Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 4
அன்று காலையில் எழுகையிலேயே நிரஞ்சனின் மனம் புத்துணர்ச்சியில் குளித்திருந்ததைப் போல் புதுப்பொலிவுடன் இருந்தது. எப்பொழுதையும் விட நேரத்திலேயே கிளம்பி உற்சாகத்துடன் வேலைக்குச் சென்றான்.
அவன் அலுவலகத்துக்குச் சென்று பார்க்க வேண்டிய பணிகளைக் கவனிக்க, ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். சற்றுநேரத்தில் இருக்கையிலிருந்து எழுந்தவன் நேராக மதுமிதா இருக்கும் இடத்துக்குச் சென்றான்.
அவளைக் கண்டதும், அவள் முகம் சற்றுச் சுருங்கிப் போயிருப்பதாகப் பட்டது அவனுக்கு. ‘எப்பொழுதும் மலர்ச்சியுடன் காணப்படும் அவள் முகம் பிறந்தநாள் அன்று ஏன் இப்படி டல்லடிக்கிறது?’ என யோசித்தவாறே, “ஹாய் மது.. ஹாப்பி பர்த்டே” என அவளிடம் வாழ்த்துச் சொன்னான்.
அதைக் கேட்டவளுக்கு இறக்கையின்றி வானில் உலா வருவது போலிருந்தது. அதுவரையில் சுருங்கியிருந்த முகமும் அகமும் மலர்ந்து போனது. தன் பிறந்தநாளை எப்படி ஞாபகம் வைத்திருக்கிறான் என அவள் உள்ளம் ஒருவித மயக்கத்தில் மயங்கிக் குலுங்கியது.
நேசம் கொண்ட மதுமிதாவின் நெஞ்சமோ அனைத்தையும் தனக்குச் சாதகமாகவே எண்ணிப் பொருத்திப் பார்த்துச் சிலிர்த்துக் கொண்டது.
“தாங்க்ஸ் நிரஞ்சன்” என அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே பவித்ராவும் அங்கே வந்து சேர்ந்தாள். ஆனால் அவளோ எதையும் சட்டை செய்யாமல் இருக்கையில் அமர்ந்து கடமையே கண்ணாக உடனே வேலையில் இறங்கினாள்.
அவளை நோக்கிய மதுமிதா தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, “ஹே பவி. இன்னைக்கு என்ன நாள்னு மறந்துடுச்சா? விஷ் கூடப் பண்ணமாட்டேங்கற. உனக்கும் இன்னைக்குப் பிறந்தநாள் ஞாபகமிருக்கா? எப்போ பார்த்தாலும் ஒரே மோனாலிசா மாதிரியே போஸ் கொடுக்கிற” எனக் கோபப்படுவதைப் போல் பாவனைச் செய்தவள், பவித்ராவின் தோளைத் தொட்டு அவளை நோக்கித் திருப்பினாள்.
ஆம்! பவித்ராவுக்கும் அன்றே பிறந்தநாள். அவள் மதுமிதாவை விட இரண்டு வருடங்கள் சிறியவள். எதுவும் பேசாமல் அமைதியாக மதுமிதாவை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவை நிரஞ்சனின் கண்கள் ஏக்கத்துடன் நோக்கிக் கொண்டிருந்தன. அவன் ஒருவன் இங்கே இருக்கிறான் என்ற அங்கீகாரம் துளியும் அவளிடத்தில் இல்லை.
இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் மதுமிதா இல்லை. பதுக்கி வைத்திருந்த பரிசு தாள் சுற்றிய பரிசை எடுத்து பவித்ராவின் முன்னால் நீட்டி, “ஹாப்பி பர்த்டே பவி” என அவளை அணைத்து விடுவித்தாள்.
இருவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்றதுமே ஆரம்பத்திலேயே பூரித்துப் போனாள் மதுமிதா. தோழி தனக்குப் பரிசெல்லாம் தருவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை பவித்ரா.
அவளது அன்பில் மனம் உருகிய பவித்ரா, ‘இவள் யார் தனக்கு? ஆறு மாத காலமாகவே பழகுகிறாள். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல், விகல்பமில்லாமல் இருக்கிறாளே’ என நெகிழ்ச்சியுடன் நினைத்தாள்.
மரத்துப் போயிருந்த அவள் மனதுக்கு இதமளித்தது அவள் நட்பு. இவளைப் போன்றவர்கள் உலகில் மலிந்து போய் விடவில்லை என்ற நம்பிக்கையும் பிறந்தது.
கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிய, “நான் உனக்கு எதுவும் வாங்கலையே... எதுக்கு எனக்கு கிஃப்ட் எல்லாம்?” என அவள் தயங்க, “ஹே பவி... இதுக்கு ஏன் அழற?” என அவள் கண்களைத் துடைத்துவிட்டவள்,
“இது நான் உன்மேல் வச்சிருக்கிற நட்புக்கும் அன்புக்கும் மரியாதை செய்யறது. நீ கொடுத்தா மட்டுமே நான் கொடுப்பேன்னு நினைக்கிறது நட்பில்லை. எனக்கு அந்த மாதிரி எந்த எதிர்பார்ப்புமில்லை” என மதுமிதா சொல்ல, நிரஞ்சன் அவளை ஆச்சர்யத்துடன் நோக்கினான்.
அதைக் கேட்டதும் மலர்ந்த முகத்துடனும் இதழ்களில் நெளியும் புன்னகையுடனும் பரிசை வாங்கியவள், மதுமிதாவை இறுக்கி அணைத்து விடுவித்தாள். பின்னர் அதைப் பிரிக்க ஆரம்பித்தாள்.
அதுவரையில் அமைதியாக இருந்த நிரஞ்சன், “ஹாப்பி பர்த்டே பவி...த்ரா” எனப் பவித்ராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்தை சொல்ல, பரிசைப் பிரித்துக் கொண்டிருந்தவளின் கைகள் ஒரு சில நொடிகள் அப்படியே உறைந்து போயின.
பின்னர் மீண்டும் கைகள் தன் வேலையைச் செய்ய, அவனைத் திரும்பிப் பார்த்து, “தேங்க்ஸ் சார்...” எனச் சுருக்கமாகப் பதில் சொன்னாள். அதைக் கேட்ட நிரஞ்சனின் முகம் சூரியனைப் போல் பிரகாசமாக ஜொலித்தது.
“ஆனா, நான் ரெண்டு வருஷமா பிறந்தநாள் கொண்டாடறது இல்லை...” எனச் சுருக்கென்று உள்ளம் தைக்குமாறு பதிலளித்தாள். நிரஞ்சனின் முகம் ஒரு நொடி சூம்பிப் போனது.
“ஏய் பவி, உனக்குக் கடந்த காலத்தில் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா பழசையெல்லாம் நினைச்சுட்டு இருந்தா புது நிகழ்வுகளுக்கு நம் மனசுல இடப் பற்றாக்குறை வந்திடப் போகுது. நம்ம அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து வெளில வரணும்” என மதுமிதா சொல்ல, பவித்ரா எதுவும் பேசவில்லை.
தேவையில்லாமல் அவள் தோழியின் மனநிலையை அவள் பிறந்தநாளன்று கெடுக்க விரும்பவில்லை பவித்ரா.
அதைக் கேட்ட நிரஞ்சன், ‘எத்தனை தெளிவாகப் பேசுகிறாள் இவள்?’ என அவளை ஆச்சர்யத்துடன் மனதினுள் மெச்சி கொண்டான்.
“அப்போ இந்த வருஷம் பிரமாதமாகக் கொண்டாடிலாம். ரெடியா இருங்க. மதிய உணவுக்கு வெளில போகலாம்” என இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் நிரஞ்சன்.
அன்று மதியம் நிரஞ்சனின் மொத்தக் குழுவும் அருகிலுள்ள உணவகத்திற்குச் சென்றனர். மொத்தம் ஆறு பேர் கொண்ட குழு அவர்களது. சமீபத்தில் தான் அவர்கள் அனைவரும் ஒரே குழுவில் சேர்ந்தனர். ஆனால் வெகு சீக்கிரமே நெருக்கமாகிவிட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் தமிழ் தெரியும். நிரஞ்சன், அர்ஜூன், பவித்ரா, மதுமிதா ஆகிய நான்கு பேருக்கும் தமிழ்நாடு பூர்வீகம். ஆனந்த் மற்றும் பிரேம் இரண்டு பேரும் சென்னையில் பள்ளியோ, கல்லூரியோ படித்ததால் அவர்களுக்கும் தமிழில் பேச வரும். ஆனால் தெலுங்கானா பூர்வீகம்.
அனைவரும் ஒன்றாக உணவு வகைகளை வரவழைத்துப் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்து, நிரஞ்சனையே ஆர்டர் கொடுக்கச் சொன்னார்கள். ஒரு சிலர் மட்டுமே தங்களுக்குப் பிடித்த ஒன்றிரண்டு வகைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
மதுமிதாவுக்குச் சாப்பாடு என்று ஒன்று இருந்தால் போதும். ‘வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்’ எனப் பாட்டு பாட ஆரம்பித்துவிடுவாள். பவித்ரா யாருக்கு வந்த விருந்தோ என்பதைப் போல் மதுமிதாவின் அருகில் அமர்ந்திருந்தாள்.
மேஜைக்கு வந்த உணவு வகைகளைப் பார்த்த மதுமிதா பிரம்மித்துப் போனாள். ஒரு சில கணங்கள் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தாள். அனைத்துமே அவளுக்கு மிகவும் பிடித்த உணவு. மெல்ல ஏறிட்டு அவள் நிரஞ்சனைப் பார்க்க, “என்ன பார்த்துட்டே இருக்கீங்க. சாப்பிடுங்க” எனப் பளீரென்று புன்னகைத்தான்.
பவித்ராவும் எதுவும் சாப்பிடாமல் முகத்தைச் சுளித்தவாறே அமர்ந்திருக்க, “என்னாச்சு பவி, ஏன் ஒரு மாதிரி இருக்க?” எனக் கேட்ட மதுமிதா,
“பசில இருக்கேன்னு நினைக்கிறேன். உனக்கு இந்த ‘டிஸ்’ ரொம்பப் பிடிக்குமே” என அவளே பதிலைக் கண்டுபிடித்து உணவை எடுத்து பவித்ராவுக்குப் பரிமாறிவிட்டுத் தனக்கும் பரிமாறிக் கொண்டாள்.
உணவுவேளை கலகலவென்று கழிந்தது. பவித்ரா எப்போதுமே அமைதியாக இருப்பதால் இன்று அவளைக் குறி வைத்து வம்புக்கு இழுத்தனர் குழுவில் உள்ள மற்றவர்கள்.
“பவித்ரா, நீங்க பேசறதுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணறீங்க? நாங்க பணம் ஏதாவது கொடுக்கணுமா என்ன?” என ஆனந்த் அவளைக் கலாய்த்தான்.
பவித்ரா உதடு பிரித்துப் புன்னகைக்க, “எனக்கு என்ன ஆச்சரியம்னா மதுவுக்கு ஃப்ரெண்ட்டா இருந்துட்டு எப்படி இவ்வளவு அமைதியா இருக்கீங்க?” எனப் புருவத்தை உயர்த்தி வியப்பைக் காட்டினான் ஆனந்த்.
“உனக்குப் புரியலையா ஆனந்த். அங்க தான் ஹைலைட்டே. மது பேசறதுக்கு வாய்ப்புக் கொடுக்காம அவளே எல்லாத்தையும் பேசி முடிச்சிடுவா. நீ போட்டதால அந்த டிரஸ்ஸூக்கு அழகா, இல்லை, அந்த டிரஸ் உனக்குக் கூடுதல் அழகைச் சேர்க்குதான்னு ஒரு மொக்கைக் கவிதையை எல்லோரும் உருட்டுவாங்களே. அது மாதிரி நம்ம கவிதையே எழுதலாம்.
நீங்க அமைதியா இருக்கிறதால மது இவ்வளவு பேசறாளா, இல்லை, மது இவ்வளவு பேசறதால நீங்க அமைதியா இருக்கீங்களா... அடடே!” எனப் பரிகாசம் செய்தான் அர்ஜூன்.
“அடுத்த தடவை சென்னைக்குப் போறப்போ அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு போன்னு கேட்பீங்க இல்லை, அப்போ வச்சுக்கிறேன்” என மதுமிதா அவனை மிரட்டலுடன் நோக்க,
“மது மேடம்... என் லைஃப்பே அதை நம்பி தான் ஓடுது” என அர்ஜூன் கையைத் தூக்கியவாறு அவளிடம் சரணடைந்துவிட்டான்.
மதுமிதா அடிக்கடி சென்னைக்குச் செல்வாள். அவன் திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்குப் பிடித்த உணவு வகைகளையும் பரிசு பொருட்களையும் அவளிடம் தந்தனுப்புவான் அர்ஜூன். அவள் கொடுப்பதை இவனிடம் கொண்டு வந்து தருவாள் மதுமிதா.
காதல் திருமணம் அவர்களது. ஆரம்பத்தில் இருவரும் ஒரே இடத்திலேயே வேலையில் இருந்தனர். ஆனால் அந்தப் பெண்ணுக்குத் திடீரென்று சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு மாற்றல் வந்துவிட்டது. ஆகவே அடிக்கடி அர்ஜூனால் அவளைப் பார்க்க முடிவதில்லை.
அதனால் மதுமிதா சென்னை சென்று வரும்பொழுதெல்லாம் போஸ்ட்உமன் ஆகிவிட்டாள்.
“அர்ஜூன், எதுக்கும் உங்க காதல்ல ஸ்ட்ராங்கா இருங்க... எந்தத் தப்பும் பண்ணிடாதீங்க” என அதுவரையில் அமைதியாக இருந்த நிரஞ்சன் சற்றுப் பீடிகையுடன் இடையில் புக, “நான் என் காதல்ல ரொம்ப ஸ்ட்ராங்க். நாங்க கல்யாணமே பண்ணிக்கப் போறோமே” என்றான் அர்ஜூன் வேங்கையாய்ச் சிலிர்த்துக் கொண்டு.
“அப்படின்னா ரொம்ப நல்லது. ..” என ஒரு சில கணங்கள் நிறுத்தி இழுத்தவன், “ஏன் சொல்லறேன்னா.. ஏமாத்த மட்டும் நினைச்சீங்க அப்புறம் சாணி அபிஷேகம் கிடைக்கும். அதுவும் உங்க காதலிகிட்ட இருந்து எல்லாம் கிடையாது. காதலிக்குத் தூது போனவங்ககிட்ட இருந்து கிடைக்கும்” என்றதும் அனைவரும் மதுமிதாவைச் சந்தேகக் கண்களுடன் திரும்பிப் பார்த்தனர்.
மதுமிதா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு நிரஞ்சனைப் பார்த்து முறைத்தாள் . அவன் விழிகளில் குறும்பு கூத்தாடிக் கொண்டிருந்தது. ‘இப்படி எல்லோர் முன்னாடியும் மானத்தை வாங்கிட்டானே?’
“அவனை அத்தோட விட்டது அவனோட அதிர்ஷ்டம்” என மதுமிதா பதில் சொல்ல, என்ன நடந்திருக்கும் என அங்கிருந்த அனைவருக்கும் ஆர்வம் பிறந்துவிட்டது.
“சொல்லட்டுமா?” என மதுமிதாவைப் பார்க்க, “சொல்லறதுக்குக் கச்சிதமா மேடையெல்லாம் போட்டு, அலங்காரம் பண்ணி ரெடியாகிட்டு என்கிட்ட பெர்மிஷன் கேட்கிற மாதிரி கேட்கறீங்க. எப்படியும் இன்னைக்குச் சொல்லற முடிவோட வந்திருக்கீங்க. சொல்லுங்க... இவங்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கட்டும்” என்றாள் மதுமிதா
நிரஞ்சன் நடந்ததைச் சொல்லிவிட்டு, “இங்க பாருங்க “ என நிரஞ்சன் அவள் ‘இடியட்’ என்று எழுதியதைத் தன் அலைபேசியில் காட்டினான்.
“இந்த மதர் தெரசாக்கு உள்ள இப்படி ஒரு பாண்டிட் குயீனா?” என அர்ஜூன் எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைக்க, “இவளைப் போய் மதர் தெரசான்னு சொன்னா, அவங்க கல்லறையில் இருந்து எழுந்து வந்து உன் மண்டையில ஓங்கி ஒன்னு போட போறாங்க. இரத்தத்துல எழுதி வச்சு மிரட்டிட்டு வந்திருக்கா... இவளைப் போய்...” என ஆனந்த் அவள் காலை நன்றாகவே வாரினான்.
“உங்களுக்கு வந்தா இரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியான்னு சொல்லறது இதைத் தானா?” என மதுமிதா, தக்காளி சாஸ் இரத்தம் ஆகிவிட்டதை எண்ணி முறைக்க, “நானே என் தூதுவனைச் சந்தோஷப்படுத்தப் பார்க்கிறேன். நீ வேற.. உஷ்..” என ஆழ்ந்த இரகசியம் பேசுவதைப் போல் சத்தமாகவே ஆனந்திடம் பேசினான் அர்ஜூன்.
மதுமிதா இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். அவள் அனைவருக்கும் ஈடு கொடுத்துப் பேசுவாள். அதே சமயத்தில் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் அவர்களுக்கு அவளால் முடிந்த உதவியை உடனே செய்வாள். அதனால் பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் என அவளுக்கு நிறைய நட்புகள் வாய்த்தன.
அவர்கள் பேசியதைக் கேட்டதும் பவித்ரா கூடப் பக்கென்று சிரித்துவிட்டாள்.
“நீ எப்பவுமே இப்படியா மது?” எனப் பவித்ரா கேட்க, “அவ இப்படித் தான் எப்பவுமே” என அர்ஜூன் வார்த்தைகளில் விளையாட, மீண்டும் அனைவரும் சத்தமாகவே நகைத்தனர் .
“என்ன, போன முறை இலக்கு தப்பாப் போயிடுச்சு. ஆனா அடுத்த முறை கண்டிப்பா இலக்கு தவறாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா என் கார் பாவம்” என நிரஞ்சன் இடையில் புகுந்து சொல்ல, மீண்டும் அனைவரும் சிரித்தனர்.
“ஆமா பவித்ரா, ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன். ரொம்ப அமைதியான டைப்பா வேற இருக்கீங்க. இப்போ மதுவோட ஹிஸ்டரி, ஜியாகிரஃபி, கெமிஸ்ட்ரி எல்லாம் எங்களுக்கு அத்துப்படி. உங்களைப் பத்தி எதுவுமே தெரியாது. உங்க குடும்பம் எங்க இருக்காங்க?” என அர்ஜீன் கேட்டான்.
“நானும் என் அம்மாவும் மட்டுமே என் குடும்பம். அப்பா போன வருஷம் இறந்துட்டார்” என்றாள்.
“ஓஹ் சாரி” எனக் கேள்வி கேட்டவன் சொல்ல, “அப்பா இல்லாம பழகிடுச்சு” என்றவளின் குரலில் வேதனை நிறைந்திருந்ததை அனைவராலும் உணர முடிந்தது. அதன்பிறகு பேச்சு கூடிய விரைவில் நடக்கவிருக்கும் அர்ஜூனின் திருமணம் பற்றிய திசையில் நகர்ந்தது.
உணவு முடிந்ததும், அனைவருக்கும் சேர்த்தே நிரஞ்சன் பணத்தைக் கட்டினான். மற்றவர்கள் கொடுக்க முன் வந்தும், ‘அது தன்னுடைய ட்ரீட்’ எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டான். அனைவரும் அவனுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துவிட்டு மீண்டும் அலுவலகம் சென்று வேலையில் ஆழ்ந்தனர்.
நிரஞ்சனுக்கு நீண்ட நாள் கழித்து மனம் சஞ்சமில்லாமல் இருந்தது. சற்று நிம்மதியாகவும் உணர்ந்தான். அவனுக்குச் சில நாழிகைகள் எந்த வேலையும் ஓடவில்லை. அதற்காக அவனால் சும்மாவும் அமர்ந்திருக்க முடியாதே. ஆகவே மனதை ஒருநிலைபடுத்தி வேலைக்குள் மூழ்கினான்.
சில நிமிடங்களிலேயே, யாரோ கதவைத் தட்டிவிட்டு உள்ளே வர, அவன் நிமிர்ந்து பார்த்தான். எரிச்சலையும் சினத்தையும் சரிவிகிதத்தில் முகத்தில் பிரதிபலித்தவாறு அவன் முன்னே வந்து நின்று கொண்டிருந்தாள் பவித்ரா.
அவன் மேற்கொண்டு எதுவும் பேசும் முன்னர், “இந்தாங்க மதியச் சாப்பாட்டுக்கு நீங்க கட்டின பணம்” என அவன் டேபிளின் மேல் பணத்தை வைத்தாள்.
இருக்கையில் இருந்து எழுந்தவன், “பவி, அது உ...ங்க பர்த்டேக்கு” என அவன் மேற்கொண்டு பேசும் முன்னர், “எனக்கு யார்கிட்டேயும் பிச்சை எடுத்துப் பழக்கமில்லை” எனக் கூரிய வாளைப் போல் வார்த்தைகளைச் சுழற்றி எறிந்து, அவன் மனதை வெட்டிவிட்டுச் சென்றாள்.
பவித்ராவின் குணம் எப்படியென்றால் அப்படியே கண்ணாடியின் குணத்துக்கு எதிரானது. எதிரில் இருப்பவரிடம் கண்ணாடி பகைமையையும், குரோதத்தையும் காட்டுவதில்லை. யாரையும் பழிவாங்குவதுமில்லை. ஆனால் பவித்ரா அதற்கு நேர்மாறானவள்.
மனதில் கோபதாபங்களோடு உலவிக் கொண்டிருக்கிறாள். எதிரிலிருப்பவர்களின் அகம் அழகுபெற நான் ஏன் உதவ வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள். அப்படியிருந்தால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது. அதற்குத் தீர்வும் கிட்டாது என்பது அவளுக்குப் புரியவில்லை.
அவளைப் பொறுத்தவரையில் அவள் கோபம் நியாயமானது. இருக்கலாம். ஆனால் ஒருவர் திருந்த நினைக்கையில் இப்படி வெட்டிக் கொண்டு போனால் அவன் வெட்டுண்டு போக மாட்டானா?
தன்னையுமறியாமல் நிரஞ்சனின் கண்கள் பனித்தன. எப்படி இருந்தவள்? தன்னால் இப்படி ஆகிவிட்டாளே. மீண்டும் பழைய நிலைக்கு மாறுவாளா? அவன் மனம் வெகுவாய் ஏங்கியது.
தன் கைபேசியை எடுத்து, ‘நந்தா’ என்று சேமித்து வைத்திருந்த எண்ணுக்கு அழைத்தான். மனம் மிகுந்த வேதனையில் இருக்கையில் எல்லாம் அவன் அந்த எண்ணுக்கு அழைப்பான்.
கஜினி முகமதுவைப் போல் அவன் அடிக்கடி அந்த எண்ணுக்கு அழைப்பான். அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருந்தால் அழைப்பு எடுக்கப்படும். இல்லையென்றால் அவன் துரதிர்ஷ்டம் என்று பெருமூச்சு விடுவான்.
அழைப்பை எடுத்தாலும் எதிர்முனையில் இருப்பவர் இவன் நலன் விசாரித்துக் கொஞ்சிக் குலாவப் போவதில்லை. சரமாரியாகத் திட்டுகளே வந்தடையும். அதையே அவன் தன் அதிர்ஷ்டம் என்று கருதினான். அவன் உளவேதனை சற்று மட்டுபடும் என்று நம்பினான்.
இன்று அழைப்பு எடுக்கப்பட, அதுவரையில் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரமனைத்தும் குறைந்ததைப் போலிருந்தது அவனுக்கு.
“நீ செஞ்சது எல்லாம் பத்தாதா? அவனே கண் முழிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா தேறி வந்திருக்கான். உடனே உனக்கு மூக்கு வேர்த்திடுமே” என எதிர்முனையில் இருந்தவர் வசைபாட ஆரம்பிக்க,
“ஆன்ட்டி, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என வலியையும் வேதனையையும் உள்ளடக்கிக் கொண்டு கேட்டான்.
“ஏன், நல்லா இருந்தா மறுபடியும் ஆள் வச்சு அடிச்சு படுக்க வைக்கத் திட்டம் போடலாம்னு இருக்கியா?” என வார்த்தைகளை அமிலத்தில் தோய்த்து எடுத்து அவனை நோக்கிச் சுழற்றி அடித்தார்.
“ஆன்ட்டி, வேணும்ன்னு பண்ணலை. தெரியாம அப்படி நடந்துகிட்டேன்” என அவன் மேற்கொண்டு பேசுவதற்கு முன்னர்,
“இங்க பாரு, நீ தெரிஞ்சு பண்ணினியோ ,தெரியாம பண்ணினியோ எங்களுக்கு அதெல்லாம் தேவையே இல்லை. என் பையன் உயிரோட இருக்கறதே எங்களுக்குப் போதும். உன் சகவாசமே இனி வேண்டாம்னு நாங்களே ஒதுங்கி இருக்கோம். இந்த நம்பருக்குக் கூப்பிட்டு தொல்லைப்படுத்தாதன்னு எத்தனை தடவை சொல்லறது. ” எனச் சுள்ளென்று தேளாகக் கொட்டினார்.
“ஒரே ஒரு தடவை அவனோட பேச முடியுமா?” என மன்றாட, அதற்கெல்லாம் மசிபவராகத் தெரியவில்லை.
“அவனுக்கு முதல்ல வேறு நம்பரை வாங்கிக் கொடுக்கணும். ஒரே இம்சை” என அலைபேசியை டொக்கென்று வைத்துவிட்டார் எதிர்முனையிலிருந்தவர்.
அந்த அறைக்குள் அவனால் நிற்கவே முடியவில்லை. வெளியில் சென்று இயற்கைக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் போலிருந்தது. பெருமூச்சுடன் அறையிலிருந்து வெளியில் வந்தான் நிரஞ்சன்.
பவித்ரா அமர்ந்திருந்த இடத்தில் அவள் இல்லை. காலியாக இருந்தது. அன்று அவள் சீக்கிரம் கிளம்பப் போவதாக ஒரு மேலதிகாரி என்ற முறையில் ஏற்கனவே அவனிடம் தெரிவித்திருந்தாள்.
அனிச்சைசெயலாக அருகிலிருந்த மதுமிதாவை நோக்கி அவன் விழிகள் சென்றன. அவள் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சு? என்ன சொல்லறீங்க?” என அவள் பதட்டதுடன் இருக்கையில் இருந்து படக்கென்று எழுந்துவிட்டாள். எதிர்முனையில் என்ன சொன்னார்களோ, அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பித்தாள் மதுமிதா.
தொடரும்...
Last edited: