Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 23
அடுத்து வந்த ஒரு மாதமும் மதுமிதாவிற்கு எந்தப் பிரச்சனையுமில்லாமல் சென்றது. அர்ஜூன் விடுப்பிலிருந்து திரும்பி வந்துவிட்டான். பவித்ரா மீண்டும் வேலைக்கு வந்துவிட்டாள்.
அவர்களுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தும் வரிசை கட்டிக் காத்திருக்க அதில் அனைவரும் மூழ்கிவிட்டனர். வேறெந்த விஷயங்களைப் பற்றியும் சிந்திக்க மதுமிதாவுக்கு மனமில்லை.
ஹைதராபாத்துக்குச் சென்றதும் தான் சென்னைக்கு மாற்றல் வேண்டுமெனக் கேட்டது என்ன ஆனது என விசாரித்தாள் மதுமிதா. ஏற்கனவே அதற்குச் சம்மதித்து மேலிடத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக முகத்தில் எவ்வித உணர்வுமின்றித் தகவல் சொன்னான் நிரஞ்சன்.
அதைக் கேட்டதும் மதுமிதாவிற்குத் திக்கென்றிருந்தது. அவ்வளவுதானா? அவள் சென்னை செல்கிறாள் என்றதும், ‘போய் வா’ என இவன் அனுப்பி வைத்துவிடுவானா? அப்படியென்றால் அவனுக்குத் தன் மேல் காதல் இருக்கிறது என்று சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகளா?
சென்னைக்குப் போயே ஆகவேண்டும் என அவள் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது உண்மையே. ஏனெனில் அவளது பெற்றோர்கள் அங்கே இருக்கிறார்களே. ஏதோ அனுபவத்திற்காக வேறு ஊருக்குச் சென்று தனித்து இருக்க வேண்டுமென்று ஆசை ஆரம்பத்தில் இருந்தது.
எனினும் பெற்றோர்களைப் பிரிந்து ஆறுமாத காலம் இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே அவளுக்குத் தோன்றியது.
ஆனால் இப்படி மாற்றலுக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டுக் கிணற்றில் போட்ட கல்லைப் போல் நிரஞ்சன் எதுவும் பேசாமல் இருக்கிறானே. அன்று காவல் நிலையத்தில் மனம்விட்டுப் பேசிய நிரஞ்சன் அதற்குமேல் மதுமிதாவிடம் எதைப் பற்றியும் பேசவில்லை.
அவளின் காவல்நிலையப் பயணத்திற்குக் காரணம் அஞ்சனாவென்று உண்மை தெரிந்த அன்றே நிரஞ்சன் அவளிடம் சொல்லிவிட்டான். பிறகு பிற்காலத்தில் தெரிய வருகையில் அதையும் மறைத்து விட்டான் என்று அவன் மேலேயே அவள் குற்றம் சாட்டக் கூடாதே. ரொம்பவும் உஷார் தான்!
எப்படியோ நிரஞ்சனின் தலையீட்டால் அஞ்சனா அதற்குமேல் அவளுக்குத் தொல்லை கொடுக்கவில்லை என எண்ணி நிம்மதியுற்றாள் மதுமிதா. ஆனால் அதே சமயத்தில் நிரஞ்சனும் சொந்த விஷயங்களைப் பற்றி வேறெதுவும் பேசவேயில்லை என மனம் வருந்தினாள்.
அவர்கள் முடிக்க வேண்டிய முக்கிய ப்ராஜெக்ட்டுகள் இருந்ததால் அதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் நிரஞ்சன். வேறு வழியில்லாமல் அவளும் அதில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்.
அவளுக்கு அவனின் குறுக்கீடில்லாத இந்தத் தனிமை பிடித்திருந்தது. அதே சமயத்தில் பிடிக்கவுமில்லை. அவளை ஒருவித வெறுமை சூழ்ந்திருந்ததை உணர்ந்தாள் மதுமிதா.
அவளின் மனநிலை இப்படி இருக்க நிரஞ்சனின் மனநிலையோ வேறு மாதிரி இருந்தது. தனக்காக மதுமிதா எவ்வளவு அல்லல்பட்டிருக்கிறாள் என எண்ணுகையில் அவனுக்கு மனம் வலித்தது.
அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்த பின்னரே இனி அவளிடம் நெருங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டான். ஏனெனில் அவன் பொருட்டு அவள் எக்காரணம் கொண்டும் எந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ளக் கூடாது.
போதும்! அவன் நண்பனும் அவன் குடும்பமும் பட்ட வலிகளும் வேதனைகளும் ஏழேழு ஜென்மத்துக்குப் போதும்.
ஆகவே சென்னையிலிருந்து மீண்டும் ஹைதராபாத் சென்றதும் அலுவலகப் பணியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான் நிரஞ்சன்.
மேலும் ஒரு வாரம் கடந்திருக்க, அஞ்சனாவின் திருமணம் பற்றி ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் தமிழ் பத்திரிக்கைகளிலும் தெலுங்கு பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிக்கையில் வருவது இயல்பே. ஆனால் எதற்காக இதை மெனக்கெட்டு தெலுங்குப் பத்திரிகையில் வர வைத்திருக்கிறார்கள் என்று மதுமிதாவுக்குப் புரியவில்லை.
அஞ்சனாவின் புகைப்படத்தை ஏற்கனவே அவள் அனுப்பிய படங்களில் பார்த்திருக்கிறாள் அதனாலேயே சுவாரசியம் கூட அந்தச் செய்தியை ஆங்கிலப் பத்திரிக்கையிலும் தமிழ் பத்திரிகையிலும் படித்தாள்.
தெலுங்கு படிக்கத் தெரியாததால் புகைப்படங்களை மட்டும் பார்த்து விஷயம் இதுவென்று புரிந்து கொண்டாள். அதன்பின்னர் வேலையில் தீவிரமாக இருந்தாலும் நாட்கள் ஏனோ நத்தையின் வேகத்தில் நகர்ந்தது அவளுக்கு.
அது போதாது என்று நிரஞ்சன் வேறு நான்கு நாட்களாக வேலைக்கே வரவில்லை. வேலை நிமித்தம் மின்னஞ்சல் அனுப்பினால் உடனே பதில் வந்தது. அவ்வளவே. அவன் எங்குச் சென்றான் என்று அவளுக்குத் தெரியவில்லை. இறுதியில் பேச்சுவாக்கில் அவன் நந்தகுமாரின் பெற்றோரைக் காணச் சென்றிருப்பதாகச் சொன்னாள் பவித்ரா.
“அப்போ கூடிய சீக்கிரம் கல்யாணச் சாப்பாடுன்னு சொல்லு” என அவளைக் கேலி செய்ய, பவித்ரா வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
ஊருக்குச் சென்ற நிரஞ்சன், நந்தகுமாரின் பெற்றோர்களின் கால்களில் விழுந்து மனதார மன்னிப்பை வேண்டி அவன் தன் தவறை உணர்ந்துவிட்டதாகச் சொல்லி அவர்களிடம் சரணடைந்தான்.
ஆகவே நந்தகுமார்-பவித்ராவின் திருமணம் உறுதி செய்யப்பட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் அவர்களுக்குச் சென்னையில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் எனப் பேசி முடிவு செய்தனர்.
நிரஞ்சன் மீண்டும் ஊர் திரும்ப, மதுமிதாவுக்குச் சென்னைக்கான இடமாற்றமும் வந்து சேர்ந்தது. இடமாற்றம் வேண்டும் என்று கேட்டவள் அவளே. ஆனால் கிடைத்த பொழுது அவளால் சந்தோசம் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்று அவளைவிட்டு நழுவப் போவதாகவே உணர்ந்தாள்.
பவித்ராவின் திருமணம் நடக்கையில் மதுமிதா மீண்டும் சென்னைக்குப் புலம் பெயர்ந்திருப்பாள். ஆனால் ஏனோ ஒரு வெற்றிடம் அவள் மனதில் உருவானதைப் போலிருந்தது. அப்படியென்றால் நிரஞ்சனை இனி தினமும் பார்க்க முடியாதா?
அவனும் அவன் மனதில் உள்ளதை எதையும் அவளிடம் பகிர்ந்து கொள்ளமாட்டேன் என்கிறான். கடங்காரன்! அவள் இப்படி ஒரு தவிப்பில் இருக்கையில் அவளின் அலைபேசிக்கு அஞ்சனாவின் திருமணப் பத்திரிக்கை வந்து சேர்ந்தது.
அதைப் பார்த்ததும் அவளுக்கு எதுவும் புரியவில்லை. தன்னை நிரஞ்சனிடம் இருந்து பிரிப்பதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தவள் ஏன் திடீரென்று தனது திருமணப் பத்திரிக்கையை அனுப்பி வைக்கிறாள் என மதுமிதா குழம்பினாள்.
சற்றுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அஞ்சனாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
“இனி நிரஞ்சன் இருக்கும் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டேன்” என அனுப்பியிருந்தாள்.
அவள் காவல் நிலையம் சென்று வந்ததிலிருந்தே அஞ்சனா அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது இப்படிச் சொல்கிறாள் என்றால் கண்டிப்பாக அஞ்சனாவை நிரஞ்சன் ஏதோ சொல்லி மிரட்டியிருக்க வேண்டும்.
ஆகையினால் தான் அஞ்சனாவின் இந்தத் திடீர் திருமணமும், அவளுக்குப் பத்திரிக்கை அனுப்பி வைப்பதன் ரகசியமும். உண்மையை ஊகித்ததும் அவளுக்கு மூச்சுத் திணறுவதைப் போலிருந்தது. அப்படியென்றால் நிரஞ்சன் தனக்காக இத்தனையும் செய்தானா?
அவள் உள்ளம் கூத்தாடியது. ஆனால் அவளை ஏன் சென்னைக்குப் போக அனுமதித்தான்?
‘அவன் வேண்டாம் என்று தர்க்கம் செய்திருந்தால் நீ அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்திருப்பாயா என்ன?’ என அவள் மனசாட்சியே அவளைக் கூறு போட்டது.
அதனால் நிரஞ்சனிடம் சென்று அவளாக எதையும் கேட்கவில்லை. எப்படியோ வேலையில் மூழ்கி அனைத்தையும் முடிக்கவும், அவள் சென்னை கிளம்பும் நாளும் வரச் சரியாக இருந்தது.
அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அவளை உணவகத்துக்கு அழைத்துச் சென்று அவளுக்குப் பிரியாவிடை கொடுத்து அவள் சென்னைக்குச் செல்வது குறித்து வருத்தம் தெரிவித்தனர். ஆனால் ஏனென்று தெரியவில்லை அர்ஜூன் மட்டும் அவளுக்கு நன்றியைத் தெரிவித்தான்.
இத்தனை நாட்களாக அவனுக்குத் தூதுவனாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறான் என்று எண்ணிக் கொண்டாள்.
இத்தனை நடந்தும் வேலையிருக்கிறது என நிரஞ்சன் அதில் கலந்து கொள்ளவில்லை.
‘போடா.. பெரிய இவன். நீ வரவில்லை என்றால் எனக்குச் சாப்பாடு இறங்காதா என்ன?’ என மனதுக்குள் நொடித்துக் கொண்டாள். உண்மையில் அன்று அவளுக்குச் சாப்பாடு இறங்கவில்லை.
ஏற்கனவே வேண்டிய பொருட்களைக் கட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தாகிவிட்டது. ரயிலில் எடுத்துச் செல்ல வேண்டியதைப் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டாள். அன்று மாலை பவித்ராவின் வீட்டுக்கு அவள் செல்வதாக இருந்தது. ஆகவே அனைத்தையும் எடுத்துக் கொண்டு பவித்ராவின் வீட்டை நோக்கிச் சென்றாள் மதுமிதா.
அவர்கள் வீட்டிலிருந்தே அவள் நேராக ரயில்நிலையத்துக்குச் செல்லலாம் எனக் கௌரி கட்டாயப்படுத்த இவளும் ஒத்துக் கொண்டாள். நேராகப் பவித்ராவின் வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்த நிரஞ்சன் கதவைத் திறந்தான்.
அவனை அந்த நேரத்தில் அவள் அங்கே எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நொடிகள் தயங்கி நிற்க, அவள் கையிலிருந்த பைகளைக் குனிந்து வாங்கிக் கொண்டான். அவன் நகர்ந்து சென்று ஓர் ஓரமாக அதை வைத்துவிட்டு அவளைப் பார்க்க, அவள் இன்னுமே வெளியில் நின்று கொண்டிருந்தாள்.
“உள்ள வர்ற ஐடியா இருக்கா?” என அவன் கேட்ட பின்னரே சுயஉணர்வு பெற்று எதுவும் சொல்லாமல் உள்ளே நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்ததும் பட்டென நிரஞ்சன் கதவைச் சாத்த, அவளுக்குப் படபடவென்று வந்தது. கிட்டதட்ட ஒன்றை மாதங்களுக்கு முன்னரும் இப்படி நடந்ததே. மறுபடியும் அதே போல் கதவைச் சாத்துகிறானே?
‘மது, உனக்கு ஆனாலும் ரொம்பவும் ஆசை? அவனை ஒவ்வொரு முறையும் நிராகரித்துவிட்டு இப்போது அவன் உனக்கு முத்தம் வைப்பானோ என எந்தத் தைரியத்தில் நினைக்கிறாய்?’ என அவள் மனசாட்சி அவளை நங்கென்று கொட்டியது.
அவள் தன் உடைமைகளையும், கைப்பையையும் அங்கே வைத்துவிட்டு, “பவி” என்றவாறே உள்ளே சென்றாள். கௌரி, மற்றும் பவித்ரா இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
“அம்மாவும், பவியும் இங்கே பக்கத்துல இருக்கிற கடைக்குப் போயிருக்காங்க. வந்துடுவாங்க” என்றான். அவளுக்குத் திக்கென்றிருந்தது. இவனுடன் தனியாக இருக்க வேண்டுமா?
“வேணா டி.வி. பாரு மது. ஏதாவது வேணும்னா கேளு” எனச் சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டான்.
‘அவ்வளவு தானா?’ என அவள் நெஞ்சம் ஏமாற்றத்தில் தத்தளித்தது. சற்றுநேரம் பொறுமையின்றித் தொலைக்காட்சியையும், தன் கைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் தந்தை அவளை அழைத்துச் சற்றுநேரம் பேசியவர் அவளைப் பத்திரமாக வரச் சொன்னார். தந்தையின் அழைப்பை வைத்ததும், அவள் அண்ணன் விவேக் அழைத்திருந்தான்.
“ஹே மது... ஷாப்பிங் போறோம். உனக்கு என்ன வேணும் சொல்லு” என அவன் கேட்டதில் எல்லாம் எந்தக் குறையுமில்லை. ஏதோ வாய்க்கு வந்ததைச் சொன்னாள். ஆனால் அதன்பின்னர் கேட்டானே கேள்விகள்.
“நிரஞ்சன் ஷர்ட் சைஸ் என்ன மது? அவருக்கு வேற என்ன வாங்கறது? ஏதாவது ஐடியா கொடேன்” என அவன் கேட்டதும் சுறுசுறுவென்று உச்சந்தலைக்குக் கோபம் ஏறியது.
“உங்களுக்குத் தான் அவர் நம்பர் தெரியுமில்லை. அவரையே கேட்க வேண்டியது தானே? நான் என்ன வேலை வெட்டியில்லாம உட்கார்ந்துட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா?” எனப் படபடவென்று பொரிந்தாள்.
பின்னே, தன்னறைக்குள் சென்ற நிரஞ்சன் வெளியில் வரும் அரவமே தெரியவில்லை. இவள் என்ன ‘லூசா?’ அவனுக்காகப் பதிலுரைக்க? அதுவும் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை இந்த நிரஞ்சன். இவனுக்குப் பரிசு வேறு வாங்க வேண்டுமா?
“என்ன மது பொறாமையா? இப்படிக் கோபப்படற?” என விவேக் சீண்ட, “வேணா அழகா ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் வாங்கிட்டு வந்து கொடுங்க. சந்தோஷப்படுவார். இப்போ எனக்கு வேலையிருக்கு” எனப் பட்டென்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
நிரஞ்சன் மேல் ஏதோ கோபத்தில் இருக்கிறாள் தங்கை என விவேக்குக்குப் புரிய, 'வருக வருக என்று உங்களை எங்கள் குடும்பத்துக்குப் பேரன்புடன் வரவேற்கிறோம்' என ஒரு குறுஞ்செய்தியை நிரஞ்சனுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்தான்.
அதற்குப் பதிலாக, 'என்னே என் பாக்கியம்!' எனப் பதில் அனுப்பியிருந்தான் நிரஞ்சன்.
நேரமாக ஆக வரவேற்பறையில் மதுமிதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதையோ பறிகொடுத்ததைப் போல் உணர்ந்தாள். அதற்கு மேல் பொறுக்கமாட்டாமல், விடுவிடுவென்று சென்று நிரஞ்சனின் அறைக்கதவைத் டொம்டொமென்று தட்டினாள்.
தொடரும்...