• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

உனதன்பின் கதகதப்பில் 16 (நிறைவு அத்தியாயம்)

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து நேரடியாகப் புகுந்த வீட்டிற்குச் செல்ல கிளம்பியிருந்தாள் சுந்தரலட்சுமி.

மாலை ஆறு மணியளவில் வீட்டை அடைந்தவள் மகிழுந்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, மாடிப்படியில் ஏறி வீட்டை அடைந்த போது,

"என்னாச்சு மீனா உன் போனுக்கு? ஸ்கூலு லீவு விட்டதுனால என் மவனுங்க, அவனுங்களோட பொண்டாட்டி புள்ளங்க எல்லாரும் சேர்ந்து ஊட்டிக்குப் போய்ட்டு வந்தோம். வந்து பார்த்தா உன் போன் எடுக்கவே இல்லை. ஏற்கனவே உன் மருமவ வேற செந்திலை விட்டு பிரிஞ்சி போய்ட்டாளே! அந்தச் சோகத்துல உனக்கு எதுவும் ஆயிடுச்சோனு பார்க்க வந்தேன்" என்று காஞ்சனா கூறியது இவளின் செவியில் விழ, அப்படியே வாசலிலேயே ஸ்தம்பித்து நின்று விட்டாள் சுந்தரலட்சுமி.

'நானே ரொம்ப நாள் கழிச்சி இங்கே வந்திருக்கேன். இந்தம்மா மூஞ்சிலயா முழிக்கனும்! திரும்பி அப்படியே போய்டுவோமா' என்று சிந்தித்தவாறு நின்றிருந்தாள் சுந்தரலட்சுமி.

முன்பு இருந்த மீனாவாக இருந்திருந்தால், காஞ்சனாவின் இப்பேச்சைக் கேட்டதும் அண்ணி தன் மீதான அக்கறையில் பேச வந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார். செந்திலின் வாழ்வைக் கெடுக்கக் காஞ்சனா செய்தவை எல்லாம் தெரிந்து வைத்திருந்த இப்போதைய மீனாவிற்கு, இவரின் பேச்சு தனது வேதனையைக் கீறி மகிழ்வு கொள்ளும் செயலாய் தான் தோன்றியது.

அதனாலேயே, "எனக்கு என்ன அண்ணி? நான் நல்லா தான் இருக்கேன்" என்று பட்டும் படாமல் பதிலிறுத்தார் மீனா.

"உன் மருமவ டைவர்ஸ் கேட்டதா கேள்விப்பட்டேனே?" மீனாவிடம் போட்டு வாங்கும் நோக்கத்துடன் கேட்டிருந்தார் காஞ்சனா.

வெளியே நின்றிருந்த சுந்தரலட்சுமி, 'என்னது டுவோர்ஸ்ஸா?' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டவளாய், 'விட்டா இந்தம்மாவே எனக்கும் செந்திலுக்கும் டுவோர்ஸ் வாங்கிக் கொடுத்துடும் போலயே' என்று முனகினாள்.

காஞ்சனாவின் பேச்சில் ஒளிந்திருந்த குரூரத்தைக் கண்டு கொண்டவராய், "என் வீட்டுப் பிரச்சினையை நான் பார்த்துக்கிறேன் அண்ணி. அதைப் பத்தி பேசுறதா இருந்தா இனி நீங்க இங்கே வர வேண்டாம். என்கிட்ட பேசவும் வேண்டாம்" என்று கத்திரித்தார் போல் நேரடியாகவே கூறிவிட்டார் மீனா.

மீனாவின் இந்தத் திடீர் அதிரடிப் பேச்சில் அதிர்வுடன் அவரைக் காஞ்சனா பார்க்க, "என் மகனுக்கும் மருமகளுக்கும் பொருத்தமுள்ள ஜாதகம் தான். நீங்க தான் ஜோசியரைப் பொய் சொல்ல வச்சிருக்கீங்கனு தெரிஞ்சிப் போச்சு அண்ணி" என்றார் மீனா.

காஞ்சனாவின் நெஞ்சம் அதிர, முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியை மறைத்துத் தன்னை நிலைப்படுத்தியவராய், "யாரு... யாரு உன்கிட்ட அப்படிச் சொன்னது? அந்த ஜோசியரா? அவன் உன்கிட்ட பொய் சொல்லிருக்கான் மீனா" என்று படபடப்புடன் உரைத்தார் காஞ்சனா.

"இதை என்கிட்ட சொன்னது என் மகன் செந்தில். அவன் ஏன் என்கிட்ட பொய் சொல்லனும் அண்ணி. என் மகனுக்கு எல்லாம் தெரிஞ்சும் நீங்க எங்களுக்குச் செஞ்ச நன்றிக்காக அமைதியா இருக்கான். நீங்களும் அண்ணனும் அவனை அடிமையா வச்சிக்கலாம்னு நினைச்சிட்டீங்கல. அதுக்காக அவனோட வாழ்க்கைலயே விளையாடப் பார்த்தீங்களே அது தான் என்னால தாங்கிக்க முடியலை அண்ணி! உங்க பேச்சைக் கேட்டு நானே என் மகன் வாழ்க்கையைக் கெடுத்துட்டேனேனு குற்றயுணர்வுல இருக்கேன். இனியும் உங்க பேச்சைக் கேட்டு நான் ஆடுவேன்னு நினைக்காதீங்க அண்ணி" என்று கோபமும் வருத்தமுமாய் மீனா பேசிக் கொண்டே போக,

"யாரு மேல பழியைப் போடுற? அந்தச் சிறுக்கினால தான் உங்க குடும்பம் சீரழிஞ்சிப் போகனும்னு இருந்தா அனுபவிங்க. எனக்கென்ன வந்துச்சு?" என்று ஆங்காரமாக உரைத்தவராய் எழுந்து நின்றார் காஞ்சனா.

காஞ்சனாவின் பேச்சில் உள்ளுக்குள் பொங்கி வந்த ஆதங்கத்துடன், "என் மருமகளால எங்க குடும்பம் சீரும் சிறப்புமா வாழத் தான் போகுது. அதையும் நீங்க பார்க்கத் தான் போறீங்க" என்றார்.

'என்னாச்சு இவளுக்கு? திடீர்னு இவ மருமகளுக்கு இப்படிச் சப்போர்ட் செய்றா?' என்று சிந்தித்தவராய் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியே வந்த காஞ்சனா வாசலில் நின்ற சுந்தரலட்சுமியைப் பார்த்து சற்று அதிர்ந்து பின் சுதாரித்தவராய் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார்.

உள்ளே நுழைந்த சுந்தரலட்சுமி மீனாவின் கைப்பற்றியவளாய், "தேங்க்ஸ் அத்தை. என் மேல் நீங்க வச்சிருக்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன் அத்தை" என்றாள்.

"வந்துட்டியாமா! எங்கே வராம போய்டுவியோனு பயந்துட்டே இருந்தேன்" என்றார் மீனா.

அவரின் பேச்சில் சிரித்தவளாய், "என் மேல இவ்வளோ அவநம்பிக்கையை வச்சிக்கிட்டு எப்படி அவங்ககிட்ட அப்படித் தைரியமா பேசுனீங்க! அதுவும் நான் தான் உங்க குடும்பத்தையே தூக்கி நிறுத்த போறேன்ங்கிற மாதிரிலாம் பேசுனீங்களே! நான் கூட என் அத்தைக்கு என் மேல எம்பூட்டு நம்பிக்கைனு பூரிச்சுப் போய்ட்டேன்" என்றாள் சுந்தரலட்சுமி.

அவளின் பேச்சில் சிரித்தவராய், "இல்லம்மா. இத்தனை நாளா நான் செஞ்ச தப்பு எனக்கு விளங்கிடுச்சு. நம்ம வீட்டுப் பொண்ணை வெளிலே நாமளே விட்டுக் கொடுத்து பேசினா, அது அவங்க பேச நாம வழிக் கொடுத்தா மாதிரி ஆகிடும்னு செந்தில் சொன்னான். நான் யோசிச்சுப் பார்த்தேன், என் அண்ணி அவங்க மருமகள்களைப் பத்தி என்கிட்ட குறையா பேசினதே இல்லை ஆனாலும் அதுக்கு மாறா என் வாயைப் பிடிங்கி நம்ம வீட்டுப் பிரச்சினையைக் கேட்டு தெரிஞ்சிப்பாங்க. அது மண்டைல உரைச்சிது. அதான் இனி எங்கேயும் என் வாயால உன்ன நான் தப்பா பேசிடக் கூடாதுனு முடிவு செஞ்சிக்கிட்டேன்" என்றார் மீனா.

இன்ப அதிர்வுடன் அவரைப் பார்த்தவளாய், "இப்படிச் சொன்னதும் புரிஞ்சிக்கிற ஆளு நீங்கனு நினைக்கலை அத்தை" மனத்தில் பட்டதை அப்படியே அவள் உரைக்க,

"சொன்னாலாம் யார் மண்டைலயும் உரைக்காது சுந்தரி. பட்டா தான் புத்தி வருது" என்று பெருமூச்சு விட்டவர்,

"எனக்கொரு பேரப் பிள்ளையைச் சீக்கிரம் கொடுத்துடுமா. வாழ்க்கையே நரகமா போற மாதிரி இருக்கு" எனும் போதே அவரின் கண்கள் கலங்கி விட்டன.

அவரின் கைப்பற்றி, "கவலைப்படாதீங்க அத்தை. நீங்களும் உங்க பேரன் பேத்தியோட ஊட்டி கொடைக்கானல்னு ஊர் ஊரா சுத்துவீங்க. அதுக்கு நான் கியாரண்டி" என்று கூறியவளைப் பார்த்து மென்னகைப் புரிந்தார் மீனா.

"நான் இங்கே வரேன்னு செந்திலுக்குத் தெரியுமா அத்தை" எனக் கேட்டாள் சுந்தரலட்சுமி.

"இல்லம்மா நான் உங்க வீட்டுக்கு வந்தது கூட அவனுக்குத் தெரியாதுமா" என்றார் மீனா.

செந்தில் தன்னை இங்குப் பார்த்ததும் எவ்வாறு ரியாக்ட் செய்வானோ என்று ஒரு மாதிரி படபடப்பாக உணர்ந்தாள் சுந்தரலட்சுமி.

குளித்து முடிந்து உடை மாற்றிச் சமையலறைக்குள் சென்றாள்.

மீனா சப்பாத்தி செய்து கொண்டிருந்ததைப்‌ பார்த்தவள், தான் குருமா செய்வதாக உரைத்துச் செய்யத் தொடங்கினாள்.

எங்கே தான் ஏதேனும் பேசி இவளுக்குக் கோபம் வந்து தாய் வீட்டிற்குச் சென்றிடுவாளோ என்று பயந்தவராய் வாயை இறுக்கமாய் மூடியவாறு வேலையைச் செய்தார் மீனா.

மீண்டுமொரு முறை, உன்னால் எனது வாழ்க்கை பாழாகி விட்டது என்று மகன் உரைப்பது போல் தான் நடந்து கொள்ளக் கூடாது என்று தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார் மீனா. அதனாலேயே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சமையல் வேலையில் ஈடுபட்டார்.

சுந்தரலட்சுமிக்கு மீனாவின் இந்த அமைதி பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. இந்நேரத்திற்குள் குருமாவிற்கு இதைப் போடாதே அதைப் போடாதே எனப் பாடாய்படுத்தியிருக்க வேண்டிய தனது அத்தையின் இந்த அமைதி அவளுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்வையும் அளித்தன.

மீனா ஏதேனும் ஏடாகூடமாகப் பேசினாலும், தன்னை டிரிக்கர் செய்வது போல் பேசினாலும், தான் அமைதியாக இருந்திட வேண்டும் என்று தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டு தான் வந்திருந்தாள் சுந்தரலட்சுமி. ஆனாலும் இந்த அமைதி அவளுக்குப் பிடிக்கவில்லை.

"அத்தை நீங்க எத்தனை வயசுலருந்து சமைக்க ஆரம்பிச்சீங்க?" என்று இயல்பாய் பேச்சைத் தொடங்கினாள் சுந்தரலட்சுமி.

"ஏழு எட்டு வயசு இருக்கும். பொம்பிளை பிள்ளைக்குச் சமையலறை தான் சொத்துனு சொல்லியே வளர்த்துட்டாங்க. நான் எங்கம்மாகிட்ட தான் சமையல் கத்துக்கிட்டேன். எங்கம்மாவோட கைமணம் எட்டூருக்கு மணக்கும்னு சொல்லுவாங்க" என்று பேசியவராய் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி உரைக்க, கேட்டவாறே சமைத்திருந்த சுந்தரலட்சுமிக்கு மீனாவின் மீது கரிசனமும் மரியாதையும் பெருகியது.

சமைத்து முடித்ததும் மீனா, தான் அன்றாடம் காணும் தொலைக்காட்சி தொடரைப் பார்க்கத் தொடங்கி விட, இருவருமே சேர்ந்து உண்ணலாம் எனக் கூறி, மீனாவுடன் சேர்ந்து அந்தத் தொடரைப் பார்த்தவளாய் உண்டிருந்தாள் சுந்தரலட்சுமி.

இரவு ஒன்பது மணி ஆகவும் சமையலறையைச் சுத்தம் செய்து வைத்த மீனா, "அம்மாடி சுந்தரி அவனுக்கு ஒரு போனை போடு மா! நீ வீட்டுல இல்லனுட்டு பதினோரு மணிக்கு வந்து நிப்பான்" என்றார்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அவனுக்கு அழைக்கவே மனத்திற்குள் ஒருவித தயக்கம் சூழ, மீனா சொன்னதைத் தட்ட முடியாமல் அழைப்பை விடுத்தாள்.

நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே சுந்தரி

என்று இவளின் செவியைப் பாட்டு தீண்ட, இன்ப அதிர்வுடன் வாசலைப் பார்த்தாள் சுந்தரலட்சுமி.

மிகச் சரியாக அச்சமயம் தான் வாசலில் செருப்பை விட்டான் செந்தில்.

கீழே அவளின் மகிழுந்து நிற்பதைப்‌ பார்த்து ஒரு வித யோசனையுடனேயே வந்திருந்தவன், இந்த அழைப்பில் அவசரமாய்ப் போனை எடுத்து அழைப்பைத் துண்டித்தவனாய் வீட்டினுள் நுழைந்தான்.

ஆவலும் மகிழ்வும் நெகிழ்வுமாய்த் தன்னைப்‌ பார்த்தவாறு எதிர் நின்ற மனைவியை அவனின் கண்கள் ஒரு நிமிடம் மின்னலுடன் பார்த்து விட்டு மறுநிமிடம் கோபத்திற்குத் தாவியிருக்க, விருட்டெனத் தனது அறைக்குள் சென்றிருந்தான்.

'இப்ப உள்ளே போனா எதுவும் திட்டி விட்டுருவாரோ' என்று பயந்தவளாய் முகப்பறையிலேயே அமர்ந்து விட்டாள் சுந்தரலட்சுமி.

மனைவி வீட்டிற்கு வந்ததில் மனத்திற்குள் ஆசுவாசம் பொங்க, ஷவரை திறந்து விட்டு அப்படியே அமர்ந்து விட்டான் செந்தில்.

அவன் குளியலறையில் இருப்பதை உறுதி செய்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் சுந்தரலட்சுமி.

குளியலறையிலிருந்து வெளியே வந்த செந்தில் அவளைக் கண்டு கொள்ளாமல் உடையை மாற்றி விட்டு முகப்பறைக்கு வந்தவனாய், "ம்மாஆஆஆ சாப்பாடு எடுத்து வை மா" என்றான்.

அன்றாடம் கோபத்துடன் தானே உணவைப் போட்டுக் கொண்டு உண்ணும் மகன் இன்று தன்னை அழைத்துப் போட சொன்னதில் மகிழ்ந்தவராய், "இதோ வரேன்ப்பா" என்று உள்ளே சென்று தட்டில் சப்பாத்தி குருமாவை வைத்து எடுத்து வந்து கொடுத்தார்.

உண்டு முடித்தவன் அறைக்குள் வருவான் என்று இவள் காத்திருக்க, நேராக மொட்டை மாடிக்குச் சென்றிருந்தான்.

சமையலறையில் பாத்திரங்களைக் கழுவி விட்டு வந்த மீனா, அவன் படுக்கையறைக்குச் சென்று விட்டதாக நினைத்து அமர்ந்து விட, படுக்கையறையிலிருந்து வெளியே வந்த சுந்தரலட்சுமி, செந்திலை அங்குக் காணாது, "செந்தில் எங்கே அத்தை?" என்று கேட்டாள்.

"உள்ளே இல்லயா அவன்?" என்று கேட்டவராய், "தினமும் மேல மொட்டை மாடில தான்மா படுத்துப்பான். இன்னிக்கும் அங்கே போய்ட்டான் போலயே" சங்கடத்துடன் அவர் உரைக்க, உள்ளம் கொதிக்கக் கண்களில் நீர் பொங்கியது இவளுக்கு.

"சரிங்க அத்தை. நான் மேலே போய் அவர்கிட்ட பேசிக்கிறேன். நீங்க படுத்துக்கோங்க" என்றவளாய் மேலே மாடிப்படி ஏறினாள்.

முன்பு காலியாக இருந்த மாடியில் இப்பொழுது வேலை நடப்பதற்கான தடயங்கள் இருந்தன.

நிலை வாசல் வைக்கப்பட்டு நாலாபுறமும் சுவர் அமைக்கப்பட்டிருக்க, உள்ளே அறைகளுக்கு இடையேயும் சுவர்கள் வைக்கப்பட்டிருக்க, மேல் தளம் போட படாமல் திறந்த வெளியாய் இருந்தது.

நிலைவாசல் வழியாக உள்ளே நுழைந்தவள் வெட்டவெளி வானத்தைப் பார்த்தவாறு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கணவனருகே சென்று கோபத்துடன், "என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல? நான் வந்த பிறகும் இப்படி நீங்க தனியா வந்து படுத்தா அத்தை என்ன நினைப்பாங்க" எனக் கோபத்துடன் கேட்டிருந்தாள்.

"ஓஹோ உன் அத்தை என்ன நினைப்பாங்கனு தான் உனக்குக் கவலைல" என்று கோபத்துடன் கேட்டான்.

இவள் புரியாது அவனைப் பார்க்க,

"என் அம்மா வந்து பேசி தானே நீ இங்கே வந்த! எனக்காக ஒன்னும் வரலையே! அம்மா என்ன நினைப்பாங்கனு தானே இப்பவும் கவலைப்படுற, அம்மாவுக்காக ரூம்ல வந்து படுக்கிறேன்" என்றான்.

அவனது பேச்சில் அதிர்ந்து கண்களில் கோர்த்த நீருடன் இவள் நின்றிருக்க, விறுவிறுவெனக் கீழே சென்றிருந்தான் அவன்.

அவன் அறைக்குள் நுழைந்து படுத்துக் கொள்ள, கண்ணீரைத் துடைத்து விட்டு வீட்டிற்குள் வந்து கதவைச் சாத்தியவளாய் படுக்கையறைக்குள் நுழைந்தாள் சுந்தரலட்சுமி.

படுக்கையறையில் வைத்து சற்றுச் சத்தமாகப் பேசினாலும் வெளியே கேட்கும் என்பதால் அவள் வாயைத் திறக்க மாட்டாளென எண்ணித் தான் விருட்டெனக் கீழே வந்திருந்தான் செந்தில்.

கண்களை மூடி படுத்திருந்த கணவனைப் பார்த்ததும் கண்ணீர் சூழ்ந்து நெஞ்சம் விம்ம, விளக்கை அணைத்து விட்டு சற்றுத் தள்ளி படுத்துக் கொண்டாள்.

அவனது சீரான சுவாசத்தின் மூலம் உறங்கியதை உணர்ந்தவள், மெல்ல அவன் புறம் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தவாறு படுத்தாள்.

நீண்ட நாள் கழித்து வெகு அருகே கணவனைப் பார்த்ததும் அவனை அணைத்தவாறு உறங்க உள்ளம் பரபரக்க, கணவனின் முகத்தையே பார்த்திருந்தவள் அவனை நெருங்கி நெற்றியில் முத்தமிட்ட மறுநொடி அவளை விருட்டெனத் தள்ளி விட்டிருந்தான் செந்தில். உறக்கத்தில் தன்னை மீறி அன்னிச்சையாகத் தள்ளி விட்டிருந்தவனின் உறக்கம் முழுதாய் கலைய, சுந்தரியின் அழுகையைக் கண்டவனுக்கு அப்பொழுது தான், தனது செயலை உணர்ந்தான்.

ஒரு மாதிரி அவமானமாக உணர்ந்தாள் அவள். அவனுக்கு முதுகு காட்டி படுத்தவளின் அழுகையில் உடல் குலுங்கவும், "ஹே சாரி சுந்தரி! தூக்கத்துல ஏதோ மேல விழுந்துடுச்சுனு நினைச்சு அப்படித் தள்ளி விட்டுட்டேன்" என்றான்.

இவள் ஏதும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்க, "சுந்தரி" என்று அவளின் கரத்தினைப் பற்றினான்.

அவன் கரத்தை உதறியவளாய், "இனி நானா உங்களை வந்து தொட்டேனா, என்னைச் செருப்பால அடிங்க" கோபமும் அழுகையுமாய் உரைத்திருந்தாள்.

"அடியேய் தூக்கத்துல தெரியாம தள்ளி விட்டுட்டேன்னு தானே சொல்றேன். அதுக்கு ஏன் இப்படிலாம் பேசுற" என்றவன் அவளைத் தன்புறமாகத் திருப்பி அணைக்க, அவனை இறுக்கமாய் அணைத்தவள், மார்பில் முகம் புதைத்து குலுங்கி அழுதிருந்தாள்.

அவளின் அழுகையில் இவனின் கண்களும் கலங்கிவிட, அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவனாய், "எதுக்குடி இப்படி அழுதுட்டு இருக்க?" எனக் கேட்டான்.

"ஐ மிஸ்டு யூ சோ மச்" என்றவளாய் கண்ணீருடன் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட, அவனது கண்களை நிறைத்திருந்த கண்ணீர் மடைத்திறந்து வழிந்து அவளின் முத்தத்தில் கலந்தது.

"ஆமா மிஸ் யூ மிஸ் யூனு சொல்லிட்டு மாசக் கணக்குல உங்கம்மா வீட்டுல போய் உட்கார்ந்துக்க" அவன் கழுத்தினில் முகம் புதைத்தவளாய்,

"இனி உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்" என்றாள்.

அவளின் முகத்தை நிமிர்த்திக் கண்களுக்குள் ஊடுருவியவனாய், "நிஜமாவா?" என்று கேட்க,

"ஆமா என் புருஷன் மேல பிராமிஸ்" என்று கூறி கண் சிமிட்டியவளைப் பார்த்து அவன் மென்னகைப் புரிய, அவனின் தாடியைப் பிடித்து இழுத்தவளாய்,

"ஏன் இப்படித் தாடி வளர்த்து வச்சிருக்கீங்க? குத்துது" என்றாள்.

"ஆஆஆஆ விடுடி" என்று அவளின் கையைப் பிடித்து அவன் தள்ளி வைக்க,

"நான் ஒன்னும் அத்தை சொன்னதுக்காக வரலை. அத்தை வந்து கூப்பிடாம இருந்திருந்தாலும் நான் வந்திருப்பேன். என் கை சரியானதும் நானே வரலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள அத்தை வந்து கூப்பிட்டுட்டாங்க" என்றாள்.

அவன் ஏதும் பேசாமல் மார்பில் படுத்திருந்தவளின் தலையை வருடியவாறு இருக்க, மார்பில் தாடையைப் பதித்து அவன் முகத்தைப் பார்த்தவளாய், "இன்னும் என் மேல கோபமா தான் இருக்கீங்களாப்பா" எனக் கேட்டாள்.

"ஒருவரை விரும்பத் துவங்குதல் என்பது காலம் முழுக்க அவரை மன்னித்துக் கொண்டே இருப்பதற்குத் துணிதல்னு கவிஞர் யாத்திரி சொல்லிருக்காரு" என்றவன் சொன்னதும்,

"ஓஹோ அவ்ளோ விரும்புறவரு தான், வாட்ஸ்அப்ல என் கேள்விக்குலாம் பதில் சொல்லாம நிராகரிச்சீங்களோ" எனக் கேட்டாள்.

"அப்ப ரொம்பவே கோபம் இருந்தேன் சுந்தரி. உன்னை இங்கே பார்த்த மறுநிமிஷமே எல்லாம் போய்டுச்சு. நான் சரியா தூங்கி பல நாள் ஆகுது. இன்னிக்கு உன்னைப் பார்த்த நிம்மதில தான் அப்படிப் படுத்ததும் தூங்கிட்டேன்" என்றான்.

"உங்களைக் கொஞ்சம் நிறையவே பிடிக்குது செந்தில்" என்றாள்.

"ஆஹான் இன்னும் அந்தக் கொஞ்சம் போகலையா?" என்று சிரித்தான்.

"நீங்க அதைக் கூட என்கிட்ட சொன்னதில்லை" என்று அவள் குறைப்பட,

"ச்சே நான் உன்னை மாதிரி கஞ்சம் இல்லடா! எனக்கு என் சுந்தரியை எப்பவும் நிறைய நிறையவே பிடிக்கும்" என்று அவன் கூறவும் கண்களும் முகமும் பூரிக்கச் சிரித்தவள், "நாம குழந்தைப் பெத்துக்கலாமா செந்தில்" அவன் கன்னத்தை வருடியவளாய் ஆசையுடன் கேட்டிருந்தாள்.

"ஹ்ம்ம் பெத்துக்கலாமே" என்று அவன் அவளின் இதழில் புதைய,

"ஹய்யோ நான் இதைச் சொல்லலை" என்று அவனை அவள் தள்ள,

"இது நடக்காம எப்படிக் குழந்தை?" என முழித்தவாறு கேட்டான் செந்தில்

அவனின் முழிப்பில் சிரித்தவளாய், "ஹய்யோ இதுவும் வேணும் ஆனா நாளைக்கே டாக்டர்கிட்ட போய் ஒரு செக்அப் செஞ்சிக்கலாமேனு தான் கேட்டேன்" என்றாள்.

"செக்அப்பா? அது எதுக்கு? நாம நல்லா தானே இருக்கோம்" என்றவன் கேட்க,

"குழந்தைப் பெத்துக்கனும்னு முடிவு செஞ்சிட்டா அதுக்கான பிராப்பர் மெடிசின் அண்ட் டயட்ல இருந்தா சீக்கிரம் நட.." என்றவள் முடிக்கும் முன்னமே இதழில் புதைந்தவனாய், "உன்னை அம்மாவாக்க வேண்டியது என் பொறுப்பு" என்று அவளுள் மூழ்கிப் போனான்.

இதழோடு இதழ் பதித்து இதமாய் முத்தமிட்டு நேசமாய் அவளுள் உலா சென்று இனிதாய் தொடர்ந்த காதல் யுத்தத்தில் யார் கொல்ல யார் வெல்லவென ஈருடல் ஓருயிராகிக் கலக்க, இன்ப வானில் பறந்திருந்தினர் இருவரும்.

நிறைவில் நிறைவாய் அவளின் நெற்றியில் முத்தமிட்டவனாய், "பாரு இந்தத் தடவை பர்ஸ்ட் கிளாஸ் ரிசல்ட் வரும்" என்றவன் கூறியதைக் கேட்டு வெடித்துச் சிரித்தாள் சுந்தரலட்சுமி.

செந்திலின் வாக்குப்படி அடுத்தப் பத்தாம் மாதத்தில் அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தாள் சுந்தரலட்சுமி.

மேலே வீடு கட்டி திறந்த நேரத்தில் தான் இவளது கர்ப்பம் உறுதி செய்யப்பட, மாடிப்படி ஏறக் கூடாது என்று மருத்துவர் உரைத்ததால் தரைத்தளத்தில் இருந்த வாடகை வீட்டினரைக் காலி செய்யச் சொல்லி விட்டு அங்கே தங்கிக் கொண்டனர் இருவரும்.

மாடியில் புதிதாய் கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான் செந்தில்.

செந்தில் சுந்தரலட்சுமியின் பெண் குழந்தைக்குச் செந்தமிழ் லட்சுமி என்று பெயர் சூட்டினர்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு,

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் குடும்பசகிதமாய்ச் சாமி தரிசனம் செய்திருந்தனர் செந்தில் குடும்பத்தினர்.

கோடை விடுமுறைக்காக மலை வாசஸ்தலமான கொடைகானலுக்கு வந்திருந்தனர் அனைவரும்.

செந்திலின் கையில் அவனது நான்கு வயது மகள் செந்தமிழ்லட்சுமி இருக்க, அவர்களது இரண்டு வயது மகனான சுந்தரச்செல்வனைத் தூக்கி வைத்திருந்தார் மீனா. சுந்தரலட்சுமி இவர்களின் அருகே நின்றிருந்தாள்.

அனைவரும் இறைவனை வணங்கி ஆரத்தியை எடுத்துக் கொண்டு சுற்றுப்பிரகாரத்தில் வந்து அமர்ந்தனர்.

மீனா இரு குழந்தைகளுக்கும் பிரசாதத்தை ஊட்டிக் கொண்டிருக்க, மேலும் பிரசாதங்களை வாங்கச் சென்றிருந்தான் செந்தில்.

"உன் அம்மா அப்பா எப்ப கொடைக்கானலுக்கு வரதா சொன்னாங்க சுந்தரி?" எனக் கேட்டார் மீனா.

"நாளைக்கு வந்துடுவாங்க அத்தை" என்றாள் சுந்தரலட்சுமி.

செந்தில் சுந்தரலட்சுமி சென்னையில் ஏற்கனவே தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டவர்களாய், இவர்களுக்கெனப் புதிதாகப் பெரியதாகத் தனி வீடு கட்டிக் குடிபுகுந்தனர்.

செந்திலின் அரிசிக்கடையைப் பேரங்காடியாக மாற்றி அமைத்திருந்தான். அவனது மாமாவின் கடை நிர்வாகத்தினை அவரிடமே முழுவதுமாக ஒப்படைத்து விட்டான். அந்தக் குடும்பத்தினருடன் நட்புடன் பேசிக் கொண்டாலும் முன்பு போல் ஒட்டுதலுடன் பழகுவதில்லை.

சுந்தரலட்சுமி முன்பு இருந்ததை விடப் பெரிய பதவியில் இப்பொழுது பணி செய்திருந்தாள். தொழில் முனைவோராகத் தனியாக ஒரு மகிழுந்து விற்பனை நிறுவனத்தைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாள். செந்தில் அதற்குத் தேவையான உதவிகளை அவளுக்குச் செய்து கொண்டிருக்கிறான். மீனா மருமகளின் வேலையைப் புரிந்தவராய் வீட்டைக் கவனித்துக் கொண்டு பேரன் பேத்திகளைப் பார்த்துக் கொள்கிறார்.

செந்திலை மணந்த பிறகு தனது வாழ்வில் நடந்தவைகளை நினைத்தவாறு அமர்ந்திருந்த சுந்தரலட்சுமி, சற்றுத் தூரத்தில் செந்தில் வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு வருவதை ஆசையாய் பார்த்திருந்தாள்.

தாயிடம் இரண்டு பிரசாதங்களைக் கொடுத்து விட்டு மனைவி அருகில் வந்து அமர்ந்தான்.

தனக்குப் பொங்கலை ஊட்டி விட்ட கணவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், "சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க?" எனக் கேட்டாள்.

"எப்பவுமே என் சுந்தரியோட கதகதப்பான அனபுக்குள்ளேயே என்னை வச்சிருங்க இறைவானு வேண்டிக்கிட்டேன்" என்று கண் சிமிட்டி அவன் கூறவும், "கிண்டல் செய்யாம உண்மையைச் சொல்லுங்கப்பா" என்று அவன் புஜத்திலேயே குத்தினாள் அவள்.

"ஹே நிஜமாடா! உன்னால தான் இன்னிக்கு நான் குடும்பம் குழந்தைங்கனு இவ்வளோ சந்தோஷமா நிம்மதியா இருக்கேன். நாங்க எப்பவுமே இப்படியே சந்தோஷமா இருக்கனும் இறைவானு வேண்டிக்கிட்டேன்" என்றவன் நெகிழ்ச்சியுடன் கூற,

"நானும் அதே தான்ங்க வேண்டிக்கிட்டேன்" என்றாள் இவள்.

இணைப்பிரியாது இதே அன்புடன் இருவரும் தம்பதியாய் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.
 

Author: Dhakai
Article Title: உனதன்பின் கதகதப்பில் 16 (நிறைவு அத்தியாயம்)
Source URL: KadhaiThari-https://kadhaithari.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Goms

New member
Joined
Apr 28, 2025
Messages
17
Super story ma.
இதை டிவி சீரியலா எடுத்தா, முடிய 2 வருடத்திற்கு மேல ஆகும்.
You have completed in Short and Sweet way.
👏👏🥰🥰🥰🥰🥰
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
காயங்களும்
ஆறாதோ நீ எதிர்
தோன்றினால்

உடனே வந்தால்
உயிர் வாழும்
உந்தன் கதகதப்பில்

வருவேன்
அந்நாள் வரக் கூடும்...

அழுகையில் கரையும்
அன்பு மனைவியின்
அருகில் கோவம் கூட
அருகாமை ஓடும்.....

எதிரிக்கும் மன்னிப்பை
எங்கள் செந்தில் தான் என்னப்பன் தான் தரமுடியும்.....


வாழ்க்கை அவ்வளவு தான்
எளிதாக கடக்கும் போது
எதையும் கடந்து செல்லலாம்.....
எதார்த்தமாக கடந்த விதம் அருமை👏🏻👏🏻👏🏻🤩🤩❤️❤️....
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
Super story ma.
இதை டிவி சீரியலா எடுத்தா, முடிய 2 வருடத்திற்கு மேல ஆகும்.
You have completed in Short and Sweet way.
👏👏🥰🥰🥰🥰🥰
உண்மை சிஸ். உங்களின் கருத்துப் பகிர்வு உத்வேகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி சிஸ் ❤️🙏😍
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
காயங்களும்
ஆறாதோ நீ எதிர்
தோன்றினால்

உடனே வந்தால்
உயிர் வாழும்
உந்தன் கதகதப்பில்

வருவேன்
அந்நாள் வரக் கூடும்...

அழுகையில் கரையும்
அன்பு மனைவியின்
அருகில் கோவம் கூட
அருகாமை ஓடும்.....

எதிரிக்கும் மன்னிப்பை
எங்கள் செந்தில் தான் என்னப்பன் தான் தரமுடியும்.....


வாழ்க்கை அவ்வளவு தான்
எளிதாக கடக்கும் போது
எதையும் கடந்து செல்லலாம்.....
எதார்த்தமாக கடந்த விதம் அருமை👏🏻👏🏻👏🏻🤩🤩❤️❤️....
ஆமாம் அந்தப் பாடலின் வரிகளை நீங்க அழகா கதைக்கு கொண்டு வந்து சேர்த்துட்டீங்க. தங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சிஸ் ❤️ 🩷
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
உண்மை சிஸ். உங்களின் கருத்துப் பகிர்வு உத்வேகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி சிஸ் ❤️🙏😍
சிறுகதை போல
சுருக்கமாக
சிறு புரிதல்
சிறு சண்டை
சிறு கோபம்
சிறு ஆதங்கம்
சிறு ஆறுதல் என்
சட்டென முடிந்து விட்டது 🤩🤩🤩
 

Dhakai

Member
Joined
Mar 23, 2025
Messages
69
சிறுகதை போல
சுருக்கமாக
சிறு புரிதல்
சிறு சண்டை
சிறு கோபம்
சிறு ஆதங்கம்
சிறு ஆறுதல் என்
சட்டென முடிந்து விட்டது 🤩🤩🤩
ஆஹா... மிக்க நன்றி 🩷🩷🩷
 
Top Bottom