• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 17

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 17

அந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் நந்தகுமாருடன் நேரம் செலவழித்த நிரஞ்சன் மீண்டும் வேலைக்குத் திரும்பினான். நந்தகுமார் தன் பெற்றோருடன் பேசிவிட்டு மீண்டும் வருகிறேன் எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு பெங்களூருக்குக் கிளம்பிச் சென்றான்.

அன்று காலையில் மிகவும் உற்சாகமாக நிரஞ்சன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். இரண்டு நாட்களாக மதுமிதாவைப் பார்க்க முடியவில்லை. இன்று காணப் போகிறோம் என அவன் அதரங்கள் சிரிப்பில் நெளிந்தன. விழிகள் உணர்ச்சிக் குறுகுறுப்பில் மூழ்கி உற்சாகத்தைக் கொட்டிக் கொண்டிருந்தன. மனமோ உவகையில் ஆர்ப்பரித்துக் கூத்தாடியது.

அவனது மகிழ்ச்சிக்கு வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதைப் போல் மதுமிதா ஒரு விண்ணப்பத்தைக் கொண்டு வந்து அவன் முன்னே நீட்டினாள். அதாவது அவளுக்கு ஹைதராபாத்தில் இருந்து சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு மாற்றல் வேண்டும் எனக் கேட்டு விண்ணப்பித்திருந்தாள்.

அதைப் பார்த்ததும் நிரஞ்சனுக்குச் சுர்ரென்று கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. மிகுந்த சிரமத்துடன் கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயன்றான். முதலில் அவன் சரியென்று சொன்னால் அல்லவா இந்தப் பணி மாற்றத்திற்கு மேலிடம் சம்மதிக்கும்.

‘அவனே சம்மதம் சொல்லப் போவதில்லை பிறகு எப்படி உனக்கு இந்த இடமாற்றம் கிடைக்கும்?’ என உள்ளுக்குள் குதூகலித்துக் கொண்டான்.

“இப்ப என்ன அவசரம்? ஏன் இப்படித் திடீரென இடமாற்றம் கேட்கறீங்க?” என எதையும் காட்டிக் கொள்ளாமல் அவன் தீவிரமாக வினவ, “பர்சனல் ரீசன்” என முகத்தில் அடித்ததைப் போல் பேசி வைத்தாள் மதுமிதா.

“நீங்க இந்த வேலைக்கு வந்து ஆறு மாசம் தான் ஆச்சு. உடனே எல்லாம் அப்படி இடத்தை மாத்திட்டிருக்க முடியாது. உங்க கைல முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் இருக்குது தெரியும்ல” என அவன் நீண்ட பட்டியலை வாசிக்க, ‘போதும்... போதும்... லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கு’ என்ற சலிப்பே அவளுக்குத் தோன்றியது.

“இன்னும் அந்த வேலையெல்லாம் முடிக்கணும்” எனக் கறாராகப் பேசினான் நிரஞ்சன்.

“தெரியும் சார்... சீக்கிரம் வேலையை எல்லாம் முடிக்கப் பார்க்கிறேன்” என அவள் சொல்ல, ‘சாரா?’ என அவளை முறைத்துப் பார்த்தான்.

அதைக் கண்டுகொள்ளாமல், “சென்னைல இடம் காலியாயிருக்குன்னு சொன்னாங்க. விசாரிச்சு வச்சிருக்கேன். இப்பவே விண்ணப்பிச்சு வைக்கிறேன். மாற்றல் வரும்போது வரட்டும். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு அடுத்த வாரம் ரெண்டு நாள் லீவ் வேணும்” என அவனை விடவும் அவள் கறாராகப் பேசினாள்.

‘எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டே வந்து பேசுகிறாள் இவள். இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என மனதுக்குள் சொல்லிக் கொண்டு, “பார்க்கிறேன்” என அவன் போனால் போகிறது எனச் சொல்ல, மதுமிதா வேறு வழியில்லாமல் மீண்டும் இருக்கைக்குச் சென்று தன் வேலையில் ஆழ்ந்தாள்.

பவித்ரா இன்னும் ஒரு வாரம் கழித்து வேலைக்கு வருவதாக இருந்தது. அதனால் உண்மையில் மதுமிதாவுக்கு மூச்சு விடக் கூட நேரமில்லை.

அடுத்த வாரம் தன் பெற்றோர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அதனால் அவள் கண்டிப்பாகச் சென்னைக்குப் போயாக வேண்டும். இல்லையென்றால் இங்கேயே இருந்து வேலையை முடித்திருப்பாள்.

வேலை மாற்றத்தைத் தடுப்பதற்கான சக்தி தன்னிடம் இருக்கிறது என இறுமாந்திருந்தான் நிரஞ்சன். அதனால் சற்று உற்சாகமாகவே திரிந்து கொண்டிருந்தான். ஆனால் மாலையில் அவளைப் பார்க்கவென்று வந்த நபரைப் பார்த்ததும் அவனின் நம்பிக்கை அனைத்தும் ஆட்டம் காண ஆரம்பித்தது.

அன்று மாலை, வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் மதுமிதாவிற்கு யாரோ விருந்தினர் வந்திருப்பதாக வரவேற்பிலிருந்து தகவல் வர, யாராக இருக்கும் என மதுமிதா ஊகித்தவாறே அங்கே சென்றாள்.

அங்கே அரவிந்த் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்த மதுமிதா, “அரவிந்த் வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க? ஃபோன் பண்ணறேன்னு சொன்னீங்களே” என அவள் அச்சரியத்துடன் வினவ,

“வேலை சீக்கிரம் முடிஞ்சது. எப்படியும் மீட் பண்ணறதாப் பேசி வச்சோமே. நேரத்துல வந்து சர்ப்பிரைஸ் பண்ணலாம்னனு நினைச்சேன். அர்ஜூன்கிட்ட ஏற்கனவே அட்ரெஸ் வாங்கியிருந்தேன்” என அரவிந்த் உற்சாகமாகப் பேசினான்.

அவனுக்கு ஹைதராபாத்தில் ஒரு முக்கிய வேலையிருக்க அங்கே வரப் போவதைப் பற்றிச் சென்ற வாரமே மதுமிதாவை அழைத்துப் பேசியிருந்தான் அரவிந்த்.

அன்று திருமண மண்டபத்தில் நடந்ததைப் பற்றி அவன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. நட்பு ரீதியில் அழைத்துப் பேசியவன் அவள் பத்திரமாக ஊர் சேர்ந்துவிட்டாளா எனத் தெரிந்து கொள்ளவே அழைத்ததாகக் கூறினான்.

அதன்பிறகு அவள் உடல்நிலைப் பற்றியும் வேலை பற்றியும் விசாரித்துவிட்டு அடுத்த வாரம் ஹைதராபாத்திற்கு வேலை விஷயமாக வரப் போவதைப் பற்றிச் சொன்னான்.

மதுமிதாவும் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல், வரும்போது தன்னைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தாள். ‘வந்தா ஃபோன் பண்ணுங்க அரவிந்த். நம்ம நேர்ல சந்திக்கலாம்’ என்றாள்.

ஏற்கனவே அரவிந்த்தை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என எண்ணியிருந்தாள். பின்னே அன்று திருமண மண்டபத்தில் ஏதோ நடுவிலேயே விட்டுவிட்டு வந்ததைப் போல் அவளுக்குத் தோன்றியது.

அன்று அவளது மனநிலையைப் பற்றி மட்டுமே யோசித்தவள் அரவிந்தின் மனநிலையைப் பற்றிச் சற்றும் யோசிக்க மறந்துவிட்டாள். தன்னை நிரஞ்சன் உதாசீனப்படுத்தும் போது எப்படி உணர்ந்தாளோ அரவிந்தும் தன் உதாசீனத்தால் அதைப் போலவே உணர்ந்திருப்பான் அல்லவா?

அதற்காகவாவது அவனை நேரில் சந்தித்துப் பேசி அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என எண்ணியிருந்தாள். அது மட்டுமல்லாது என்ன இருந்தாலும் அவன் அர்ஜூனின் நெருங்கிய நண்பன் ஆயிற்றே. அவனிடம் சுமூகமான நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அர்ஜூன் அடுத்த வாரம் வேலைக்குத் திரும்புகிறான். ‘ஹனிமூன்’ சென்றிருக்கிறான் என அரவிந்த் ஏற்கனவே அலைபேசியில் பேசுகையில் சொல்லியிருந்தான்.

“பத்து நிமிஷம் இருங்க வேலையை முடிச்சிட்டு வந்திடறேன். உங்களைக் காக்க வச்சதுக்கு ரொம்ப சாரி” என அரவிந்திடம் சொல்ல, “இந்தாங்க மது. இது உங்களுக்காக” எனப் பரிசுத்தாள் சுற்றிய ஒரு பரிசுப் பெட்டியை அவள் முன் நீட்டினான்.

“இது... எதுக்கு?” என அதை வாங்காமல் மதுமிதா தயங்க, “சும்மா வாங்கிக்கோங்க மது. ரொம்ப எல்லாம் ஒன்னும் வாங்கலை உங்களுக்குப் பிடிச்ச புக்ஸ் வாங்கினேன்” என அவன் சொன்னான்.

அதைக் கேட்டதும் முகம் மலர்ந்த மதுமிதா, “தேங்க்ஸ் அரவிந்த். இருங்க வந்துடறேன்” எனச் சொல்லிவிட்டு குடுகுடுவென்று அலுவலகத்துக்குள் ஓடினாள். அவசரமாக ஓடிச் சென்றவள் தன் இருக்கைக்குப் போவதற்காக வலது பக்கம் திரும்ப, இருந்த பரபரப்பில் எதிரில் வந்த ஆளைக் கவனிக்கவில்லை.

நேரே போய் ‘டமால்’ என்று அந்த ஆளின் மேல் மோதினாள். கையிலிருந்த பரிசுப் பெட்டிப் பொத்தென்று கீழே விழுந்தது. அவளை விழாமல் தடுத்து நிறுத்திப் பிடித்திருந்தான் நிரஞ்சன்.

மதுமிதாவுக்கு யாரோ விருந்தினர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டதும் யார் என்ற குறுகுறுப்பில் தான் நிரஞ்சன் பார்ப்பதற்கு அங்கிருந்து வெளியில் வந்தான்.

ஆனால் எதிர்பாராதவிதமாக மதுமிதா நேராக அவன் மேல் வந்து மோதவும் அவளை அணைத்துப் பிடித்துத் தாங்கியிருந்தான். ஏனோ சினிமாவில் வருவதைப் போல அவன் உள்ளம், ‘ஊ லலல்லா..’ என்று மெட்டுப் போட்டுப் போட்டுப் பாட ஆரம்பித்தது.

ஆனால் கீழே விழுந்து இருந்த பரிசு பொருளின் மேல் ஒட்டியிருந்த பெயரைப் பார்த்ததும் அவன் உள்ளத்தில் இருக்கும் பாட்டின் தாளம், ‘உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே’ எனத் தப்பிப் போனது.

சுதாரித்து விலகிக் கொண்ட மதுமிதா, “சாரி, நான் அவசரத்துல தெரியாம வந்து மோதிட்டேன்” என அவனிடம் தெரிவித்துவிட்டுக் கீழே கிடந்த பரிசுப் பெட்டியை எடுத்துக் கொண்டு தன் இருக்கையை நோக்கி அவசரமாகச் சென்றாள்.

சற்றுநேரம் அங்கேயே நின்று மதுமிதாவைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். ஆனால் பத்து நிமிடத்திலேயே மீண்டும் மதுமிதா தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பவும் நிரஞ்சனுக்கு மண்டையில் ஏதோ அபாய மணி ஒலிக்க ஆரம்பித்தது.

அவளைப் பின்பற்றியவாறே அவனும் வெளியில் வர அங்கே ஓர் இளைஞன் நின்றிருப்பதைக் கண்டான் நிரஞ்சன்.

அந்த இளைஞனை எப்போதோ பார்த்தது போலிருந்தது அவனுக்கு. சற்று அருகில் சென்று கூர்ந்து கவனிக்கவும் சட்டென்று அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. இவன் தானே அன்று மதுமிதாவிடம் தன் விருப்பத்தைச் சொன்னான்?

ஏனோ அவனை அங்கே மதுமிதாவுடன் பார்க்கச் சற்றும் பிடிக்கவில்லை. அரவிந்திடம் சிரித்துப் பேசியவாறே கட்டடத்தை விட்டு வெளியேறினாள் மதுமிதா. அவர்களைப் பின் தொடர்ந்து செல்வதா என நிரஞ்சன் இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்துக் கொண்டிருந்தான்.

ஆபத்துக்குப் பாவமில்லை என அவனே ஒரு சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டு அவர்கள் இருவரையும் தொடர்ந்தான். யாருக்கு ஆபத்து என்று கேட்டால் கண்டிப்பாக அது சுயநலமான செயல் என்று பதில் கிடைத்திருக்கும். எனினும் அவன் அதைக் கேட்கவில்லை.

அவர்கள் இருவரும் நேராக அருகிலிருந்த ஓர் உணவகத்திற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு அருகிலேயே அமருமாறு ஓர் இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான் நிரஞ்சன். ஐயமின்றி தன் முகத்தை மறைத்தவாறே!

மதுமிதா மெதுவாகப் பேசியதால் அவர்கள் பேசியது எதுவும் அவன் காதுகளில் விழவில்லை இருந்தும் அவன் அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சிக்கவில்லை. ஒரு மணி நேரம் கடந்த பின்னரே இருவரும் அங்கிருந்து எழுந்தனர்.

“தாங்க்ஸ் அரவிந்த் என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு” என மதுமிதா சொல்வது நிரஞ்சனின் காதுகளில் விழ, ‘இவன் ஏன் அவளைப் புரிந்து கொள்ள வேண்டும்?’ என அவன் எரிச்சல் கொண்டான்.

ஆனால் அவனால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. மதுமிதாவும் அரவிந்தும் கிளம்பிச் சென்ற பின்னரும் வெகுநேரமாய் அங்கேயே அமர்ந்திருந்தான் நிரஞ்சன்.

அன்று மாலையில் வீட்டுக்குச் சென்றவனுக்கு எதிலும் கவனம் செல்லவில்லை. பிடித்த வைத்த பிள்ளையாரைப் போல் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான். கௌரி கூடத் தன் மகனுக்கு என்னவாகிவிட்டது என யோசித்தார். ஆம்! அவன் இப்போது கௌரி மற்றும் பவித்ரா இருந்த வீட்டிலேயே தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான்.

நேற்று நந்தகுமார் ஊருக்கு சென்ற பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்த நிரஞ்சன் நேராகத் தன் தாயிடம் சென்று அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். அதுவரையில் வீம்பையும் வீரத்தையும் கையில் பிடித்துக் கொண்டிருந்தவர் மகனின் இந்தச் செயலில் மனம் கரைந்தே போனார்.

“ஏம்மா நான் உங்க பையன் தானே? தப்பு செஞ்சா என்னைத் திட்டுங்க, இல்லை, அடிங்க” என அவர் கையைப் பற்றி அவனே அவன் கன்னத்தில் அறைந்தான். கௌரி மகனின் செயலை ஊகித்துத் தன் கையைப் பின்னால் இழுக்க முயன்றார். அதனால் அவனுக்குப் பலமாக அடி எதுவும் படவில்லை.

“என்னப்பா இது?” என அவர் சங்கடத்துடன் மகனைப் பார்த்தார். அடித்துத் திருத்தும் வயதாக இருந்தால் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் சிறுவயதில் கூட அவனின் குணம் அப்படி ஒன்றும் மோசமானதாக இல்லையே.

அவரைக் கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தவன், “அதை விட்டுட்டு இப்படிப் பேசாம இருந்தீங்களே? ஒரேடியா என்னை ஒதுக்கி வச்சிட்டீங்க இல்ல? எப்படிம்மா மனசு வந்தது? உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா, சொல்லுங்க?” எனத் துயரத்தில் வார்த்தைகளை முக்கியெடுத்துக் கொட்டினான்.

இதற்குப் பின்னரும் கௌரியால் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? லேசாக ஊசலாடிக் கொண்டிருந்த மனக்குறையும் ஒரேடியாகப் பறந்து போனது. அதன்பின்னர் அவனை அங்கேயே வந்து தங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டார் கௌரி.

பவித்ரா கூட, “பரவாயில்லையே... இந்த எரிமலையிலேயும் பனிச்சாரல் அடிக்கிறதே... என்னே அதிசயம்!” எனக் கேலி செய்தாள். அவளிடமும் முழுமனதாய் மன்னிப்பை வேண்டிய நிரஞ்சன் நேற்றே தன் இருப்பிடத்தை இங்கே மாற்றிக் கொண்டான்.

ஒரு வருடமாகத் தவம் செய்து காத்திருந்து கிடைத்த வரமல்லவா? அதனாலேயே இன்று காலையில் அத்தனை உற்சாகமாக வலம் வந்தான்.

அலுவலகத்திலிருந்து திரும்பிய மகன் ஏன் இப்படி அமர்ந்திருக்கிறான் எனச் சற்றுநேரம் மகனின் செய்கையைப் பார்த்த கௌரி அவனுக்கருகில் சென்று, “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு டல்லா இருக்க?” எனக் கேட்க,

“ஒண்ணுமில்லம்மா ஆபிஸ்ல வேலை ரொம்ப அதிகம்” என மழுப்பலாகப் பதிலுரைத்தான்.

“இந்தாப்பா இந்தக் காப்பியைக் குடி” என அவன் முன்னால் தான் எடுத்து வந்த காப்பியை நீட்டினார். அதை வாங்கிப் பருக ஆரம்பித்த நிரஞ்சன், “அம்மா, நம்ம வீட்டுக்கே திரும்பப் போயிடலாமா?” எனக் கேட்டான்.

முதலில் அவனுக்கு இப்படித் தங்கள் ஊரைவிட்டு வேறு இடத்திற்குப் புலம் பெயர்ந்ததே மனதுக்குப் பிடிக்கவில்லை. நந்தகுமாரும் இப்படியே உணர்ந்திருப்பானே என மனம் வேதனையில் துடித்தது. அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.

இந்த ஊருக்குப் பவித்ராவுக்காக வந்தான். இன்னுமே அவனது நிறுவனம் மற்றும் அவர்களது வீடு, பூர்வீகச் சொத்துக்கள் என அனைத்துமே சென்னையில் உள்ளன.

நிறுவனத்தையும் இங்கிருந்து பார்த்துக் கொள்ளச் சிரமமாக இருந்தது. இப்போதைக்கு நம்பத்தக்க ஓர் ஆளை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் எத்தனை நாட்களுக்கு அது நிலையானதாக இருக்கும்?

அடுத்ததாக அவனால் மதுமிதாவை எத்தனை நாளைக்கு இங்கே ஹைதராபாத்திலேயே பிடித்து வைத்திருக்க முடியும். அவளுக்குச் சென்னைக்கு மாற்றல் கிடைத்தால் உடனே கிளம்பிவிடுவாள்.

அந்த எண்ணம் உதித்தவுடனேயே அவன் வாழ்க்கை மொத்தத்தையும் யாரோ பறித்துக் கொண்டு போனதைப் போன்றதொரு உணர்வு தோன்றியது. ஆகையினால் தான் சொந்த ஊருக்கே சென்றுவிடலாமா என அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை நிரஞ்சன். நம்ம பவிகிட்ட பேசிப் பார்க்கிறேன்” என மகனுக்குச் சமாதானமாகப் பதில் தந்தார்.

“அம்மா...” என ஆரம்பித்துச் சற்றுத் தயங்கியவன், “அப்பா வேலை செஞ்ச பேங்க்ல பெரிய பிரச்சனை ஒன்னு போயிட்டிருந்தது பத்தி அப்பா உங்ககிட்ட சொன்னாரா?” எனக் கேட்க, “இல்லையே ஏன்?” என நெற்றியைச் சுருக்கினார் கௌரி.

நிரஞ்சனின் தந்தை தெரிந்த நண்பர்கள் என்று பலருக்கும் கடன் கொடுத்து உதவியதாகவும் அவர்கள் அனைவரும் வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் வங்கியில் உள்ள மூன்று பேர் புகார் தந்தனர்.

கூடுதலாக அவன் தந்தை வங்கிச் சொத்தைச் சொந்த லாபத்துக்கு உபயோகித்துவிட்டதாகவும் அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் சொல்லியிருந்தனர். அதற்கேற்ப ஆதாரங்கள் சேகரித்துச் சமர்ப்பித்திருந்தனர்.

அவன் தந்தை சென்ற வருடம் அந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். வீட்டில் சொல்லி அவர்களையும் ஏன் வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவர் வீட்டில் யாரிடமும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவில்லை.

அவர் மேல் எந்தத் தவறுமில்லை என நிரூபிக்கவே மெனக்கெட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நிரஞ்சனும் அப்படி அடாவடியாக நடந்து கொண்டிருக்கிறான்.

தன் மேல் எந்தக் குற்றமுமில்லை என வங்கியில் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் சமர்பித்தார் அவர். ஆனால் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருக்கும் அவரின் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்திவிட்டார்களே என மனம் நொந்து போனார் அவர்.

ஏனோ அவருக்கு லேசாக நெஞ்சு வலிப்பதைப் போலிருக்க, அலுவலகத்தில் இருக்கும் வேறொரு நண்பரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். பரிசோதித்த மருத்துவர்கள் பெரிதாக ஒன்றுமில்லை, வேண்டுமென்றால் ஆஞ்ஜியோ செய்து பார்க்கலாம் எனப் பரிந்துரைத்தனர்.

அவர் அங்கே மருத்துவமனையில் இருந்த சமயத்தில் தான் நந்தகுமாரை மகன் அடித்துவிட்டான் என்ற தகவல் வந்திருக்கிறது. தொடர்ந்து மகளுக்கு விபத்து என அனைத்தும் சேரவும் அவர் இதயத்தால் அதற்குமேல் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்கள் முடிந்த வரையில் போராடினார்கள் ஆனால் மொத்தமாக அனைத்தும் ஒன்று சேர்ந்து கொள்ள, அவரின் இதயத்தால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தன் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

இதையெல்லாம் அவன் தந்தை இறந்தபின்னர் விசாரித்தும் அவன் தந்தையின் நண்பர் மூலமும் நிரஞ்சன் தெரிந்து கொண்டான். நேர்மையாக இருக்கும் தன் தந்தையின் மேலுள்ள வன்மத்தால் அபாண்டமாகப் பழி சுமத்திய வங்கி ஊழியர்கள் மேல் இவன் புகார் தந்தான்.

அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருத்தருக்கு அவன் தந்தை வங்கிக் கடன் தராமல் நிராகரித்துவிட்டார் என்ற வன்மத்தில் பொய் ஆதாரங்கள் ஜோடித்து அவர்மேல் புகார் அளித்தனர் அந்த மூன்று பேரும். ஆனால் அவர்களுக்குத் தெரியாதது நிரஞ்சன் போல் ஒரு மகன் அவருக்கு இருக்கிறான் என்று.

நிரஞ்சனின் உந்துதலால் வங்கியும் காவல்துறையும் தீர விசாரித்து உண்மையைக் கண்டுபிடித்தன. அத்தோடு அவர்கள மேல் அவதூறு வழக்குப் போட்டு, அவர்களைப் பணியிலிருந்து நீக்கினார்கள்.

என்ன செய்து என்ன பயன்? அவன் தந்தையின் உயிரை மீட்க முடியாதே. பணம் பணம் என்று தலைக்கனத்தில் ஆடிக் கொண்டிருந்தானே. அந்தப் பணமே அவன் தந்தையின உயிருக்கு எமனாக வந்துவிட்டது.

“இதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ ஏன் அப்போவே சொல்லலை?” எனக் கௌரி அவனருகில் அமர, “நீங்க என்கிட்டே பேசவேயில்லையே. நான் எப்படிச் சொல்லறது?” என்றான்.

அவன் சொன்னதில் கௌரி அழுதுவிட்டார். மகன் மேல் இருந்த கோபம் கண்ணை மறைத்துவிட்டது. புத்தியை மழுங்கடித்துவிட்டது.

“என்னை மன்னிச்சிடுப்பா... நீயும் எவ்வளவு வேதனையிலே இருந்திருப்ப இல்லையா?” என மகனின் முதுகைத் தடவிக் கொடுத்தார்.

எதுவும் பேசாமல் இருவரும் சற்றுநேரம் அமைதியாக இருக்க, “போகலாமா அம்மா..” என்றவாறே குளித்துக் கிளம்பி புத்துணர்ச்சியுடன் புதிதாய்ப் பிறந்ததைப் போல் அங்கே வந்தாள் பவித்ரா.

“பவி வீட்டுக்குள்ளேயே இருக்கப் போரடிக்குதுன்னு சொன்னா. நானும் அவளும் பக்கத்துல இருக்குற கோயிலுக்குப் போய்ட்டு வர்றோம்” எனக் கௌரி சொல்ல, “நானும் வர்றேன்மா” என இருக்கையில் இருந்து எழ நினைத்தான் நிரஞ்சன்.

“பக்கத்துல இருக்கிற எப்பவும் போற கோயிலுக்குப் போக எங்களுக்கு என்ன சிரமம்? நாங்க மட்டும் போயிட்டுச் சீக்கிரம் வந்துடுறோம். நீ ரொம்ப அசதியா இருக்கற. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. வந்ததும் சாப்பிடலாம்” என மறுத்துவிட்டு பவித்ராவை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள கோவிலுக்குக் கிளம்பினார் கௌரி.

அவர்கள் சென்றதும் சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் போய்க் குளித்துவிட்டு வந்தான். மனப்புழுக்கம் சற்றுக் குறைந்ததைப் போலிருந்தது.

சிறிது நேரத்திலேயே யாரோ வாசல்மணியை அடித்தனர். ‘அதற்குள் வீடு திரும்பிவிட்டார்களா?’ என யோசித்தவாறே கதவைத் திறக்க, சத்தியமாக அவன் மதுமிதாவை அங்கே எதிர்பார்க்கவில்லை.

பவித்ரா வீட்டில் இல்லை எனச் சொல்ல வாய் திறந்தவன், அதை அப்படியே முழுங்கி கொண்டான். பின்னே அவள் வீட்டில் இல்லையென்றால் இவள் பாட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிடுவாளே. தனியாகப் பேச அருமையான ஒரு சந்தர்ப்பம் கிட்டியிருக்கிறது அவனுக்கு.

அதை அவனே ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் என எண்ணி, மதுமிதாவிற்கு வீட்டினுள் வர வழிவிட்டான்.

அவள் உள்ளே நுழைந்ததுமே கதவைத் தாளிட்டவன், அதற்கு மேலே அவன் மனப் பொறுமலை மறைத்துக் கொண்டிருக்கவில்லை. “யாரோ கூட வெளில போன போல” என அவளைக் கூர்ந்து பார்க்க, “ஆமாம்... ஃப்ரெண்ட் வந்திருந்தார்” என்றாள்.

அவனுக்கு வந்ததே பார் கோபம். பின்னே அர்ஜூன் திருமணத்தன்றே முதல் முதலில் அரவிந்தைச் சந்தித்திருந்தாள். இந்த ஒன்றிரண்டு வாரங்களில் நண்பனாகி விட்டானா?

அவளைக் கைபற்றி இழுத்து சுவரோடு சாய்த்து அவள் கண்களைப் பார்த்து, “இந்த ஃப்ரெண்ட் முன்னாடி உன் மனசுல இருக்கறதை என்கிட்ட சொன்னது ஞாபகமிருக்கா?” என அவன் கேட்க , திகைத்துப் போனவளாய் அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் “நிரஞ்சன் என்ன இது? என்னை விடுங்க? எதுக்கு இப்படி நடந்துக்குறீங்க?” எனப் பதட்டமானாள்.

பின்னே சுவரின் இரண்டு பக்கமும் கையைப் பதித்து, அவள் தப்பிக்க இயலாதவாறு அரண் அமைத்துவிட்டானே. அதுவும் இவ்வளவு அருகில் நின்று கொண்டிருந்தால் அவளின் இதயம் தாறுமாறாகத் துடிக்காதா?

வேறு யாராவது அந்த இடத்தில் இருந்திருந்தால் அனிச்சைசெயலாகப் போராடியிருப்பாள். அணை போட்டவன் அவள் உள்ளத்தில் அரண்மனையைக் கட்டியவன் அல்லவா? எதிர்வினை சற்று மந்தமாகவே இருந்தது.

“உனக்கு எவ்வளவு மாசமா என்னைத் தெரியும்? ஆனா இப்போவெல்லாம் என்கிட்ட பேசுறதுக்குக் கூட யோசிக்கிற. முகத்தையும் பார்க்கறதில்ல. அப்படி நான் என்ன பண்ணிட்டேன்? இதே ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஃப்ரெண்டானவன் வந்து கூப்பிட்டா அவன் பின்னாடியே போற?” எனப் பொறாமையில் தோன்றிய தன் மனக்குமுறல்களைச் சற்றுக் கோபமாகவே வெளியிட்டான் நிரஞ்சன்.

காதலைச் சொன்னவன் என்று கூடச் சொல்ல நிரஞ்சனுக்குப் பிடித்தமில்லை.

“எப்போ பார்த்து எவ்வளவு நாள் பழகினா என்ன? அந்த உறவு இல்லாமல் போயிடுமா, இல்லை, அது பொய்யாகிடுமா?” என அவளும் பதிலுக்குப் பதில் வாதாடினாள்.

“அப்போ என்னைக் காதலிக்கறதா சொன்னது மட்டும் பொய்யாகிடுமா? பேசவே மாட்டேங்கிற” என அவளிடம் முறையிட்டான்.

“பாங்க்ல பணம் போட போனா, அவங்க வேண்டாம்னு சொன்னா, அந்தப் பணத்தை அப்படியே வச்சு சுத்திட்டா இருப்பீங்க?” எனக் குரலில் வரவழைத்துக் கொண்ட கடினத்துடன் வினவினாள்.

“ஓஹ்... அதுக்காக வேற ஒருத்தரை சும்மா நம்பி அந்தப் பணத்தை டக்குன்னு எடுத்துக் கொடுத்துடுவியா?” என அவன் மீண்டும் வாதாட, மதுமிதாவால் எதுவும் பேச முடியவில்லை.

கண்டிப்பாக இப்போதைக்கு அவளால் காதல், கல்யாணம் என்று யோசிக்கவே முடியாது. அன்று கௌரியிடம் வீம்புக்காக மட்டுமே அப்படிச் சொன்னாள்.

அவள் காதலை வெளிப்படுத்துகையில் நிரஞ்சன் பதில் சொல்லவில்லை என்ற காரணத்துக்காகவோ, இல்லை, இது நடக்காது என்று நினைத்ததாலோ அரவிந்த்துக்குச் சம்மதம் சொல்லிவிடலாம் என்று அவள் ஒருபோதும் யோசித்ததில்லை.

அது அவள் காதலுக்கும் சரி, அரவிந்த் தன் மேல் வைத்திருக்கும் அன்புக்கும் சரி, நியாயம் செய்வதாகாது.

“பேசு மது? ஏன் அமைதியா இருக்க? ஆமாம் முதல்ல இதுக்குப் பதில் சொல்லு. என் மேலே இருக்கிற காதலும் பணமும் ஒன்னா?” என எரிச்சலுற்றான்.

“இல்லவே இல்லை. பணத்துக்கு இருக்கிற மதிப்பை யாரும் காதலுக்குக் கொடுக்கிறது இல்லை” எனப் பட்டென்று சொன்னவள், அவரசப்பட்டுப் பேசிவிட்டோமே என உணர்ந்தாள். ஏற்கனவே மனம் நொந்திருப்பவனிடம் சொல்லக் கூடிய வார்த்தைகள் அல்ல இவை.

“ உங்களைக் குத்திக் காட்ட நினைக்கலை. பொதுவாச் சொன்னேன்” என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“மது” எனக் குரலில் ஏக்கத்தை டன் கணக்கில் வரவழைத்துக் கொண்டு அழைத்தவன், “என் மனசைக் கலைச்சுட்டு என்னைக் கைவிடப் பார்க்கிறியா?” என்றான். ‘என்ன?’ என அவனைத் திகைத்த விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தாள் மதுமிதா.

“ஆசையைக் காட்டி மோசம் பண்ணாத மது. என்னால தாங்க முடியாது... பிளீஸ்...” என அவள் விழிகளுள் ஊடுருவிச் சொன்னவன், தன் கட்டுப்பாட்டை மீறி அவள் இதழ்களில் தன் இதழைக் கோர்த்தான்.

தொடரும்...
 
Last edited:

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
172
பணத்தின் அளவு தெரிந்தவன்
பாசத்தை மதிக்க புரிந்தவன்
பாவையின் மனதை
படிக்க தவறியவன்
பித்து பிடித்த நிலையில்
பார்க்க வந்த மதுவிடம்
பதட்டமும் பரிதவிப்பும் போட்டி போட
பட்டென்று முத்திரை பதிக்க.....
பாவம் பெண்ணவள்....
 
Top Bottom