• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

குழந்தை திருமணம்

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
275
சிறகு வெட்டப்பட்ட சிறு பறவைகள்...


இரண்டு வாரங்களுக்கு முன்பு காலை செய்தித்தாளில் ஒரு செய்தியை மேலோட்டமாகப் படித்தேன். பதினைந்து வயதே நிரம்பிய பத்தாம் வகுப்புப் பெண்ணுக்குத் திருமணம், உறவினர்கள் கைது என்று இருந்தது. அவ்வப்போது இப்படிப்பட்ட செய்திகளைக் கண்ணில் பார்த்திருந்ததால் பக்கத்தைப் புரட்டி விட்டேன். அன்று எங்கள் மருத்துவமனைக்கே அந்தப் பெண் உடல் பரிசோதனைக்காக அழைத்து வரப் பட்டிருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொண்ட இளைஞனும், இரு வீட்டாரின் பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு அவர்களும் உடல் பரிசோதனைக்காக வேறு பிரிவுக்கு வந்திருந்தார்கள் போலும்.

அழைத்து வந்த போலீஸார் சில தகவல்களைக் கூறினர். அவர்களுக்கு ஒரு வாரம் முன்பே திருமணம் முடிந்திருக்கிறது. மணமகன் வேலை செய்யும் ஊருக்கு அழைத்துச் சென்று வீடெல்லாம் பார்த்துக் குடி வைத்து விட்டார்களாம். இதற்கிடையில் அவர்கள் குடும்பத்திற்கு வேண்டாதவர்கள் யாரோ சமூக நலத்துறைக்குத் தகவல் சொல்ல, அவர்கள் போலீசுக்கு சொல்லி, பலரைக் கைது செய்து அழைத்துச் சென்று விட்டார்கள். 18 வயது நிரம்பாத பெண்ணைத் திருமணம் செய்வது குற்றம் என்கிறது 2006 குழந்தை திருமணத் தடுப்பு சட்டம். அத்தகைய பெண்ணுடன் உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை 2017ல் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

முதல் பத்தியில் கூறப்பட்ட சம்பவம் குறித்து, "அந்தப் பெண் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டாள்.. மணமகனும் உறவினர்களும் விரைவில் ஜாமீனில் வெளியே வந்து விடுவார்கள். அதன் பின் அவளும் எப்படியாவது வெளியே வந்து எப்போதும் போல் அவர்கள் சேர்ந்து தான் இருப்பார்கள், இடையில் வழக்குச் செலவு, அலைச்சல் இவை தான். வேறு ஒன்றும் ஆகாது.. பார்த்துக் கொண்டே இருங்கள், அடுத்த வருடம் இதே மருத்துவமனைக்குத் தான் அந்த பெண் பிரசவத்துக்கு வரப் போகிறாள். நாம் தான் 'டீன் ஏஜ் பிரக்னன்சி- ஹை ரிஸ்க்' என்று பதறிக்கொண்டே பேறுகாலம் பார்க்கப் போகிறோம்" என்று கூறினார் ஒரு மூத்த மருத்துவர். இப்படி மாதந்தோறும் பல கதைகளைப் பார்த்து, வழக்கு விசாரணைக்கு சாட்சி சொல்ல நீதிமன்றங்களுக்குச் சென்றவர் அவர். அதனால் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அவர் கூறியதைக் கேட்ட நாங்களும் தலையை ஆட்டிக் கொண்டோம்.

கஷ்டப்பட்டு பல முயற்சிகள் செய்து, கல்வித் திறனை அதிகப்படுத்தி, ஓரளவுக்கு முன்னேற்றப் பாதையில் நடை போட்டுக் கொண்டிருந்த, சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்திலேயே இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது என்றால் இன்னும் பின்தங்கிய மாநிலங்கள், உலகநாடுகளில் பெண்களின் நிலை? அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள், கல்விச் சலுகைகள், வேலை வாய்ப்புகள் போன்றவற்றை வழங்கி அனைத்துப் பெண்களையும் பள்ளியிறுதி வரையாவது கொண்டு செல்ல பல நூறு கைகள் சேர்ந்து உழைத்திருந்தன. இப்போது அனைத்தையுமே காலம் புரட்டிப் போட்டு விட்டது.

நேற்று சந்தித்த அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் ஒருவர், "நம்மால நம்ம வீட்டுக் குழந்தைகளையே சமாளிக்க முடியலையே.. எங்க காலேஜ் பசங்க எல்லாம் எல்லாரும் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. இந்த வருஷமும் ஒழுங்கா கிளாஸ் நடக்குமான்னு தெரியல.. ஆன்லைன் கிளாஸ் நடத்துறோம் தான். ஆனா யாருமே அட்டன்ட் பண்ண மாட்டேங்கறாங்க. மறுபடியும் எப்படி அவங்கள வழிக்குக் கொண்டு வர்றது, கல்வித் தரம் எவ்வளவு பாதிக்கும், அவங்க எதிர்காலத்தை நினைச்சா வருத்தமா இருக்கு" என்றார்.

இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் கொரோனா காலத்தில் முளைக்கத் துவங்கிவிட்ட குழந்தைத் தொழிலாளர் முறையைப் பற்றிப் பேசியிருந்தோம். அதன் நீட்சியாக இப்போது சிறு பிராயத்துத் திருமணங்களைப் பற்றியும் பேச வேண்டியதாகிவிட்டது.

இந்தக் காலம் என்றில்லை, எந்தக் காலத்தில் எடுத்துக்கொண்டாலும் சிறுவயதுத் திருமணம் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை தான் என்பதில் ஐயமில்லை. முழு உடல் வளர்ச்சியை அடையாத ஒரு பெண் குழந்தை, துள்ளித் திரிய வேண்டிய காலத்தில் பெரும் பொறுப்புகளைத் தலையில் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறாள். பொறுப்புகள் மட்டுமல்ல, சீக்கிரமாகவே வயிற்றில் கருவையும் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை வெளியுலகம் அவளுக்கு ஏற்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகளில் இளவயதிலேயே பாலியல் கல்வி வழங்கப்பட்டு, உடலுறவு குறித்த நேரடி விவாதங்களும் சாத்தியமாகின்றன. 14 அல்லது 15 வயதில் ஒரு பெண் தன் முதல் உடலுறவை எதிர்கொள்வது அங்கு சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. அது சரியா தவறா என்பது ஒரு புறமிருந்தாலும், அவளுக்குக் கர்ப்பத்தடை முறைகளும் நலக் கல்வியும் பயிற்றுவிக்கப்படுகின்றன. நினைத்ததைச் செய்யும் சுதந்திரமும் இருக்கிறது.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் திருமணமான அடுத்த வருடமே குழந்தை பெற்று விட வேண்டும் என்ற கண்ணுக்கு தெரியாத விதி தலைக்குமேல் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெண் தன் உடல் அளவில் அதிகபட்ச உயரத்தை, எலும்புகளின் வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும் வயது 21. அதற்கு முன்பாகவே இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்று, 'எப்படியாவது இந்த முறையாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விடுங்களேன்' என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இருபது வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் செய்வதிலுமே சட்டப்படி சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதனால் அவள் இன்னும் சோதனைகளுக்கு ஆளாகிறாள்.

பதின்வயது கர்ப்பங்களில் துவக்கத்தில் கருச்சிதைவுகள் அதிகம் ஏற்படுகின்றன. இடுப்பெலும்பு விரிவு கொடுக்காத பருவத்தில் கர்ப்பம் என்பதால் பெரும்பாலான சிறுமிகளுக்கு சுகப்பிரசவம் நடப்பதில்லை. சிசேரியன், அதற்குப் பின்னான உடல் உபாதைகள் என்று அவதிப்படுகிறாள். அவளது சமவயதுத் தோழிகள் கல்லூரியின் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் இருக்கையில் பத்து வயது அதிகரித்தாற் போல் ஆகி விடுகிறாள். உடல்நலம் மட்டுமில்லை, மனநலமும் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறது. 35 வயதிற்கு மேல் வரும் மைக்ரேன், மூட்டுவலி, இடுப்புவலி இவற்றால் 25 வயதிலேயே அந்தப் பெண் அவதிப்படுகிறாள்.

சிறு வயதில் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண் கல்வியை முழுவதுமாக முடிக்க முடியாமல் பொருளாதார சுதந்திரம் அற்றவளாக ஆகி விடுகிறாள். தன் தேவைகளுக்குக் கூட பிறரை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள். பெற்ற குழந்தைகளை வளர்ப்பதிலும் அவளுக்குப் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. சாதாரண வயிற்றுப் போக்கு, காய்ச்சல் இவற்றை முறையாக கவனிக்க இயலாமல் குழந்தையைப் பறிகொடுக்கும் சோகமும் சில சிறுமிகளுக்கு நடக்கிறது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் சிறுமிகள் தாயாகும் இடங்களில் 60 சதவீதம் அதிகரிப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இன்னொரு விஷயமும் பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது எல்லா இடங்களிலும் ஆண்களை விட பெண்கள் அதிகம் படித்து விடுவதால், உயர்ந்த வேலைக்கு போய்விடுவாள். அதனால் பள்ளிக்கூடம் படிக்கும் போதே உறவுக்குள் பெண்ணைப் பார்த்து 'பிடித்துக் கொண்டு' போய் விடுகிறார்கள் என்பது தான் அந்தப் பேச்சு. எங்கள் அருகில் உள்ள சில முன்னேறிய ஊர்களிலேயே நடப்பதாகப் பேசிக் கொண்டார்கள். பெண்கள் படிப்பு அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை நினைத்து மகிழ்வதா, இல்லை இவள் படித்து விட்டால் நம் மகனுக்கு இவளைத் திருமணம் செய்ய வைக்க முடியாது என்று நினைத்து விரைவிலேயே அவளைப் பெண் கேட்டு வருபவர்களை நினைத்து கோபப்படுவதா என்று தெரியவில்லை.

இருபது வருடங்களுக்கு முன், எங்கள் மருத்துவக் கல்வியின் போது, ஒரு பதின்ம வயது பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடாகியிருந்ததை அறிந்தோம். அவள் தந்தையிடம், "ஏன் இப்பவே கல்யாணம் பண்ணிக் குடுக்குறீங்க.. அவ உடம்பு மனசெல்லாம் இன்னும் வளரனும்ல.. உங்க பிள்ளை தானே?" என்று நாங்கள் கேட்டதற்கு, அவர், "வேத்து சாதிப் பய கூட ஓடிப் போயிட்டான்னா நீங்களா காப்பாத்திக் கூட்டிட்டு வருவீங்க? உங்க வேலையப் பாருங்க" என்றார். இத்தனைக்கும் ஓடிப் போய்விடலாம் என்பது அவருடைய பயம்தான். அந்த பெண்ணுக்குக் காதல் விவகாரம் எல்லாம் இல்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் நிலை அப்படியேதான் இருக்கிறது. கொரோனா அசுரனும் வந்து மீண்டும் பெண்களை பின்னோக்கி இழுக்க முயல்கிறானோ என்று இத்தகைய சம்பவங்கள் வருத்தம் கொள்ள வைக்கின்றன. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் வருவது போல திட்டமிடப்பட்ட பல குழந்தைத் திருமணங்கள் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்படுகின்றன. அப்படி நிறுத்தப்படுவதன் முக்கிய நோக்கம், அந்தப் பெண்ணின் நலத்தை முன்னிறுத்துவதாய் அல்லாமல் பழைய பகையைத் தீர்ப்பதற்காய் அமைவதும் முரணான விஷயம் தான். உண்மை விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைத் திருமணங்கள் திட்டமிடப்படாமலே தடுப்பது
தானே உண்மையான மாற்றம்?
 

Author: SudhaSri
Article Title: குழந்தை திருமணம்
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom