Kasavu
Member
- Joined
- Apr 29, 2025
- Messages
- 40
நெஞ்சம் -10-பார்ட்-2
சற்று முன், ராம்ஸ் உல்லாச விடுதியின் அலுவலக கட்டிடத்துக்குள் நுழைந்த சந்துருவை, வரவேற்பு அறை சோபாவில் அமரச் சொல்லி விட்டு மேலாளரைத் தேடிச் சென்றான் காவலாளி.
வரவேற்பறை, அதிலிருந்து நீண்ட காரிடார் சென்று அதன் முடிவில் ஒரு பிள்ளையார் வீற்றிருந்தார்.
“ எனக்கு வேண்டும் வரங்களை,
இசைப்பேன் கேட்பாய் கணபதி…”
சன்னமான குரலில் பாட்டுக் கேட்க, சந்துருவின் இதயம் வேகமாகத் துடித்தது. பள்ளி காலத்தில், கொலு வைக்கும் ஒரு மாமி சொல்லிக் கொடுத்தது. அவன் சகோதரிகளுக்கு எல்லாம் ஸ்ருதி ஏறி இறங்கி எங்கோ செல்ல, சாரு மட்டுமே கச்சிதமாகப் பாடுவாள்.
“ மனதில் சலனம் இல்லாமல்…
மதியில் இருளே தோன்றாமல்..”
காற்று கணபதி கீதத்தைச் சுமந்து வர, சந்துரு குரல் வந்த திசை நோக்கி, பாடலின் பொருளாக, அவன் மனதின் சலனம் ஓய்ந்து, மதியில் இருள் அகன்று, அவனின் சாரு மதியைக் காண அடியெடுத்து வைத்தான்.
காரிடாரின் கடைசியில் மலையாளக் கரை அரை வெள்ளையில் தங்கச் சரி போட்ட கசவு சேலையில், பிள்ளையாருக்குப் பூக்களைச் சூட்டிக் கொண்டு இருந்தாள் அந்த பெண்.
“ நினைக்கும் பொழுது, நின் மௌன,
நிலை வந்திட நீ செய வேண்டும்”
நினைக்கும் பொழுதே, ஆர்ப்பரிப்பு அடங்கி, மவுன நிலை ஆட்கொள்ள வேண்டும் என அவள் வரம் வேண்டி அவள் பாடிக் கொண்டிருக்க, ‘சாரு தானா? சின்ன பொண்ணா தெரியுதே?’ எனக் கூர்ந்து பார்த்தான்.
பார்வை மறைத்த பொழுது தான், தான் அழுது இருப்பதே அவனுக்கு உரைத்தது. அவள் குரலே அவனில் அத்தனை தாக்கத்தை ஏற்படுத்த, காண்பது கனவல்ல நிஜம்.
“கனக்கும் செல்வம், நூறு வயது
இவையும் தர நீ அருள்வாயே”
‘கனக்கும் செல்வம் கூட வேண்டாம், நூறு வயதை மட்டும் தந்துவிடு, தொலைத்த வாழ்வின் நேசத்தைத் தேடிக் கொள்கிறோம்’ அவனும் வேண்டியபடி, அவளையே பார்த்தபடி ,”சாரு” என வாயசைத்தான்.
கணபதியிடம் வரம் வேண்டிக் கொண்டு இருந்தவள் கண்ணிலும் நீர் உருக,
எதோ தட்டிவிழுந்த ஓசையும், “ சாரு” என்ற அழைப்பும் கேட்க,
சட்டென திரும்பினாள்.
பாதி வழி வந்திருந்த சந்துரு, மூச்சு வாங்க நின்றான். பிடிமானத்துக்குப் பிடித்த பூ ஜாடி கீழே விழுந்திருக்கும் போல,
அவஸ்தையாய் அவன் நிற்க, சமீபமாக அவன் புகைப்படத்தை யமுனா காட்டப் பார்த்திருந்தவள், அடையாளம் கண்டு,
“சந்துரு” என்ற கூச்சலோடு அவனிடம் ஓடியிருந்தாள். அவ்விருவரையும் தவிர வேறு யாரும் அங்கில்லை.
“ சாரு” கண்ணீரும், சிரிப்பும், தவிப்புமாக அவன் அழைக்க, முகமெல்லாம் வேர்த்து இருந்தது.
சட்டென அவனிடம் வந்தவள், “ சந்துரு, என்ன பண்ணுது. ஏன் இப்படி நிக்கிற” வேகமாக அவன் கையை பிடித்து இழுத்து வந்து இரட்டை சோபாவில் அமர்த்தி,
“ இதென்ன இப்படி வேர்த்து இருக்கு” என்றவள், தன் சேலை முந்தானையைக் கொண்டு அவன் நெற்றி வியர்வையைத் துடைத்து, கன்னத்தைத் தட்டி, நாடியைப் பார்க்க, கண் இமைக்காது அதே நிலையில் அவளைப் பார்த்திருந்தான். மேலும் வியர்வை துளிகள் முளைத்துக் கொண்டிருந்தன.
“ என்னடா பண்ணுது. யார் கூட வந்த. நெஞ்சு எதுவும் வலிக்குதா” என அவன் இடது புற மார்பைத் தடவி, “ யாராவது இருக்கீங்களா” எனக் குரல் கொடுக்க, அதற்குள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு இருந்தவன்,
“ கத்தி ஊரைக் கூட்டாதடி சண்டை கோழி. எனக்கு ஒன்னும் இல்லை” என அவள் வாயைப் பொத்தினான்.
“ உனக்கு விளையாட்டா இருக்கா, உடம்பெல்லாம் வேர்த்து நனைஞ்சிருக்கு” என்றவள் அருகிலிருந்த ரிசீவரை எடுத்து நேற்று ரஜினீஷ் சொன்னது போல் 9 ஆம் நம்பரை அழுத்த, அவன் உடனே எடுத்தான்.
“ ரஜ்ஜு, உடனே ஆபீஸ் ரூமுக்கு வா. சந்துரு” என்றவளை அதற்கு மேல் சொல்ல விடாமல், சந்துரு போனை கட் பண்ணி இருந்தான்.
“நான் தான் எனக்கு ஒண்ணும் இல்லைனு சொல்றேன்லடி. உன்னை திடீர்னு பார்க்கவும் எமோஷனல் ஆகிட்டேன்” என முறைத்தான்.
“ எமோஷனல் ஆகுறது தாண்டா பிரச்சினையே, அறிவு கெட்ட சந்து” என்றவள், மீண்டும் அவன் முகம், உடல், கை என எல்லாவற்றையும் தொட்டுப் பார்க்க
கலகலவென சிரித்தவன், “ பையன் அழகா இருக்கான்னு உரசி பார்க்குறியா. மீனாட்சியம்மா பேரன் அவ்வளவு சுலபமா எவகிட்டயும் சிக்க மாட்டேன்” என்றான்.
பற்றி இருந்த கையை விட்டவள், “ நான் எவ்வளவு பதறி போயி இருக்கேன். உனக்கு லந்து, இந்த பெருமைக்கு தான், நாலு எருமை வயசு ஆகியும் ஒண்டிக்கட்டையா நிக்கிற ” என அலங்காரத்துக்கு வைத்திருந்த குச்சி ஒன்றை எடுத்து அவனை அடிக்க,
“ஏய் வேணாம். சொன்னா கேளு” என பதின் சிறுவனாக மாறி இருந்தான்.
குச்சியைக் கீழே போட்டவள் அதே சோபாவில் குத்த வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு அழுதாள்.
“ சாரு, சாருமா, சாருமதி. ஐயம் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட். இதோ இருமிக் காண்பிக்கிறேன் பாரு” என அவன் இரும,
“ உனக்கு விளையாட்டா இருக்கா. நான் பயந்துட்டேன்” என்றவள் முதுகை ஆசுவாசமாகத் தட்டிக் கொடுத்தான்.
“ எனக்கு ஒண்ணும் இல்லைடி. திடீர்னு உன்னைப் பார்த்தேனா. கடைசியா பார்த்த மாதிரி அப்படியே இருந்த. தாவணிக்குப் பதில் சேலை, அதில எமோஷனல் ஆகிட்டேன். அதென்ன உனக்கு மட்டும் வயசே ஆகலை. அப்படியே இருக்க” வினவ
“அதே சாருவா, என் சந்துரு கண்ணுக்கு தெரியனும்னு வரம் வாங்கி இருக்கேன்” என முறைத்தாள். சில நிமிடங்களில் நவரசங்களையும் பகிர்ந்து இருந்தனர் இருவரும்.
“ குருவாயூரப்பன்கிட்டயா” என வினவ,
“ இல்லை பிள்ளையார்கிட்ட” என்றாள்.
“ அவர், குமரிய கிழவியாக்குவார் தெரியும். ஔவை பாட்டிய பத்தி படிச்சிருக்கோம். இந்த வேலையும் பார்க்கிறாரா. பாருப்பா” என வியக்க,
“ உன் பேச்சு மாறவே இல்லை சந்துரு” அவனைப் பார்த்தபடி சொன்னாள்.
“ அதே சந்துரு தான்” என்றான். இருவரும் ஒருவரை ஒருவர் தன்னை மறந்து பார்த்திருக்க,
“ சாரும்மா” எனக் குரல் கொடுத்தபடி வந்தான் ரஜினீஷ்.
சட்டெனத் தன்னிலை மீண்டவள், “ரஜ்ஜு, இது சந்துரு” என அறிமுகப் படுத்த,
“ உன் வளர்ப்பு மகனை நேத்தே மீட் பண்ணிட்டேன” தலையசைத்தான் சந்துரு.
“ சரி தான் “ என்றவள், “ கொஞ்சம் முன்ன சந்துருவுக்கு வேர்த்துக் கொட்டி, என்னவெல்லாமோ ஆகிடுச்சு. பக்கதில டாக்டர் இருந்தா வரச் சொல்லுப்பா” என்றாள்.
“ எனக்கு ஒண்ணும் இல்லை. நீ சீன் கிரியேட் பண்ணாத. குடும்பமா வந்திருக்கோம். கவலைப் பட்டு ட்ரிப்பை கேன்சல் பண்ணிடுவாங்க” என முறைக்க,
“ ஏன் சார்” என்றவன், ஒரு எஸ்க்யுஸோடு சந்துருவின் நாடியைப் பிடித்து பல்ஸ் செக் செய்து விட்டு, “ நார்மல் தான்” என்றான்.
சரியாக அந்த நேரம்,ரஜினீஷின் பின்னோடு மாமாவைத் தேடி வந்த சரயு, மாமனின் மணிக்கட்டைப் பிடிப்பதைப் பார்த்து விட்டு,
“என்னாச்சு மாமா” என ஓடிவந்தாள்.
சந்துருவின் அருகில் அமர்ந்திருந்த சாரு அவள் கண்ணில் படவே இல்லை.
“மாமா, என்னாச்சு. ஏன் பல்ஸ் செக் பண்றிங்க” எனக் கலவரமாகக் கேட்க,
“குட்டிமா, எனக்கு ஒன்னும் இல்லை. என்னை பாரு.” சற்று சொன்ன வார்த்தைகளில் சமாதானம் ஆகாமல், அவளும் சந்துருவைத் தொட்டுப் பார்க்க,
“ஹி இஸ் பைன் “ என்றான் ரஜினீஷ்.
“நீங்க என்ன எம்பிபிஎஸ் டாக்டரா. அவர் வந்து சொல்லட்டும்.” என அவன் மேல் கோபப்பட,
“குட்டிமா , அவர் மேல எதுக்கு கோபம். இந்த பக்கம் திரும்பி பாரு. இந்த சுந்தரியை பார்த்ததில் தான், மாமா எமோஷனல் ஆகிட்டேன்” எனச் சாருவை கை காட்டினான்.
“சுந்தரியா, சாரு அத்தையைப் பார்த்தா தானே, உங்க இதயம் வேகமா துடிக்கனும்” வெள்ளேந்தியாய் கேட்டு விட, சாரு வாய்க்குள் புன்னகையை அடக்க,
“என் இமேஜை டேமேஜ் பண்ணாத குட்டிமா. இவன் தான் உன் சாரு அத்தை” என்றான்.
“ சுந்தரி, நீங்க வச்ச செல்ல பெயரா, எனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்” சரயு, அசட்டுக் கேள்விகளாகக் கேட்க,
“அச்சோ போதும், மாமாவும் மருமகளுமாக என மானத்தை வாங்காதீங்க. சந்திரா ஒருத்தியே போதும். லந்தை கொடுத்தே என்னை ஒரு வழி ஆகிடுவா” என்ற சாரு, ரஜினீஷ் பார்வையை வைத்தே அவளை யாரெனத் தெரிந்து கொண்டவள்
“ பாரதி மகளா” என வாஞ்சையாய் கன்னம் வழித்துக் கொஞ்ச, ஆம் என் சந்துரு தலை அசைத்தான். பின்னர் முதல் வேனில், தாங்கள் வந்து விட்டதையும், மற்றவர்கள் வருவதையும் சொல்லிக் கொண்டிருந்த போதே, சூடான தேநீர் வந்தது.
“குடிங்க சார்” என சந்துருவை உபசரித்தவன், “டாக்டர் வந்துட்டு இருக்கார்” என்றான். பணியாள் சாரு , சரயுவுக்கும் தேநீர் பரிமாற, தேவையான ஒன்று என அருந்தினர்.
“எதிர் பார்த்ததை விட, ஆட்கள் அதிகமா வருவாங்க போலத் தம்பி” என சந்துரு, ரஜினீஷிடம் சொல்ல,
“எவ்வளவு பேர்னாலும் வரட்டும். சமாளிச்சுக்கலாம்” என்றவன்,
“வாங்க” என மெடிக்கல் அறைக்கு அழைத்துச் சென்று தானே ரத்த அழுத்தம் சரி பார்க்க, டாக்டர் ஒருவரும் வந்து சந்துருவைப் பரிசோதித்தார்.
“ரத்த அழுத்தம் ஏறி இறங்கி இருக்கு, அவ்வளவு தான், பயப்பட ஒண்ணுமில்லை ” என்றவர, சந்துரு மருந்து எதுவும் எடுத்துக் கொள்கிறானா என விசாரிக்க,பெண்கள் இருவரையும் பார்த்து விட்டு, “பிரஸர் டேப்லெட் மட்டும்” என தன் அலைப்பேசியில் இருந்த அறிக்கையைக் காட்டினான்.
பெண்கள் இருவரும் அவனை முறைக்க, “உங்க வயசுக்கு இது ஓகே தான். ஸ்ட்ரெஸ் இல்லாமல் ஃபிரீ மைண்டா இருங்க” என அறிவுறுத்திச் சென்றார். ஒன்றுமில்லை எனச் சொன்ன பின்பே, பெண்கள் இருவருக்கும் நிம்மதி ஆனது.
சந்துருவையே பார்த்த பின், சாருவுக்கு மற்றவரைப் பார்ப்பதில் என்ன தயக்கம். அடுத்து வந்த ராஜாத்தி மாமி, முதல் இரண்டு குடும்பங்களையும் அன்பாகவே வரவேற்றாள். அவளின் நடை, உடை பாவனை, கம்பீரமாக மாறி இருந்தது.
ரஜினீஷ் அவளுக்குக் கொடுத்த மரியாதையின் காரணமாக, ரிசார்ட் பணியாளர்கள் அனைவரும், அவள் கண் அசைவில் வேலை செய்ய தயாராக இருந்தனர்.
அடுத்து வந்த அவளது தங்கைகள் குடும்பமே சாருவை ஆச்சரியமாகப் பார்த்து நின்றனர்.
எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கவும்,
துள்ளிக் குதித்தது நெஞ்சம்.