Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 13
“ஐயோ நந்தா” என அவன் அன்னை அவனை நோக்கிக் குனிய, நிரஞ்சனும் ஓடிச் சென்று நண்பனைத் தூக்கினான். கண்கள் சொருகக் கீழே விழுந்திருந்த நந்தகுமாரைப் பார்த்ததும் அவனுக்குத் திக்கென்று இருந்தது. அவன் மனம் பதைபதைத்துப் போனது.
பேசிக் கொண்டிருக்கையில் கையை ஏன் நீட்டினான் அந்தப் பைத்தியக்காரன்? அதுவும் இவ்வளவு கொடூரமாகத் தாக்கும் அளவுக்கு? இந்த நிலைக்குக் காரணமான அந்த அடியாளை துவம்சம் செய்ய வேண்டும் என்ற வெறி் கிளர்ந்தது நிரஞ்சனுக்கு.
ஆனால் அதையும் விட நந்தகுமாரின் உயிர் முக்கியமல்லவா? அதனால் அவனைத் தூக்கிக் கொண்டவன், “ஆன்ட்டி வாங்க ஹாஸ்பிடல் போகலாம். அப்படியே துணி ஏதாவது வச்சு தலையில அழுத்திப் பிடிங்க” என விறுவிறுவென்று தன் காரை நோக்கிச் சென்றான்.
நந்தகுமாரின் அன்னைக்கும் நிரஞ்சனின் உதவியை மறுத்துக் கொண்டிருக்க அவகாசமில்லை. அவசரம் உணர்ந்து கைபேசியை மட்டும் எடுத்துக் கொண்டு பதட்டத்துடன் காரில் ஏறி மகனின் தலையை மடியில் சாய்த்து வைத்துத் தன் சேலை முந்தானையாலேயே அழுத்திப் பிடித்துக் கொண்டார் அவர்.
விருட்டென்று காரைக் கிளப்பி நேராக மருத்துவமனையை நோக்கிச் செலுத்தினான் நிரஞ்சன். அவன் அஞ்சனாவை அறவே மறந்து போனான். அவளை அங்கேயே விட்டுவிட்டுப் போனதும் இப்படி ஒரு பஞ்சப் பரதேசிக்காகத் தன்னை உதாசீனப்படுத்திவிட்டானா இவன் என அஞ்சனா வெகுண்டாள்.
நிரஞ்சனை அழைத்து, உடனே வந்து அவளை அழைத்துப் போகுமாறு நெஞ்சில் ஈரமற்று பேசினாள். அவளின் அடாவடித்தனத்தால் எரிச்சல் கொண்ட நிரஞ்சன் அழைப்பைத் துண்டித்தான். அது அவளின் ஆணவத்தை இன்னுமே கிளறிவிட்டது.
மீண்டும் அவனை அழைத்து, “இப்போ நீங்க வரலைன்னா இதோட நம்ம உறவு முடிஞ்சது. உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை, அந்தப் பிச்சைக்காரனா என முடிவு பண்ணிக்கோங்க” என மனிதாபிமானமற்று பேசினாள்.
நிரஞ்சனுக்குத் தன் மேலே ஒரு மயக்கம் இருக்கிறது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். எப்படியும் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டான் என்றும் நம்பினாள். அந்தக் கர்வத்தால் அப்படிப் பேசினாள்.
“ஏய்.. அறிவில்லையா? என்ன நேரத்துல என்ன பேசிட்டு இருக்க? அப்படிப் போறதா இருந்தா போடி. செய்யறதையும் செஞ்சுட்டு, பிளாக்மெயில் வேற பண்ணறியா? உன்னால தான் இந்தப் பிரச்சனையே இத்தனை தூரம் வந்தது” எனக் கத்திவிட்டு அழைப்பை வைத்துவிட்டான் நிரஞ்சன்.
பின்னே நண்பனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்ற இங்கிதம் கூட அவளுக்கு இல்லையா? ஓர் உயிரை இப்படித் துச்சமென எப்படி அவளால் நினைக்க முடிந்தது.
அந்த இடத்தில் நந்தகுமார் என்றில்லை. வேறு யாராக இருந்தாலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அவன் கண்டிப்பாக உதவுவான். ‘இவளுக்குக் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் என எதுவுமில்லையா என்ன?’ என முதல் முறையாக அஞ்சனாவின் குணத்தைப் பற்றி அசைபோட்டான்.
அப்படியென்றால் வாரா வாரம் அநாதை ஆசிரமத்துக்குச் சென்று சேவை புரிந்து தானம் செய்வதெல்லாம் வெறும் நடிப்பா? அந்தக் குணம் கொண்டவர்கள் அடிப்படையில் கருணையுள்ளம் கொண்டவர்களாக இருப்பார்களே.
அதற்குமேல் அவளைப் பற்றிச் சிந்திக்க அவனுக்கு அவகாசமில்லை. நந்தகுமாரின் நிலைக்கு அவன் காரணமாகிவிட்டான் என்பதை அவனால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
‘நீயாக என் காலடியில் வந்து விழுவாய். அப்போது வைத்துக் கொள்கிறேன் உன்னை’ என அஞ்சனா சூளுரைத்துக் கொண்டு நந்தகுமாரின் வீட்டிலிருந்து கிளம்பினாள். கிளம்பும் முன்னர், அடியாளை வைத்து வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் துவம்சம் செய்துவிட்டே கிளம்பினாள்.
அதற்குள் நந்தகுமாரின் அன்னை தன் கணவருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவர் உடனே மருத்துவமனைக்கு வருவதாகச் சொன்னார். நிரஞ்சனும் தனக்குத் தெரிந்த மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு பேசி அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கச் சொன்னான்.
அதே சமயத்தில் நந்தகுமாரின் எண்ணுக்குக் கௌரியிடமிருந்து அழைப்பு வந்தது. மகனை அழைத்தால் அவன் கண்டிப்பாக அழைப்பை ஏற்கமாட்டான் என்று தெரியும். கோபத்தில் நந்தகுமாரின் வீட்டுக்குச் சென்றவன் என்ன சொன்னானோ, செய்தானோ என அவருக்குத் தெரிய வேண்டியிருந்தது.
சத்தம் கேட்டதும், மகனின் சட்டைப் பையிலிருந்த கைபேசியை எடுத்து அழைப்பை ஏற்ற நந்தகுமாரின் அன்னை ஓவென்று கதற ஆரம்பித்தார். விஷயமறிந்ததும் கௌரிக்கு மயக்கம் வராத குறையே.
தன் மகனா இப்படியெல்லாம் நடந்து கொண்டான் என அதிர்ச்சியில் உறைந்து போனார். அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவுக்குத் தலையெல்லாம் கிறுகிறுத்துப் போனது.
எந்தத் தவறும் செய்யாத நந்தகுமாருக்குத் தன்னால் இந்த நிலை என எதைப் பற்றியும் யோசிக்காமல் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவளுக்குக் கார் இன்னுமே சரியாக ஓட்டத் தெரியாது.
இருந்த பதட்டத்திலும், சரியாக ஓட்டத் தெரியாததாலும் வேகமாகச் சென்றவள் காரைக் கொண்டு போய் மின்சாரக் கம்பம் ஒன்றில் மோதி விபத்தில் சிக்கிக் கொண்டாள்.
‘பதறிய காரியம் சிதறும்’ என்பதற்கு நிரஞ்சன் மிகச் சிறந்த உதாரணம் என்றால் அவனுக்குத் தங்கையாகப் பிறந்தவள் மட்டும் சளைத்தவளாக இருப்பாளா என்ன?
அதற்குள் நிரஞ்சன் மருத்துவமனைக்குச் செல்ல, நந்தகுமாருக்குச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிகிச்சை ஆரம்பித்த பின்னரே தொய்ந்து போய் இருக்கையில் அமர்ந்துவிட்டான். அதுவரையில் பிடித்து வைத்திருந்த தைரியம் உதிர ஆரம்பித்தது. உடலெல்லாம் நடுக்கம் கொண்டது.
‘கடவுளே நந்தாவுக்கு எதுவும் ஆகக் கூடாது. தயவு செஞ்சு அவனை உயிரோட திருப்பிக் கொடுத்திடு’ என மனமருக வேண்டியவாறே அங்கிருந்து எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.
இப்படியெல்லாம் நடக்கும் என அவன் எந்தக் கனவிலும் நினைக்கவில்லை. அதற்குள் நந்தகுமாரின் தந்தையும் மருத்துவமனைக்கு வர, அவர் நேராக நிரஞ்சனின் அருகில் வந்து அவன் சட்டையைப் பற்றிக் கன்னத்தில் ஓங்கி அறைந்து தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.
“நீயெல்லாம் மனுசனா? ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட்னு உன் மேலே உயிரையே வச்சிருந்தானே. அவனைப் போய் இப்படிப் பண்ணிட்டியே” என ஆத்திரம் கலந்த கண்ணீருடன் சீறினார்.
அதே சமயத்தில் அவன் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. பவித்ராவுக்கு நடந்த விபத்து பற்றிக் கௌரி சொல்ல, நெஞ்செல்லாம் வலியில் ஓலமிட அவளை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்து ஓடினான் நிரஞ்சன்.
வேதனையும் துக்கமும் நெஞ்சில் நிரம்பி வழிய மருத்துவமனைக்குச் சென்றான். பவித்ராவுக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர் மருத்துவர்கள். அவளுக்கு உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். நிறைய இரத்தம் வெளியேறிவிட்டதால் அவளுக்கு இரத்தமேற்ற வேண்டும் என்றனர்.
நிரஞ்சனின் இரத்தமும் அவள் இரத்த வகையும் ஒன்றே என்பதால் அவன் தங்கைக்கு இரத்தம் கொடுத்தான். அயர்விலும், மன அழுத்தத்திலும் அவன் உடல் மொத்தமும் கட்டுப்பாட்டை இழந்து நடுங்க ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் மகளைப் பார்க்க வந்த நிரஞ்சனின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட, அவன் கண் முன்னாலேயே சரிந்து தடாலென்று கீழே விழுந்தார்.
அவரையும் அதே மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையளித்தனர். சில மணித் துளிகளிலேயே சிகிச்சை பலனளிக்காமல் அவரின் உயிர் பிரிய, நிரஞ்சன் முற்றிலும் நிலைகுலைந்து போனான்.
பணம் முக்கியம், பணம் அனைத்தையும் தந்துவிடும் என்றெண்ணி இறுமாந்திருந்தவனுக்குச் சம்மட்டியாய் ஒவ்வொன்றும் ஓங்கி ஓங்கி நடு மண்டையில் நச்சென்று அடித்துத் தாக்கியது. முதல் அடியை விட, அதற்கடுத்து வந்து விழுந்த அடி மேலும் ஆழமாய் இறங்கியது.
அவனின் வீண் பிடிவாதத்தால், முரட்டுக் குணத்தால், அவசரக்குடுக்கைத் தனத்தால் என்னவெல்லாம் நடந்துவிட்டது. நண்பன் சுயநினைவில்லாமல் கிடக்கிறான். தங்கை கையை முறித்துக் கொண்டு மருத்துவமனையில் இருக்கிறாள். தந்தையோ உயிரற்றுச் சடலமாகிவிட்டார்.
அன்று பவித்ராவின் விபத்து பற்றிப் பேசியது தான் கௌரி அவனிடம் கடைசியாகப் பேசியது. தந்தையின் இறுதி சடங்கின் பொழுது கூட கௌரி மகனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.
துக்கத்தை விழுங்க முடியாமல் இரவில், இருட்டின் மடியில் வேதனையில் உழன்றான் நிரஞ்சன். ஒரு வாரம் கடந்த பின்னரும் நந்தகுமாருக்கு நினைவு திரும்பவே இல்லை. மூளையில் இரத்தக் கசிவு இருப்பதால் அவனைக் கோமாவிலேயே வைத்திருந்தனர் மருத்துவர்கள்.
இந்த ஒரு வாரத்திற்குள் பவித்ராவுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்து, ஓரளவுக்குக் கை குணமாகிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவள் வேலையில் சேர்வதற்கு ஒரு நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்திருந்தது.
அதற்குள் கையைச் சரி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பவித்ராவுக்குப் பிறக்க, மருத்துவர்கள் பரிந்துரைத்த அனைத்தையும் மனமாரச் செய்தாள். மருத்துவர்கள் அவள் பூரணமாகக் குணமாகிவிட்டாள் எனச் சான்று தர, வேலைக்குச் செல்லத் தயாரானாள்.
நந்தகுமார் நன்றாக இருக்கிறான் என ஒரே ஒருமுறை அவனைக் கண்ணால் பாரத்து உறுதி செய்துவிட்டால் போதும். அதன்பிறகு அவனைத் தொல்லை செய்யமாட்டாள்.
ஆகவே அவனைப் பார்க்க மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்றாள் பவித்ரா. ஆனால் அங்கே அவன் அன்னையும் தமக்கையும் மருத்துவமனை வாயிலிலேயே அவளைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.
“போதும்மா நீயும், உன் அண்ணனும் செஞ்சது. எங்களை நிம்மதியா இருக்க விடுங்க. அப்படி உங்களுக்கு என்ன செஞ்சுட்டோம்னு இப்படி வன்மத்தைக் கக்கறீங்க” என அவர் கையெடுத்துக் கும்பிட, தடாலென்று அவர் பாதம் பணிந்து , “என்னை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி. எல்லாமே என் தப்பு தான். இனி உங்க கண்ணுலேயே படலை” எனக் கண்களில் நீர் மல்க இறைஞ்சினாள் பவித்ரா.
அவரும் நந்தகுமாரின் தமக்கையும் சில கணங்கள் தடுமாறி நின்றுவிட்டார்கள். வெறும் வாய் வார்த்தைகள் அவர் மகனை மீட்டுக் கொடுக்காது என்றாலும் பவித்ராவும் தன் மகனுக்காக இத்தனை வேதனைப்படுகிறாளே என நினைத்தார்.
அவர் மேற்கொண்டு எதுவும் சொல்லும் முன்னர் அங்கிருந்து எழுந்த பவித்ரா அதற்குமேல் ஒரு கணம் கூட நிற்கவில்லை. பயங்கரக் கேவலுடன் ஓடிவிட்டாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நிரஞ்சனுக்கு நெஞ்சம் வலியில் பிசைந்தது.
மேலும் சில வாரங்கள் செல்ல, நந்தகுமார் அந்த ஊரில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. யாருக்கும் சொல்லாமல் அவர்கள் குடும்பம் ஊரைவிட்டே கிளம்பிவிட்டது. பின்னே மகன் நினைவில்லாமல் இருக்கிறான். அவர்கள் வீட்டையும் துவம்சம் செய்தாகிவிட்டது.
அதனால் வீட்டை துரிதமாகச் சுத்தப்படுத்தி வந்த விலைக்கு விற்றுவிட்டு அங்கிருந்து புலம் பெயர்ந்துவிட்டனர்.
நிரஞ்சன் நந்தகுமாரிடம் சொன்னது தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக அவனால் மகிழ்ந்திருக்க முடியவில்லை. மருத்துவமனையில் இல்லையென்றதும் நந்தகுமாரின் வீட்டுக்குச் சென்றான்.
அங்கே அக்கம் பக்கம் விசாரிக்க, “என்ன பிரச்சனைன்னு தெரியலை... நந்தகுமாரை அடிச்சு, வீட்ல இருந்த பொருட்கள் ஒன்னு விடாம உடைச்சுட்டாங்க. ரொம்ப நல்ல மனுசங்க. யாருக்கு என்ன கோபமோ இவங்க மேலே இப்படி அநியாயமா நடந்துகிட்டாங்க” என அவர்கள் ஆதங்கப்பட்டுப் பேசினர்.
அதைக் கேட்ட பின்னரே அஞ்சனாவின் கைங்கர்யம் பற்றி அறிந்து கொண்டான் நிரஞ்சன். ஆனால் நந்தகுமாரின் குடும்பம் எங்கே சென்றது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. உடனே நந்தகுமாரின் கைபேசிக்கு அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை.
தன்னுடன் பேசமாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரியும். இருந்தும் அவன் அழைப்பதை விடுவதாக இல்லை. அத்துடன் நந்தகுமார் எந்த ஊருக்குச் சென்றான் என்று அவனால் ஊகிக்கக் கூட முடியவில்லை. இப்படி இராவோடு இராவாகக் கிளம்பிவிட்டார்களே.
நந்தகுமார் தன்னை நெருங்கிய நண்பனாக நினைத்திருக்க, இவனோ அவனைப் பற்றிய எந்தவொரு விஷயத்தையும் தெரிந்து வைத்திருக்கவில்லை. வாழ்க்கை மொத்தத்தையும் கூட்டல் கழித்தல் எனக் கணக்குப் பார்த்தே மற்றவர்களிடம் பழகியிருக்கிறான் எனப் புரிந்தது.
இந்த மரமண்டைக்கு இப்போது புரிந்து என்ன செய்ய? காலம் கடந்த ஞானோதயம். இதற்காக அவன் இழந்தது ஏராளம். உறவுகளை இழந்து, நண்பனைப் பிரிந்து அவன் தனிமைப் படுத்தப்பட்டான். கௌரியும், பவித்ராவும் அவனுடன் பேசுவதே கிடையாது.
அஞ்சனாவுமே நந்தகுமாருக்கு அடிபட்ட அன்று பேசியது. அதன்பிறகு இவனாக அவளை அழைக்கவில்லை. அவளும் இவனை அழைக்கவில்லை. தன் தந்தை இறந்தது அவளுக்குத் தெரியும். அப்படியிருந்தும் மரியாதை நிமித்தம் கூட அவள் வரவில்லை.
அவன் மேலே எத்தனை கோபமிருந்தாலும் அவன் ஓர் இக்கட்டில் தவிக்கையில் அனுசரணையாக அவளால் இருக்க முடியவில்லையா? அதுவும் அவன் என்ன தவறு செய்துவிட்டான் என்று இவள் இப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்?
நியாயமாய்ப் பார்த்தால் அவனுக்குத் தான் அவள் மேலே எக்கச்சக்கமாகக் கோபம் இருக்க வேண்டும். நண்பனை அடித்து, அவன் வீட்டை சூறையாடி என அனைத்தையும் செய்துவிட்டு அவன் மேல் கோபத்தில் இருக்கிறாள்.
அவள் செய்யும் அநியாயத்துக்கு எல்லாம் இவன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிவிட்டாளா என்ன? கண்டிப்பாக அது ஒருபோதும் நடக்காது. அவனுக்குப் பணம் பிடிக்கும். இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக நியாயம், நேர்மை இல்லாமல் அவனால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது.
தப்பான ஒருத்தியைத் தன் வாழ்க்கைத் துணையாக்க நினைத்துவிட்டானோ? நந்தகுமாரும் அவளைப் பற்றி எச்சரித்தான். தங்கைக்கும் அவளைப் பிடிக்கவில்லை. எதை வைத்து அவனுக்கு அஞ்சனாவைப் பிடித்தது? எத்தனை முறை யோசித்தாலும் அந்தக் கேள்விக்கு அவள் பணம் படைத்தவள் என்ற பதிலே கிட்டியது.
எதிலும் சரியாக முடிவெடுக்கும் அவன் அஞ்சனா விஷயத்தில் சறுக்கிவிட்டான். பணம், பணம் என்று அதன் பின்னால் போய்க் கொண்டிருந்தானே. அந்தப் பணம் அவன் மனக்காயத்துக்கு மருந்தைத் தடவிவிட்டதா?
அலுவலகத்தில் தன் அறையில் அமர்ந்திருந்த நிரஞ்சனுக்கு எதிலும் கவனம் செல்லவில்லை. பேசாமல் வீட்டுக்குச் செல்லலாம் எனக் கிளம்பிச் சென்றான். நாளை அவன் தங்கைக்குப் பிறந்தநாள். கடந்த நான்கு வருடங்களாக அவளிடம் பணத்தைத் தந்து அவளுக்குப் பிடித்ததை வாங்கிக்கச் சொல்வான். இந்தமுறை அவனாக அவளுக்குப் பரிசு பொருள் வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்துக் கடைக்குச் சென்றான். அவளுக்கென்று இருந்ததெல்லாம் சின்ன சின்ன ஆசைகள்.
சாக்லேட் சாப்பிடப் பிடிக்கும். பூ வைக்கப் பிடிக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் சுரிதார் பிடிக்கும். கதை புத்தகம் படிக்கப் பிடிக்கும். ஆகவே இவையனைத்தையும் வாங்கியன் கேக்குடன் வீட்டுக்குச் சென்றான்.
அவன் வீட்டினுள் நுழைய, எப்போதையும் விட வீடே அமைதியாக இருந்தது. ஆட்கள் இருப்பதற்கான அரவமே இல்லை. அப்போது அங்கே வந்த வீட்டுப் பணியாளரிடம், பவித்ரா எங்கே எனக் கேட்க, “சின்னம்மா ஊருக்குக் கிளம்பிட்டாங்களே” என்றான்.
ஊருக்கா? எந்த ஊருக்கு? திகைத்தவன், “அம்மா எங்கே?” என்றான். அவங்களும் சின்னம்மாவோட கிளம்பிட்டாங்களே” என்றார்.
தனக்குத் தெரியாமல் இருவரும் எங்கே சென்றார்கள்? உடனே அன்னையை அழைக்க, அவர் அழைப்பை எடுத்தார். “அம்மா, எந்த ஊருக்குப் போறீங்க? என்ன திடீர்னு” எனக் கேட்க,
ஒரு நொடி தயங்கியவர், “பவிக்கு வேலை கிடைச்சிருக்கிற ஊருக்குப் போயிட்டு இருக்கோம். என்னால அந்த வீட்டில உன் அப்பா இல்லாம இருக்க முடியலை” என அழுகையில் வெடித்தார் கௌரி.
“என்கிட்டே சொல்லவேயில்லை அம்மா” என ஆரம்பித்தவனின் வார்த்தைகள் அவர் அழுகையில் கரைந்து போயின. தான் தன் குடும்பத்தாரிடம் இருந்து முற்றிலுமாக ஒதுக்கப்பட்டதாக உணர்ந்தான்.
“சொல்லுங்க அம்மா, எந்த ஊருக்குப் போறீங்க?” அவன் விவரங்களைக் கேட்க விழைய, “சொல்லாதீங்க அம்மா” எனப் பவித்ரா சொல்வது கேட்டது.
“நீ உன் வாழ்க்கையைப் பார்த்துட்டுச் சந்தோஷமா இருப்பா. நான் வேலைக்கு ஓய்வு எழுதி கொடுத்திட்டேன். எங்களைத் தேடாதன்னு சொல்லறதுக்குத் தான் ஃபோன் எடுத்தேன். நாங்க பத்திரமா இருக்கோம்.” பட்டென்று அழைப்பை வைத்துவிட்டார் கௌரி.
அப்படிப் பட்டென்று துண்டிக்கும் உறவா அவர்களது? துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு. அவன் வாங்கி வந்த பரிசுப் பொருட்கள் அவனைப் பார்த்துக் கேலி செய்தன.
எத்தனை நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தானோ தெரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தானாக வழிய ஆரம்பித்தது. வாழ்க்கையில் முதல் முறையாக அழுகிறான். தான் திடமானவன் என்று நினைத்திருந்ததற்கு மாறாக அவன் பொடிப் பொடியாக உதிர்ந்து போனான்.
தந்தையின் மறைவு, நண்பனின் பிரிவு, அன்னை மற்றும் தங்கையின் பாராமுகம் அவனை வேரோடு சாய்த்துவிட்டது.
தொடரும்...
Last edited: