது இயல்பு தான். ஏடிஸ் கொசு பகலில் தான் கடிக்கும், மிகவும் சிறிய அளவில் இருக்கும். அதன் கடியால் வலியும் அதிக அளவில் ஏற்படாது. கடித்ததே தெரியாமல் கடித்து விட்டுப் போய்விடும். அதன் நகர்வும் ஸிக் ஸாக் (Zig Zag) வடிவில் மிக மெதுவாக இருக்கும். ஏடிஸ் கொசுவின் கால்களில் புலியைப் போல கருப்பும் வெள்ளை நிறமும் மாறி மாறி வருவதால் அவற்றை டைகர் மொஸ்க்கிடோஸ் என்றும் அழைப்போம். அதேபோல் கொசு முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களிலும் (larva) அவை நீரில் நீந்தும் தன்மையிலும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும்.

மேன்ஸனாயிட்ஸ் என்ற கொசுவும் நம் நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளில், இலைகளில் இருக்கும் சாறுகளை உண்டு வாழும் கொசு இது. இது கடித்தால் சில சமயம் யானைக்கால் வியாதி வரக் கூடும்.

புதிதாக ஒரு ஊருக்குச் செல்லும்போது பழக்கமற்ற கொசு கடிக்க நேர்ந்தால் மேலெல்லாம் அரிப்பும் சிறு கொப்பளங்களும் ஏற்படும். (Mosquito bite allergy). குழந்தைகளில் இது பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.

நோய்க் காரணியைக் கண்டுபிடிப்பதும் நோய்த்தடுப்பு மற்றும் ஒழிப்பும் பொது சுகாதாரத் துறையின் வேலைகள். ஒரு புதிய நோய் பரவும் போது மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்தத் துறையின் ஆகப்பெரிய சவால். இந்தக் கொரோனா காலத்திலும் கூட சுகாதாரத் துறையின் நடவடிக்கைகள் மக்களின் பயத்தாலும் சமூக வலைதள வதந்திகளாலும் பெருமளவு பாதிக்கப்பட்டன. சிக்குன்குனியா பரவிய காலகட்டத்தில் ஆய்வுக்காக நாங்கள் சென்றிருந்த ஒரு ஊரில், 'எல்லாருக்கும் வலி ஊசி போட்டால் தான் வெளியே விடுவோம்' என்று எங்களைச் சூழ்ந்து சிறைப்பிடித்த கதையும் நடந்தது. இன்னொரு ஊரில், 'எங்கள் சமுதாயக் கட்டுப்பாட்டின் படி அன்னியரை உள்ளே நுழைய விடமாட்டோம்' என்று கூறி சுகாதாரத்துறையினரைத் தடுத்து அதனால் பெருவாரியான மக்கள் கஷ்டப்பட்டதும் நடந்தது.

பயனற்று வீதிகளில் கிடக்கும் உரல்களை, செக்குகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் சென்றபோது, எங்கள் பரம்பரை சொத்தை நீ எப்படி தொடலாம் என்று அரிவாளைத் தூக்கிக்கொண்டு துரத்திய கதைகளையும் கேள்விப்பட்டோம். இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம். கொசுக்களை ஒழிக்க சிறந்த வழிமுறை எது? முதலில் கூறப்பட்ட பதில் எதுவுமே சிறந்த வழிமுறை இல்லை. கொசு உருவாகும் வாய்ப்பு உள்ள வாழ்விடங்களை ஒழிப்பதே சிறந்த வழிமுறை. தண்ணீர் தேங்காமல், சுகாதாரத்துடன் வாழ்ந்து கொசுவை நம் திசை பக்கமே எட்டிப் பார்க்க விடாமல் செய்வது ஆல் அவுட், புகை அடிப்பது இவை எல்லாவற்றை
யும் விட சிறந்தது தான் அல்லவா?
 

Author: SudhaSri
Article Title: டெங்கு -2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom