• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 1

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
47
அத்தியாயம் – 1



அந்த உணவகத்தில் அமர்ந்திருந்த அருணின் மனதில் உற்சாகம் கொப்பளித்துக் குமிழியிட்டது. இதுநாள் வரையில் நெஞ்சில் பூட்டிப் பாதுகாத்து வைத்திருந்த உணர்வுகளைக் கட்டவிழ்த்துவிடும் நேரம் வந்தேவிட்டது. இனிமேலும் காத்திருக்க அவனிடத்தில் சிறிதும் பொறுமையில்லை.

அவன் எதிரில் இருந்தவளை கண்ணிமைக்காது நோக்கினான். கருவிழிகளால் அவனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் அவள். ஒற்றைப் பார்வை இத்தனை உணர்வுகளைத் தட்டி எழுப்ப முடியுமா என்ன? முடியும் எனச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்தாள்.

பல லட்சம் பட்டாம்பூச்சிகள் ஒருசேர மேலெழும்பியதைப் போன்றதொரு உணர்வை அவனுள் தோற்றுவித்தது அவளது பார்வை.

“சொல்லுங்க அருண்... ஏதோ சொல்லணும்னு வரச் சொன்னீங்க.” அவள் இதழ்கள் அசைய, தேன்மழை சாரலில் நனைந்ததைப் போல் அவன் இதயம் தித்திப்பில் தத்தளித்தது, மயங்கிக் கிறங்கியது.

மயங்கிய உள்ளத்தைக் கட்டி இழுத்து ஒருநிலைப்படுத்தி அவன் வாயைத் திறக்கும் முன்னர், அவளின் அலைபேசி இசைத்தது.

“சாரி அருண்...” அவனிடம் மன்னிப்பை வேண்டிவிட்டு கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்து அழைத்த எண்ணைப் பார்த்தாள் அவள். ‘மூக்கு வேர்த்திடுமே’ என முணுமுணுத்தவாறே, “ஒரு நிமிஷம் அருண்... பிளீஸ்” என அவசரமாக அழைப்பை ஏற்றவாறே படக்கென்று எழுந்து நின்றாள் அவள்.

அவள் எழுந்த வேகத்தில் அவள் மடியிலிருந்த கைப்பை ‘டப்பென்று’ கீழே விழ, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் விழுந்து சிதறியது. வலது கையால் நெற்றியில் பட்டென்று தட்டியவள், ‘யோசிக்காமல் எழுந்துவிட்டோமே’ எனத் தலையை இடது வலமாகக் குலுக்கினாள்.

அலைபேசியை இடது காதுக்கும் தோளுக்கும் இடையில் வைத்து கொண்டு தரையில் காலை மடித்து அமர்ந்து சிதறிய பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தாள். கைகள் அனிச்சையாக வேலை செய்தாலும் கவனம் முழுவதும் அலைபேசியில் மட்டுமே இருந்தது.

அவள் கீழே குனிந்தவாறே சிதறிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருக்க, அவள் ‘ரப்பர் பேண்டு’க்குள் அடக்காமல் சண்டித்தனம் செய்யும் முடிக்கற்றை தலையிலிருந்து பிரிந்து காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அதை அவள் காதோரம் ஒதுக்கிவிடும் ஆவல் அருணுள் எழுவதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.

வலது கையை உயர்த்தி அவள் முகத்தின் அருகே கொண்டு செல்கையில் அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பியிருந்தாள். நல்லவேளை! அப்போது தான் அவன் செய்யவிருந்த முட்டாள்தனம் புரிந்தது.

திடுமென இப்படிச் செய்தால் அவள் தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? கையை இறுக மூடி கீழே இறக்கியவன் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவளின் கருத்தில் எதுவுமே பதியவில்லை.

மும்முரமாகத் தன் வேலையில் கவனத்தை வைத்திருந்தாள். அப்போது தான் அவளுக்கு உதவ வேண்டும் என்ற சுரணையே வந்தது அருணுக்கு.

அவளுக்கு உதவும் விதமாகத் தானும் உடனே குனிந்து சிதறிய பொருட்களை எடுத்து அவள் பையில் ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தான். அவள் மேலிருந்து வந்த வாசனை திரவியம் அவனை வசமிழக்கச் செய்தது. அவளிடத்தில் இருக்கும் எது தான் அவனைத் தன் வசமிழக்க வைக்கவில்லை?

அவளை மேலும் நெருங்கு என மனம் உத்தரவிட, அவளை நோக்கிச் சற்றே முன்னால் நகர்ந்துவிட்டான். அடுத்த கணமே, ‘இல்லை... இல்லை... இது தப்பு’ என அவன் மூளை எச்சரிக்க, கையில் எடுத்த பொருளைப் பார்ப்பதைப் போல் குனிந்து கொண்டான். இதயம் குதித்து வெளியேறி அவன் மனதை வெளிப்படுத்திவிடும் போலிருந்தது.

“அது என் இஷ்டம். உங்க தொல்லை இல்லாம நான் ஒதுங்கியிருக்கேனே. எதுக்கு என்னைத் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்யறீங்க?” அவள் பேசுவது காதில் விழ, தன் கையிலிருந்த பொருளைப் பார்த்து முகம் சுருக்கினான் அருண்.

‘வாட்... இது எதுக்கு?’ எனப் படக்கென்று அப்படியே எழுந்து நின்றுவிட்டான். அவள் பேசுவதில் முனைப்பாக இருந்ததால் அருண் அப்படிப் பட்டென்று எழுந்ததைக் கூடக் கவனிக்கவில்லை.

“என்னை என் வழில போக விடறீங்களா” எனச் சொன்னவாறே கீழே கிடந்த மிச்சப் பொருட்களை அவசரமாக அள்ளி எடுத்துக் கைப்பையில் போட்டுக் கொண்டு எழுந்தாள்.

கையில் இருந்ததை எதிரிலிருந்தவளுக்குத் தெரியாதவாறு அருண் மறைத்துக் கொள்ள, அவனிடம் திரும்பி, ‘ஒரு நிமிஷம்’ என உதட்டை அசைத்துவிட்டு, அந்த உணவகத்து வாசலை நோக்கி நகர்ந்தாள்.

செல்லும் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அருண் அவசரமாகத் தன் கைப்பேசியை எடுத்து மருந்து அட்டையில் தான் படித்தது சரியா என மீண்டும் கையிலிருந்ததைக் குனிந்து பார்த்தான்.

அவன் நினைத்தது சரியே என இணையதளத்தில் தேடிப் பார்த்து உறுதியும் செய்து கொண்டான். ஆனால் இவளிடம் எப்படி? ஏன்? எதற்கு? சுவாசக் குழலில் ஏதோ சிக்கியதைப் போலிருந்தது.

முகமெல்லாம் கருத்துப் போக அருணால் அதற்குமேல் அங்கே நிற்கவே முடியவில்லை. உண்மையில் இவள் இப்படிப்பட்டவளா? இத்தனை நாள் பழக்கத்தில் அவள் மேல் எவ்வித சந்தேகமும் வரவில்லையே. வேசம் போடுகிறாளோ? விடுவிடுவென்று விடுதியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

உணவகத்தின் வாயில் அருகே நின்று கொண்டிருந்த பணியாளரிடம் சென்று, “சாரி.. அவசரமாப் போகணும்” எனச் சாப்பிடாமல் ஆறிப் போயிருந்த உணவுக்குப் பணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அவள் அங்கிருந்த புல்வெளியில் ஒரு மரத்துக்கு அருகில் நின்று தீவிரமான பாவனையுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவளிடம் சொல்லிவிட்டுச் செல்ல கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் முதலும் முடிவுமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என எண்ணி அவளருகில் சென்றான்.

“இங்க பாருங்க, இது என் வாழ்க்கை... எனக்குத் தப்புப் பண்ணறதா தெரியலை. என் இஷ்டப்படி நான் இருப்பேன். எனக்குப் பிடிச்சதை நான் செய்வேன். உங்களுக்குக் கேட்க எந்த உரிமையும் இல்லை.” அவள் பேசப் பேச அருணின் இரத்தக்கொதிப்புக் கூடியது. கூடவே அவனுக்குள் கட்டி வைத்திருந்த காதல் கோபுரமும் நொறுங்கிச் சரிந்து சிலீரென்று சிதறியது. இவள் இப்படிப் பட்டவளா?

எதுவும் சொல்லாமல் மீண்டும் உணவகத்தினுள் சென்று, ‘மிக அவசரம். உடனே கிளம்ப வேண்டும்’ என ஒரு செய்தியை எழுதி அங்கிருந்த பணியாளரிடம் தந்து அவளிடம் சேர்த்துவிடுமாறு சொன்ன அருண் அதற்குமேல் ஒரு கணம் கூட நிற்கவில்லை.

அப்படிச் சென்றதுக்கு அவளிடம் மன்னிப்பைக் கூடச் சொல்ல விரும்பவில்லை. அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டான்.

வேலையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆதிநந்தனின் அலைபேசி அடிக்க, காரின் புளுடூத்தில் அழைப்பை ஏற்று, “டேய் அருண், சொல்லுடா என்னாச்சு? உன் லவ் சக்சஸா?” என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தான்.

மறுமுனையில் எந்தப் பதிலுமில்லாமல் போக, “அருண், கேட்குதா? பேசுடா...” என ஆதிநந்தன் உரக்கக் கத்தினான்.

“டேய்... ஆ...தி... ஆதி...” மறுமுனையில் இருந்தவனின் பேச்சுத் துண்டு துண்டாக வந்து இவன் செவிகளை அடைந்தது.

நண்பனின் குரலில் இருந்த மாற்றத்தை, அல்ல, ஏமாற்றத்தைக் கண்டுகொண்டவனாக, “என்னடா அருண், அவங்க ஒத்துக்கலையா? மறுபடியும் பேசிப் பார்க்கலாம்... இட்ஸ் ஓகேடா...” எனப் பதட்டத்தைக் குறைக்க முற்பட்டான்.

“ஆதி, நான் ஏமாந்துட்டேன்டா... என்னை ஏமாத்திட்டா... அவளை எவ்வளவு சின்சியரா லவ் பண்ணினேன். உனக்குத் தெரியும் தானே? ஆனா, அவ ரொம்ப... ரொம்பத் தப்பானவளா இருக்காடா” என்றவனது குரல் முற்றிலும் உடைந்திருந்தது.

அவன் நண்பன் அருண் ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலிப்பது தெரியும். அவள் புகைப்படத்தையும் சில தினங்களுக்கு முன்னர் அவனிடம் காட்டியிருந்தான். பார்க்க மிக அழகாகவே இருந்தாள் அவள். அருண் ஏன் காதலில் விழுந்தான் என்று அவனுக்குப் புரிந்தது.

இன்று மாலை அப்பெண்ணிடம் தன் காதலை சொல்லப் போவதாக ஆதிநந்தனிடம் தெரிவித்திருந்தான் அருண். அவளைச் சந்திக்கவென மிகவும் உற்சாகத்துடன் கிளம்பினானே. அதற்குள் என்ன ஆகிவிட்டது?

ஒருவேளை அந்தப் பெண் இவன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லையோ? அதற்காக அவள் தப்பானவள் என்றெல்லாம் முத்திரை குத்தும் அளவுக்கு அவன் நண்பன் ஒன்றும் குறுகிய மனம் படைத்தவன் அல்லவே. இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது.

நண்பனின் குரலில் இருந்த வேதனை இவன் மனதை வருந்தச் செய்ய, “அருண்... பதறாத. எங்க இருக்க... சொல்லு? நான் வரேன்” என அவனை நிதானத்துக்கு அழைத்து வர முற்பட்டான் ஆதிநந்தன்.

“ஈ.சி.ஆர். ரோட்ல போயிட்டிருக்கேன்டா” என இடத்தைச் சொன்ன அருண், “ப்ச்ச்... நீ வந்து எதுவும் செய்ய முடியாது” என விரக்தியாகப் பேசினான்.

“அதுக்கில்ல அருண். இந்த நிலைமையில வண்டியை ஓட்டாத... இருடா வரேன்...” என உடனே தன் காரை நண்பன் சொன்ன இடத்தை நோக்கித் திருப்பியிருந்தான் ஆதிநந்தன்.

அது எதிர்முனையில் இருந்தவனின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. “எங்க போறேன்னு தெரியலை ஆதி. போயிட்டு இருக்கேன். ஒரு மாதிரி விரக்தியா இருக்குடா. வாழ்க்கையே சூனியமான மாதிரி இருக்கு” என அருண் தொடர்ச்சியாகப் பேச,

“அருண், நிதானமா இருடா. பேசித் தீர்த்துக்கலாம். வண்டியை அப்படியே ஓரம் கட்டுடா. வண்டி ஓட்டிட்டு ஃபோன்ல பேசாத. இதோ சீக்கிரம் வந்திடறேன்” என ஆதிநந்தன் பதட்டத்தை வெளிக் காட்டதவாறு சொன்னவன், தன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.

அருண் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தூரத்தில் எல்லாம் அவன் இல்லை. அதனால் விரைவிலேயே அங்கே சென்று விடலாம்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் எப்போதும் காரில் செல்லும் அருண் அன்று தான் விரும்பும் பெண்ணிடம் காதலைத் தெரிவிக்கப் போகும் அவசரத்தில் தன் இரண்டு சக்கர வாகனத்தில் பறந்திருந்தான்.

இந்த நிலைமையில் அவன் வாகனம் ஓட்டுவது உகந்ததல்ல என்று ஆதிநந்தனுக்குப் புரிந்தது. ஆகவே தான் பலமுறை நிதானமாக இருக்கச் சொல்லி அவனை எச்சரித்துக் கொண்டிருந்தான். எனினும் அது எதிர்முனையில் இருந்தவனின் புத்தியில் ஏறியதாகத் தெரியவில்லை.

தேய்ந்து போன ரெக்கார்ட் போல் சொன்னதையே திரும்பவும் அருண் சொல்லிக் கொண்டிருக்க, ஆதிநந்தனுக்கு இனம் புரியா பயம் தொற்றிக் கொண்டது.

திடீரென்று, “ஓ மை காட்” என எதிர்முனையில் இருந்த நண்பன் உரத்துக் கூவியது செவிகளில் அறைய, தொடர்ந்து ஏதோ பலத்த சத்தம் கேட்டது. அவனது பயம் நிஜமாகிவிட்டதா எனப் பதைத்துப் போனான் ஆதிநந்தன்.

இதயத் துடிப்பு அதிகரித்தது. அதற்குள், ‘அம்மா...’ என அருண் அலறுவது கிணற்றில் இருந்து கேட்டதைப் போலிருக்க, “டேய்.. அருண்.. அருண்... என்னடா? என்னாச்சுடா? நீ எங்க இருக்க? நான் பக்கத்துல வந்துட்டேன்” என ஆதிநந்தன் கத்தினான். அதன்பிறகு எதிர்முனையில் எந்தச் சத்தமும் இல்லை.

காரைச் செலுத்திக் கொண்டிருந்த ஆதிநந்தனுக்கு உடலெல்லாம் நடுக்கம் கொண்டது. அருணின் கோபம் பற்றி அவனுக்குத் தெரியும். கோபம் வந்துவிட்டால் எதைப் பற்றியும் யோசிக்க மாட்டான். சட்டெனக் கோபத்தில் எதையாவது செய்துவிட்டு பின்னர் வருந்துவான். அவனுமே அப்படித் தான்.

உடனே காவல்துறைக்கு அழைத்துத் தன்னை அறிமுகம் செய்து கொண்டவன், நண்பன் சென்ற சாலையில் குத்துமதிப்பாக ஓர் இடத்தைச் சொல்லி, அங்கே விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் எனத் தான் சந்தேகிப்பதாகத் தெரிவித்தான். விசாரித்து அப்படி ஏதாவது இருந்தால் அவனுக்குத் தகவல் தருமாறு சொல்லிவிட்டு அழைப்பை வைத்தான்.

ஆம்புலன்ஸூக்கு அழைத்துச் சொல்வதா என அவன் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே தூரத்தில் சிவப்பு விளக்குகள் மின்னி மின்னி எரிவது தெரிந்தது.

விரைந்து அருகில் செல்கையில் மருத்துவமனை ஊர்தி ஒன்று நின்று கொண்டிருக்க விபத்தில் சிக்கிய நபரை உள்ளே ஏற்றிக் கொண்டிருந்தனர். காரை ஓரம்கட்டிவிட்டுத் தடதடவென்று அங்கே ஓடினான் ஆதிநந்தன். அது தன் நண்பன் அருண் என்று அவனின் இரு சக்கர வாகனத்தைப் பார்த்ததுமே அவனுக்குப் புரிந்து போனது.

அந்த இடத்தில் பணியில் இருந்த காவலர் வருவோர் போவாரிடம் விசாரித்துக் கொண்டிருக்க, நேராக அவரிடம் சென்றவன், அருணைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டான்.

“ஃபோன் பேசிட்டே போய் ஸ்பீட் பிரேக்கர்ல வேகமா விட்டிருக்கார். அதுவும் அந்த இடத்துல பெரிய கல் வேற இருந்திருக்கு. கவனிக்காம விட்டுட்டார். நல்லவேளை ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில அடி இல்லை. ஆனா கை கால்ல பலமா அடி. இப்படியா பொறுப்பில்லாம இருப்பீங்க?” என ஆதங்கத்துடன் ஆரம்பித்து, அவர் விசாரித்துத் தெரிந்தவரையில் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார் அந்தக் காவலர்.

“சாரி சார். அவன் எங்க இருக்கிறான் எனத் தெரிஞ்சா தானே உதவ முடியும்... அதான் பேசிட்டு...” முடிக்காமல் ஆதிநந்தன் நிறுத்த, மருத்துவ ஊர்தி அங்கிருந்து கிளம்பியது. ஆதிநந்தன் தன்னைப் பற்றிய விவரங்களைக் காவலரிடம் பகிர்ந்து கொள்ள, அவன் பணியைப் பற்றித் தெரிந்ததும் அவன் மேல் அவருக்கு மரியாதை ஏற்பட்டது.

“சார், ஏதோ ஆதாங்கத்துல பேசிட்டேன்...” எனக் காவலர் தன் கோபத்துக்கான நியாயத்தைக் கற்பிக்க, “உங்க கடமையைச் செய்யறீங்க சார். நான் கிளம்பறேன்” என நண்பனைக் கொண்டு செல்லும் மருத்துவமனை நோக்கி விரைந்தான் ஆதிநந்தன்.

மருத்துவமனை அருகிலேயே இருந்ததால் விரைவாகச் சென்ற ஆதிநந்தன், உடனே அருணுக்கு வேண்டிய சிகிச்சையளிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தான்.

“இந்தாங்க சார் அவர் பேண்ட், சட்டையில இருந்தது” என ஒரு சிறிய கவரைத் தந்தார் அங்கு வந்த பணியாளர்.

ஆதிநந்தன் அதை வாங்கிப் பார்க்க அதில் நண்பனின் பர்ஸ் இருந்தது. கூடவே மாத்திரைகள் அடங்கிய ஒரு சிறிய அட்டையும் இருந்தது. ‘என்ன மருந்து?’ என அதை வாங்கி அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தான்.

‘இது எப்படி இவனிடம்?’ எனப் புருவத்தைச் சுருக்கி அவன் யோசித்துக் கொண்டிருக்கையில், அங்கே வந்த செவிலியர்,

“சார், இந்த மருந்தை பார்மசில இருந்து வாங்கிட்டு வாங்க... சீக்கிரம்” என ஒரு துண்டு காகிதத்தை அவனிடம் கொடுத்தார். அதன்பிறகு சூழ்நிலை கருதி, கையிலிருந்த மாத்திரை அட்டையைப் பத்திரப்படுத்திக் கொண்டு மருந்தகம் நோக்கிக் கிளம்பினான் ஆதிநந்தன்.

மருந்தை வாங்கி உரியவர்களிடம் சேர்த்துவிட்டு, அருணின் வீட்டுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி அவன் பெற்றோர்களை வரவழைத்தான். அதற்குள் அருணுக்குப் பெரிதாக அடி ஏதுமில்லை, காலில் மட்டும் எலும்பு முறிவு என்றும் அதிர்ச்சியில் மயங்கியிருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

அவன் மயக்கம் தெளிந்ததும் காலில் அறுவைச் சிகிச்சை செய்வதைப் பற்றி முடிவெடுக்கலாம் எனத் தகவல் சொன்னார்கள். ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து வெளியிட்டான் ஆதிநந்தன். அதுவரையில் அருணுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என நெஞ்சைக் கவ்வியிருந்த பயம் மெள்ள விலகியது.

அப்போது தந்தை, தாமோதரனிடம் இருந்து ஆதிநந்தனுக்கு அழைப்பு வர, ‘ஐயோ, இதைச் சுத்தமாக மறந்துவிட்டோமே’ எனப் பதறியவனாக அழைப்பை எடுத்து, “அப்பா சாரிப்பா” என்றான்.

“எங்க இருக்க?” அவரின் குரலில் மிதமிஞ்சிய ஆத்திரம் ஒட்டிக் கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது. அருண் பற்றிய விஷயத்தைச் சொல்லி தான் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறவும், எதிர்முனையிலிருந்த அவன் தந்தையின் கோபம் சற்று மட்டுப்பட்டது.

எனினும், “என்ன ஆதி இது? போனது ஓகே. அட்லீஸ்ட் தகவல் சொல்லியிருக்கலாமே? அந்தப் பொண்ணு வந்து தனியா வெயிட் பண்ணிப் பார்த்துட்டு, இப்போ தான் கிளம்பியிருக்கா. அதுவும் இந்த இருட்டற நேரத்துல கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம நடந்துகிட்டிருக்க” என தாமோதரன் தன் வருத்தத்தை வெளியிடவும் மறக்கவில்லை.

“அப்பா... ரியலி சாரிப்பா... பதட்டத்துல சுத்தமா மறந்துட்டேன். நான் அவங்ககிட்டப் பேசறேன்” என உண்மையான வருத்தத்துடன் பேச, அவன் தந்தையும் சமாதானமடைந்தார்.

அவன் ஒன்றும் பொறுப்பில்லாதவன் அல்ல. ஆபத்தில் இருக்கும் நண்பனுக்கு உதவும் நோக்கில் இப்படி நடந்து கொண்டிருக்கிறான். அதில் அவருக்குப் பெருமையும் கூட. ஆனால் அவனின் இந்த உதவும் மனப்பான்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலை தொற்றிக் கொண்டது. முக்கியமாக அவன் வாழ்க்கைத் துணை.

அவன் தந்தையினுள் குடி கொண்டிருந்த எரிச்சல் இப்போது ஆதிநந்தனுக்குள் புலம் பெயர்ந்து விட்டது. தற்சமயம் அவன் திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்தவர்கள் மூலம் வந்த ஒரு பெண்ணை வீட்டில் அனைவருக்கும் பிடித்துப் போக அவளைப் பார்த்துப் பேசுவதற்குச் சற்று முன்னர் சென்று கொண்டிருந்தான்.

இடையில் வந்த அருணின் அழைப்பு அதை மறக்கச் செய்துவிட்டது. அதற்காகத் தான் அவன் தந்தை அழைத்திருந்தார். ஆனால் இப்படி நடப்பதற்கு முக்கியக் காரணம் அருண் காதலிப்பதாகச் சொன்ன அந்தப் பெண் மட்டுமே என அவன் கோபம் மொத்தமும் அவள் மேல் திரும்பியது.

‘அவ மட்டும் என் கையில் கிடைக்கட்டும். அவள் வாழ்க்கையையே வெறுக்கச் செய்திடறேன்’ என மனதுக்குள் கறுவி கொண்டான் ஆதிநந்தன். அதற்குள் அருணின் பெற்றோர்கள் அங்கே வரவும் தன் தந்தையிடம் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தான்.

நண்பனின் பெற்றோர்களிடம் ஆறுதல் மொழி சொன்னவனுக்கு அடுத்த வந்த ஒரு மணி நேரமும் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது.

இதற்கிடையில் ஆதிநந்தனுக்குக் குழப்பம் தருவது போல் வேறொன்றும் நடந்தது. மருந்துவமனைக்கு வந்த அருணின் பெற்றோர்கள், “ஐயோ, இவனுக்குக் கல்யாணம் முடிவு பண்ணின சமயத்துல போய் இப்படி ஆகிடுச்சே” எனப் புலம்ப, ஆதிநந்தனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘கல்யாணம் முடிவாகிவிட்டதா? தன்னிடம் அதைப் பற்றி அருண் எதுவும் சொல்லவில்லையே? அப்படியிருந்தும் ஏன் அந்தப் பெண்ணிடம் போய்த் தன் காதலைச் சொல்ல நினைத்தான்? ஒருவேளை இதனால் தான் அவசரப்பட்டானோ?’ மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.

அருணுக்கு மயக்கம் தெளிந்துவிட்டது என்றதும் குழப்பத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவனைப் பார்க்கச் சென்றான்.

அருண் இருந்த அறைக்குள் சென்றதும், “என்னப்பா அருண் இது? எங்களைப் பழி வாங்க வேணும்னே இப்படிப் பண்ணினியா?” என அருணின் பெற்றோர்கள் கேட்கவும், திடுக்கிட்டவனாக நண்பனைக் கூர்ந்து பார்த்தான் ஆதிநந்தன்.

அவனோ எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் தனிப்பட்ட விஷயம் பேசுகையில் தான் அங்கே நிற்பது அதிகப்படி என்ற நினைப்பில் ஆதிநந்தன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான் .

“ஆதி, நீயாவது சொல்லுப்பா அருண்கிட்ட. நாங்க சொன்னா கல்யாணமே வேண்டாம்னு சொல்லறான். நல்ல சம்மந்தம் வரவும், இவனைப் பேசிக் கரைச்சிடலாம் என முடிவு செஞ்சு பொண்ணு வீட்ல சம்மதம் சொல்லிட்டோம். நான் இருந்தாத் தானே கல்யாணம் செஞ்சு வைப்பீங்கன்னு மிரட்டிட்டு வந்தான். அதே மாதிரியே பண்ணிட்டான்” என அருணின் அன்னை கண்ணீர் மல்க அவனிடம் குறைப்பட்டார்.

நண்பன் ஏன் இந்த விஷயத்தைப் பற்றித் தன்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை எனப் புரிந்தது. கட்டாயப்படுத்தினால் அருணுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவன் பெற்றோர்களுக்கு இது தெரியாதா என்ன? இப்போது அவர்களிடம் இதைப் பற்றிப் பேசுவதும் உசிதமில்லை.

ஆகவே, “என்ன அருண் இது? இப்படியா அம்மாவை பயமுறுத்துவ?” என நண்பனிடம் அக்கறையுடன் கடிந்து கொண்ட ஆதிநந்தன், “ஆன்ட்டி, அவனுக்கு நடந்தது விபத்து. வேணும்னு எல்லாம் அவன் பண்ணலை. நீங்க கவலைப்படாதீங்க. நான் இவன்கிட்ட பேசறேன்” என அவர்களுக்குத் தைரியமளித்தான்.

விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அருணுக்கு மாமனாராகப் போகிற தேவராஜனும் மருத்துவமனைக்கு ஓடி வந்துவிட்டார்.

“என்ன சம்மந்தி இது இப்படி ஆகிடிச்சு? இதுக்காக என் பொண்ணை ராசியில்லாதவன்னு சொல்லிடாதீங்க” என அவர் கண்ணீர் மல்கிய குரலில் பேச,

“ஐயோ என்ன அண்ணா நீங்க? அப்படியெல்லாம் எதுவுமில்லை. இவன் பார்த்துப் பத்திரமா ஓட்டாம...” என அருணின் அன்னை அவரைச் சமாதானப்படுத்தினார்.

தன் மகன் மேல் தவறை வைத்துக் கொண்டு மற்றவர்களைக் குறை சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.

அதற்குள் அறைக்குள் வந்த மருத்துவர் அருணை மேலும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “காலையில் ஆபரேஷன் செஞ்சிடலாம். அவருக்கு இன்னும் அடிபட்டது அதிர்ச்சியா இருக்கு. மருந்து கொடுத்திருக்கோம். அதனால் இப்போ அவரைக் கொஞ்சம் தூங்க விடுங்க” என அனைவரையும் பார்த்துச் சொன்னவர்,

அங்கு நின்று கொண்டிருந்த அருணின் வருங்கால மாமானரைப் பார்த்ததும், “தேவா, நீ எங்க இங்க?” என ஆச்சர்யத்துடன் வினவினார்.

“நம்ம ஆராதனாவுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை இவர்” என அருணைச் சுட்டிக் காட்டி பெண்ணின் திருமணத்தை மேலும் உறுதிபடுத்திக் கொண்டார் தேவராஜன்.

“என்னடா சொல்லவேயில்லை..?” என மருத்துவர் நண்பனிடம் உரிமையுடன் கேட்க, “நாங்க மட்டும் பேசி வச்சிருக்கோம். சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடறோம்” என்றார் தேவராஜன். சற்றுநேரம் அவர்களிடம் ஆறுதலாகப் பேசிய மருத்துவர் , “காலையில பார்க்கலாம்” என விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தார்.

அருண் அதிக நேரம் உறங்கப் போகிறான் என்றும் அன்றிரவு நண்பனுக்குத் துணையாகத் தான் இருப்பதாகவும் தெரிவித்து, அவன் பெற்றோரையும் மாமனாராகப் போகிறவரையும் ஒருவழியாகச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தான் ஆதிநந்தன்.

அதுவுமில்லாமல் நண்பனிடம் தனிமையில் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகளும் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. அனைவரும் சென்றதும், அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து தலைக்குப் பின் இரு கைகளையும் கோர்த்துக் கொண்ட ஆதிநந்தனுக்குள் ஆயிரமாயிரம் சிந்தனைகள்.

பேண்ட்டில் வைத்திருந்த அந்த மாத்திரை வேறு கனத்தது. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ அவனுக்குத் தெரியவில்லை. அறையிலிருந்த அருணின் அலைபேசி அவன் சிந்தனைகளைக் கலைத்துப் போட்டது.

அருண் எழுந்துவிடுவான் என அவசரமாகச் செயல்பட்டு அழைப்பை உடனே ஏற்று, “ஹலோ” என்றான். விபத்தில் அருண் கீழே விழவும் அவன் அலைபேசியும் கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் திரை மட்டும் நொறுங்கியிருக்க, மற்றபடி வேலை நிறுத்தம் எல்லாம் செய்யவில்லை.

“அ... அருண்...?” எதிர்முனையில் இருந்து வந்த பெண்ணின் குரல் அவன் செவிகளில் இனிமை கலந்து ஒலித்தது. அந்த இனிமையில் பதில் கூடச் சொல்லத் தோன்றாமல் சில நொடிகள் அப்படியே அமைதியாக இருந்தான்.

“ஹலோ” என எதிர்முனையிலிருந்து வந்த குரலில் சட்டென்று சுதாரித்த ஆதிநந்தன், “சாரி... நான் அருணோட ஃப்ரெண்ட் பேசறேன். அருண் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான்” எனச் சொல்லவும், “வாட்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவரைப் பார்த்தேனே. என்னாச்சு?” எனக் கேட்டாள் எதிர்முனையில் இருந்தவள்.

‘அவளாக இருக்குமோ?’ என ஒரு கணம் துணுக்குற்றாலும் எதுவும் சரிவரத் தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடக் கூடாது என்று அமைதி காத்தான் ஆதிநந்தன்.

“ஹலோ... ஹலோ” அப்பெண்ணின் குரல் அவனைத் தன் எண்ண வலையிலிருந்து மீட்டெடுத்தது.

“சாரி... ஒரு சின்ன ஆக்சிடென்ட்...” என நடந்ததை விளக்கி, அவன் இருந்த மருத்துவமனைப் பற்றிய தகவல் தந்து அவன் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என முடித்தான்.

“ஓஹ்...” என எதிரிலிருந்தவள் பேச்சற்றுப் போயிருக்க, “அருண் சரியானதும் பேசச் சொல்லறேன்” என அழைப்பை வைத்தான் ஆதிநந்தன்.

யார் அழைத்திருந்தது எனக் கைப்பேசியை உற்று நோக்க, அழைத்தவளின் பெயர், ‘நேத்ரா’ என இருந்தது. அவன் புருவம் சுருக்கி யோசிக்கையில், “ஆதி...” எனச் சன்னக் குரலில் அருண் அழைப்பது கேட்டது.

மற்றதெல்லாம் மறந்து போக, “அருண்” என நண்பனின் அருகில் ஓடினான் ஆதிநந்தன்.

“எப்படிடா இருக்க? வலிக்குதா?” என நண்பனிடம் ஆதூரத்துடன் வினவ, “காதலோட வலியை விட இது எனக்குப் பெரிய வலியில்லடா” என்றான் விரக்தியுடன்.

நண்பன் மிகவும் குழப்பத்தில் இருக்கிறான் என்று தெரிந்ததால், “அதைப் பத்தி அப்புறம் பேசலாம் அருண். கவலைப்படாத” என அவனுக்கு ஆறுதல் சொல்ல விழைய,

“இனி பேசி என்ன ஆகப் போகுது. நான் நினைச்ச மாதிரி இல்லடா நேத்ரா” என அழுகையில் குலுங்கினான் அருண்.

‘நேத்ராவா?’ எனப் புருவத்தைச் சுருக்கியவன், அவள் சற்றுமுன்னர் அழைத்ததாகக் கூற, அந்த வேதனையிலும் அருணின் முகம் மலர்ந்து போனது. அடுத்த நிமிடமே வாடியும் போனது.

நேத்ராவைப் பற்றி மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அருண் சற்றுநேரம் வரையில் நிறைவேறாத காதலை எண்ணிப் புலம்பிக் கொண்டிருக்க, அருணின் விபத்துக்கு முழுக் காரணமும் நேத்ரா என ஆதிநந்தன் தீரப்பெழுதிவிட்டான். நேத்ரா என்ற பெயரின் மேல் வன்மமும் கூடியது.

“அது சரி, உனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணினது பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலையே நீ?” என நண்பனைத் துளைக்கும் பார்வைப் பார்க்க,

“ப்ச்.. வேண்டாம்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் ஆதி. இவங்க அவசரப்படறாங்கன்னு நேத்ராகிட்ட என் காதலைச் சொல்ல நினைச்சேன். நேத்ராவுக்கும் என்னைப் பிடிக்கும் என நினைச்சேன். அவளைக் கூட்டிட்டுப் போய் இவளைத் தான் கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்ல நினைச்சேன் ஆதி. எல்லாமே போச்சு.... நான் கண்ட கனவெல்லாம்...”

நண்பனின் புலம்பலைத் தடை செய்வதைப் போல் செவிலியர் ஒருவர் வந்து அவனைப் பரிசோதித்து மருந்துகளை மாற்றிவிட்டுச் சென்றார். சற்றுநேரத்திலேயே மருந்தின் வீரியத்தால் அருண் மீண்டும் உறக்கத்தைத் தழுவியிருந்தான்.

தன் தங்கையின் திருமணத்தின் பொழுது நேத்ராவை முதன் முதலில் பார்த்து அவள் மேல் விருப்பம் கொண்டதாக ஏற்கனவே அவனிடம் சொல்லியிருந்தான் அருண். அவனும் அப்பெண்ணை ஒருமுறை பார்த்திருக்கிறான். ஆனால் அருண் அவளைப் பற்றிப் பேசிய பொழுது அவள் முகம் அவனுக்குச் சற்றும் நினைவில் இல்லை.

சென்ற வாரத்தில் ஒரு நாள் நேத்ராவின் புகைப்படத்தைக் காட்டி அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கப் போவதாகவும் சொன்னான். பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். அதுவும் அந்தப் புன்னகை எதிராளியை வீழ்த்துவதாக இருந்தது.

அது எப்படிப் பார்த்ததும் இவர்களுக்குக் காதல் வருகிறதோ என அப்போது ஆதிநந்தன் எண்ணி சிரித்துக் கொண்டான்.

காதல் எப்படி, எப்போது யார் மேல் வருகிறது என்று தெரிந்து விடுமா என்ன? அப்படியே தெரிந்துவிட்டாலும் காதலை மடைமாற்றம் செய்துவிட முடியுமா என்ன?

ஆதிநந்தனின் வாழ்க்கையிலும் ஒருத்தி நுழையப் போகிறாள் என்றும் அவன் மொத்த சிந்தனைகளையும் புரட்டிப் போடப் போகிறாள் என்றும் அவனுக்குத் தெரியுமா என்ன?


தொடரும்..
 

Author: Pochampalli
Article Title: கார்காலப் பனித்துளி - அத்தியாயம் - 1
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom