• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

செல்ல நாய்க்குட்டி!

siteadmin

Administrator
Staff member
Joined
Jun 18, 2024
Messages
88
செல்ல நாய்க்குட்டி!

கண் பரிசோதனைக்காக என்னிடம் சில முறை வந்திருந்த முதிய பெண்மணி அவர். எப்போதும் புன்னகை முகமாக இருப்பார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. பார்க்கும்போதெல்லாம் என் குழந்தைகள், குடும்பம், நாய்க்குட்டி எல்லாவற்றையும் பற்றிப் பிரியமாக நலம் விசாரிப்பார். மருத்துவர் என்ற முறையில் நான் கூறும் அறிவுரைகளை அப்படியே ஏற்றுக் கொள்வார். தன் நலன் பற்றி ஐந்து நிமிடம் மட்டுமே பேசுபவர் தன் கணவரைப் பற்றிப் பதினைந்து நிமிடங்களாவது பேசுவார்.

"என்ன செய்யிறது மேடம்? உடம்பை கவனிக்கவே மாட்டேங்கிறார். சுகர் பிரஷர் எல்லாம் இருக்கு. ஆனா வாயக் கட்டுப்படுத்துறதே இல்ல.. இன்னின்ன மாத்திரை எல்லாம் சாப்பிடுறார். நல்ல மாத்திரை தானே? வீட்ல பார்த்துப் பார்த்து சமைச்சாலும் கடையில போய் வடை, காபி அடிக்கடி குடிக்கிறார். படுத்துக்கிட்டா யாரு பார்க்கிறது? எங்களுக்கு யார் இருக்கா?" என்று வருத்தப்படுவார்.

அந்தப் பாட்டி சற்று பருமனாக குள்ளமாக இருப்பதால் மூட்டுவலியும் சேர்ந்துகொள்ள, நடக்கவே கஷ்டப்படுவார். உதவிக்கு ஒரு பணிப்பெண்ணை அழைத்து வருவார். எழுந்து நடக்கக் கூட உடன் வரும் பெண் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை, "தப்பா நினைச்சுக்காதீங்க. முடியல" என்பார்.

அவர் சமீபத்தில் ஒருநாள் என் நம்பரைப் பிடித்து ஃபோனில் அழைத்திருந்தார். "தொந்தரவுக்கு மன்னிக்கணும்மா.. உங்க நம்பர் வாங்கவே கஷ்டப்பட்டுட்டேன். என்னை தெரியுதா?" என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், "ஐயா தவறிட்டாரும்மா. ஆறு மாசம் ஆச்சு. நான் இப்ப சென்னைல இருக்கேன். அக்கா பசங்க இங்க கூட்டிட்டு வந்தாங்க. அவங்க வீட்ல இடவசதி இல்ல.. முதியோர் இல்லத்துல சேத்தாங்க. அதுவும் ஒத்துக்கல. இப்ப தனியா வீடு எடுத்துத் தங்கியிருக்கேன். ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்றார்.

"சொல்லுங்க" என்றேன் நான். "ஐயா இறந்ததுல சைக்யாட்ரி பேஷன்ட் மாதிரி ஆயிட்டேன்மா.. தூங்காமப் புலம்பிக்கிட்டிருந்தேன். சுகர், பிரஷரும் கூடிருச்சு. இங்க ஒரு டாக்டரைப் பாத்தேன். ஹார்ட் பிராப்ளம் வராம இருக்கவும் மாத்திரை குடுத்துருக்காங்க.." என்றவர்,

தான் சாப்பிடும் மாத்திரைகளை வரிசையாகக் கூறினார். "இதெல்லாம் நல்ல மாத்திரை தானாம்மா? சாப்பிடலாமா?" என்றார் முன்புபோலவே. "அவசியம் தான். சாப்பிடலாம்" என்றேன். பின் திடீரென அழ ஆரம்பித்தவர், "தப்பா நினைக்காதீங்கம்மா. மாத்திரை வாங்கக் கூடிய அளவு கூட வசதி இல்லை. நீங்க உதவி செய்ய முடியுமா?" என்றார். ஓரிரு முறை மட்டுமே சந்தித்த அவர், அவ்வளவு தூரம் இருந்து பேசுகிறார், அதுவும் அழுகிறார் என்றவுடன் எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. சரி ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு அவரை சமாதானப்படுத்தி விட்டு உள்ளூரில் விசாரித்தேன்.

வசதியாகத் தானே வாழ்ந்தார்? என்ன ஆயிற்று? அவரது கணவர் எப்படி இறந்தார்? என்று கேட்க, கிடைத்த பதில்கள் என் வருத்தத்தை மேலும் அதிகரித்தன. ஏற்கனவே பாட்டி சொல்லியிருந்தது போல அந்தத் தாத்தா கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை, சீரற்ற மருத்துவங்கள் இவற்றால் நீரிழிவு, இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு வந்து மரணம் அடைந்து விட்டாராம். தாத்தாவுக்குப் பெரிய வீடு இருக்கிறது. நிறைய சம்பாதிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் பென்ஷன் கிடையாது. சொந்தத் தொழில் தான். தாத்தா-பாட்டி இருவருமே
அதிக செலவாளிகளும் கூட. பாட்டிக்கு உலக அறிவும் மிகக் குறைவு. திடீரென்று தாத்தா மறைந்ததும் பாட்டிக்கு ஒன்றுமே ஓடவில்லை. தாத்தாவின் சகோதரர்கள் அருகிலேயே இருக்கிறார்கள், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. தாத்தா பெரிய வீட்டை யாருக்கும் எழுதி வைக்காமலேயே போய்விட, பாட்டியின் இறப்புக்குப் பின் அதைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று தாத்தாவின் உடன்பிறந்தவர்கள் திட்டம் போட்டு இருக்கிறார்களாம்.

தாத்தா இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்து விட்டுச் சென்றுவிட்டார். ஒன்று தன் உடல் நலனைக் கவனிக்காதது. இன்னொன்று, பாட்டிக்கு என ஒரு வருமானத்தை ஏற்படுத்தாமல் போனது. கொஞ்சம் சிந்தித்திருந்தால் வீட்டின் ஒரு பகுதியை விற்றோ, வாடகைக்கு விட்டோ ஒரு தொடர்வருமானம் வரும்படி செய்திருக்கலாம். அல்லது தம்மையும் மனைவியையும் எதிர்காலத்தில் கவனிப்பவருக்கு இந்த வீடு என்று எழுதி வைத்திருக்கலாம்.

தெரிந்தவர்கள் இன்னொன்றும் சொல்கிறார்கள். பக்கத்துத் தெருவுக்குப் போனால் கூட ஆட்டோ, நெனச்ச நேரம் கடையில சாப்பாடுன்னு இருந்த காசையெல்லாம் காலி பண்ணிட்டு போயிட்டாரு. சின்ன பிரச்சனைன்னாலும் பெரிய ஹாஸ்பிடலுக்குப் போய் பார்ப்பார். ஆனால் எதையும் சரியா கடைபிடிக்க மாட்டார் என்றும் கூறுகின்றனர்.

சொந்தமான பெரிய வீடு இருக்க, மருந்துக்குக்கூட காசில்லாத நிலையில் சட்ட அறிவும் இல்லாத பாட்டியை விட்டுச்சென்ற தாத்தாவைக் குறை சொல்வதா, இல்லை இந்த சமூகத்தைக் குறை சொல்வதா என்று தெரியவில்லை. பாட்டி, தாத்தாவின் ஆரோக்கியம் குறித்து அத்தனை நாட்கள் பயந்தது உண்மையாகி விட்டது.

இது இந்த ஒரு வீட்டில் மட்டும் நடந்தது அல்ல. உலகெங்கும் பல்வேறு வீடுகளில் நடக்கும் விஷயம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் படித்தவர்களே மறந்து விடுகிறார்கள். இந்தத் தாத்தாவாவது மாரடைப்பு வந்து விரைவில் இறைவனடி சேர்ந்து இருக்கிறார். நீரிழிவும் உயர்ரத்த அழுத்தமும், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு போன்ற நெடுநாளைய வியாதிகளை ஏற்படுத்தி படுக்கையில் தள்ளி விட்டால் இன்னும் மோசம். ஒரு நாளில் இந்த எல்லாவிதமான நோய்களையும் நாங்கள் சந்தித்து வருகிறோம். தற்போதுதான் நீரிழிவு நோயைக் கண்டு பிடித்த ஒருவர், பத்து வருடங்களாக நீரிழிவு இருக்கிறது எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்று கூறும் ஒருவர், 'எனக்கு எப்பவுமே சுகர் 250, 280 தான் இருக்கும். ஆனா ஒண்ணும் செய்யாது, கண்ட்ரோல் எல்லாம் கிடையாது' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் ஒருவர், வாழ்நாளெல்லாம் விரும்பியதைச் சாப்பிட்டு இஷ்டப்படி இருந்ததால் இப்போது எதுவுமே சாப்பிட முடியாமல் டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் ஒருவர், சுயநினைவற்ற நிலையில் கை கால்கள் வீங்கி உறவினர்களால் கொண்டுவரப்பட்ட ஒருவர் இப்படிப் பலரைப் பார்க்கிறோம்.

இதில் பிந்தைய நபர்கள் தாங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ளவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் சொல்ல முடியாத சிரமங்களுக்கு ஆளாக்குகின்றனர். மிக நல்ல மனிதர், அலுவலகத்தில் எல்லாருக்கும் வலிந்து சென்று உதவுபவர் என்ற நற்பெயரைப் பெற்ற ஒருவர் தன் காலில் சர்க்கரை நோயால் ஏற்பட்ட தீராத புண்ணினால், அது ஏற்படுத்திய துர்நாற்றத்தால் அனைவரின் வெறுப்புக்கும் பாத்திரமானார்.

எங்கள் துறையிலேயே மேலதிகாரியாக இருந்த ஒருவர். அவரும் மருத்துவர்தான். நன்கு படித்து விவரம் தெரிந்தவர். ஆனால் மேலே கூறியது போல சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்து, வேறு ஏதோ காரணத்தால் குடும்பமும் ஒதுக்கிவிட வெளி மாவட்டத்தில் இருந்து தனியே வந்து எங்கள் மாவட்டத்தில் பொறுப்பேற்றார். சர்க்கரை நோயால் உடல் முழுவதும் பல பாதிப்புகள்.

தோல் மருத்துவரைப் பார்த்தால் தன் தோல் சம்பந்தமான சந்தேகம் கேட்பார். என்னைப் பார்த்தால் கண் தொடர்பாகக் கேட்பார், எலும்பு மருத்துவரைப் பார்த்தால் தன்னால் நடக்க இயலாததைக் குறித்து விசாரிப்பார். ஆனால் யார் கூறும் ஆலோசனையையும் கடைப் பிடிக்க மாட்டார். அலுவலகத்திலேயே ஒரு தடுப்பு ஏற்படுத்தி அங்கேயே தங்கி வந்தார். அலுவலக பியூன், ஆயா முதலியவர்கள் கூட அவருக்காக உப்பின்றி இனிப்பின்றி உணவு வாங்கித் தருவார்களாம், இவர் அலுவல் நிமித்தமாகத் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் எனக்கு கொஞ்சம் ஸ்வீட் வாங்கித் தாங்களேன் என்பாராம். இப்படி இருந்தவர் பதவி உயர்வு கிடைத்துப் பெருநகரம் ஒன்றுக்குச் சென்றார். சிறு நகரத்தில் இருந்தது போன்ற மனித நேயம் சார்ந்த கவனிப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை போலும். தங்கியிருந்த ஒற்றை அறையில் தனியாகவே உயிர் விட்டிருக்கிறார்.

அவருக்கு என்ன நடந்தது? சர்க்கரை அளவு கூடியதா, குறைந்ததா? மாரடைப்பு வந்ததா, சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து விட்டதா என்று யாருக்குமே தெரியவில்லை. துர்நாற்றம் வீசிய பிறகே அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்ததாகவும் கேள்வி. இப்படி மருத்துவத் துறையில் உள்ள மனிதருக்கே இந்த நிலையா என்பதை நினைக்க மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்த அலுவலகத்தில் இன்றும் அவருக்காக உருவாக்கிய தடுப்பு அப்படியே இருக்கிறது. அது அவரது துயர நிலையை எங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

நான் எப்போதும் புதிய சர்க்கரை நோயாளிகளிடம் ஒன்று கூறுவேன், சர்க்கரை (இரத்த அழுத்தமும் கூட) என்பது ஒரு நாய்க்குட்டி மாதிரி. நல்லபடியாக வளர்த்தால் காலத்துக்கும் நம் காலடியில் வாலாட்டிக் கொண்டே இருக்கும், முறையாக வளர்க்கவில்லை என்றால் நம்மையே கடித்துக் குதறி விடும் என்று. உங்கள் செல்ல நாயை நீங்கள் எப்படி வளர்க்க விரும்புகிறீர்கள்? எப்போதும் உங்கள் சொல் பேச்சு கேட்பது போலவா, அல்லது உங்களையே முடக்கிப் போடும் அளவுக்கா என்பது உங்கள் கையில்!
 

Author: siteadmin
Article Title: செல்ல நாய்க்குட்டி!
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom