• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

ஆடியிலே முத்தெடுத்து - 22

Pochampalli

Member
Joined
Sep 3, 2024
Messages
48
அத்தியாயம் – 22

மதுமிதாவை அவள் வீட்டில் இறக்கிவிட்ட நிரஞ்சன் தன் வீட்டுக்கு ஒருவித மன உளைச்சலுடன் சென்றான். மதுமிதாவிற்கு நடந்த நிகழ்வுகளே அவன் மனதில் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தது.

எதற்காக ஒருவன் தேவையில்லாமல் மதுமிதாவின் மேல் இப்படி வஞ்சம் வைத்துப் புகாரளிப்பான்? ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் அவன் உள்மனது சொல்லியது. தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான். மாலையில் விபத்தை ஏற்படுத்தியவன் யார் என விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

காவல்துறை நண்பனின் வழியாக அவனைப் பிடித்துத் தீவிரமாக விசாரித்ததில் அதற்குமேல் அவனால் உண்மையை மறைக்க முடியவில்லை. அவன் பணம் வாங்கிக் கொண்டே மதுமிதாவின் மேல் அப்படி ஒரு குற்றத்தைச் சுமத்தியிருக்கிறான் என்ற உண்மை வெளியில் வந்தது.

வேண்டுமென்றே வந்து வண்டியில் மோதி கீழே விழுந்தவனுக்கும் அவனுக்கு ஆதரவாகப் பேசிய கூட்டதில் இருந்த இரண்டு நபர்களுக்கும் மதுமிதாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண் காவலருக்கும் என அனைவருக்கும் பணம் பகிரப்பட்டிருந்தது.

ஆனால் யாரிடமிருந்து பணம் வந்தது என்று எவ்வளவு விசாரித்தும் அவர்களால் உருப்படியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

உண்மையை அறிந்த நிரஞ்சனின் காவல்துறை நண்பன் இப்படிச் சட்டத்தை மதிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு அப்பாவி பெண் மீது வீண் பழியைச் சுமத்தியிருக்கிறார் என்று அந்தக் காவலாளியைப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தான். அதற்குரிய தண்டனையையும் தருவதாகச் சொல்லியிருந்தான்.

அனைவரிடமும் இனிமையாகப் பழகும் மதுமிதாவிற்கு அப்படி யார் எதிரிகள் இருப்பார்கள் என நிரஞ்சனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது நிரஞ்சனுக்கு.

ஒருவேளை தன்னை எதிர்க்க வழியில்லாமல் தனக்குப் பிடித்தவளை தாக்குகிறார்களோ? அப்படி அவன் மேல் குரோதத்தையும் வன்மத்தையும் கக்குபவர்களின் பட்டியலை எடுத்தால் தொழில்முறையில் சிலர் இருக்கிறார்கள்.

அவர்கள் தொழிலில் வேண்டுமென்றால் கையை வைப்பார்கள். இப்படிக் குடும்பத்து ஆட்களின் மேல் வைக்க யோசிப்பார்கள். அப்படியே என்றாலும் அவன் அன்னை, தங்கை என அவர்களை விட்டுவிட்டு ஏன் மதுமிதாவைத் தாக்க வேண்டும்? அதுவும் அவளை அவன் விரும்புவது சொற்பமானவர்களுக்கே தெரியும்.

ஒருவிதக் குழப்பத்தில் இருந்த நிரஞ்சனை நந்தகுமார் அழைத்தான். “என்னடா, ஒரே நாள்ல உலக லெவல்ல ஃபேமஸ் ஆகிட்ட போல. உன்னோட வீடியோ எங்க பார்த்தாலும் வைரலாகிப் பத்திகிட்டிருக்கு. எனக்கு ஆறு குரூப்ல இருந்து பாவோர்ட் பண்ணிட்டாங்க” எனப் பரிகாசமாக ஆரம்பித்தான்.

“நீ வேற ஏன்டா?” எனச் சொன்ன நிரஞ்சனுக்குப் பட்டென்று பொறித் தட்டியது. ஒருவேளை இந்தக் காணொளியைப் பார்த்தப் பின்னரே அஞ்சனா மதுமிதாவைத் தொடர்பு கொண்டாளோ?

இல்லையென்றால் இத்தனை நாட்களாகக் காட்சியில் வராமல் அமைதியாக இருந்தவள் இப்பொழுது ஏன் மதுமிதாவைக் குறி வைத்துத் தாக்குகிறாள்? அவளிடம் நிரஞ்சனின் எண் இருக்கிறதே. அவனுடன் பேச வேண்டுமென்றால் நேரடியாக அவனை அழைத்துப் பேசலாமே.

அப்படியென்றால் அவளுக்குத் தான் மதுமிதாவுடன் சேர்வது பிடிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. யோசனையின் முடிவில் திடீரென்று அவனுக்கு வேறொன்றும் தோன்றியது.

ஒருவேளை மதுமிதாவிற்குச் சாலையில் பிரச்சனையை உண்டு பண்ண நினைத்தது அஞ்சனாவாக இருக்குமோ? அவள் மேல் வன்மம் வளர்க்கக் கூடிய முதல் ஆள் அஞ்சனாவாக மட்டுமே இருக்க முடியும்.

அவளால் நிரஞ்சனை எதுவும் செய்ய முடியாது என்று புரிந்திருக்கும். நிரஞ்சனுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அவளால் அசைத்திருக்க முடியாது. ஆகையினால் மதுமிதாவைக் குறி வைத்துத் தாக்கியிருக்கிறாள்.

நந்தகுமாரிடம் சற்றுநேரம் பேசிவிட்டு மீண்டும் காவல்துறை நண்பனிடம் பேசினான் நிரஞ்சன். தனக்குத் தோன்றிய சந்தேகத்தை அவனிடம் தெரிவித்துவிட்டு அந்தக் கோணத்தில் விசாரிக்கச் சொன்னான்.

விசாரணையின் முடிவில் நிரஞ்சன் நினைத்தது சரியே என்று ஊர்ஜிதப்படுத்தினான் காவல்துறை நண்பன். நிரஞ்சனை எதுவும் செய்ய முடியாத காரணத்தால் தனக்கு நிரஞ்சனின் மேலிருந்த வன்மத்தை மதுமிதாவின் மேல் கக்கியிருக்கிறாள் அஞ்சனா.

ஆக, அவர்களின் உறவை கலைக்க எண்ணியே அவனுடன் இருந்த புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி வைத்திருந்தாள். மதுமிதா அதைக் கண்டு கொள்ளவில்லை என்றதும் அவளுக்கு வேறு வழியில் துன்பம் தர நினைத்திருக்கிறாள்.

என்ன ஒரு வில்லத்தனம்? இவளைப் போய்த் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தோமே? தன்னைச் செருப்பால் அடிக்க வேண்டும். ஆனால் நல்லவேளையாகத் தப்பித்தான்.

ஒரு வருடத்திற்கு முன்னால் அவள் நந்தகுமாரின் மேல் வெறித்தனமாகத் தாக்குதல் நடத்திய போதே அவளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தன் மேலும் சரி விகித்தில் தவறு இருந்ததால் அவளை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டான்.

இதற்குமேல் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அஞ்சனா நேரடியாகத் தன்னுடன் மோதியிருந்தால் பிழைத்துப் போ... அவளுக்குத் தெரிந்தது அவ்வளவே எனத் தண்ணி தெளித்து விட்டிருப்பான்.

ஆனால் தன் உயிருக்கு உயிரான மதுமிதாவை எப்போது சீண்டினாளோ அதற்குமேல் அவன் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. அவளுக்குத் தான் யார் என்று கூடிய விரைவில் காட்டுகிறேன் எனச் சூளுரைத்துக் கொண்டான்.

அதன்பிறகு ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் அஞ்சனாவுக்கு அழைத்தான்.

அவன் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல இரண்டாவது மணிச் சத்தத்திலேயே எடுத்தாள். “இப்போ தான் என் ஞாபகம் வந்து உங்களுக்கு என்னைக் கூப்பிடணும்னு தோணுச்சா ரஞ்சு?” என அவனைச் சீண்டும் குரலில் வினவினாள்.

“இங்க பாரு, என் மதுவுக்கு ஏதாவது ஆச்சு... அப்புறம் உன் மூச்சுக் காத்து நின்னுடும்” என எடுத்த உடனேயே மிரட்டலில் இறங்கினான்.

“என்ன ரஞ்சு, ரொம்ப நாள் கழிச்சுப் பேசறீங்கன்னு சந்தோஷமா எடுத்தா, மிரட்டறீங்க. என் மூச்சு காத்து உங்களுக்குத் தான்னு முன்னாடியே எழுதி கொடுத்துட்டேனே. அந்த மூச்சுக் காத்தை உங்களுக்காக நிறுத்துறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை” என அவள் ஏதும் அறியாததைப் போல் பேச, நிரஞ்சனின் அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம் கிளறப்பட்டது.

“கொஞ்ச நாள் உன்னோட பழகின தோஷத்துக்காகப் பார்த்தேன். ஆனா நீ எப்போ என் மது மேல கையை வைச்சியோ இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது. தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்பேன்னு பார்த்தா என்னையே சீண்டறியா? என்ன நடக்குதுன்னு பாரு” என அவளிடம் சீறியவன் உடனே அழைப்பை வைத்துவிட்டான்.

அவளைப் பற்றித் தெரிந்திருந்தும், அவளிடம் பேசினால் தன் தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்பாள் என்று எதிர்பார்த்தது அவனின் முட்டாள்த்தனம்.

நண்பனை அடித்து, மருத்துவமனையில் படுக்க வைத்த போதே அவன் எதுவும் செய்யவில்லை. இப்போது மட்டும் பெரிதாக என்ன செய்து விடுவான் என அவள் அலட்சியத்துடன் தோள்களைக் குலுக்கி கொண்டாள்.

அவளுக்கு உள்ளத்தில் உற்சாகம் பொங்கியது. இதுவரையில் அழைக்காதவன் இப்போது அழைத்திருக்கிறான். அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தாகிவிட்டது. இந்த ஆட்டம் அவளுக்குப் பிடித்தது.

அடுத்து அந்த மதுமிதாவை என்ன செய்யலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தாள் அஞ்சனா. ஆனால் அவளுக்கு எந்த வாய்ப்பையும் நிரஞ்சன் கொடுக்கவில்லை. அவனால் என்ன செய்ய முடியும் என்று கூடிய விரைவிலேயே அவளுக்குக் காட்டினான் அவன்.

அஞ்சனாவின் தந்தை என்ன தொழில் செய்கிறார் என்றும் எவ்வாறு தொழில் செய்கிறார் என்றும் நிரஞ்சனுக்கு அஞ்சனாவுடன் பழக ஆரம்பித்ததில் இருந்தே தெரியும். அவர் ஒன்றும் தன் தொழிலை நேர்மையாகச் செய்யவில்லை.

தனக்கு எந்தப் பாதிப்பும் வரவில்லை என்று நிரஞ்சன் வாயை மூடிக்கொண்டு இருந்தான். அந்தப் பணம் இருக்கும் திமிரில் தானே அஞ்சனா இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறாள். இரு அதற்கு வேட்டு வைக்கிறேன் என அவள் தந்தையைப் பற்றி அவனுக்குத் தெரிந்த ரகசியங்களை எல்லாம் ஆதாரங்களுடன் சேகரித்து வருமான வரித்துறையினரிடம் அனுப்பி வைத்தான்.

அவர்களும் வந்த விவரங்களைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். இத்தனை நாட்களாக அவர்கள் தோண்டித் துருவி விசாரித்துக் கொண்டிருந்த விஷயம் இவ்வளவு சுலபமாக, லட்டு போல் அவர்கள் கையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

அதற்குமேல் தாமதிக்காமல் அஞ்சனாவின் தந்தையின் நிறுவனத்திலும் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனைக்குச் சென்றனர். அதைப் பார்த்த அஞ்சனாவின் தந்தையும் அண்ணனும் கதிகலங்கிப் போனார்கள்.

அவர்களின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் நிலையில் இருந்தது. காலையிலிருந்து மாலை வரை நடந்த சோதனையில் வரி கட்டாத, கணக்கில் வராத நிறையப் பணத்தையும் நகைகளையும் சொத்து பத்திரங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றிக் கொண்டு சென்றனர்.

அஞ்சனாவின் தந்தையும் அண்ணனும் ஓய்ந்து போய் அமர்ந்துவிட்டனர். அப்போது அஞ்சனாவின் தந்தைக்கு நிரஞ்சனிடமிருந்து அழைப்பு வந்தது.

இவன் ஏன் இப்போது அழைக்கிறான் எனப் புருவத்தைச் சுருக்கியவாறே அழைப்பை எடுக்க, “எப்படி இருந்தது இன்னைக்கு என்னோட பரிசு?” என அவனே இத்தனை களேபரத்திற்கும் காரணம் என ஒத்துக் கொண்டான் நிரஞ்சன்.

“நிரஞ்சன், நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை. என் பொண்ணு வேண்டாம்னா, ஒத்து வரலைன்னா அதோட விட வேண்டியது தானே? எதுக்காக எங்க தொழில் மேலே கையை வைக்கறீங்க?” எனச் சற்றுக் கோபமாகவே கேட்டார்.

அவருக்கு எப்போதுமே நிரஞ்சன் மேல் மதிப்பு உண்டு. இத்தனை சிறிய வயதில் எவ்வளவு பெரிய உயரத்தை எட்டிவிட்டான் என எப்போதுமே அவன் உழைப்பின் மீதும் அவனின் குணத்தின் மீதும் ஒரு பிடித்தம் உண்டு.

நிறைய மரியாதையும் உண்டு. அஞ்சனா அவனைத் தேர்ந்தெடுத்த போது அவர் மிகவும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தார். ஆனால் அவர்களுக்குள் ஒத்துவரவில்லை என்றதும் தன் மகள் கொடுத்து வைத்தது அவ்வளவே என நிதர்சனத்தையும் ஒப்புக் கொண்டார்.

அப்படிப்பட்டவன் எதற்காக அவர்களின் தொழிலைக் குறி வைத்துத் தாக்குகிறான் என அவருக்குக் கோபம் வந்தது.

“கோபம் வருதில்லை. அப்போ நான் உயிருக்கு உயிரா விரும்பறவ மேலே உங்க பொண்ணு தாக்குதல் நடத்தினா எனக்கு எவ்வளவு கோபம் வரணும்?” என வார்த்தைகளில் கோபத்தைக் கக்கியவன்,

“எனக்கு உங்க தொழில்ல தலையிடணும்னு எப்போதுமே ஆசை இருந்ததில்லை. உங்க தொழில் உங்க இஷ்டம். ஆனா சும்மா இருக்கிற என்னைச் சீண்டினா நான் சும்மா இருக்க மாட்டேன். நானும் பதிலடி கொடுப்பேன்.

இது வெறும் ஆரம்பமே. இதுக்கு மேலயும் அஞ்சனா நிறுத்தலைனா இன்னும் விளைவுகள் பயங்கரமா இருக்கும்” என்றான் நிரஞ்சன். அவன் உறுதியான குரலில் சொல்லவும், அஞ்சனாவின் தந்தையின் உடல் சற்று நடுக்கம் கொண்டது உண்மையே.

“உங்க பொண்ணுகிட்ட சொல்லிக் கண்டிச்சு வையுங்க. என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. உங்க பொண்ணுக்குக் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கணும். அது எல்லாப் பத்திரிக்கையிலும் வரணும்” என மிரட்டலாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் நிரஞ்சன்.

அஞ்சனாவின் தந்தைக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. எதற்கும் உதவாத ஒரு மகளைப் பெற்றெடுத்தற்காகத் தன்னையே நொந்து கொண்டார். தொழில் செய்வதற்கு அஞ்சனாவுக்கு எந்தப் புத்தியுமில்லை. பெரிதாகப் படிப்பும் ஏறவில்லை.

பணம் கொடுத்து முதுகலை பட்டம் வரையில் வாங்கியாகிவிட்டது. அதை வைத்துத் தொழில் செய்ய முடியாது. அதற்குப் புத்தியும் உழைப்பும் மிக அவசியம். இவளிடம் இரண்டும் இல்லை.

சரி எப்படியோ நிரஞ்சன் போன்ற ஒருவனைத் திருமணம் செய்யப் போகிறாள் என்று இருக்கையில் அவளது அவசரத்தனத்தால் அதில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டாள். அத்தோடு விட்டாளா சும்மா இருக்கும் அவனை ஏன் சீண்டிக் கொண்டிருக்கிறாள்?

அருகில் அமர்ந்திருந்த மகனிடம் அவர் இதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள அவனுக்கு வந்த ஆத்திரத்தில் கோபாவேசமாக அங்கிருந்து எழுந்து அவளது அறைக்குச் சென்று கதவை டமார் டமார் என்று தட்டினான்.

யார் இப்படித் தட்டுகிறார்கள் என அவளுக்குச் சுறுசுறுவென்று கோபம் வந்தது. கதவைத் திறந்தவாறே “அறிவு இல்லையா?” எனக் கேட்டாள்.

“அதை நான் உன்கிட்ட கேக்கணும். உனக்கு அறிவில்லையா? நிரஞ்சனைப் பிடிக்கலைன்னு சொன்ன சரின்னு விட்டுட்டோம். அப்புறம் எதுக்குத் திரும்பிப் போய்த் தூங்கிட்டு இருக்கிற அவனைச் சீண்டிட்டு இருக்க?” தங்கை என்றும் பாராமல் வந்த ஆத்திரத்தில் அவளது கழுத்தை இறுகப் பற்றிவிட்டான்.

அவன் அழுத்திய அழுத்தத்தில் தான் அவளுக்கு நிரஞ்சன் சொன்ன, ‘உன் மூச்சுக் காத்து நின்னுடும்’ என்ற வாக்கியத்தின் அர்த்தம் புரிந்தது.

அவள் மூச்சுக் காற்றுக்குத் திணற,“அதுவும் அவன் கல்யாணம் பண்ண போற பொண்ணைப் போய் இப்படிச் சீண்டி வச்சிருக்கிற” எனக் கத்தினான்.

“வர்ற ஆத்திரத்துக்குத் தங்கச்சின்னு பார்க்க மாட்டேன்” என அவன் இன்னுமே கழுத்தில் இருந்து கையை எடுக்கவில்லை. அதற்குள் அங்கே வந்த அவர்களது தந்தை மகனைக் கட்டுப்படுத்தி அவள் கழுத்திலிருந்து கையை விலக்கினார்.

“உனக்கு நிறையச் செல்லம் கொடுத்தது தப்பாப் போச்சு. நிரஞ்சன் ரொம்ப நல்லவன். அவனைக் கல்யாணம் பண்ணுவன்னு பார்த்தா இப்படிக் கோட்டை விட்டுட்டு வந்து நிக்கற. அவனை மாதிரி ஒருத்தனை எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டான்.

நிரஞ்சனுக்குப் பணம் பெரிசுன்னாலும் நேர்மை, நியாயம் தவறாதவன். இத்தனை நாள் பழகினதுல அவன் குணத்தைப் புரிஞ்சுக்காம அவன்கிட்டே போய் உன் புத்தியைக் காட்டியிருக்க” எனச் சரமாரியாகத் திட்டினார் தந்தை.

“சொல்லு, என்ன பண்ணின?” என அவள் அண்ணன் கர்ஜிக்க, அவள் பயத்தில் நடந்ததைச் சொல்லிவிட்டாள்.

“உன்னை இப்படித் தனியா விட்டா பிரச்சனை மேலே பிரச்சனையை இழுத்துட்டு வருவ. எவ்வளவு நஷ்டம் உன்னால. வரி ஏய்ப்புச் செய்தோம்னு பேப்பர்ல எல்லாம் போடுவான். கேஸ் போடுவாங்க. வர்ற ஆத்திரத்துக்கு...” எனக் கை முஷ்டியை இறுக்கியவன்,

“அப்பா இவளுக்குச் சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க. என் கண் முன்னாடி இருந்தா நானே இவளை ஏதாவது செஞ்சிடுவேன்” என்றான் அண்ணன்.

நிரஞ்சனும் இவளுக்குத் திருமணம் செய்து வைக்கச் சொன்னானே. “பார்க்கிறேன்” என்றவர் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. அஞ்சனாவுக்கு உடனே தெரிந்த நண்பரின் மகனைப் பேசி முடித்து, அடுத்த மாதத்தில் திருமணம் என அனைத்து பத்திரிக்கைகளிலும் அச்செய்தியை வெளியிட்டார்.

தந்தையின் தலையீட்டால் அஞ்சனாவால் அதற்கு மேல் எதையும் செய்ய முடியவில்லை. திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

தொடரும்...
 

Mrs Beenaloganathan

Active member
Joined
Mar 21, 2025
Messages
172
ஆணவத்தில் ஆடித்தீர்த்த
அஞ்சானாவின் வஞ்சக
ஆட்டத்தை நிரஞ்சன்
அழகாக முடித்து விட்டான் ..
அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻🤩
 
Top Bottom