• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கடல் தேடும் மீன்கள் -2

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
13
கடல் தேடும் மீன்கள் -2

"ஏம் பா ! என்னை பார்த்தாலே எல்லாரும் என்னவாகப் போறன்னு கேக்கறாங்க. அதே பொறுப்பு நல்லவனுக்கு இல்லையா? +2 ல கூட இதோ அதோன்னு ஏதோ ஜஸ்ட் பாஸ் தான் வாங்கி இருக்கான். மாமாதான் அங்க இங்க ஆள புடிச்சு ஏதோ காலேஜுல சீட் வாங்கி இருக்காரு. அவன் எப்படி நம்ம இனியாவை நல்லா பார்த்துப்பான்?"

"அடி சக்க! இத்தனை நாளும் நான் சொன்னது எதுவும் காதுல விழாத மனுஷனுக்கு மீசை முளைச்ச புள்ளையாவது சொல்லுறது கேக்குதான்னு பார்க்கலாம் . அப்பா பிள்ளையாரப்பா நீதான் அந்த மனுஷனுக்கு நல்ல புத்தி கொடுக்கணும் எப்படியாவது என் பொண்ணு வாழ்க்கையை காப்பாற்றி கொடுப்பா '

மனதார வேண்டிக் கொண்டாள் அருணா. கணவனுக்கு மட்டும் நல்ல புத்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்கு பதில் மகளுக்கும் சேர்த்து அவள் வேண்டிக் கொண்டிருக்கலாமோ ?
எப்போது நல்லவனுக்கு எதிராக வீட்டில் பேச்சு வந்ததோ அப்போதிலிருந்து இனியாவின் பேச்சும் மாற ஆரம்பித்து இருந்தது .

"என்ன தீபக்கை பேச விட்டு எனக்கு எதிரா எல்லாரையும் திருப்பி விடலான்னு பார்க்கிறாயா ? எங்க அத்தை நினைச்சா உன்ன ஒன்னும் இல்லாம ஆக்கிடுவாங்க பார்த்துக்க " என்றாள் சில நேரம்.

இனியா அப்படித் திமிராக பேசும் போதெல்லாம் பார்வதி பெரும்பாலும் இவர்கள் வீட்டுக்கு வந்து விடுவாள். எப்போதுமே பார்வதி இருக்கும் இடம் அமைதியாக இருக்காது . ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களை குத்தி குத்தி பேசுவதும் நக்கல் அடிப்பதும் தான் அவளுக்கு வேலை. அதிலும் அவள் பெரிய மகாராணி போலவும் அருணாவை ஏதோ பிச்சைக்காரியை போலவும் தான் நடத்துவாள். கொண்டவன் சரியாக இருந்தால் கண்டதும் இப்படி பேசுமா? மனதிற்குள் புழுங்கி புழுங்கி அழுவதை தவிர அருணாவுக்கு வேறுவழி தெரியவில்லை. பிடித்தோ பிடிக்காமலேயோ இரவில் விளக்கணைத்த மந்திரத்தில் மூன்று பிள்ளைகள் வந்து விட்டார்கள். அவர்களுக்காகவாவது உயிரை பிடித்துக் கொண்டு வாழ்ந்து தான் ஆக வேண்டும். சிரிப்பு தொலைந்து போனதா அல்லது மறந்துப் போனதா என்றுக் கூட தெரியாமல் வாழும் நம்மைப் போன்ற பல பெண்களில் ஒருத்திதான் நம் அருணாவும்.


கணவனிடமும் அல்லது கணவன் வீட்டினரிடமோ செல்லுபடியாகாத தன்னுடைய வெட்டி பஞ்சாயத்தும் வீண் ஜம்பமும் அண்ணன் வீட்டில் தான் செல்லுபடியாகும் .

"அக்கப்போர் புடிச்ச நாயி வைக்கபோத்துல உக்காந்து தானும் திங்காதாம் திங்கற மாட்டையும் திங்க விடாதாம்"

எதற்கும் எதற்கும் என்ன சம்பந்தம்? பழமொழி என்ற பெயரில் இஷ்டத்துக்குப் பேசுவாள் பார்வதி.

அவளின் வாய்க்கு பயந்து கொண்டு அருணாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விடுவாள் . இருப்பினும் மகளின் வாழ்வு என்று வரும்போது இனி தான் அமைதியாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகவே புரிந்து விட்டது இதோ இப்போது தனக்கு உதவியாக மகனும் பேச ஆரம்பித்து விட்டான். இதற்கு மேல் அமைதியாக இருந்து மகளின் வாழ்வை தானே கெடுத்தது போல் இருக்கக் கூடாது .

அருணா அப்போதே பார்வதியிடம் தெளிவாக பேச ஆரம்பித்துவிட்டாள் .

"இங்க பாருங்க அண்ணி! நல்லவனுக்கு தான் நம்ம இனியாவ கட்டிக் கொடுக்கணுங்கிறது தான் எனக்கும் ஆசை. ஆனால் அதே சமயம் அவன் பேர்ல நல்லவனா இருந்தா மட்டும் போதாது பணமும் சம்பாதிக்கணும் . அவனுக்கு பொறுப்பு வரணும் . இத நான் பெருமைக்கு சொல்லல. தீபக்கும் தீபாவும் மேல என்ன படிக்கணும் என்ன படிக்கணும்னு யோசிக்கிறாங்க. அதே போல நல்லவனும் படிச்சு பெரிய ஆளா வரட்டும். நீங்க கேட்க வேணாம். நாங்களே எங்க பொண்ண கொண்டு வந்து உங்க வீட்டுல விடறோம். ஆனா அவன் சரியான படிக்கு படிக்கல வேலைக்கு போகலன்னா சரியான சம்பாத்தியம் இல்லாத பையனுக்கு என்னுடைய பொண்ண நான் கட்டிக் கொடுக்க மாட்டேன்."

"அது என்ன அண்ணி அப்படி சொல்லிட்டீங்க? இது என்ன நீங்க மட்டும் எடுக்குற முடிவா என்ன ? பெத்த பொண்ணு கல்யாணத்துல கூட எங்க அண்ணனுக்கு உரிமை இல்லையா என்ன ?"

"நீங்க என்ன அண்ணி அப்படி சொல்லிட்டீங்க? உங்க அண்ணன் ஒவ்வொரு விஷயத்தையும் எங்கிட்ட சொல்லிட்டு செய்றாப்ல ? இத்தனை வருஷமா எங்கிட்ட , என்ன வீட்டுக்கு என்ன வருது என்ன போகுதுன்னு ஏதாவது விஷயம் எனக்கு சொல்லி இருக்காங்களா ? நீங்க நினைக்கற மாதிரி இது உரிமை விஷயம் தான். எனக்குன்னு உங்க அண்ணன் இது வரைக்கும் எந்த உரிமையும் குடுத்ததில்ல. புளி அரை கிலோ வேணுமா ஒரு கிலோ வேணுமான்னு கூட அவரு தான் முடிவெடுப்பாங்க. அவரு என்ன வாங்கி கொடுக்கறாங்களோ, நீங்க எடுத்துட்டு போனதுக்கு அப்புறம் இந்த வீட்டுல மிச்சம் மீதி என்ன இருக்கோ அதைத்ததான் என்னோட பிள்ளைங்களுக்கு கொடுத்து வளர்த்திருக்கேன். வயித்துக்கு இல்லன்னா தண்ணி குடிச்சிக்க ! சொல்லிக் கொடுத்துதான் என் புள்ளைங்களை வளர்த்திருக்கேன். அதுவே வாழ்க்கை போச்சுன்னா?என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவு எதுவாக இருந்தாலும் அதுல என்னுடைய எண்ணமும் என் பிள்ளையுடைய எண்ணமும் ரொம்ப முக்கியம் ."

" அவனுக்கு என்ன தெரியும் ? முளைத்து நாலு இலை விடல. நேத்து பொறந்தப் பய. அவனெல்லாம் ஒரு ஆளா ?"

" இப்ப வேணா அவன் சின்ன பையனா இருக்கலாம் ஆனால் எதிர்காலத்தில் அவன் தங்கச்சிங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா அவன் தான் பொறுப்பு எடுத்துக்கணும். இன்னிக்கு வந்து வந்து உங்க அண்ணன் எல்லாத்துக்கும் நிக்கறது போல அவன் தான் அந்த பிள்ளைங்களுக்கு வந்து நிக்கணும். அதனால அவன் சொல்லறதும் ரொம்ப முக்கியம் ."

" அம்மாவும் பிள்ளையும் பேசி வச்சுக்கிட்டு தான் இந்த ஆட்டம் போடறீங்களா? முந்தானை சுகம் காட்டி மூணு பெத்துக்கிட்டதே எங்க அண்ணா எனக்கு எதுவும் செஞ்சுறக் கூடாதுன்னு தானே? என்னையும் எங்க அண்ணனையும் பிடிக்கத் தானே? இந்த வயசுலயும் தளுக்கி மினுக்கி எங்க அண்ணனை எனக்கு எதிரா திருப்பி விட்ட மாதிரி இனியாவையும் திருப்பிவிட பாக்குறீங்களா? அத்தனை சுலபத்துல அதெல்லாம் நடக்காது . என் புள்ள நல்லவன் என்ன வேணும்னாலும் பண்ணுவான் . உங்க பொண்ணு மேஜர் ஆகுற வரைக்கும் தான் பொறுப்பு உங்களுக்கு . அவளுக்கு 18 வயசு ஆனா அடுத்த நாள் அவள தூக்கிட்டு போய் தாலி கட்டுவான் என் புள்ள பாக்குறீங்களா ?"

பார்வதி மிரட்ட அருணா ஆடித்தான் போனாள் . பார்வதியின் முகத்தில் அத்தனை ஆங்காரம். அண்ணி மீது அத்தனை வெறுப்பு. இனியா மட்டும் தன் வீட்டுக்கு வந்து விடட்டும். இந்த அருணாவை என் காலில் விழ வைக்கறேனா இல்லையா பாரு. எதற்கு இத்தனை கோபம் வன்மம் அருணா மீது?

அருணா ஏதற்கு பயந்தாளோ அதற்கு ஏற்றபடி தான் மகளும் பேச ஆரம்பித்து இருந்தாள். சிறு பிள்ளைதான் வளர வளர புரிந்துக் கொள்வாள் என்று அருணா நினைத்தாள். அருணாவை பார்வதி படுத்தி எடுப்பது எல்லாம் பார்த்துக் கூட இனியாவுக்கு நிதர்சனம் புரியவில்லை. இது அவளுக்கு வரமா சாபமா?

வீட்டில் இனியா எத்தனை தான் பிடிவாதமாக இருந்தாலும் அருணாவை மதிக்காமல் இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி தீபக் தான் இனியாவை மேற்கொண்டு படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று உந்திக் கொண்டிருந்தான் . இயல்பிலேயே படிப்பில் ஆர்வம் இருந்த இனியா நல்லபடியாக படிப்பை முடித்து விட்டாள் .எளிதில் நல்லவன் எப்படி அவளை படிக்க விட்டான்? இந்த எண்ணம் அருணாவுக்கு மனதில் தோன்றிக் கொண்டே தான் இருந்தது இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது இல்லை என்றால் அத்தனை எளிதாக பார்வதியும் இனியா மேல் படிப்பு படிக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டாள். இனியாவைப் பற்றிய முடிவுகள் பெரும்பாலும் எடுத்தது எல்லாம் கணவன், பார்வதி, நல்லவன்தான். தந்தையும் மகளும் அருணாவை ஒரு சமையல்காரிப் போலத்தான் நடத்தினார்கள்.


எல்லாம் செய்வது குழந்தைகளுக்காகத் தானே . அதுவே இல்லாமல் மகளின் வாழ்க்கை பாழாகி விடுமோ என்ற அச்சம் தான் அருணாவுக்கு அதிகமாக இருந்தது. இனியாவைப் பற்றிய கவலையில் தன்னுடைய உடல் நலம் பார்க்காமல் விட்டு விட்டாள் அருணா. ஒரு சில நரை முடிகள் என்று ஆரம்பித்தது சட்டென தலை முழுவதும் நரைத்து விட்டது. முகம் தொங்கி வயதான தோற்றம் வந்து விட்டது. கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையே எடுத்துவிட்டார்கள். அன்னை எத்தனையோ மனதாலும் உடலாலும் தன்னை வருத்திக் கொண்டபோதும் நான், எனக்கு, என்னுடையது என்றுதான் இனியா வளர்ந்துக் கொண்டிருந்தாள். அழகும் அறிவும் இருந்தாலே சற்று திமிரும் வந்து விடுமோ? பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் எனக்கு யாரும் வேண்டாம் என்று எட்டி உதைக்கும் அளவுக்கு?

படிப்பு நிக்கக் கூடாது தீபக்கின் மிரட்டலினால் கல்லூரி படிப்பை ஒரு வழியாக முடித்துவிட்டாள். கல்லூரியிலேயே அவளுக்கு பிளேஸ்மெண்ட் ஆகியிருந்தது. அதுவும் மிகப்பெரிய நிறுவனத்தில். இந்த விஷயம் தெரிந்த உடனேயே நல்லவன் அவளுக்கு பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்தான். கேக் கட் செய்ய வைத்தான் அந்த நொடி அவள் தன்னைத்தானே தேவதையாக உணர்ந்து கொண்டாள். இதைவிட வேறு என்ன வேண்டும் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி. தன்னை யாராவது கொண்டாட மாட்டார்களா என்று ஏங்கும் வயது. அதையே தனக்கானவன் செய்யும்போது? எகிறி குதித்தால் வானம் இடித்து விடும்தானே!

அதுவே வீட்டில் தெரிந்த போது தீபக், "சரி இந்த எக்ஸ்பீரியன்ஸ் வச்சுக்கிட்டு அடுத்தது மேற்கொண்டு ஹையர் ஸ்டடிஸ் பண்ணு எடுகேஷன் லோன் போடு. கேட் பண்ணு . ஜி ஆர் ஈ படி . வெளிநாட்டுக்கு போகறதுனாலும் போ. வெறும் இந்த பி இ வெச்சுக்கிட்டு இந்த காலத்துல வேற எதுவும் பண்ண முடியாது . இல்ல எம் ஈ ஏதாவது படி"என்றுதான் கூறினான். அவள் இத்தனை தூரம் முயன்று படித்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்வாகியது பெரிய விஷயம் இல்லை ஏன் விஷயமே இல்லை என்பது போலத்தான் அவர்கள் நடந்துக் கொண்டதாகத் தோன்றியது.

"என்னன்னா நீ எப்படா பா படிப்பு முடியும் எப்ப நல்லவன கல்யாணம் பண்ணிக்கலாம்னு காத்துட்டு இருக்கேன் நீ என்ன இப்படி பேசுற ?"

" என்ன இனியா எப்ப பாரு கல்யாணம் கல்யாணம்னு சொல்லிக்கிட்டு? இப்ப எதுக்கு உனக்கு அவசர அவசரமா கல்யாணம்? உனக்கு இன்னும் வயசு ஆகல. மேற்கொண்டு படி. லைஃப்ல செட்டில் ஆகு. உனக்கு கல்யாணம் தான் பண்ணிக்கணுன்னா நல்லவன் வேண்டாம் வேறு யாராவது படிச்சு நல்ல வேலையில இருக்கிறவனை கல்யாணம் பண்ணிக்கோ இல்லையா நல்லவனக் கூட நீ கல்யாணம் பண்ணிக்கோ ஆனா அவன் உருப்படியா ஏதாவது ஒரு வேலைக்கு போகணும் அது இல்லாம உனக்கு அவனோட கல்யாணம் பண்ண நான் சம்மதிக்க மாட்டேன்."

" நீ எதுக்கு சம்மதிக்கணும் எனக்கு எங்க அப்பா இருக்காங்க .என்னப்பா சொல்றீங்க ?"

" அண்ணன் சொல்லறதும் சரிதானே இனியா ? நல்லவனுக்கு உன்ன கட்டிக் கொடுக்கிறத பத்தி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பொறுப்பா எந்த வேலைக்கும் போகாம இருக்க எப்படிமா எங்க வீட்டு பொண்ணு கொடுக்க முடியும் ?"

"என்னப்பா நீங்களும் அவங்க கூட இப்படி பேசறீங்க? அப்புறம் எதுக்கு சின்னதுலேர்ந்து அவருதான் எனக்குன்னு சொல்லி சொல்லி வளர்த்தீங்க ? இப்ப உங்களுக்கு என்ன ஒரு வேலைக்குப் போகணும் அவ்வளவுதானே? அதான் நான் வேலைக்குப் போறேனே . மாமா ஸீ ஏ படிச்சு முடிக்கட்டும். அப்புறம் ஒரு நல்ல வேலைல செட்டில் ஆகிடுவாரு. இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அது வரைக்கும் என்னோட ஒரு ஆளு சம்பளத்துல நாங்க குடும்பம் நடத்திக்கறோம். அதுக்கு மேலையும் அவங்க அப்பாவுக்கு வருமானம் வருது. வேற என்ன வேணும்?"

பல வருடங்களாக தீபக்கும் அருணாவும் சொன்னதாலோ என்னவோ அவருக்கும் தான் மனம் மாறி விட்டதோ? அவரும் தான் நண்பர்கள் பலரின் வீட்டுப் பிள்ளைகளின் திருமணத்துக்கும் சென்று கொண்டிருக்கிறார். சொந்தங்களில் கூட பல திருமணங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அவரும்தான் பார்க்கிறார். மணமகன் என்ன வேலை? என்ன படிப்பு ? எல்லாம் பத்திரிகையில் போட்டு விடுகிறார்கள். அதுவும் கூட காரணமாக இருக்கலாம். நல்லவனுக்கு இனியாவைத் திருமணம் செய்து வைக்கத்தான் இப்போதும் அவருக்கு எண்ணம். இருப்பினும் அவனது நடவடிக்கை ஆள், தோற்றம், நடை உடை, நட்புகள், பேச்சு எல்லாமே சற்று கலக்கமாகத் தான் இருந்தது.


வெளியில் இருந்து பார்க்கும்போது சரி என்று எடுத்துக் கொள்வது வேறு, பெண்ணுக்கு தந்தையாக யோசிப்பது வேறு அல்லவா ?
அவனின் தோற்றம் இனியாவுக்கும் பிடிக்கவில்லை தான். அவனை எப்படியும் தன்னுடைய காதலால் மாற்றி விடுவேன் என்ற தைரியமா அல்லது நம்பிக்கையோ ஏதோ ஒன்று அவனையே சுற்றி சுற்றி வர வைத்தது. உடன் படித்தவர்களும் வேலைப் பார்ப்பவர்களும் பலர் கம்பீரமான ஆண்களாக இருக்க இவனை ஏன் பிடிக்கிறது? நினைத்து நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொள்வாள்.

ஒரு நாள், வீட்டில் பெரியவர்கள் இல்லை. தீபாவும் இவளும் தான் இருந்தார்கள் அப்போது ஒரு ஆண் மகன் வந்து பெல் அழுத்தினான்.

"யாரு?"

யோசனையுடன் கதவைத் திறந்தாள்.

"ஹாய் ! நான் மாறன். தீபக் இல்லையா? அவனோட பிரண்டு"

இவள் மாறனை அளவிட்டாள். நல்ல உயரம். பார்க்க டீசண்ட்டாக இருந்தான். பொய் சொல்வதுப் போல தெரியவில்லை யோசித்துக் கொண்டிருக்கும்போதே தீபா வந்து விட்டாள்.

"யாருக்கா?"

மாறனை கண்டுக் கொண்டவள், "வாங்க! வாங்க !அண்ணா வெளில போயிருக்கு. இப்ப வந்துரும். உக்காருங்க."

'அதென்ன இவளுக்கு மூஞ்சில லைட் எரியுது?' இனியா யோசனையுடன் நிற்க தீபா அவனுக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தாள்.


இனியா அவனை நோட்டம் விட்டாள் . டீ ஷர்ட் ட்ராக்ஸ் போட்டிருந்தான். இருந்தாலும் ஸ்மார்ட்டாகவே இருந்தான். நீட்டாக ஷேவ் செய்யப்பட்ட முகம் இந்தக் கெட்டப் பழக்கமும் எனக்கு இல்லை என்று சொல்லிய உதடுகள், நேர்த்தியாக வாரப்பட்ட தலை, குறைந்தது சில வருடங்களுக்காவது எனக்கு தொப்பை வராது என்று சொல்லிய உடல் வாகு. பார்க்கும் எந்த பெண்ணும் அவன் மீது ஆசைப் படுவது உறுதி.

இவளுக்கு வேறு ஏதேதோ எண்ணங்கள் . 'மாமாவும் இந்த மாதிரி டிரஸ் பண்ண எவ்ளோ நல்லா இருக்கும்? முதல்ல மாமாகிட்ட சொல்லி அந்த தலை முடிய ஒழுங்கா கட் பண்ண சொல்லணும். அது என்ன? பாதி வெட்டி பாதி வெட்டாம?'

"காபி கலக்கவா" மரியாதைக்காக இனியா கேட்டுக் கொண்டிருக்கும்போதே அருணா வந்து விட்டார். இனியா இவரு தான் மாறன். நம்ம தீபக்கோட பிரண்டு. இவரும் CA முடிச்சுட்டு ஒரு கம்பனில புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காரு. அது தவிரவும், ஆட்டிசம் குழந்தைங்களுக்கு போய் ஓவியம் வரைய சொல்லிக் குடுக்கறாரு."

என்னதான் அருணா அவனைப் பற்றி உயர்வாக சொல்லிக் கொண்டிருந்தாலும் இவளுக்கு என்னவோ அவன் மீது பெரிய எண்ணம் எதுவும் இல்லை. அருணாவுக்குத் தான் மனம் அடித்துக் கொண்டது.

அன்னையின் ஆசை நிறைவேறுமா?

மகளுக்காக இந்த மீன் கடலைத் தேடட்டும். மகள் என்னும் மீன் மணலில் கிடக்கப் போகிறாளோ இல்லை கடலில் நீந்தப் போகிறாளா? பார்க்கலாம் ............
 
Last edited:

Author: Ilampillai
Article Title: கடல் தேடும் மீன்கள் -2
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Bharathi Sivakumar

Active member
Joined
Jun 27, 2024
Messages
197
இனியாவுக்கு என்ன போதனை செய்தாலும் நல்லவன் நல்லவனாதான் தெரிவான் 🥺🥺🥺🥺🥺
 
Joined
Mar 21, 2025
Messages
68
பொண்ணுக்காக என்று
பெத்த மனம் தவித்தால்
பெண்ணோ அதை பாராமல்....
பாராட்டுக்கு அடிமையான மனது
படிப்புக்கு மதிப்பு தரவில்லை....
பல பெண்களுக்கு
பட்டால் தான்
புரியும் உலகம்....
 

Ilampillai

New member
Joined
Mar 27, 2025
Messages
13
பொண்ணுக்காக என்று
பெத்த மனம் தவித்தால்
பெண்ணோ அதை பாராமல்....
பாராட்டுக்கு அடிமையான மனது
படிப்புக்கு மதிப்பு தரவில்லை....
பல பெண்களுக்கு
பட்டால் தான்
புரியும் உலகம்....
இயல்பு தானே
 
Top Bottom