Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 47
அத்தியாயம் – 7
‘நேத்ராவை ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற வேகம் ஆதிநந்தனுக்குள் பெருகியது. அதே சமயத்தில் அப்போது சுனில் கையில் ட்ரேயுடன் அவர்களை நோக்கிச் செல்வது தெரிந்தது.
விரைந்து அவனருகில் சென்று, “யாருக்கு?” எனக் கேட்க, “அருண் சாருக்கு. மேடம் கொண்டு வரச் சொன்னாங்க” என்றான்.
‘இப்படியே எதையாவது கொடுத்து மயக்கப் பார்க்கிறாளோ, இல்லை, அவன் வாழ்க்கையையே மாய்க்கப் பார்க்கிறாளோ?’ அவன் மனம் எரிமலையாய்க் கொந்தளித்தது.
“அதை இப்படிக் கொடுங்க. நான் தந்திடறேன். நீங்க போய் மத்த வேலையைப் பாருங்க” என அதைக் கைப் பற்றிய ஆதிநந்தன் அவர்கள் அருகில் நெருங்கினான்.
அவளைத் தீப்பார்வைப் பார்த்தவாறே எடுத்துச் சென்ற பழச்சாறை அருணிடம் தந்தான். நேத்ரா அவனைப் பார்த்தும் பார்க்காததைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அது இன்னுமே ஆதிநந்தனின் உள்ளக் குமுறலைப் பெரிதாக்கியது.
சற்றுமுன்னரே அருணிடம் தான் ஒட்டுக் கேட்டதைச் சொல்லிவிட்டாள் நேத்ரா. அவளுக்கு எதையும் மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கும் பழக்கமில்லை. சம்மந்தப்பட்ட நபரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வாள். அதுவே அவர்களிடம் அவள் கொண்டிருக்கும் உறவுக்குத் தரும் மரியாதை என்ற எண்ணம் கொண்டவள்.
“அருண், நீங்க எதற்காக என்னைத் தப்பா நினைச்சீங்க என எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பத்தின விஷயத்தை என்கிட்டே கேட்டுத் தெளிவு பெறாம மூணாம் மனுசனான உங்க ஃப்ரெண்ட்கிட்ட சொல்லறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை. அதுவும் உங்களை என் உண்மையான ஃப்ரெண்ட்ன்னு நினைச்சேன்” எனப் பட்டென்று மனதில் பட்டதைச் சொல்லிவிட்டாள் நேத்ரா.
அவளைப் பற்றி முழுவதுமாகத் தெரியாமல் அவளை மதிப்பிட யாருக்கும் எந்த உரிமையுமில்லை என்று சொன்னவள், அதற்காக அருண் மேல் கோபமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை என்றும் குறிப்பிட்டாள்.
யார் செய்யும் செயலுக்கும் அவர்கள் வரையில் ஏதாவது காரணம் இருக்கும் என்பதைத் திட்டவட்டமாக நம்புபவள் அவள். அதை அவளுடன் பழகிய இத்தனை நாட்களில் அவன் புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தத்தையும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.
அவள் உண்மையில் அருணை உற்ற நண்பனாகவே கருதுகிறாள். ஆகவே அவனுக்கு வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமும் வெற்றியும் மட்டுமே கிட்டவேண்டும் என மனதார வாழ்த்தி முடித்துக் கொண்டாள்.
அவள் பேசியதைக் கேட்டதும் அருணுக்கு என்னவோ போலாகிவிட்டது. ஒருவேளை அவன் தான் அவளைத் தவறாக எண்ணிவிட்டானோ என முதல் முறையாக மனதில் குற்றக் குறுகுறுப்புத் தோன்றியது. தேவையில்லாமல் அவளைக் காயப்படுத்திவிட்டோமே என்று எண்ணி, “நேத்ரா... அது வந்து...” என மேற்கொண்டு பேச முடியாமல் நிறுத்திக் கொண்டான்.
அவளிடம் என்னவென்று கேட்பது? அன்று உணவகத்தில் கேட்டிருந்தால் இவ்வளவு திணறியிருக்க வேண்டியதில்லையோ என்னவோ. இப்போது கேட்பதற்குச் சற்றும் வார்த்தைகள் புரளவில்லை. இப்படியே அதை விட்டுவிடலாம். இனி வரும் காலத்தில் அவளுடன் நல்ல முறையில் ஒரு நல்ல நண்பனாகப் பழக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான் அருண்.
பேச்சு வராமல் அருண் ஒருவித பதட்டத்தில் இருப்பதை உணர்ந்த நேத்ரா, அந்த வழியாகச் சென்ற சுனிலிடம் அவனுக்குக் குடிப்பதற்குப் பழரசம் எடுத்து வரச் சொன்னாள். ஏதாவது இனிப்பாகக் குடித்தால் அவன் தடுமாற்றம் குறையும் என்று எண்ணினாள். அதைத் தான் ஆதிநந்தன் கைப்பற்றி அருணிடம் கொண்டு வந்து சேர்த்தான்.
“தேங்க்ஸ்டா ஆதி. நீ ஏன் எடுத்துட்டு வந்த?” என அருண் நண்பன் கொடுத்ததைக் கையில் வாங்க, “தனிமை வேணும். ரூமுக்குப் போகணும்னு சொன்ன?” எனக் கேள்வியுடன் நண்பனைப் பார்த்து முறைத்தான். அவன் முறைப்பின் அர்த்தம் அருணுக்கு நன்றாகவே புரிந்தது.
அப்படியே அந்த முறைப்பை நேத்ராவின் முகத்திலும் படரவிட்டான் ஆதிநந்தன். அவனின் துளைக்கும் பார்வை அதற்குமேல் நேத்ராவை அங்கே நிற்க விடவில்லை. “கிளம்பறேன் அருண். காலையில பார்க்கலாம்” எனக் கிளம்பிவிட்டாள்.
செல்லும் அவளையே பார்த்திருந்த அருண் அவள் சற்றுத் தூரம் நகர்ந்ததும், “நான் தப்பு பண்ணிட்டேன்டா ஆதி...” என ஆரம்பிக்க, “நினைச்சேன்...” எனச் சலித்துக் கொண்டான் ஆதிநந்தன்.
“அதில்லடா...” என அவன் விளக்கம் தர முற்பட, அதைத் தடுத்து நிறுத்தியவன், “அருண், எந்த விளக்கமும் தந்து ஒண்ணும் ஆகப் போறதில்லை. தப்போ சரியோ... இனி எதுவும் மாறப் போறதில்லை. உனக்குக் காலையில கல்யாணம். அதை மட்டும் மனசுல வச்சுக்கோ” எனச் சீற்றத்துடன் சொன்னான்.
“ஆதி... எனக்குப் பயமா இருக்குடா. நான் நேத்ராவைப் பத்தி அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. ஏதாவது பண்ணிடுவாளோன்னு பயமா இருக்கு” என அருண் மேலும் பேச,
“போதும் அருண். அவளால எதுவும் கிழிக்க முடியாது. அவளைப் பத்தி இத்தோட மறந்திடு. ஆராதனா உனக்காகக் காத்திட்டு இருக்கா. அவளுக்கு நிறைய நம்பிக்கை குடுத்துட்ட. அதை மட்டும் மறந்துடாத. ஜூசைக் குடிச்சுட்டுப் போய்ப் படு” எனச் சொல்லிக் கொண்டிருக்கையில்,
“என்னப்பா அருண், இன்னும் தூங்கலையா?நேரமாகுதே” என அவன் தந்தை சற்றுத் தூரத்தில் இருந்து வினவினார்.
“இதோ கிளம்பறேன் அப்பா” எனக் கையிலிருந்ததை மடக்மடக்கென்று குடித்தவன், கிளாசை அங்கேயே வைத்துவிட்டு, “காலையில பார்க்கலாம்” என விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
“இரு நானும் வரேன்...” என ஆதிநந்தன் ஓரெட்டு வைக்க, தூரத்தில் நின்று கொண்டிருந்த தந்தை கிளம்பிவிட்டாரா எனப் பார்த்த அருண், நண்பனிடம் திரும்பி,
“இல்லடா நீ கிளம்பு. நான் நேத்ராகிட்ட பேசியே ஆகணும். பேசிட்டு அப்படியே ரூமுக்குப் போறேன். கவலைப்படாத, அப்பா-அம்மாவை கண்டிப்பா ஏமாத்த மாட்டேன்” என சுனிலுடன் பேசிக் கொண்டிருந்த நேத்ராவை நோக்கி வேகமாக நகர்ந்தான் அருண்.
‘எதற்கு இவ்வளவு பதட்டம் அவனுக்கு?’ எனச் செல்லும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதிநந்தன். அருணைப் பின்தொடர்ந்து போ என ஆதிநந்தனின் மனம் கூச்சலிட்டாலும், நண்பனைத் தொடர்ந்து சென்று அவனைச் சங்கடப்படுத்துவதற்குச் சற்றும் விருப்பமில்லை.
அதற்குப் பதிலாக நேராக நேத்ராவையே எச்சரித்துவிட்டால்? அது தான் சரி என்று அவளையே இமைக்காது நோக்கினான் ஆதிநந்தன்.
சுனிலுடன் பேசிவிட்டு தன்னறைக்குச் செல்வதற்கு ஓரெட்டு எடுத்து வைத்த நேத்ரா அருணின் குரலில் நின்று திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வை அருணைத் தாண்டி அவளையே விழிகளால் துளைத்துக் கொண்டிருந்த ஆதிநந்தனிடம் தஞ்சமடைந்தது.
நடமாட்டம் சற்று மட்டுப்படும் வரையில் காத்திருக்கலாம் என அங்கிருந்து நகர்ந்தான் ஆதிநந்தன்.
சற்றுநேரம் மற்ற நண்பர்களுடன் அமர்ந்து பேசியவாறே மதுபானம் அருந்திக் கொண்டிருந்தான் ஆதிநந்தன். கை கடிக்காரத்தைத் திருப்பிப் பார்க்க, ஓரளவுக்கு அனைவரும் தங்கள் அறைக்குள் முடங்கியிருப்பார்கள். இது தான் சரியான தருணம் என நேத்ராவின் அறைக்கதவைப் போய்த் தட்டினான்.
‘இந்நேரத்துக்கு யார்?’ என்ற யோசனையில் கதவைத் திறந்தவள் சத்தியமாக ஆதிநந்தனை அங்கே எதிர்பார்க்கவில்லை.
அவளுக்கு அப்படியொரு தூக்கம் கண்களைச் சுழற்றியது. சிறிதுநேரமே அவளால் உறங்க முடியும். அதன்பின்னர் எழுந்து திருமணத்துக்கு உண்டான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அதுவுமில்லாமல் சரியாக உண்ணாததால் சோர்வு வேறு அவளை ஆட்கொண்டிருந்தது.
அவள் எதுவும் வாய் திறந்து பேசும் முன்னரே, “உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவிருக்காதா?” எனப் பொரிய ஆரம்பித்தான் ஆதிநந்தன்.
அவன் ஏன் திட்டுகிறான் என்று இப்போது அவளுக்குப் புரிவதைப் போலிருந்தது. ஆனாலும் முற்றிலும் குழப்பம் தீரவில்லை. அருண் அவளை ஒருதலையாகக் காதலித்து இருக்கிறான். தன்னைப் பற்றித் தவறாக ஏதோ எண்ணிக் கொண்டு வீட்டில் பார்த்தப் பெண்ணை மணந்து கொள்ளப் போகிறான்.
இப்போது அவளைப் பார்த்ததும் அவன் மனம் மாறிவிடக் கூடும் என்று எண்ணிக் கொண்டு இப்படித் தைய தக்க என்று குதிக்கிறான் இந்த ஆதிநந்தன் என்று அவள் ஊகித்துக் கொண்டாள். ஆனால் அருணின் காதல் பற்றி எதுவுமே தெரியாத அவள் இந்தத் திருமணத்தை எப்படி நிறுத்த முடியும்?
இவன் என்ன லாஜிக் வைத்துக் கொண்டு தன்னை வந்து திட்டுகிறான் எனப் புன்முறுவல் பூக்க அவனைப் பார்த்தாள். எதிரிலிருப்பவள் எதுவும் பேசாமல் கையைக் கட்டிக் கொண்டு எள்ளல் பார்வை பார்க்கிறாள் என நினைத்த ஆதிநந்தனின் ஆணவம் சீண்டப்பட்டது.
அவள் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவள் தோள்களைப் பற்றி அப்படியே அவளது அறைக்குள் தள்ளிக் கொண்டு சென்றான்.
உள்ளே சென்றதும், “இந்தக் கல்யாணத்துல ஏதாவது குழப்பம் பண்ண நினைச்ச உன்னைச் சும்மா விடமாட்டேன். அருண் உன்னைக் காதலிச்சான். ஆனால் எப்படி வேணா வாழலாம்னு நினைக்கிற உன்னோட குணத்தால நீ அவனுக்கு ஒத்து வரமாட்டன்னு புரிஞ்சுக்கிட்டான். இப்போ மனசை மாத்திட்டு அவன் வாழ்க்கையை வாழப் போறான்” என வார்த்தைகளைக் கக்கினான்.
‘எப்படி வேணாலும் வாழலாம். இவன் என்ன சொல்கிறான்?’ அதிர்ந்த விழிகளால் அவனையே இமைக்காது பார்த்திருந்தாள்.
எல்லாத் தவறையும் செய்துவிட்டு ஒன்றுமே அறியாதவள் போல் நின்று கொண்டிருக்கிறாளே என அவளை முறைத்தவன், “என்ன பார்க்கிற?” என அறையை விழிகளால் அளந்தான்.
அவள் மேஜையிலிருந்த கைப்பை கண்களில் அகப்பட விடுவிடுவென்று நடந்து சென்று அதை எடுத்தவன், அதைத் திறந்து உள்ளே இருந்த பொருட்களை அப்படியே தலைகீழாகத் தரையில் கவிழ்த்தான்.
பின்னர்க் குனிந்து மாத்திரைகள் அடங்கிய ஓர் அட்டையை எடுத்து அவள் முன்னால் நீட்டி, “இதுக்கு என்ன அர்த்தம்?” எனக் கத்தினான்.
அவன் சீற்றத்துக்கான காரணமும், அருணின் பாராமுகத்துக்கான காரணமும் புரிந்தன. யாரோ பழுக்கக் காய்ச்சியக் கம்பியினால் நெஞ்சில் இழுத்ததைப் போல் சுளீரென்று வலித்தது. அதை மூன்றாம் மனிதனான இவன் முன்னால் காட்டிக் கொண்டிருக்க அவளுக்கு விருப்பமில்லை.
வேதனையை மறைத்தவாறே அவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவள், அவன் கேட்டதுக்குப் பதில் சொல்ல விழையவில்லை.
மாறாக, “அருண் என்னை லவ் பண்ணின விஷயமே இப்போ நீங்க சொல்லித் தான் தெரியும். அப்போ நான் எப்படிக் குழப்ப முடியும்?” எனக் கேட்டாள். அப்போது தான் அவனுக்கும் அது உறைத்தது. ஆதிநந்தன் அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டான்.
பார்க்கும் பொழுது எல்லாம் அவளை வம்புக்கு இழுக்கும் அவனை மேலும் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வலுத்தது நேத்ராவுக்கு.
“எனக்கு ஐடியா கொடுத்து இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்தணும்னு நீங்க நினைக்கறீங்க போல?” எனப் புருவத்தை உயர்த்தி, கண்களில் குறும்பு இழையோட அவள் பேச,
“ஏய்” எனச் சீறியவாறே அவள் அருகில் சென்றவன் கையில் இருந்த மருந்து அட்டையை அவள் முகத்தில் விட்டெறிந்தான்.
அவள் மனம் குளிர்ந்த பாடில்லை. அருணாவது நண்பன் என்ற முறையில் கோபம் கொண்டான். ஆனால் இவன் யார் தன்னைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கு என்ற எண்ணம் மட்டுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது அவள் நெஞ்சில்.
“நல்லவேளை இப்போவாவது சொன்னீங்க. எப்படிடா அருணை மடக்கிறது என நினைச்சுட்டு இருந்தேன். இன்னும் டைம் இருக்கு. அதற்குள்ள கல்யாணத்தை நிறுத்த முடியாதா என்ன? என்ன இருந்தாலும் அருண் ரொம்பப் பெரிய இடமில்லையா? லைஃப்ல செமையா செட்டில் ஆகிடலாம் பாருங்க. எனக்கு விட மனசு வரலை” என அவனைச் சீண்டும் விதமாகப் பேசிக் கொண்டிருக்க,
அவனே அவளிடம் இப்படி உண்மையை உளறிவிட்டானே எனத் தன் மேலேயே கோபம் எழுந்தது. “ஏய்... ஏய்” என அந்தக் கோபத்தைச் சற்றும் யோசிக்காமல் அவள் மேல் காட்டிவிட்டான். பாய்ந்து சென்று அவள் கழுத்தைப் பிடிக்க, இப்படிப் பட்டென வன்முறையில் இறங்குவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.
அதிர்ந்திருந்தது சில நொடிகள் மட்டுமே. நிலைமையின் தீவிரம் உணர்ந்து அடுத்தக் கணமே சுதாரித்து அவனை ஒரே அடியில் கீழே சாய்த்திருந்தாள் நேத்ரா.
“ரூமுக்குள்ள வர்றப்போவே இதைச் செஞ்சிருக்கணும். பாவம் பார்த்து விட்டது தப்பாப் போச்சு. என்னைக் கழுத்த பிடிச்சு கொல்லற வரைக்கும் நான் கழுத்தைக் கொடுத்துட்டு இருப்பேன்னு நினைச்சீங்களா?” என அவளுள் குடி கொண்டிருந்த விளையாட்டுக் குணம் முற்றிலும் காணாமல் போய்ச் சீற்றம் குடி புகுந்திருந்தது.
தரையில் விழுந்திருந்தவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.
“கிளம்பறீங்களா?” என அவள் வாசல் கதவை நோக்கிக் கையை நீட்ட, அங்கே இப்போது என்ன நடந்தது என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்திருப்பான் போல் ஆதிநந்தன். இன்னுமே அசையாமல் அப்படியே கிடந்தான்.
அவமானம் பிடுங்கித் தின்றது. இவளைப் போன்றவளின் கைகளில் அடிபட்டு அதிர்ந்து போய் எதிர்வினையாற்றாமல் அப்படியே விழுந்து கிடப்பது ஒருபுறம் கோபத்தை வரவழைத்தது.
அதுமட்டுமல்லாமல் இப்படிக் கீழ்த்தரமாக ஒரு பெண்ணிடம் வன்முறையில் இறங்குவான் என்ற குற்றக் குறுப்பு மறுபக்கம் அவனைக் கூறு போட்டது. அந்த நிமிடத்தில் தன்னையே வெறுத்தான்.
அடி பலமாகப் பட்டுவிட்டதோ என்ற கரிசனையில் அவனருகில் சென்று குனிந்து பார்த்தாள் நேத்ரா. அவனுக்குப் பெரிதாக அடி எதுவும் படவில்லை என அவன் கண்கள் அசைந்து, அவள் மேல் எரிச்சலைக் கூடை கூடையாகக் கொட்டிக் காட்டிக் கொடுத்தன.
“எந்திரிக்க ஹெல்ப் வேணுமா?” என உதவ வேண்டும் என்ற அவளின் அக்கறையான குரலில் அவன் அகந்தை சீண்டப்பட்டது.
வலியைப் பொருட்படுத்தாமல் விருட்டென்று எழுந்தவன், “வசமா சிக்குவ என்கிட்ட ஒருநாள். அப்போ இருக்கு உனக்குத் தீபாவளி” என வார்த்தைகள் மிளகாயை அம்மிக்கல்லில் வைத்து அரைத்ததைப் போல் வெகு அழுத்தமாக வெளிவந்து விழுந்தன.
“பட்டாசு பலகாரம் எல்லாம் ரெடியா வச்சிருக்கேன்” எனக் கதவருகில் போய் நின்று கொண்டு அவன் வெளியேற காத்திருக்க, “போடி...” எனக் கோபத்தில் கத்திவிட்டு வெளியேறினான் ஆதிநந்தன்.
“சரிங்க மச்சான்...” என்றவளின் பதிலில் கொலைவெறியுடன் அவன் திரும்பிப் பார்க்க, அவள் முகத்தில் இருந்த குறும்பும், சிரிப்பும் வேண்டுமென்றே தன்னைக் கோபப்பட வைக்கிறாள் என அவனுக்குப் புரிந்து போனது.
அவள் ‘மச்சான்’ என்று சொன்னதும் அவனுக்குக் கோபத்தில் அவளை அடிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவள் வேண்டுமென்றே செய்கிறாள் என்று விளங்கியது. ‘அமைதி ஆதி...’ என முடிந்த வரையில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்.
திரும்பி அவளருகில் சென்று, ‘என்கிட்ட வச்சுக்காத... அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ’ என நிதானமாக அவளை எச்சரிக்கவே நினைத்தான். ஆனால் நடந்தது வேறு.
சென்றமுறை போல் எங்கே அவளை அறைக்குள் தள்ளிவிடுவானோ என்ற எதிர்பார்ப்பில் அவனை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தாள் நேத்ரா. அதனால் சற்று பின்னே விலகி தன் அறைக்குள் சென்றிருந்தாள்.
அப்போது ஆதிநந்தனுக்கு வயிற்றில் எதுவோ குமட்டிக் கொண்டு வருவதைப் போலிருந்தது, அப்படியே மயங்கி விடுவோமோ என்று பயந்தான். அவன் தடுமாறுவதைப் பார்த்ததும் நேத்ரா அவனைத் தாங்கிக் கொண்டவள் அவனை அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தாள்.
குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து அவனிடம் தந்தவள், தன்னறையில் அவள் குடிக்கவென்று எடுத்து வந்திருந்த ‘ஜிஞ்சர் ஏல்லை (இஞ்சி சோடா)’ அவனிடம் தந்து குடிக்கச் சொன்னாள்.
அவனுக்குத் தூக்கம் தேவை என்று புரிந்தது. அத்துடன் கொஞ்சமே அருந்திய மதுபானமும் அதன் வேலையைக் காட்டிவிட்டது போலும். கடலில் இருந்த அலைக்கு ஏற்ப கப்பல் சற்று ஆட்டம் காண அவனுக்கு ஒரு மாதிரி கிறுகிறுவென்று வந்தது.
அதற்குமேல் அங்கேயே நின்று தன் மானத்தை அவள் முன்னால் கெடுத்துக் கொண்டிருக்க விருப்பப்படவில்லை. அவள் தந்ததை வாங்காமல் விருட்டென்று எழுந்து அறையைவிட்டு வெளியேறினான் ஆதிநந்தன். சிறுவனைப் போல் நடந்து கொள்கிறானே என்று பரிதாபப்பட்டாள் நேத்ரா.
மறுநாள் காலையில் கப்பலில் இருந்தவர்களுக்கு விடியல் அதி பயங்கரமானதாக இருந்தது.
தொடரும்...
Author: Pochampalli
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 7
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.