• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

நெஞ்சம் -11

Kasavu

Member
Joined
Apr 29, 2025
Messages
37

நெஞ்சம் -11


சந்துருவுக்கு மருத்துவ பரிசோதனை முடித்து, மருத்துவர் இப்போது நன்றாக இருக்கிறான் எனச் சான்றிதழ் தரவும், வீட்டில் யாருக்கும் சொல்லக் கூடாது எனச் சரயுவிடம் வாக்கு வாங்கிக் கொண்டான்.

“ ஏன் சொன்னா என்ன?” என்று கேட்க,

“ உன் மாமாவுக்கு முடியலையினா, எல்லாருமே சங்கடப் படுவாங்க. இனிமே லேசா வேர்த்ததுன்னா கூட எல்லாருக்கும் பயம் வந்திடும். தன்னால , உங்க குடும்ப சந்தோஷம் பாதிக்க கூட்துன்னு நினைக்கிறார்.” சாரு சொல்லவும்,

“ மாமா கூட இருந்த மாதிரி அவர் மனசை சொல்றீங்களே” என சரயு வியக்க,

“ சின்ன வயசுலருந்தே அப்படி தான். சைக்கிள்ல போயி விழுந்து சிராய்ச்சுட்டு வந்தாலும், ஹேண்டில்பார் வளைஞ்சுடுச்சேன்னு மத்துவங்களுக்காகக் கவலை படுற ஆளு” சாரு சொல்லவும்,

“ அது சின்னபுள்ளையில. இப்பெல்லாம் மாறிட்டேன்” என்றான் சந்துரு

“ புது சைக்கிளே வாங்கி கொடுத்துடுவ‌ அவ்வளவு தானே” எனச் சாரு கேலி செய்ய,

“ கரெக்ட். எப்படி அத்தை சொல்றீங்க.”எனச் சிறுவயதில் நடந்ததைச் சொல்லிக் கொண்டு இருக்க, சந்துரு, சாருவைப் பெருமை பொங்கப் பார்த்து நின்றான்.


ரதியின் கணவன் வசந்த் இவர்களைத் தேடி வந்துவிட, சந்துரு சாருவை வசந்துக்கு அறிமுகப்படுத்தி விட்டான்.

“ வணக்கம் சேச்சி” என்றவன், “ உங்களை இன்னைக்கு தான் நேரில் பார்க்கிறேன். ஆனால் நிறையக் கேள்விப் பட்டு இருக்கேன். ப்ரதர் அண்ட் சிஸ்டர்ஸ் சேர்ந்துட்டா முதல்ல மதுரை புராணம். அப்புறம் உங்க புராணம் பாடுவாங்க” என்றான்.

“ நல்ல விதமா தானே சொல்லுவாங்க” அவள் வினவ, “ ஆமாம். அதிலென்ன சந்தேகம்” என்றான்.

ரஜினீஷ் , மேனேஜரோடு யாருக்கு எந்த அறை , எத்தனை பேர் பகிர முடியும் எனக் கலந்தாலோசிக்கச் சென்றிருந்தான்.

சந்துருவின் அம்மா ராஜாத்தி மற்றும் பெரிய மகள் குடும்பம் வந்து சேர, சாருவே சென்று அவர் அறையில் சந்தித்தாள்.வழக்கம் போல், அம்மா, மகன், பேதிக்கு ஒரு அறையை ஒதுக்கி இருந்தனர்.

“ சாரு நல்லா இருக்கியா. அன்ன கண்ட மேனியா, அப்படியே இருக்கியே எப்படி” என வியக்க,

“ எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் மாமி” என்றவள் ,”கையில் என்ன பெல்ட் ” என விசாரித்தாள்.

“எது என் பேச்சை கேட்குது, கையி, காலு கேட்க” அவர் சடைத்துக் கொள்ள,

“உங்கள் கட்டளையை நிறைவேத்துற மகனை வச்சுக்கிட்டு இப்படி எல்லாம் பேசலாமா” என சந்துருவை காட்டி கேட்க,

“அவன் தான் இப்போ ரொம்ப படுத்துறான். மகள், பேரன், பேதிக்கெல்லாம் செஞ்சுட்டு இவனை தனி மரமா நிற்க வச்சுட்டேனோன்னு மனசு கிடந்தது அடிச்சுக்குது” எனவும்,

“அம்மா” என சந்துரு ஆட்சேபித்தான்.

“அவுங்க கவலை அவுங்களுக்கு, நீ எதுக்கு அடக்குற. “ என சந்துருவை அதட்டி விட்டு,

“உங்க மகன் வேண்டான்னு சொன்னாலும், நீங்க விட்டு இருக்கக் கூடாது மாமி. கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சிருக்கணும் ” என உரிமையாய் கோபிக்க,

"அது தாண்டியம்மா விட்டுட்டேன். எனக்கு பிறகு, இவனை யாரு பார்ப்பான்னு நினைச்சாலே ராத்திரியெல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது" என கண் கலங்க, "அம்மா" என மீண்டும் அடக்கியவன்,

“உன்னை அந்த செஃப் கூப்பிடுறார் போ, பெரிய கிழவியாட்டம் குத்தம் சொல்ல வந்துட்ட” சந்துரு அவளை விரட்ட, நிஜமாகவே அழைத்தனர்.

அவனுக்கு ஒரு முறைப்பையும், கோனை வழிப்பயும் பரிசாய் தந்து விட்டு “அப்புறம் வர்றேன் மாமி” எனச் சென்றாள்.

"அய்ய, பெரிய இவ. உனக்கெல்லாம் எங்க அப்பத்தா இருந்திருக்கணும்" என்றவன் பார்வை அவள்
பின்னால்
செல்வதைப் பார்த்த ராஜாத்திக்கு, எங்கே தவற விட்டோம் என்பது புரிந்தது. ஆனாலும் ஐந்து பெண்களைப் பெற்றவர், மகனின் ஆசையை எங்கனம் நிறைவேற்றி இருக்க முடியும். அவர்கள் வீட்டில் , மற்றவர்களும் சாருவின் பொறுப்பில் தான் இருந்தனர்.

ஒரு பெருமூச்சு விட்டவர், “யாரையோ கல்யாணம் பண்ணான்னு சொன்னாங்களே, என்னடா ஆச்சு” எனச் சாருவைப் பற்றிக் கேட்க,

“பாவம் மா அவ, இருபத்தி அஞ்சுவருசம் மூத்தவராம்.நர்ஸ் வேலை தான் பார்த்திருக்கா” எனக் கேள்விப் பட்டதை எல்லாம் அம்மாவிடம் கொட்டி வருந்தினான்.

“அவரவர் தலையில் எழுதி இருக்கிறது தானே நடக்கும். அந்த பையன் இவளை நல்லா வச்சுக்குறானா” என கேட்க, ரஜினீஷ் புகழ் பாடி முடித்தான்.

அப்போது தான் உள்ளே வந்த சரயு, “ரக்கடு , மாமாவை கவுத்திடுச்சு. உண்மை தெரியிறப்ப இல்ல இருக்கு.” மனதில் நினைத்தவளுக்கு, இரண்டாவது முறையாக அவளைப் பற்றியதும், அண்மையும் நினைவில் வர, “போறதுக்குள்ள, குடும்பமே நடத்திடுவான் போல, என்ன ஒரு ஆட்டிட்டுயூட் “ நினைத்தவளுக்கு, தன் அப்பாவும், இவனைப் போல் தான் இருந்திருப்பாரோ என்ற எண்ணமும் தோன்றியது


இரண்டு குடும்பங்களும் சேர்ந்து கிட்டதட்ட முப்பது பேர் வரை காலை உணவுக்கே ராம்ஸ் ரிசார்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர். எதிர்பார்த்ததை விட ஆட்கள் அதிகம் என்பதால், சிப்பந்திகள் முழித்து நிற்க, சாரு விசாரித்து விட்டு சில யோசனைகளைச் சொல்லித் தானே சமையல் களத்தில் இறங்கினாள்.

இட்லி , தோசைக்கான மாவு குறைவாக இருக்க, பொங்கல், வடை , பூரி, ப்ரட் ஆம்லேட், சாண்டவிச் என ஐயிட்ங்களை நிறைத்து விட்டாள்.

சாரு அடுப்படியில் நிற்பதைப் பார்த்து விட்டு “ என்னக்கா பழக்கத் தோஷமா” என யமுனா வர, “இவ்வளவு பேருக்கு அம்மா கூட சேர்ந்து சமைச்சது. குத்து மதிப்பா தான் செய்யிறேன். டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாரு” என தட்டில் வைத்துத் தர, சுவைத்து விட்டு,

“ சான்ஸே இல்லை. நீ மட்டும் எப்படி இவ்வளவு ருசியா சமைக்கிற? சாம்பார் வாசத்தில் தான் நானே ஓடிவந்தேன்” என அங்கேயே உட்கார்ந்து ஒரு பிடி, பிடிக்க,

“ பந்திக்கு முந்துனு, சும்மாவா சொல்லியிருக்காங்க. வாத்தியாரம்மா எங்களுக்கு எல்லாம் ஏதாவது மிஞ்சுமா” சந்துரு கேலி பேசியபடி வந்தான்.

“ கண்ணு வைக்காதீங்க சேட்டா, எங்க சேச்சி சமையல் சாப்பிட்டு எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா. நீங்களும் வாசம் பிடிச்சு தானே வந்திருக்கீங்க” என்றவள்,

“ மிச்சம் இருக்குமான்னு எல்லாம் சந்தேகம் வேண்டாம். வழக்கம் போல எப்படியும் சேச்சி உங்களுக்கு, ஸ்பெஷலா எடுத்து வச்சிருப்பாங்க” என்றாள்.

சாரு, “ சும்மா இருடி” என அடக்க, அந்த நாள் நினைவில் புன்னகைத்துக் கொண்டவன், “ துபாயில் நானே பொங்கி திங்கும் போது அதெல்லாம் நினைச்சுகுவேன்” சந்துரு எதார்த்தமாகச் சொல்ல, சாருவுக்கு வருத்தமாய் போனது.

மதியம் முதல், ஸ்பெசல் அயிட்டங்களை செய்ய, திண்டுக்கல்லிலிருந்து, சமையல் கலைஞர்களை வரப் பணித்து விட்டான் ரஜினீஷ் . சாரு சமையலறையில் நிற்பதால், அவனும் அந்த பக்கமே சுற்றிக் கொண்டு இருக்க வேலை ஜரூராக நடந்தது.

பானுமதி, சந்திரா, மாலதி, ரதி, கீதா, வேணி, யமுனா என ஏழு பெண்களின் குடும்பங்கள், ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக்க கொண்டனர்.

“கீதா, உன் மகன் வரலையா” சந்திரா கேட்க,

“ஆபீஸ் வேலை இருக்கு, நாளைக்கு வந்துடுவான்” என்றாள்.

ஆண்கள், அவரவர் வேலை, தொழிலைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். மதுரையில் உள்ள எல்லோருக்குமே, ரஜினீஷை தெரிந்து இருந்தது.

“பிக் ஷாட், இவ்வளவு சிம்பிளா இருக்காரே” என வியந்தனர்.

“ உங்களுக்கு, நிறைய பிஸ்னஸ் இருக்கும் போது, இந்த ரிசார்ட் ல எப்படி இன்ட்ரஸ்ட் வந்தது” என வசந்த கேட்க,

“ இது அம்மாவோட நேட்டிவ். பெரியப்பாவுக்காகக் கட்டினதை, அப்படியே எக்ஸ்பேண்ட் பண்ணோம்” என்றான்.

“ பன்றிமலை, வேற யாரோ, இந்த ஊர் பேர் சொல்லி ஞாபகம்” தயாளன் யோசிக்க, ரஜினீஷ் பேச்சை மாற்றி இருந்தான்.

“ பைக் ரைட் கேப்பிங், நீர்வீழ்ச்சி, நிறையச் சிற்றோடைகள் இருக்கு. உங்களுக்கு எது விருப்பமோ, சொன்னா தாமு அரேஞ்ச் பண்ணித் தருவான்” என்றான்.

பைக் ரைடு செமயா இருக்கும்.மலை ஏறலாம். அருவியில் குளிக்கலாம் என ஆளுக்கு ஒரு விருப்பத்தைச் சொல்ல, யாரு எங்கே வருகிறார்கள் என வசந்த் கணக்கு எடுக்க, அதற்கு தகுந்த ஆட்களை ரஜினீஷ் ஏற்பாடு செய்தான்.

சரயு தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருக்க, ஏதோ எடுப்பவன் போல் சென்ற, ரஜினீஷ்,”பைக்ரைட் போலாமா பேபி. அத்தானைக் கட்டி பிடிச்சிட்டே வருவ” ரகசியமாய் கேட்க,

“ யாரு அந்த பொத்தான். உன் குட்டு உடையற அன்னைக்கு இருக்கு” என்றாள்.

“ அதெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன். நீ அத்தானை காதலிக்கிற வேலையை மட்டும் பாரு” எனக் கண்ணடிக்க, அவன் காலில் நறுக்கென மிதிக்க, சட்டெனச் சுதாரித்து நகர்த்தி விட்டான்.

அவளுக்குத் தான் மேசையில் இடித்துக் கொண்டு வலி உயிர் போனது.

“ அம்மா” எனக் கத்த,

“ என்னாச்சு” சட்டெனக் குனிந்தவன், அவள் பாதத்தைப் பற்ற, அவள் கத்தியதில் சித்திகள் இருவரும் அவளிடம் வந்திருந்தனர். ரஜினீஷ் அவள் பாதம் பற்றியிருந்ததை பார்த்து விட்டு

“ நீங்க எந்திரிங்க சார். நான் பார்க்கிறேன்” என்றாள் ரதி.

“டேபிள் எட்ஜ்ல , ஆங்கில் இடிச்சிருக்கு. வலிக்கும் பாவம்” என்றவன், போன் செய்து, ஐஸ் எடுத்து வரச் சொல்ல,

“ விடுங்க. நான் பார்த்துக்குறேன்” அவள் கண்ணீரோடு காலை இழுத்தாள் .

“ ஷ், ஷெட்டப். பார்த்திட்டு இருக்கேன்ல. அப்படி என்ன அஜாக்கிரதை” அவன் திட்ட, ரதியும், மாலதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஐஸ் க்யூபை கர்சீபில் சுற்றி ஒத்தடம் கொடுத்தவன், “இந்த காலை ஊணாமல் எந்திரி. மெடிக்கல் ரூம்ல உட்கார்ந்துக்கோ” என அவளை தூக்க முயல, சரயு மற்றும் அவள் சித்திகளும் அதிர்ந்து,

“ நீங்க தள்ளுங்க. நாங்க கூட்டிட்டு போறோம்” எனவும், அவர்களுக்கு ஒரு முறைப்பைத் தந்து அங்கிருந்து சென்று விட்டான்.

“ ஏன்டி, இந்த பையனை முதவே தெரியுமா” ரதி கொக்கி போட,

“ நான் ப்ராஜெக்ட் பண்ண சாப்ட் வேர் கம்பெனில, இவர் பைனான்ஸ் பார்ட்னர்.” என்றாள்.

“ அவ்வளவு தானா” மாலதி சந்தேகமாக கேட்க,

“ நம்ம வீட்டில் வந்து, என்னை பொண்ணு கேட்கிறேன்னு சொன்னார் சித்தி. நான் தான் அம்மாச்சிக்கு அதெல்லாம் பிடிக்காது,வராதீங்கன்னு சொன்னேன். கிரகம், இவன் டிசார்டுக்கே வந்திருக்கோம்” அவள் முகத்தைச் சுளிக்க, இப்படி போகுதா கதை என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நல்ல சாய்ஸ் தான் என்பது மாலதியின் அபிப்ராயம். பெரிய இடம் என ரதி பயந்தாள்

காலை உணவை முடித்து, பெரியவர்கள் பேச அமர்ந்து விட, இளையவர்கள் , மலையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர். சரயுவுக்குக் கால் வீக்கம் குறைந்திருந்தது. ஆனாலும் வலி இருக்க, எரிச்சலை எல்லார் மேலும் காட்டினாள்.

“ இப்ப என்னடி, இன்னைக்கு இல்லைனா நாளைக்கு போயிக்கலாம்.” சந்திரா சமாதானம் சொல்ல,

“ நரேனை பைக் ரைட் கூட்டிட்டு போகச் சொல்றேன்” என்றாள் யமுனா. அதுவும் அவளுக்கு பிடித்தமானதாக இல்லை.

சந்துரு,” குட்டிமா. பக்கத்தில சோலைகாடுன்னு இருக்காம். அருவிக்கரை பங்கதில காலுக்கு ஆயில் மசாஜ் தருவாங்கலாம். வர்றியா” என வினவ,

இங்கு இந்த பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து, அவளின் கல்யாண பேச்சைக் கேட்பதை விட, இது மேல் என நினைத்து தலையை ஆட்டினாள்.

“ சந்திரா, அத்தான் வரேன்னாரு. நானும், அவருமா சரயுவை கூட்டிட்டு போறோம்” எனவும்,

“ சரயு பேரைச் சொல்லி, நீங்க மாமன், மச்சான் கும்மாளம் அடிக்க போறீங்க. போயிட்டு வாங்க” என அனுப்பி வைத்தாள்.

அவள் இருக்குமிடத்திலேயே வந்து நின்ற கருப்பு ஸ்கார்பியோவை பார்க்கவும், ‘ இவன் வேலை தானா’ என முதலில் மறுக்க தோன்றியது. ஆனாலும் பெரியம்மா, அம்மாச்சி, அத்தைகள் கூட்டத்துக்கு நடுவில் இருப்பதுக்கு இதுவே மேல் என கிளம்பினாள்.

அவர்கள் செல்வதை பார்த்த யமுனா, சாருவிடம், “ சோழியன் குடுமி சும்மா ஆடாதே. அவனுக்கு என்ன வேணுமாம். சரயுவையே சுத்திட்டு திரியிறான்” என்று கேட்க,

“நானே பேசணும்னு இருந்தேன், என் கூட வா” என அறைக்கு அழைத்து சென்று, ரஜினீஷ் பற்றி எல்லாமும் சொல்ல, பொறுமையாகக் கேட்ட யமுனா அக்காவை முறைத்தாள்.

“ நீ சொல்ற மாதிரி, அவுங்க சொந்தமா இருந்தா ராஜாத்தி மாமி, நம்மளை தான் முதல்ல திட்டுவா. இதெல்லாம் ஒத்து வராது. நீ அவன்கிட்ட சொல்லிடு” என்றாள்.

“ரஜ்ஜுவுக்கும் வேற யார் இருக்கா, நான் தானே செஞ்சு வைக்கணும். நீயே என்ன சொல்லுவ? ரஜ்ஜுவுக்கு ஒரு பொண்டாட்டி வந்தா என்னைப் பங்களா விட்டுத் துரத்தி விட்டுருவான்னு சொல்லுவேல்ல. சராயுவா இருந்தா அப்படி நடக்காது. தாயில்லா பொண்ணை நான் பார்த்துக்குவேண்டி” எனவும்,

"நான் உன்னை அந்த வீட்டுலேருந்து கடத்தலாம்னு பார்த்தா, நீ இன்னொருத்தியை கூட்டிட்டு போறேன்னு சொல்ற" எனக் குறை பட,

"என்னைய எப்படிக் கடத்துவ"

"ராஜாத்தி மாமி, மகனுக்கு பொண்ணு பார்க்க சொல்றாங்களாம் . சந்திராக்கும், ரதி க்கும் , உன்னை செய்யணும்னு ஆசை " என விவரத்தைச் சொல்ல,

"ம்க்கும், அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன். சந்துருவை பார்க்கணும்னு ஆசை, பார்த்துட்டேன். இனிமே போயி ஒருத்தங்க வீட்டில அட்ஜெஸ்ட் பண்ணி வாழ என்னால முடியாது. "

"அவர் மேல உனக்கு இஷ்டம் இல்லையா"

"இஷ்டம் தான், உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச மனுஷன். அப்டியே இருக்கட்டும். கிட்ட போயி, அந்த அருமையை கெடுத்துக்க விரும்பலை" என்றாள்

"என்னக்கா இப்படி சொல்லிட்டா, உனக்காக தான், சரயு, நரேன் சம்பந்தத்தையே முன்னெடுத்தோம்" எனவும்,

"இந்த விசயத்துக்கு வா. ரஜினிஷ்க்கு சரயுவைப் பண்ணி வைக்கிறது நம்ம பொறுப்பு" பேச்சை திருப்பினாள்

“அப்ப , கீதாவுக்கு என்ன பதில் . நரேனை வேற வரச் சொல்லி இருக்கோம்”

“அவனுக்கு ஆப்சன் இருக்குடி. ரஜ்ஜுவுக்கு , சரயுவைப் பண்ணி வச்சா, அந்த பெரியவர் நிம்மதியா கண்ணை மூடுவார்”

“ம்ம், ராஜத்திமாமி உனக்குச் சாபம் விடுவா” என்றாள்.

“ஆயிரம் பொய் சொல்லி, ஒரு கல்யாணத்தை பன்னலாம்பங்க, ரஜ்ஜுவோட அம்மா யாருங்கிற உண்மையை மட்டும் சொல்லாமல் விட்டு, இந்த கல்யாணத்தை முடிச்சுடுவோம்” எனவும், யமுனா யோசிக்க,

“எனக்கு ஒரு மகன் இருந்தா, அவனுக்காக யோசிக்க மாட்டிங்களா” சாருமதி விடாமல் கேட்க,

“ திடீருன்னு, அம்மா மகன் பாசம் பொங்குது” எனக் கோபித்தவள்,

“எனக்கு ஒன்னும் தெரியாது. கீதாகிட்ட நீயே பேசு” என்றாள்.

பாசத்தில் தவித்தது அவள் நெஞ்சம்
 
Last edited:

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
185
இரண்டு முறை அம்மா மகன் பேசுவது வருகிறது...check பண்ணிக்கோங்க மா 🤩🤩👍🏻
 
Top Bottom