• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உருகியோடும் 12 (FINAL)

Sungudi

Moderator
Joined
Apr 6, 2025
Messages
20
12. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

“சித்ரா, சித்ரா! கதவைத் திற டி! வழக்கம்போல காசை மறந்துட்டியே!”

அது ஒரு சிறிய, அழகான கோவில். அங்கு தான் சித்ராவுக்கும், பூபதிக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. அன்று அங்கே இந்த ஒரு தம்பதிக்குத் தான் திருமணம். எளிமையாகச் செய்தாலும், பல நாட்கள் நினைவில் கொள்ளும் படியாக தனித்துவமாகச் செய்ய வேண்டும் என்பதில் பூபதி குறிப்பாக இருந்தான். சன்னதிக்கு வலப்புறம் ஓரிடத்தில் பட்டுப்பாய் விரிக்கப்பட்டு அதில் சடங்குகள் துவங்கியிருந்தன. கோவிலின் வெளிச் சுற்று துவங்கும் இடத்தில் ஒரு சிறிய பத்துக்கு பத்து அறை. அதில் வைத்துத் தான் சித்ரா திருமணப் புடவையைக் கட்டிக் கொண்டிருந்தாள். ஒப்பனை கலைஞர் வெளியே நின்றிருந்தார். ‘நானே சேலையைக் கட்டுறேன்.. ப்ளீஸ்.. அப்புறமா நீங்க முகத்துக்கு மட்டும் லேசா டச் பண்ணி விடுங்க’ என்று சொல்லியிருந்தாள். பியூட்டீஷியனே வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னாள், ஆனால் மற்றவர்கள் தான் ‘இருக்கட்டும், தெரிஞ்ச பொண்ணு தான்’ என்று ஏற்பாடு செய்து விட்டனர்

மகள் புதுச் சேலை கட்டுகிறாளே என்று அந்தப் பரபரப்பிலும் ஞாபகமாக சுப்பம்மாள் நாணயத்துடன் வந்து கதவைத் தட்டினார். அதை வாங்கி, கதவைச் சாத்திவிட்டு சேலை நுனியில் வைத்து முடிச்சிட்டுக் கொண்டிருந்தாள் சித்ரா. மீண்டும் கதவு தட்டப்பட்டது. இப்போது நாணயத்தை நீட்டியவர் சத்தியபாமா. “அன்னிக்கு நிச்சயதார்த்தப்ப உங்க அம்மா சொன்னாங்களே.. அப்பதான் எனக்குத் தெரியும், புதுப் புடவைன்னா காசு வெச்சுக் கட்டிக்குவேன்னு.. இது எங்க அம்மா அப்பா காசிக்குப் போயிட்டு வந்தப்ப வாங்கிட்டு வந்த வெள்ளிக் காசு. காசி விஸ்வநாதர் விசாலாட்சி படம் போட்டிருக்கும்.. வச்சுக்கோ” என்று கொடுத்தார்.

ஏற்கனவே போட்ட முடிச்சை நெகிழ்த்தி அத்துடன் இந்த நாணயத்தையும் வைத்தாள். “தேங்க்ஸ் அத்தை!” என்றாள். அந்த அறையில் சிறிய ஃபேன் தான் இருந்தது. மிகக் குறைவாகவே காற்று வந்தது. தன் புடவை முந்தானையை வைத்து அவளுக்குக் கொஞ்சம் காற்று வீசி, தன்னுடைய கைக் குட்டையைக் கொடுத்துவிட்டு வா வெளியே வந்தார் சத்தியபாமா.

“சித்ரா சித்ரா! சேலை கட்டிட்டியா?” என்று மணிமேகலையின் குரல் கேட்டது.

“இல்லக்கா.. ஒரு அஞ்சு நிமிஷம் யாரும் கூப்பிடாம தான் இருங்களேன்.. இதோ இப்ப கட்டிடுவேன்” என்று மடிப்பு வைத்த பகுதியைத் தோளில் போட முயல, மூன்றாவது முறையாகக் கதவு தட்டப்பட்டது.

“இந்த மணிமேகலை அக்கா ஏன் இவ்ளோ டார்ச்சர் பண்றாங்க.. ஏற்கனவே வேர்த்துக் கொட்டுது” என்று அவள் வாய்விட்டே கூற, மிகச் சரியாக அப்போது மின்சாரம் தடைப்பட்டது.

கதவை லேசாகத் திறந்து பார்த்தாள். அங்கே இன்னொரு கை ஒரு நாணயத்தை நீட்டியது. குறைவான வெளிச்சத்தில் அந்தக் கை யாருடையது என்பதைக் கவனிக்காமல் கையைப் பிடித்து, “உள்ளே வாங்க மணி அக்கா” என்று இழுத்துவிட்டுக் கதவைச் சாத்தினாள்.

பின்னர் தான் தோன்றியது, கை சொரசொரப்பாக, கனமாக இருக்கிறதே என்று. நிமிர்ந்து பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தது போல் மின்சாரம் வர, உள்ளே வந்திருந்தது வேறு யாருமில்லை, ராமச்சந்திர பூபதி தான். நல்ல வேளையாக புடவை பாதுகாப்பான இடத்தில் தான் இருந்தது.

“ஐயோ உங்க கையையா புடிச்சு இழுத்தேன்? டக்குனு யாரும் பாக்க முன்னாடி ஓடிடுங்க” என்றாள் பரபரப்புடன்.

“என்ன கையைப் புடிச்சு இழுத்தியா?” என்றான் பூபதி.

வெட்கம், கோபம் இன்னும் என்னவெல்லாமோ உணர்வுகள் சித்ராவுக்குள் மாறி மாறி வந்தன.‌ இவன் வரும் போதெல்லாம் இப்போது இப்படித்தான் ஆகிறது.

“இப்ப ஏன் நீங்க வந்தீங்க? உங்களை உட்கார வச்சு சடங்கு கிடங்கு.. அதெல்லாம் பண்ணலையா?”

“வேற எந்த நோக்கமும் இல்லை. நீ புதுப் புடவைக்குள்ள காசு வச்சு முடிஞ்சிக்குவேல்ல.. இன்னைக்கு நம்ம கல்யாணமாச்சே.. அதான் ஸ்பெஷலா இருக்கட்டும்னு.. இது எங்க அம்மாவுடைய தாலில செஞ்சது.. என்று ஒரு தங்க நாணயத்தை நீட்டினான்” சித்ராவுக்கு எப்போதோ கேட்ட தேவதைக் கதை நினைவுக்கு வந்தது.

தன் கோடரியைத் தவறவிட்ட ஒரு விறகுவெட்டிக்கு தங்கம், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று கோடரிகளையும் ஒரு தேவதை கொடுத்தாளே, அதைப் போல் இப்பொழுது சொல்லி வைத்தார் போல் அடுத்தடுத்து மூன்று விதமான நாணயங்கள் தனக்கு வருகின்றன. ‘இத்தனை அன்புக்கும் நான் தகுதியானவளா, என்ன தவம் செய்தேன்?’ கண்களில் நீர் நிரம்பியது.

“அடடா இந்த பாரு.. பொசுக்கு பொசுக்குன்னு அழக்கூடாது” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான். இந்த முறை கையில் கைக்குட்டை தயாராக வைத்திருந்தான்.

அவளது மனநிலையை மடைமாற்றும் விதமாக, “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்.. ஒற்றை நாணயம்” என்று முணுமுணுத்தான் பூபதி.

“நடமாடும் எஃப் எம்.. சிச்சுவேஷன் சாங் பாட வந்துட்டாரு. திரும்புங்க அந்தப் பக்கம்” என்றாள்.

அவள் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து பூபதி மறுபக்கம் திரும்பிக் கொண்டான். கடகடவென்று புடவையைக் கட்டினாள் சித்ரா. இருந்து சின்ன மின்விசிறி அவ்வளவு காற்றைக் கொண்டு வரவில்லை.‌ பெரிய மனது பண்ணி கொஞ்ச நேரம் வந்திருந்த மின்சாரம் மீண்டும் பொசுக்கென்று தடைப்பட்டது.

“இருந்தாலும் தங்கக் காசு.. எதுக்குங்க.. கொஞ்சம் அதிகம் தான் இல்லை?”

“நீ எனக்கு வாழ்க்கையே கொடுத்திருக்க நான் உனக்கு ஒரு தங்க காசு தர மாட்டேனா?”

நெற்றியில் அரும்பரும்பாகப் பூத்திருந்த வேர்வை முத்துக்களையும் ஒற்றி எடுத்தான் பூபதி.

“உன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது முறையல்லவா?” மெல்லிய குரலில் இனிமையாகப் பாடினான்.

“நல்லா இருக்கே உங்க குரல்..” ஒரு நிமிடம் ரசித்தவள், நேரமாகிவிட்டதே உணர்ந்து, “ம்.. நேரமாச்சு கிளம்புறீங்களா?”

“எங்க கல்யாணத்துக்கு பத்து நிமிஷம் முன்னாடி உங்க அம்மா டிரஸ் மாத்திக்கிட்டிருந்த ரூமுக்குள்ள போனேன்டா.. போயிட்டு கண்ணீரையும், நெத்தி வேர்வையையும் மட்டும் தொடச்சிட்டு வெளிய வந்துட்டேன்.. அப்படின்னு பின்னாடி நம்ம வாரிசுகள் கிட்ட சொன்னா நல்லா இருக்குமா? அதுக்காக..” என்றவன், சித்ராவின் தோள்களைப் பற்றி, அவள் நெற்றியில் லேசாக ஒரு முத்தமிட்டு, தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு வெளியே வந்தான்.

தண்ணீர் குடிப்பதற்காகச் சென்றிருந்த அழகு நிலையப் பெண் வந்திருந்தாள். அரை வாசலில் அவளைப் பார்த்தவுடன் ஒரு நிமிஷம் ‘ஜெர்க்காகி’ நின்றான் பூபதி. “போயிட்டு வாங்க அண்ணா.. என் அனுபவத்துல இப்படி நிறைய பாத்துட்டேன்.. யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்” என்றாள் கண்களைச் சிமிட்டி.

மணவறையில், “அண்ணா எங்கண்ணா போன? உனக்கு டிரெஸ் பண்றதுக்கு துணைக்கு என் வீட்டுக்காரரை அனுப்பி வச்சா அவரையும் காணோம்?” என்றாள் அனிதா.

“ஆமாம்மா.. அவர் காவலுக்குத் தான் வந்திருந்தார்” என்று சொல்லிச் சிரித்தான் பூபதி.

“மச்சான் உடையான் படைக்கு அஞ்சான், இல்லையா மச்சான்?” என்றான் நர்மதாவின் கணவன்.

அனிதா, நர்மதா இருவரின் கணவர்களும் தான் அவனுக்காகத் தங்க நாணயம் செய்து கொண்டு வந்ததும், சித்ராவின் அறைக்குள் அவன் செல்லும் வரை வழியில் யாரும் குறுக்கிடாமல் பார்த்துக் கொண்டதும்.

“கரெக்ட் தான்.. ரெண்டு பேருக்கும் புதுசா மோதிரம் போட்டுடுறேன்” என்று சைகை செய்தான் பூபதி. “அது!” என்று அவனை பார்வையாலே மெச்சி, தங்களுக்குள் கைகொடுத்தனர் இருவரும்.

நர்மதா அனிதாவிடம், “அக்கா! இதுங்க மூன்றும் சேர்ந்து ஏதோ பண்ணி இருக்குதுங்க.. தாலி கட்டி முடியட்டும்.. அண்ணியை நம்ம கூட்டணியில் சேர்த்துக்குவோம்.. நாமும் இப்படி சும்மாச் சும்மா கை குடுத்து இவங்கள வெறுப்பேத்தலாம்” என்றாள்.

சித்ரா அழைத்து வரப்பட, திருமணம் இனிதே நிறைவேறியது. நெருங்கிய சொந்தங்கள் அங்கு வைத்து ஆசி வழங்கினர். அதன் பின் கடவுள் சன்னதியில் வணங்கி, கோவிலை வலம் வந்து, பின் மணமகன் வீட்டிற்கு பெண்ணும் மாப்பிள்ளையும் கிளம்பினார்கள்.

பூபதியின் வீட்டிற்கு முன்பாகத் தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கேயே உணவு ஏற்பாடுகள். ஊரில் பாதிப்பேர் பூபதிக்கு தெரிந்தவர்கள் தான். அனைவரும் ஏற்கனவே அங்கு வந்து காத்திருந்தனர்.

பூபதிக்கு நன்கு தெரிந்த தமிழிசைக் கலைஞர்கள் இசைக்கச்சேரி நடத்திக் கொண்டிருந்தார்கள். பழைய திரைப்படப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என்று பாடத் துவங்கியிருந்தார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் காரில் இருந்து இறங்கியவுடன் தமிழ் கூறும் நல்லுலகின் ஆதிகாலத்துப் பழக்கமான, “மணமகளே மருமகளே வா!” பாடினார்கள்.

அடுத்து, “திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி” என்று பாடினார்கள்.

“அண்ணா! உன்னோட ஃபேவரிட் ‘சித்ரா’ பிளே லிஸ்ட்ட கொடுத்து பாடச் சொல்லுவோமா?” என்று முன்பே நர்மதா கேட்டதற்கு, “நோ நோ! அது எனக்கு மட்டும்தான். பப்ளிக்குக்குக் கிடையாது” என்று சொல்லிவிட்டான் பூபதி.

அத்தனை பேரும் வந்து வரிசையாக வாழ்த்தி முடிக்க நான்கு மணி நேரம் ஆனது. அவ்வளவு நேரம் சளைக்காமல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டே இருந்தார்கள். பெரிய மனிதர்கள் வருகையில் அவர்களுக்கென தேர்ந்தெடுத்து பாடல்களைப் பாடினார்கள். குத்தாட்டம் போடும் மூடில் இருந்தவர்களுக்காக அவர்கள் கேட்ட பாடல்கள், இளைய தலைமுறை கேட்டுக்கொண்டதற்காக “காத்து மேல, காத்து கீழ..” என்றெல்லாம் பாடினார்கள்.

நடந்த நிகழ்வுகளை எல்லாம் கூர்மையாக பார்த்துக் கொண்டே இருந்தாள் சுப்பம்மாள். தவறாக எதுவும் நடந்து விடக்கூடாது என்ற பதட்டம் அவருக்கு உள்ளூர இருந்து கொண்டே இருந்தது. ‘ஐயோ இந்த பாட்டுல குப்பை மேடுன்னுல்லாம் வருமே, அந்த வார்த்தை எல்லாம் கல்யாண வீட்ல வேணுமா?’ என்று சுப்பம்மாள் பதற,

“காத்து மேல காத்தடிக்குது.. காத்து ரொம்ப வாசம் அடிக்குது.. சைடுல பார்த்தா விருந்து சாப்பாடு மா!” என்று பாட்டை லாவகமாக மாற்றினார் பாடகர். மிகுந்த நிறைவாக இருந்தது சுப்பம்மாளுக்கு.

சித்ராவின் தம்பி தங்கை இருவரின் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். பூபதியின் ஏரியாவில் உள்ள ஆண்கள், பெண்மணிகள் அனைவரும் இழுத்துப்போட்டு வேலை செய்தார்கள். நர்மதாவையும் அனிதாவையும் கையிலே பிடிக்க முடியவில்லை அவ்வளவு மகிழ்ச்சியுடன் வேலை பார்த்தார்கள். ‘இது தானே வேணும், வாழப்போற இடத்தில அவளுக்குக் கை கொடுக்கிற மாதிரி பொம்பளைங்க இருந்துட்டா கவலையே இல்லையே..” வானத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டார் சுப்பம்மாள். மீண்டும் அவருக்குக் கடவுள் நம்பிக்கை துளிர்த்திருந்தது. நல்ல வேளை, மருந்துக்கும் கூட ஒருவரும் இரண்டாவது திருமணம் தானே என்று முகத்தைச் சுழிக்கவில்லை, முணுமுணுக்கவில்லை.

சித்ராவின் முதலாளி ரவீந்திரன் வந்தார். பல பெண் தொழில் முனைவோரை உருவாக்கியதற்காக அவருக்கு ஒரு சிறப்பு விருது கிடைத்திருந்தது. “உன்னோட யோசனையால நான் உட்பட நிறைய பேர் அடுத்த நிலைக்குப் போயிருக்கோம்.‌ ரிட்டையர்டு ஆகுற வயசு வந்துருச்சு.. இனிமே என்ன இருக்கு வாழ்க்கையில? அப்படின்னு நினைச்சேன்.. ஒரு புது அத்தியாயத்தைக் காட்டியிருக்க” என்றார். பெரிதாக ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்தார்.

“ஐயோ.. சும்மா மனசுல தோணினதைக் கேட்டேன் சார்.. நீங்க மனசு வெச்சு இவ்வளவு முயற்சி எடுக்கலேன்னா இதெல்லாம் நடந்திருக்குமா? இன்னும் நாம செய்ய வேண்டியது நிறைய இருக்கு சார்” என்றாள் சித்ரா.

“இப்பப் புரியுதா? நீ தான் நான் உட்பட பல பேருக்கு வாழ்க்கை குடுத்திருக்க” சித்ரா காதைக் கடித்தான் பூபதி. “அச்சோ, நீங்க வேற சும்மா இருங்க” என்று மாலைகளின் மறைவில் அவன் கையைப் பிடித்துக் கிள்ளினாள் சித்ரா.

“பரவாயில்லையே! தாலி கட்டினவுடன் உரிமையா மிரட்ட ஆரம்பிச்சுட்டாளே நம்ம பொண்டாட்டி! டேய் பூபதி.. உன் வாழ்க்கை பிரகாசமா இருக்கப் போகுதுடா” அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கூறினான்.

அனைவரும் வாழ்த்தி முடித்தவுடன் சத்தியபாமா பரமுவைக் கூட்டிக் கொண்டு மேடை ஏறினார். அன்றைய நிச்சயதார்த்த நிகழ்வுக்குப் பின் முகுந்தன் பரமுவை அழைக்கவே இல்லை. அவனுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை இவனும், இவனுடைய ஸ்டேட்டஸ்களை அவனும் பார்க்கிறார்கள் என்பது மட்டும் இருவருக்கும் தெரிந்திருந்தது. திருமணம் முடித்தவுடன் பூபதி சித்ராவின் நெற்றியில் பொட்டு வைக்கும் காட்சியையும், பெரும் நிறைவுடன் இருவரும் சபையினரைக் கும்பிடும் காட்சியையும் துல்லியமாகப் படமெடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தான் பரமு.

அதை முகுந்தன் பார்த்து விட்டான். உடனே ஆஃப்லைன் சென்று விட்டான். தான் சித்ராவை பார்த்ததுக்கும், பூபதி பார்க்கும் விதத்திற்கும் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தன் வாழ்வில் சித்ராவின் அத்தியாயம் முடிந்தது என்ற உண்மை முகத்தில் அறைந்தது. இனிமையான கதையை சோகக் கதையாக மாற்றிய தன் முட்டாள்த்தனத்தை எண்ணி வாழ்வில் முதன் முறையாக நொந்து கொண்டான் முகுந்தன். அனைவரும் சொன்னபடி சித்ராவைத் திருமணம் செய்து கொண்ட பின்பாவது நேர்மையாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பெரிய மனிதருக்கு மட்டுமாவது காசைக் கொடுத்துத் தப்பித்திருக்கலாம் என்று நினைத்தான்.‌ இனிமேல் முகுந்தனை பிளாக் செய்து விடலாம், காலம் அனுமதித்தால் ஆண்டுகள் பல கழித்து அம்மாவும் மகனும் சேர்ந்து கொள்வார்கள் என்று பரமு முடிவு செய்தான்.

கையில் ஒரு பையுடன் சத்தியபாமா மணமகனும் மணமகளும் நின்றிருந்த மேடை ஏறிய போது, ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடலுக்கான சிறிய இடைவெளி. பாடகர்கள் ஒவ்வொருவராகச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து தங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

அவர்களிடமிருந்து பரமு மைக்கை வாங்கி வர, அந்த மைக்கை வாங்கிய சத்தியபாமா, “எல்லாரும் பாட்டு கேட்டு சந்தோஷமா இருக்கீங்க. குறுக்கிடறதுக்கு மன்னிக்கணும். என் மகளுக்கு மகளா, மகனுக்கு மகளா இப்ப நான் சித்ராவைத் தான் பார்க்கிறேன். என்னோட சுய சம்பாத்தியமான, ஒரே சொத்தான இந்த வீட்டை அவ பேருக்கு எழுதி வச்சிருக்கேன். இந்தாம்மா சித்ரா வாங்கிக்கோ. மாப்பிள்ளை நீங்களும் சேர்ந்து வாங்கிக்கோங்க” என்றார்.

அதிர்ந்து போய் நின்றாள் சித்ரா. “சத்யாம்மா! உங்களுக்கு இருக்கிற ஒரே ஆதரவு இதுதான். இதைப் போய் ஏன் எங்களுக்குக் கொடுக்குறீங்க? எங்களுக்குத் தான் ஏற்கனவே வீடு இருக்கே.. வாழ்க்கை இருக்கு.. காலம் பூரா சம்பாதிக்க போறோம்” சிரித்துக் கொண்டே மறுத்தான் பூபதி.

“இது என்னுடைய மனதிருப்திக்காக”

‘மீண்டும் சத்தியபாமாவின் தலையீடு தன் மகள் வாழ்க்கையில் தேவையா?’ சற்று முன் தெளிந்திருந்த சுப்பம்மாளின் மனக் குளம் இப்பொழுது மீண்டும் குழம்பியது.

பூபதியை பார்த்த சத்தியபாமா, “இப்ப இது சித்ராவுடைய கம்பெனியும் கூட. உங்க வீட்டிலேயே தங்கி இருங்க.. என்னோட வீட்டையும் சேர்த்து விரிவாக்கம் செஞ்சு இன்னும் நிறைய பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுங்க.. வேலையும் சம்பாத்தியமும் தான் ஒரு பொண்ணுக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியது.


சித்ரா கண்களில் அவளைக் கேட்காமலேயே கண்ணீர் வடிந்தது. இம்முறை அதைத் துடைக்க ஒருவரும் இல்லை. “அப்போ நீங்களும் அங்கேயே தானே இருப்பீங்க? இருந்து கம்பெனியை பார்த்துக்குவீங்கள்ல..?” நர்மதா அதே மேடையில் வைத்து துணிந்து கேட்க,

“ஏற்கனவே நம்ம டியூஷன் சென்டர் இருக்கு. இல்ல அதோட சேர்த்து இன்னும் வேற சில விஷயங்கள் பண்ணப் போறோம. எல்லாமே ஜெயில் தண்டனை பெற்று வந்த பெண்களுக்காகவும், அப்புறம் தவறான முடிவு எடுத்து வாழ்க்கையில் தடுமாறி நிக்கிற பெண்களுக்காகவும். சிலபல காரணங்களால சிலரால தங்களோட சொந்த வீட்டில் இருக்க முடியாது.. அரசாங்கமே எல்லாருக்கும் கை கொடுக்க முடியாது இல்லையா? கை கொடுத்தாலும் அவங்களுக்கு வழிகாட்ட நம்மள மாதிரி வாழ்க்கையில அனுபவப்பட்டவங்க வேணும்.. ஆதரவுன்னு ஒன்னு இருந்தா ஒருத்தங்க எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் அப்படிங்கறது சித்ராவே உதாரணம். மணிமேகலை கிட்ட கேட்டா சித்ரா எப்படி துள்ளித் திரிஞ்சு விளையாட்டா இருந்தவன்னும், கடமையே கண்ணா, வேலை செய்றதும் காசைக் கொண்டு போய் அம்மாகிட்ட கொடுக்கிறதுமா இருந்த சின்னப் பொண்ணுன்னு சொல்லுவா.

ஒரு கஷ்டம்னு வரும்போது தீயில் வெந்து புடம் போட்ட தங்கமா பளபளன்னு வெளிய வர்றவங்க இங்கே அபூர்வம். கஷ்டத்துல இருக்குற பொண்ணுக்கு ஆதரவா இந்த சமூகம் நினைச்சுன்னா அவ இன்னும் எத்தனை பேருக்கு நல்லது செய்ய முடியும் அப்படின்னு சித்ரா காட்டி இருக்கா.. இதைக் கூட இப்ப மேடையில வச்சு சொல்லணும்ங்கறது இல்ல.. உங்க வீட்லயும் பொண்ணுங்க பசங்க இருப்பாங்க, கால சூழ்நிலைகளையும் வயசு காரணமாகவும் ஏதாவது தவறா முடிவு எடுக்கலாம். அப்ப அவங்களை வெறுத்து ஒதுக்கிடாதீங்க.. இன்னைக்கு டிவிலயும் நியூஸ் பேப்பர்லையும் வர்ற ஒவ்வொரு செய்தியையும் பார்த்தா, சுத்தி உள்ளவங்க ஆதரவு கொடுத்திருந்தா இப்படி நடந்திருக்காதே அப்படின்னு தான் நினைக்க தோணுது.. மறுபடியும் சொல்றேன், இந்த மேடை ஒரு சுப நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால் இத்தனை பேர் கூடி இருக்கிறீங்க.. நல்ல விஷயத்தை எங்க வச்சுன்னாலும் பேசலாம்.‌ அதான் சொல்றேன்”

“அத்தை! நானே வந்து கையெழுத்து போடலையே? அப்ப எப்படி என் பேர்ல எழுதித் தந்தீங்க”

மணமக்கள் பேசுவது அவையில் கேட்கவில்லை. ஆனால் சத்யபாமா பேசியது நான்கு தெருக்கள் வரை கட்டியிருந்த ஒலிபெருக்கிகள் வழியாகத் தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

“இதை நான் உனக்கு நன்கொடையாக கொடுத்திருக்கேன். இதுக்கு உன்னோட கையெழுத்து தேவை இல்லம்மா.. உன் அனுமதி இல்லாம உன்னோட ஆதார் அட்டையை பயன்படுத்திக்கிட்டேன்.. அதுக்கு மட்டும் மன்னிச்சுக்கோ.. அப்பப்ப வருவேன். டியூஷன் சென்டர் ஒன்னும் தள்ளி இல்லையே.. பக்கத்துல தான் இருக்கு, நீயும் அடிக்கடி வா” என்று சொல்லிவிட்டு சித்ராவிடம் பத்திரத்தை நீட்டினார். அப்போதும் அவள் கையை நீட்டி வாங்கிக் கொள்ளவில்லை. கைகளைப் பின்புறம் கொண்டு சென்றாள். மணமக்கள் முன்பிருந்த விபூதி, குங்குமம், மலர்கள் அடங்கிய தட்டில் வைத்துவிட்டு இறங்கினார் சத்தியபாமா. இனிமேல் மறுப்பதற்கு அங்கே வாய்ப்பே இல்லை.

பலரின் கண்களிலும் நீர் நிரம்பியது. ‘சிறு பிள்ளை போல் சத்தியபாமாவிடம் மனதுக்குள் மல்லுக்கு நின்றேனே’ என்று நினைத்த சுப்பம்மாள், அவர் கீழே இறங்கியவுடன் சத்தியபாமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார். “அண்ணி! நானே கூட என் பொண்ணுக்கு இந்த மாதிரி சொத்தை தூக்கிக் கொடுத்திருப்பேனான்னு என்று தெரியாது” என்றார்.

“அச்சோ! அண்ணி! நீங்க தான் எனக்கு முன்மாதிரியே.. ஆரம்பத்துல இருந்து உங்களுக்கு வருத்தம் இருந்திருக்கும்.‌ ஆனா நீங்க என் மேலேயோ சித்ரா மேலையோ கோபத்தையோ, வெறுப்பையோ காட்டவே இல்லை. உங்க பிள்ளைங்க மூணும் உங்க முகம் பார்த்து நடக்குதுங்க. அம்மா அம்மா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுதுங்க. இவ்வளவு அருமையா நான் பிள்ளை வளர்க்கலையேன்னு ரொம்ப நாள் வருத்தப்பட்டு இருக்கேன்.. அதுக்கான பிராயச்சித்தம் இதுன்னு கூட வச்சுக்கோங்களேன். இது ஒன்றும் அவ்வளவு பெரிய தியாகம் இல்ல. சித்ரா மட்டுமில்ல, இன்னும் நிறைய பொண்ணுங்களுக்கு இந்த வீடு யூஸ் ஆகத்தான் போகுது. நைட்டி மட்டும் இல்லாம இன்னும் நிறைய துணிகள் அங்கே ஒரு உற்பத்தி ஆகணும். ஒரு விதத்துல சுயநலம்னு வச்சுக்கோங்களேன்” என்றார் சத்தியபாமா. கவனமாக முகுந்தன் பெயரை சொல்லாமல் தவிர்க்க என்பது சுப்பம்மாளுக்கும் புரிந்தது.

“மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்”

என்ற பாடலை இசைக் குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர்.

(இனிதே நிறைந்தது. அவர்களின் வாழ்க்கை பயணம் தொடரும்)


வணக்கம் நண்பர்களே! கதை பிடிச்சிருந்துதா? நைட்டி தயாரிப்பு எங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் முக்கியமான ஒரு தொழில். (எந்தப் பகுதின்னு சொல்ல மாட்டேன் முடிவு வந்தப்புறம் சொல்றேன்) பல குடும்ப பெண்களும், ஆதரவு இல்லாத பெண்களும் இதில் ஈடுபடுறாங்க. சத்தியபாமா நான் தினந்தோறும் சந்திக்கும் என் கண் முன்னே உலவும் ஒரு பெண்மணி தான். சிறுவயதில் விட்டுவிட்டுப் போன கணவனையும், மூன்று பெண் பிள்ளைகளுடன் மனைவியை அனாதரவாக விட்டுவிட்டுப் போன மகனையும் மறந்துவிட்டு மனதை கல்லாக்கிக் கொண்டு வேலை செய்யும் பெண்மணி தான் சத்தியபாமா கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன்.

எட்டு வயதில் வீட்டு வேலைக்காக கேரளாவுக்கு அனுப்பப்பட்டது முதல் இன்று அவருடைய 54 ஆம் வயது வரை அவர் செய்யாத வேலைகள் இல்லை. சொந்த வீட்டை மருமகளிடம் கொடுத்துவிட்டு, அதே மொட்டை மாடியில் ஒரு கோட்டையை போட்டு வசிக்கிறார். மகனால் ஒரு முறை ஜெயிலுக்கும் சென்று விட்டு வந்தவர். அவர் வழக்கிலிருந்து வெளியே வர உதவியது உறவுமுறை இல்லாத வேறொரு இளைஞன். நிஜ வாழ்க்கையில் இப்படி எத்தனையோ கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்களே சமூகத்தை வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள்.

வாய்ப்பு அளித்த கதைத்தறி தளத்திற்கு நன்றி. ஆடம்பரம் இல்லாத எளிமையான தரமான புடவையான சுங்குடி என்ற புடவையின் பெயரில் இந்தக் கதையை எழுத வாய்த்தது ஒரு சுவாரசியமான பொருத்தம்!

உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி இருக்கிறேன்! நன்றி நன்றி!)
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
தவறிய வாழ்க்கை
துவண்டு போகாமல்
தன்னம்பிக்கையுடன்
துணை நிற்கும் உறவுகள்
தூண் போல
தாங்கும் நட்புகள்
தடைகளை நீக்கி
தீர்க்கமாக உழைத்த
தன்னலமற்ற ஜீவன்கள் இருந்தால்
உருகி ஓடும் மெழுகு போல
உருகிடும் அன்பில்
உயிர் ஒளி தரும் மெழுகாய் உயிர்த்து உயர்ந்து நிற்கும்
சத்யபாமா
சுப்பம்மா
சித்திரைவடிவு போல வாழும்
உயிர் சித்திரங்ககள் இருந்தால்
வாழ்வில் வசந்தமே......

அருமை 👏🏻👏🏻👏🏻💐💐👍🏻👍🏻🤩🤩❤️❤️😘😘
வாழ்த்துக்கள் மா 💐
 
Top Bottom