• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அறம் பொருள் இன்பம் -7

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
279
அத்தியாயம் 7

கரிமேடு சந்தை. ஒரு காலத்தில் மீன் விற்பனைக்குப் பெயர் போன இடம். விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையின் வியாபாரத்திற்கு, முதல் நாள் இரவே கனரக வாகனங்களில் மீன்கள் வந்து இறங்கி விடும்.
விடிய விடிய வியாபாரிகளிற்கு ஏலம். விடியலில் இருந்து பொது மக்களிற்காக வியாபாரம் என நடைபெறும்.
சந்தை இருக்கும் பிரதான சாலையில் நடந்து சென்றால், அடிக்கு ஒன்றாய் மீன்கள் காலணியில் ஒட்டிக் கொள்ளும். வாகனங்கள் எல்லாம் சொல்லவே தேவையில்லை. வீதியின் வலிமைக்கு அவற்றை மசித்து தானம் வழங்கிவிட்டுச் செல்லும்.

கடந்து செல்லும் போது அனுமதியின்றி சுவாசத்திற்குள் நுழைந்து, சோதித்துப் பார்க்கும் அதன் நெடி. சிலருக்குப் பிடிக்கும்‌. சிலருக்குப் பிடிக்காது.

மேலும் ஒரு ரகத்தினர் உண்டு. இரண்டும் கெட்டான் நிலையையும் உணர்வையும் கொண்டவர்கள். உண்ண விருப்பம், வாசம் பிடித்தமற்றது. ருசி பிடித்தம், அதில் உள்ள முட்களின் காரணமாய் மறுப்பது என.
விடுமுறை தினங்களில் வியாபாரிகள் மற்றும் பொது மக்களின் வருகையினால் திருவிழாக் கோலமாய் காட்சி அளிக்கும் சந்தை, தற்போது இடம் மாற்றத்தினால் அடையாளமற்றுப் போனது‌.
எனினும் அதன் இருப்பிடமும், அங்கிருந்து வெளிவரும் வாசமும் 'கரிமேடு மீன் மார்க்கெட்' என்ற பெயரையே இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது.

இரண்டு மூன்று சில்லரை வியாபாரிகள் அங்காடிக்குள் கடை போட்டிருக்க, அதன் வரலாற்றை உரைத்தபடியே வாகனத்தை ஓட்டி வந்தார் ராதா கிருஷ்ணன். பக்கவாட்டில் திரும்பி, வரிசையாய் இருக்கும் கடைகளைப் பார்வையிட்டபடியே, அவர் உரைக்கும் மதுரையின் கதைகளைக் கேட்டுக் கொண்டான் கிருபாகரன்.
அடுத்ததாய் காய்கறி சந்தை. மணி ஏழரை என்பதால், தற்போது தான் ஒவ்வொருவராய் சந்தைக்குள் காய்களைக் கொட்டி கடையை விரிக்கத் துவங்கினர்.

நான்கு நிமிடங்களில் சந்தையைக் கடந்த வடக்கு மடத்தில், "வந்துட்டோம் தம்பி. தெருவுக்குள்ள ஆட்டோ போகாது‌. இங்கேயே இறங்கிக்கோங்க!" என அவர் உரைக்க, உடைமைகளுடன் சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தபடி இறங்கினான் ஆடவன்‌.

பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அப்பகுதி. பத்து மீட்டருக்கு இடைவெளியில் ஒரு குழாய் இருக்க, அனைத்திலுமே நான்கு பெண்களிற்குக் குறைவின்றி தண்ணீர் பிடிப்பதற்காகக் குடத்தோடு நின்றிருந்தனர்.
லாரி நீருக்காக சென்னை மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டிருக்கிறான். குழாயில் இருந்து வரும் தண்ணீருக்காகக் காத்திருப்பதைப் பார்ப்பது, இதுதான் முதல் அனுபவம்.
"உள்ள போங்க தம்பி. அதோ அங்க பச்சையும் சாக்லெட் கலருமா பெய்ண்ட் அடிச்சிருக்கு இல்ல. அதுதான் வல்லியம்மாவோட வீடு.‌ நான், ஆட்டோவை ஸ்டாண்டுல போட்டுட்டு வர்றேன்!‌* என்றுவிட்டுக் கிருஷ்ணன் செல்ல, தெருவிற்குள் அடியெடுத்து வைத்தான்.

கால் பதிக்கும் இடமெங்கும் சிறு சிறு நீர் குளங்கள். சீரற்ற கற்சாலை‌. முதலில் சிமெண்ட் கற்களைப் பதித்துப் பின்னர் ஏதோ காரணத்திற்காக அதனைத் தோண்டி எடுத்துப் பணி செய்து, மீண்டும் அரை குறையாய் அந்தக் கற்களையே அடுக்கி இருந்தனர்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எந்த ஆட்சி மாறினாலும் சற்று கூட முன்னேற்றம் காணாது, இவ்வகையான தெருக்கள். அதிகாரிகளின் அலட்சியத்தில் ஒப்பந்த பணியாளர்களின் கைவண்ணத்தால் அவற்றின் அடையாளமே இதுதான் என மாறிவிட்டது.

வீட்டின் முன்பு சென்று அழைப்பு மணியை அழுத்துவதற்காக கையை நீட்டிட, பட்டென்று திறந்து கொண்டது கதவு.
மஞ்சள் பூசிய முகத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை கற்களின் கலவையில் மூக்குத்தியும் காதணியும்‌ அணிந்து, நெற்றி நிறைந்த குங்குமப் பொட்டில் பூரிக்கும் புன்முறுவலுடன் காட்சி தந்தார் சுந்தரவல்லி.

"பாட்டி!‌" என்றவன் புன்னகைக்க, "வா கண்ணா. வா வா!" என‌ முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அவனை முதலில் வரவேற்றவர் சற்று நிதானித்து, "ஒரு நிமிஷம் நில்லு, மது தயார் ஆகிடுச்சா?" என்று குரல் கொடுத்தார்.

"வந்துட்டேன் அம்மாச்சி!" என ஆரத்தித் தட்டுடன் வந்தவள் அவரிடம் கொடுக்க, கிருபாவிற்கு ஆலம் சுற்றினார் முதியவர்.

"எதுக்குப் பாட்டி இதெல்லாம்?"

"மறுபிறப்பு எடுத்து வந்திருக்க.‌ எப்படி சும்மா உள்ள கூப்பிடுறது.?"

"அதுசரி! ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்தப்ப ஏற்கனவே ஆரத்தி எடுத்துட்டீங்களே‍? திரும்பவும் என்ன.?"

"இங்க இப்பதான முதல் தடவையா வர்ற?"

அவன் சிரிக்க, "உள்ள வா, பிரயாணம் எல்லாம் எப்படி இருந்துச்சு.?" என விசாரித்தபடியே அழைத்துச் சென்றார்.

ஆலம் சுற்றிய குங்குமம் கலந்த மஞ்சள் நீரைத் தெருவில் மத்தியில் ஊற்றிவிட்டு வந்த மது‍, "அம்மாச்சி டிஃபன் என்ன செய்யட்டும்?" என்று வினவிட, "என்ன சாப்பிடுற கண்ணா?" எனக் கிருபாவைப் பார்த்தார் அவர்.

"எதுனாலும் ஓகேதான் பாட்டி.‌ ஐம் நாட் எ பிக்கி பர்சன்!"

அவள்‌, "இட்லியும் பூரியும் ஓகேவா.?" என்று இம்முறை நேரடியாய் அவனிடமே கேட்டிட, தலை அசைத்தான்.

"காஃபி ஆர் டீ?"

"எப்பவுமே டீ தான்."

"சரி அம்மாச்சி, நான் போய் வேலையைப் பார்க்கிறேன்." என்று அவள் வெளியேறிட, "யார் பாட்டி, இந்தப் பொண்ணு.?"

"நம்ம வீட்டுல குடியிருக்கிற பிள்ள. உன்னைக் கூப்பிட வந்தானே கிருஷ்ணன், அவனோட மகதான்."

"இங்க வேலை எல்லாம் அவங்கதான் செய்யிவாங்களா?"

"இல்ல, எப்பவாது. நான் ஒருத்தி தானனு, பெருசா எதுவும் செஞ்சுக்க மாட்டேன். காலையில ரெண்டு இட்லி, மதியம் ஒரு வாய் சாப்பாடு. ராத்திரிக்கு ரெண்டு வாழைப்பழம். அவ்வளவு தான்‌ நம்ம தேவை.
மதுதான் அப்பப்ப ஏதாவது கொண்டு வந்து கொடுத்துட்டுப் போவா‌. நீ வந்திருக்கிறதால, சாப்பாடு எல்லாம் செஞ்சு தர்றேன்னு சொல்லிட்டா‌."

தனக்காக இன்னொருவர் பணி செய்வது ஒருவித அசௌகர்ய உணர்வை உண்டாக்கிட, "எதுக்குப் பாட்டி? நான் கடையில வாங்கி சாப்பிட்டுக்கிறேன்." என மறுத்தான்.

"எத்தனை நாளைக்குச் சாப்பிடுவ? இப்பதான் மருந்து மாத்திரையில இருந்து விமோசனம் கிடைச்சிருக்கு. வெளிய சாப்பிட்டு உடம்புக்கு எதையும் இழுத்து வச்சுக்காத!" என்று கண்டித்தவர், "மது, சட்னில காரம் எல்லாம் கொஞ்சம் குறைவாவே வையி!" எனச் சிறியவளிற்குக் குரல் கொடுத்தார்.

"ஓகே அம்மாச்சி!" என்ற பதில் காற்றின் அலை வரிசையில் மிதந்து வந்து மெலிதாய்‌ செவியை அடைந்தது.
"சரி, போ கண்ணா. குளிச்சு துணியை மாத்திக்க, மாடியில உனக்கு ரூம் தயார் செஞ்சிருக்கு!" என அவர் உரைத்திட, சரியாய் உள்ளே நுழைந்தார் ராதா கிருஷ்ணன்.

"வாய்யா. இரயில்வே ஸ்டேஷன்ல பிள்ளைய கண்டுபிடிக்கிறதுல உனக்கு ஒன்னும் சிரமமா இருக்கலயே.?"

"அதெல்லாம் இல்லம்மா. சேது எனக்கு ஃபோட்டோ அனுப்பி எந்த கம்பார்ட்மெண்ட் சீட் நம்பருனு எல்லா விபரமும் சொல்லிட்டாரு."

"சரிய்யா. இன்னைக்குக் கிளாஸ் திறக்கலயா? மதுவும் வீட்டுலயே இருக்கா.?"

"பத்து மணியில இருந்துதான் கிளாஸுனு நேத்தே எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டேன்."

"ம்ம்.." எனத் தலை அசைத்தவர், "ஆட்டோக்கு எவ்வளவு?" என்று தணிந்த குரலில் வினவிட, "என்ன அம்மாச்சி, ஏதோ கேட்கிற மாதிரி இருக்குதே?" என வினவியபடியே வந்தாள் மது.

"அது ஒன்னும் இல்ல!" என்று அவர் சிரித்து சமாளிக்க, "என்னை வளர்த்ததுக்கு, நீங்களும் மாசச் சம்பளமா போட்டு அம்மாச்சிக்குக் கொடுத்திடுங்க அப்பா!" என மூவருக்கும் தேநீரைத் தந்தாள்.

கிருஷ்ணன் சிரிப்புடன் பெரியவரின் புறம் திரும்ப, "இப்படி, ஒன்னும் தெரியாத மாதிரி பாவமா முகத்தை வைக்காதீங்க அம்மாச்சி. செய்யிறதையும் செஞ்சிட்டு, பார்க்கிற பார்வையைப் பாரு!"

"நான் என்ன செஞ்சேன்.?"

"நீங்க அப்பாக்கிட்ட என்ன கேட்டீங்கனு எனக்கு நல்லாவே தெரியும்!"

"நாங்க பேசுனது பக்கத்துல இருக்க என்னோட பேரனுக்கே கேட்கல, உனக்கு அங்க வரைக்கும் கேட்டுச்சாக்கும்.?" என அவர் கிருபாவைப் பார்க்க, அவனோ எப்படி எதிர்வினை செய்வதென்று புரியாமல் விழித்தான்.

"அம்மாச்சி என்ன பேசுனாங்கனு உங்களுக்கு நிஜமாவே கேட்கலயா.?" என்று மது வினவிட, "பாட்டி எதுவும் பேசலயே? நான்தான் ஆட்டோக்கு எவ்வளவுனு கேட்டேன்." என மூத்தவருக்கு ஆதரவாய் பதில் உரைத்தான் அவன்.

வல்லியும் கிருஷ்ணனும் சிரிக்க, "நல்லா, ஜாடிக்கு ஏத்த மூடியா பாட்டிக்கு ஏத்த பேரன். அப்பா, இங்க பாருங்க. அவங்க பணம் கொடுத்தாங்கனு வாங்கினீங்கனா, அப்புறம் நான் உங்கக்கிட்ட பேசவே மாட்டேன்."

"நான் வாங்குவேனா மது.?"

"குட். இதுதான் என்னோட அப்பா!" என்று தந்தையின் தோளில் கையிட்டவள், "பொய்யா பேசுறீங்க? புதினா சட்னில சீனி போட்டு அரைச்சுத் தர்றேன் பாருங்க. அம்மாச்சி உங்களுக்கு புளி கரைச்சு ஊத்துன காபிதான்!" என மிரட்டிவிட்டுச் செல்ல, மூவரது முகத்திலுமே சிரிப்பின் ரேகைகள்.

"சரிம்மா. நான் கிளம்புறேன்.‌" என்று கிருஷ்ணன் விடைபெற்று வெளியேற, வல்லியைப் பார்த்தான் கிருபா.
"என்ன கண்ணா‌?"

"இப்படி எல்லாம் இங்க ஆளுங்க இருக்கிறதால தான், அங்க வர்றதே இல்லையா பாட்டி.?"
"நான் பிறந்து, வளர்ந்து, இப்ப வாழுறது எல்லாம் இங்கதான். ஆளுங்கனு யாரும் இல்லனாலும், இந்த இடத்துக்கும் எனக்குமான பந்தம் மாறாது. அதோட, மது வேற இருக்கா. தாய் இல்லா பிள்ள. என்னோட சேலையைப் பிடிச்சே வளர்ந்துட்டா‌. அவளை விட்டுட்டு எங்கனு போறது.?"

அவன் சிரித்துத் தலை அசைக்க, "போ கண்ணா, ஓய்வெடு. ஆகாரம் கொண்டு வரவும் நான் கூப்பிடுறேன்." என அனுப்பி வைத்தார் வல்லி.

உடைமைகளோடு மாடி ஏறி சென்றான் கிருபா.
குறுகிய படிகள். பழைய மற்றும் உயரம் குறைவான கட்டிடம். அவன் மேலே கைத் தூக்கினால் மின்விசிறியின் இறக்கைகள் விரல்களின் நுனியில் உரசும் படியான அண்மையில் இருந்தன.
ஒரு படுக்கை மற்றும் இரண்டு அலமாரிகளுடன் அளவான அறை.‌ மேஜை நாற்காலி ஒருபுறம், வெறுமையாய் திண்டு ஒன்று என மிச்சம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து சற்று இடைவெளியோடு இருந்தது. அவன் ஒருவனிற்குப் போதுமானது.

செங்கலைச் சிறு சிறு இடைவெளிவிட்டு கட்டி பழைய கால முறைப்படி அமைக்கப்பட்ட ஜன்னல்‌. கிழக்கில் இருந்து கதிரவனின் ஒளி அதன் வழியே உள்நுழைந்து, உட்புறத்தை வெளிச்சமாக்கி இருந்தன. தேவைக்கு வெப்பக் கதிர்களைத் தடுக்க அல்லது சரிசெய்து கொள்வதற்கு வசதியாய் திரைச்சீலை போட்டு, ஓரமாய் தள்ளி விடப்பட்டு இருந்தது.

அதற்கு நேர் எதிரே எதிர்பக்க சுவற்றில் தற்கால முறையில் ஜன்னல். மறுபக்கத்தில் எவ்வித கட்டிடமும் இல்லாததால், எத்தடையும் இன்றி தென்றல் காற்று உள்ளே வந்து விளையாடிச் சென்றது.
புதிய படுக்கை விரிப்பும், அறையின் சுத்தமும் முதல்நாள் தான் தயார் செய்து இருக்க வேண்டும் என்று கட்டியம் சொன்னது.

முதியவரின் உடல்நிலையை அறிந்தவனிற்கு, 'யார் செய்திருப்பார்.?‌' என்ற‌ வினாக்கான விடையைத் தேடுவதற்கு அவசியமின்றி நினைவில் வந்து போயினர் கிருஷ்ணனும் அவரது மகளும்.
பார்வையால் துழாவினான், ஓய்வறை கண்களில் படவில்லை‌. வெளிவந்து பார்க்க, சற்றுத்தள்ளி அமைந்து இருந்தது.

காலைக் கடன்களை முடித்துத் தயாராகி வந்தவன், இரயில்வே நிலையத்தில் வாங்கி வைத்திருந்த பாட்டில் நீரை அருந்தி முடிக்க, கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

"திறந்துதான் இருக்கு. உள்ள வாங்க!" எனக் குரல் கொடுத்திட, தண்ணீர் பானையுடன் உள்ளே நுழைந்தாள் மது.

"என்ன சார், ரூம்ல செட்டில் ஆகியாச்சா.?"

"யா. பட், எதுக்கு இப்படிக் குடத்தைத் தூக்கிட்டு வர்றீங்க.?"

"அப்புறம் தண்ணிக்கு என்ன செய்வீங்க? ஒவ்வொரு தடவையும் கீழ இறங்கி ஏற முடியுமா.?"

"அதை நான் பார்த்துக்கிறேன்‌. உங்களுக்குக் கஷ்டம் தான.?"

"அம்மாச்சிக்காக செய்யிறேன். இதுல என்ன கஷ்டம்.?"

"சரி கொடுங்க!" என அவன் கை நீட்டிட, "இதுக்கு முன்னாடி தண்ணி பானை எல்லாம் தூக்கி இருக்கீங்களா.?"

"இல்ல. இதுதான் ஃபர்ஸ்ட் டைம்."

"ரிஸ்க் வேணாம். நானே வச்சிடுறேன்!" என்றவள் உள்ளே இருந்த திண்டில் வைத்துவிட்டு, மின்விசிறியை இயக்கினாள். அவனால் தன்னை நினைத்தே சிரித்துக் கொள்ள மட்டுமே முடிந்தது.

"ஃபேன் போடாம இருக்கீங்க, வியர்க்கலயா.?"

"எந்த ஸ்விட்ச்னு தெரியல. ஒவ்வொன்னா பார்த்துட்டு இருந்தேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க."

"சரி, எதுவும் தேவைனா என்னைக் கூப்பிடுங்க. அம்மாச்சியால மாடி‌ ஏற முடியாது. கீழதான் இருப்பேன் நான். ஜன்னல்கிட்ட நின்னு குரல் கொடுத்தாலே கேட்கும்."

அவன் தலை அசைத்திட, இரண்டு படிகள் கீழிறங்கியவள், "பெட்சீட் எல்லாம் புதுசுதான். ஒருதடவை வாஷ் பண்ணிதான் விரிச்சிருக்கேன்.‌ இங்க மதிய நேரத்துல டூ த்ரீ ஹவர்ஸ் பொதுவா கரெண்ட் கட் ஆகும். அதுனால சார்ஜ் எதுவும் போடணும்னா காலையிலயே போட்டுக்கோங்க‌.

இன்வர்ட்டர் இல்ல. சந்தைக்கு போறப்ப சார்ஜர் ஃபேன் வாங்கிட்டு வந்துடுவாரு அப்பா.‌ அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க‌. அப்புறம் அந்த டேபிளுக்கு அடியில இருக்க டிராவ்ல பிளாஸ்டிக் விசிறி, டார்ச் லைட் எல்லாம் இருக்கு. அலமாரியில ரெண்டு டவல் வச்சிருக்கேன்‌. வேற!" எனச் சிந்திக்க,
"நான் ஒன்னும் சின்னப் பையன் இல்ல மிஸ் மது. பார்த்துக்கிறேன்."

சின்னதாய்ச் சிரித்தவள், "சரி!‌" என்றுவிட்டு கீழ் இறங்கிச் செல்ல, தனது மடிக்கணினி மற்றும் கைப்பேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டுப் படுக்கையில் விழுந்தான்.

பயணத்தின் போது படுத்துதான் வந்தான் என்றாலும், ஆழ்ந்த உறக்கம் கிட்டவில்லை‌. அத்தோடு விடியலிலேயே விழித்து விட்டதால், இமைகள் துயில் கொள்ளத் தயாராகி விட்டன.

இரண்டு மணி நேரம் கழித்து எழுந்த பொழுது, மேஜையில் உணவு தயாராய் இருந்தது. அருகே, கையளவு குறிப்பு நோட்டு மற்றும் பேனா ஒன்றும், அன்றைய தின நாளிதழோடு.

"டிஃபன் கொண்டு வந்தேன். தூங்கிட்டு இருந்தீங்க‌. எல்லாம் ஹாட்பாக்ல வச்சிருக்கேன். சூடா தான் இருக்கும். முழிக்கும் போது, சாப்பிடுங்க. பாத்திரத்தை அப்படியே வச்சிடுங்க‌. நானே வந்து சுத்தம் செஞ்சுக்கிறேன். இப்ப மார்க்கெட் போறேன், காய் வாங்க‌. எதுவும் தேவைனா கால் பண்ணுங்க சேர்த்து வாங்கிட்டு வர்றேன். இது, என் நம்பர்!" எனக் கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு, "மது!" என்று எழுதி இருந்தாள்.

மூன்று இட்லி மூன்று பூரிகளுடன், முளைக்கட்டிய பாசிப் பயறில் கெட்டியாய் குழம்பு செய்திருந்தாள். சிறிய கிண்ணம் ஒன்றில் தேங்காய் சட்னி. தாளித்த மிளகாய் வற்றலும் சிறிய வெங்காயமும், வெள்ளைப் படலத்தில் இருக்கும் கண்ணின் கருவிழிகளைப் போல், நடுவே மிதந்தன.

இதுவரை உண்டு அறிந்திடாத புதிய சுவையில் இருந்தது. வயிற்றை நிறைத்தவன், 'பாத்திரங்களைத் தூய்மை செய்து விடலாம்!' என அனைத்தையும் ஒன்றாய் எடுக்க, குழம்பு பாத்திரம் கீழே விழுந்து தரையை நிறம் மாற்றி விட்டது.

"அந்தப் பொண்ணு காலையிலயே சொன்னாங்க. ரிஸ்க் வேணாம்னு. தெளிவா‌ எழுதி வச்சிட்டுப் போயிருந்தும், இந்த வேலையைச் செஞ்சு வச்சிருக்க நீ. பேசாம இருந்திருக்கலாம்ல? உனக்கு இது தேவையா? வந்த அன்னைக்கே அசிங்கப்படப் போற!" எனத் தன்னையே அர்ச்சித்தபடி, நாளிதழின் காகிதத்தை வைத்து அவ்விடத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினான்.

சில நொடிகளில் மெலிதான கொலுசொலி கேட்டிட, 'யார் அது.?' எனச் சிந்தித்தவாறே‌ அறையின் வாயிலை நோக்கி ஓர்அடி எடுத்து வைக்க, உள்ளே வந்தாள் மது.

"மார்க்கெட்ல பதநீர் வித்துட்டு இருந்தாங்க. இதுக்கு முன்னாடி நீங்க குடிச்சிருக்கீங்களானு தெரியல. டேஸ்ட் பண்ணக் கொடுக்கலாமேனு வாங்கிட்டு வந்தேன்!" என்று கிண்ணத்தைப் போல் குழிசெய்து கட்டிய பனை ஓலையில் இருந்த நீரை அவனிடம் நீட்டினாள்.

கிருபா ஒருவித தயக்கத்துடன் பார்க்க, "என்னாச்சு.?" என வினவியபடியே அறைக்குள் பார்வையை ஓட்டிட, பாவையின் விழி அசைவைப் பின் தொடர்ந்தான்.

"ஸாரி, கைத்தவறி‌ கொட்டிடுச்சு!" என்றிட, "இதுல என்ன இருக்கு? நான் கிளீன் பண்ணிக்கிறேன். நியூஸ் பேப்பர்ல எல்லாம் துடைக்க முடியாது. கீழ போய் துணி எடுத்துட்டு வர்றேன். இதைக் குடிங்க!" என பதநீரை தந்துவிட்டு ஓடினாள்.

சில நொடிகளில் மேலே வந்தவள், "குடிச்சிட்டீங்களா.?"

அவன் மறுத்துத் தலை அசைக்க, "ஹோ, இதுல எப்படிக் குடிக்கிறதுனு யோசிக்கிறீங்களா.? எனக்குமே தோணிச்சு‌. பட், அதோட ஓலையிலயே குடிச்சா டேஸ்ட் சூப்பரா இருக்கும்‌‌. அதான் கொண்டு வந்தேன்‌. ஒரு செகண்ட்!" என நீர் அருந்துவதற்காக வைத்திருந்த டம்ளரில் அதை வாங்கி ஊற்றிக் கொடுத்தாள்.

"இப்பக் குடிங்க!" என்றவள் அவனின் மறுவினை எதையும் எதிர்பாராது அவ்விடத்தைச் சுத்தம் செய்து, உண்ட பாத்திரங்களை எடுத்துச் சென்றாள்.

பதநீர், இரண்டு மிடறுக்கு மேல் கிருபாவின் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. அதனின் சுவை அவனிற்குத் தக்கதில்லை என்றாலும், 'வேண்டவே வேண்டாம்!' என முழுமையாய் மறுக்கும் படியாகவும் இல்லை. எனினும் மதுவின் நடவடிக்கைகள், முழு மனதோடு அதை அருந்த விடாது செய்து விட்டன.

'உன்னால பாரு, அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டம்? வந்து நாலு மணி நேரம் கூட முழுசா ஆகல‌‌. அதுக்குள்ள ஃபைவ் டைம்ஸ் ஸ்டெப்ஸ் ஏறி இறங்கிட்டாங்க.' என நியாய மனது குற்றம் சாட்டிட, ஒரு பெருமூச்சு விட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்
.
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
174
மனதின் ரணமாக நிலா
மறைந்திருக்க...
மீண்டும் ஒரு மதி ( மது)
மனதை நிறைக்குமா???
மாற்றம் ஒன்றே
மாறாதது.....
மனம் மாறட்டும்🤩
 
Top Bottom