Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 20
அந்தக் காணொளியில் நிரஞ்சனைப் பற்றி அவளுக்கு ஏற்கனவே தெரிந்த ஐஸ்கிரீம் கதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் அந்த ‘யூ டூபர்’.
அதாவது தன் காதலிக்குப் பிடிக்குமென்று ஹைதராபாத்திலிருந்து ஐஸ்கிரீமை வாங்கி ஐஸ் பெட்டியில் வைத்து, அதையும் விமானத்தில் ஏற்றி, ஏர்ஹோஸ்டஸிடம் கெஞ்சி அங்கிருக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, சென்னை வந்து இறங்கியதும் அதை எடுத்துக் கொண்டு போய்த் தன் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறான் காதலன் ஒருவன் எனப் பதிவிட்டிருந்தான்.
அவன் விமானத்தின் உள்ளே காட்டுகையில், ஒரு சில நொடிகள் நிரஞ்சனின் முகமும் தெரிந்தது. அவன் முகம் அந்தக் காணொளியில் தெரியவில்லை என்றாலும் மதுமிதாவிற்கு அது நிரஞ்சன் என்று கண்டிப்பாகப் புரிந்திருக்கும்.
இப்படிப்பட்ட ஒருத்தனின் அன்பைப் பெற அந்தக் காதலி கொடுத்து வைத்தவளாக இருக்க வேண்டும் எனத் தொடர்ந்து அந்தக் காணொளியில் சொல்லியிருந்தான்.
கூடவே அந்தக் காதலியும் எவ்வளவு அன்பை இவன் மேல் வைத்திருந்தால் அவளுக்காக இப்படி மெனக்கெடுகிறான் இவன் எனக் குறிப்பிட்டிருந்தான்.
அதற்குக் கீழே கருத்தைப் பதிவு செய்தவர்களும் இதே விஷயத்தை மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தனர். அதில் சில பெண்கள் தனக்கும் இது போன்ற ஒருத்தன் கிடைப்பானா என ஏக்கமாகப் பதிவிட்டிருந்தனர்.
மதுமிதா உடனே மதுரவாணிக்கு அழைத்து நடந்ததைச் சொல்ல, “மது, ரொம்ப யோசிச்சு இவரை மிஸ் பண்ணிடாத” என அவளுக்கு அறிவுரை வழங்கினாள்.
சற்றுநேரம் அவளிடம் பேசியவள் தன் அறையிலிருந்து வெளியில் வந்தாள். அவள் தந்தையும் வந்திருக்க, நேராகப் பெற்றோரிடம் சென்று தன் மனக்குழப்பத்தைப் பற்றி வெளியிட்டாள்.
“என்னோட அனுபவத்துல சொல்றேன். எல்லோருக்கும் கடந்த காலம்னு ஒன்னு இருக்கும். அதுக்காக அதையே தூக்கிட்டு யாரும் இருக்க மாட்டாங்க. அப்பப்போ பாரத்தை இறக்கி வைக்கப் பழகிக்கணும் மது. இலைன்னா நம்மால சுமக்க முடியாம போயிடும். அப்போ முழுசா உடைஞ்சிடுவோம். திரும்பியும் போக முடியாது. அதை உணர்ந்து நிரஞ்சன் நடந்துக்கிறார் என எனக்குத் தோணுது” என்றார் தந்தை.
அவள் பவித்ராவிடம் இதையே , ‘பழசையெல்லாம் நினைச்சுட்டு இருந்தா புது நிகழ்வுகளுக்கு நம் மனசுல இடப் பற்றாக்குறை வந்திடப் போகுது’ என வேறு மாதிரி சொன்னாளே. அதை ஏன் அவள் கடைப்பிடிக்க மறந்து போனாள்.
“எப்படி நேரா வீட்டுக்கே வந்து எதையும் மறைக்காம என்கிட்டயே பேசுறாரே. அதுலயே தெரியலையா அவர் கடந்த காலத்தைக் கண்டிப்பா மீண்டும் தன் வாழ்க்கையில கொண்டு வர மாட்டார்னு” என்றார் அவள் அன்னை.
அன்றிரவு அழைத்த விவேக்கும் பெற்றோர் சொன்னதையே திரும்பச் சொல்லவும் அவளுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை பிறந்தது. படுக்கையில் அமர்ந்து கொண்டு நிரஞ்சனின் எண்ணை அழுத்தினாள்.
அவள் அழைப்பாள் என எதிர்பார்க்காதவன், உள்ளம் மலர்ந்து போனான். “ஓர் ஐஸ்கிரீமுக்கு இத்தனை சக்தியா?” என அவன் அவளை வம்புக்கு இழுக்க, “தாஜ்மஹால் கேட்கலையேன்னு சந்தோஷப்படுங்க” என்றாள்.
என்ன தான் காதலின் சின்னமாக இருந்தாலும் அது கல்லறை அல்லவா? காதலை ஆரம்பிக்கும் பொழுதே எதற்காக முடிவுரையை எழுத நினைக்கிறாள் என அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.
அதையே அவளிடம் அவன் சொல்லவும், “இவ்வளவு சென்ட்டிமென்டலான ஆளா நீங்க? சும்மா ஜோக்குக்குச் சொன்னேன்” என்றவள், தொடர்ந்து, “இன்னும் சென்னையிலா இருக்கீங்க? நான் உங்க கூடக் கொஞ்ச நேரம் தனியாப் பேசணும். எப்போ பேசலாம்?” எனக் கேட்டாள்.
அதைக் கேட்டதும் நூறு வாட்ஸ் பல்பு போட்டதைப் போல் அவன் முகம் பிரகாசமாக, “இன்னொரு முறை சொல்லுங்க” என அவளை மீண்டும் வம்புக்கு இழுத்தவன், “ஆமா, இங்க தான் இருக்கேன். இப்பவே நான் ஃப்ரீ... பேசலாமே” எனச் சொல்ல, “இல்ல நேர்ல பார்த்துப் பேசணும்” என்றாள்.
“நாளைக்கு ஃப்ரீ” எனக் காலையில் ஆறு மணிக்கே நேரத்தைச் சொல்ல, “உங்களுக்கு எப்படியோ, எனக்கு லீவ் நாள்ல ஆறு மணி மிட்நைட் மாதிரி. இன்னும் கொஞ்சம் மத்தியான நேரமா சொல்லுங்க” என்றாள்.
கலகலவென்று சிரித்தவன், பேரம் பேசி, பத்து மணியளவில் சந்திப்பதாகச் சொல்லி மதுமிதாவைச் சம்மதிக்க வைத்தான். அவனுக்கு என்னவென்றால், காலையிலேயே வந்துவிட்டால் அன்றைய நாள் முழுவதையும் அவளுடன் கழிக்கலாம் எனப் பிரமாதமாகத் திட்டமிட்டான்.
“ஆமா, பெரிய பெரிய ஸ்டண்ட் பண்ணி யூடியூப்ல வைரல் ஆகிட்டீங்க போல” என அவள் பரிகாசமாகக் கேட்க,
“நந்தாவும், பவியும் அனுப்பி வச்சிருந்தாங்க. நான் எதுவும் பண்ணலை. அந்த யூட்யூபர் தன் சேனல்ல போடறதுக்கு வீடியோ எடுத்துக்கிட்டுமான்னு கேட்டான். நான் சரின்னு சொன்னேன். ஆனா அது இவ்வளவு வைரலாகும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை. இப்படி ஆகும்னு நினைச்சு நான் உனக்காக ஹைதராபாத்லயிருந்து ஐஸ்கிரீம் வாங்கிட்டும் வரலை” என்றான் விளக்கமாக.
எங்கே தன்னைத் தவறாக எண்ணிவிட்டாளோ என அவனின் தைரியம் ஆட்டம் காண ஆரம்பித்தது.
“நான் அப்படி எல்லாம் நினைக்கலை. இல்ல, பெரிய செலிபிரிட்டி ஆகிட்டீங்க. நிறையப் பேர் உங்களை மாதிரி காதலன் வேணும்னு லைன்ல நிக்கறாங்களேன்னு கேட்டேன்” என அவள் கிண்டலாகச் சொல்ல, “பொறாமையா மது?” எனக் கேலி பேசினான்.
“எந்த ஆமையும் இல்லை. சரி, இவ்வளவு மெனக்கெட்டு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
“உனக்குப் பிடிச்சிருந்ததா?” என அவன் வார்த்தைகளில் துள்ளல் கோர்த்துக் கேட்டான்.
“ரொம்பப் பிரமாதமா இல்லைன்னாலும் ஏதோ பரவாயில்லை” என அவள் வேண்டுமென்றே இடக்கு மடக்காகப் பேசினாள்.
அதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்த நிரஞ்சன், “ஆனா நீ அதைச் சாப்பிடுறப்போ அப்படி எனக்குத் தெரியலையே” என்றான்.
“சாப்பிடுவதைக் கூடக் கண் வைக்கிறானே” எனச் சத்தமாகவே முணுமுணுக்க, நிரஞ்சனுக்கு மேலும் சிரிப்புப் பொங்கியது. “ஆனா, நான் சாப்பிடறப்போ ரொம்ப இனிப்பா இருந்ததே மது” என அவன் சொல்ல, மதுமிதாவின் கன்னங்கள் சிவந்து போனது.
அவன் சாப்பிட்ட லட்சணம் அவளுக்குத் தெரியாதா என்ன?
“எனக்கு இப்போ தூக்கம் வருது. நேத்து நைட்டும் தூங்கலை. நான் போய்த் தூங்கப் போறேன்” என அவள் அழைப்பை வைக்க முயல, “தேங்க்ஸ் மது என்னைக் கூப்பிட்டதுக்கு. நாளைக்குப் பார்க்கலாம். ஏமாத்திடமாட்டியே?” என ஏக்கத்துடன் வினவினான்.
“எனக்கு உங்க கூட நிறைய நேர்ல பேசணும். கண்டிப்பா வரேன்” என வாக்குறுதி தந்துவிட்டு அழைப்பை வைத்தாள். ஆனால் அவளது வாக்குறுதியை அவளே மீறப் போகிறாள் என அவளுக்கு அப்போது தெரியவில்லை.
அவர்கள் இருவரும் அறியாத ஒரு விஷயம் நடந்தது. அனைவரும் பார்த்த அதே காணொளி அஞ்சனாவின் கண்களிலும் பட்டது. அதைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் தீயாய்ப் பற்றிக் கொண்டு எரிந்தது.
பின்னே அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவன், அவளை உதாசீனப்படுத்தி மறந்துவிட்டு அவன் பாட்டுக்குத் தன் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய்விட்டான். அவன் செய்தது தவறு என்று அவளிடம் இதுவரையில் ஒரு மன்னிப்பைக் கூட வேண்டவில்லை. நேரில் வந்து அவளைச் சமாதானமும் செய்யவில்லை.
அவனின் நல்லதுக்காக அல்லவா அவள் அப்படி நடந்து கொண்டாள். அப்படி இருக்கையில் அவளையே திட்டி விரட்டி விட்டான். சமாதானம் சொல்லி மன்னிப்பை வேண்டுவான் என ஆரம்பத்தில் நிறைய நாட்கள் காத்திருந்தாள்.
அவன் வராமல் அவளை ஏமாற்றிவிட்டான். அவளாகப் போய் அவனிடம் பேசித் தன்னை இறக்கிக் கொள்ளவும் அவள் விரும்பவில்லை. உனக்கு என் அருமை அவ்வளவே தெரிந்திருக்கிறது என எண்ணி விலகி நின்றாள்.
‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என அவளும் தன் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய்விட்டாள். ஏனெனில் நிரஞ்சனின் அழகும் அந்தஸ்தும் அறிவும் மட்டுமே அவளின் கண் முன்னால் இருந்தது. அவன் மேல் உண்மையில் அன்பிருந்திருந்தால் இப்படி யோசித்திருக்கமாட்டாள்.
அதற்காக அவள் சும்மா ஒன்றும் இல்லை. இருவருக்கும் தெரிந்த வட்டத்தில் எல்லாம் நிரஞ்சனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பரப்பிவிட்டாள். அவனுக்குப் பெண்களை மதிக்கத் தெரியவில்லை என்றும், கோபக்காரன், திமிர் பிடித்தவன் என்றும், சரியான முசுடு என்றும் புறம் பேசினாள் அஞ்சனா.
மதுமிதாவின் குணம் என்னவென்றால் நம் முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல நேருக்கு நேராகக் குற்றங்குறைகளைக் காட்டிவிடுவாள். அவர்களை விட்டு விலகி நின்றால் மௌனமாகிவிடுவாள் தேவையில்லாது புறம் பேச மாட்டாள்.
ஆனால் அஞ்சனா அதற்கு நேரெதிர். நிரஞ்சனிடம் பேசத் தைரியமில்லையா, அல்லது, பேசினால் எதுவும் ஆகப் போவதில்லை என்ற எரிச்சலிலா என்று தெரியவில்லை அவனைக் குறித்து அனைவரிடமும் தவறான விஷயங்களைப் பரப்பிவிட்டாள். தேவையில்லாமல் நிரஞ்சனைக் குறித்து எல்லோரிடமும் பொய் சொன்னாள்
ஏனெனில் அவனுக்கு வேறு எந்தப் பெண்ணும் கிடைக்கக் கூடாது என்ற தீய எண்ணம் மட்டுமே அஞ்சனாவின் உள்ளத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அவ்வப்பொழுது அவனைப் பற்றி விசாரிக்கவும் மறக்கவில்லை.
அவன் ஹைதராபாத்தில் இருப்பது அவளுக்குத் தெரியும். இன்னுமே அவன் தனித்து இருக்கிறான். அதுவும் தன் குடும்பத்துடன் சேராமல் பிரிந்திருக்கிறான் எனத் தெரிந்ததும் அவள் உள்ளம் உவகையில் கூத்தாடியது.
அந்தக் குடும்பத்திற்காகத் தானே என்னை உதாசீனப்படுத்தினாய். இப்போது பார் அந்தக் குடும்பமே உன்னை உதாசீனப்படுத்திவிட்டது என அவள் உள்ளம் குரூரமாக மகிழ்ந்திருந்தது .
ஆனால் அவள் எதிர்பாராதது தன்னை உதாசீனப்படுத்தினவன் வேறு ஒரு பெண்ணை இப்படி உருகி உருகி காதலிப்பான் என்று. அந்தப் பெண்ணை விட அவள் எதில் குறைந்து போய்விட்டாளாம்?
அவளிடம் அழகில்லையா, படிப்பில்லையா, அந்தஸ்து இல்லையா, அறிவு இல்லையா? இல்லையா இல்லையா எனப் பல இல்லையாக்களை அடுக்கிக் கொண்டவளுக்கு, ‘அப்படி எந்த ரதியை இவன் உருகிக் காதலிக்கிறான் என்று பார்க்கலாம்?’ என ஆர்வம் தலைதூக்கியது.
இவனின் குணம் அவளுக்குத் தெரியாதா என்ன? அவளைப் பற்றிய தவறான ஒரு சிறு பொறியை நிரஞ்சனின் மனதில் கிளப்பிவிட்டால் இப்பொழுது உருகி உருகி காதலிக்கும் அந்தப் பெண்ணையும் அலட்சியப்படுத்தி விடுவான்.
‘விடமாட்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்யவே கூடாது. எந்தப் பெண்ணுக்கும் அந்தத் தகுதி கிடையாது. இவனுக்கு அந்தக் கொடுப்பினை இருக்கவே கூடாது’ என மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டாள்.
அவளுக்கு இருக்கும் செல்வாக்குக்கும் அந்தஸ்துக்கும், ஆள் பலத்திற்கும் மதுமிதா யார் என்று கண்டுபிடிக்க அதிக நேரம் தேவைப்படவில்லை.
மதுமிதாவின் மொத்த பயோடேட்டாவையும் அன்று இரவுக்குள் கண்டுபிடித்துவிட்டாள். பார்ப்பதற்குச் சுமாராகத் தான் இருக்கிறாள் எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்டாள். அவள் அழகாக இருக்கிறாள் என்று ஒத்துக்கொள்ள அவளுக்குக் கிஞ்சித்தும் மனம் வரவில்லை.
பெரிதாக என்ன படித்துவிட்டாள்? அனைவரும் படிப்பதைப் போல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்கிறாள். இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? அதிலும் தன்னை விடக் குறைந்தவள். இவள் எம். பி. ஏ. படித்திருக்கிறாள். அதை எப்படிப் படித்தாள் என அவள் தந்தையிடம் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்.
இவள் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சார்ந்தவள். தன்னிடம் இருக்கும் செல்வாக்குக்கு ஏணி வைத்தாலும் இவளால் எட்டிக் கூட வர முடியாது. அடுத்ததாக, அனைவரும் செய்வதைப் போல் படித்து முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு இருக்கிறாள்.
இவள் மாதா மாதம் வாங்கும் சம்பளம் தனது ஒரு நாள் செலவுக்குச் சரியாகப் போகும். இதில் இவள் எதில் உயர்ந்துவிட்டாளாம்? இவளைப் போய்க் காதலிக்கிறானாம்? கூடிய விரைவிலேயே இந்தப் பெண்ணைக் கை கழுவி விடுவான் என்று நம்பினாள் அஞ்சனா.
அதற்காக அவள் ஒன்றும் சும்மா இருக்கக் கூடாது. அவளால் முடிந்தவரையில் அவர்கள் இருவருக்குமிடையில் பிரிவை உண்டாக்க முயற்சிக்க வேண்டும்.
எனவே அதற்கு முதல் கட்டமாகக் கையிலேயே வைத்திருக்கும் ஆயுதத்தை உபயோகித்தாள். அதாவது அஞ்சனாவும் நிரஞ்சனும் ஒன்றாகப் பழகிய காலத்தில் எடுத்த புகைப்படங்களில் இருந்து சிலவற்றை மதுமிதாவின் எண்ணுக்கு அனுப்பி வைத்தாள்.
அந்தச் சிலவற்றை எப்படித் தேர்ந்தெடுத்தாள் என்றால் எவ்வளவுக்கு எவ்வளவு நிரஞ்சன் அவளுடன் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறான் என அதைப் பார்த்துத் தேர்வு செய்தாள்.
அதில் சில புகைப்படங்களில் அவளின் இடையோடு அணைத்துத் தன்னருகில் நிற்க வைத்துக் கொண்டிருந்தான். சில புகைப்படங்களில் அவள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
‘இதைப் பார்த்து அந்தப் பெண் மனம் வெந்து சாகட்டும்’ எனக் கெட்ட எண்ணத்துடன் யோசித்தாள்.
மறுநாள் காலையில் சற்று உற்சாகமாகவே எழுந்த மதுமிதாவுக்குப் பெரிய அதிர்ச்சி ஒன்று தன் கைபேசியில் காத்திருக்கிறது என்று தெரியவில்லை. எழுந்து துள்ளலுடன் கிளம்பிக் கொண்டிருந்தவள் தனது அலைபேசியை எடுக்க, அதில் புதிய எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்திகளைப் பார்வையிட்டாள்.
அதுவும் அதில் வந்திருந்த புகைப்படங்களைப் பார்த்ததும் பட்டென்று மதுமிதாவுக்கு நெஞ்சு பாரமாகிப் போனது.
அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும் அந்த விஷயம் அவள் கண்முன்னே ஆதாரத்துடன் இருக்கையில் அவளால் எப்படி நடந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து போனது.
எதற்காக இன்று திடீரென்று இதை அனுப்புகிறார்கள்? யார் இதை முதலில் தனக்கு அனுப்புவது? என யோசித்த மதுமிதாவிற்கு நேற்று வந்த அந்தக் காணொளியே முதலில் நினைவிலாடியது. ஒருவேளை அந்தக் காணொளியைப் பார்த்ததின் விளைவோ?
தன் மேல் பொறாமை கொண்டோ, நிரஞ்சனின் மேல் காழ்புணர்ச்சி கொண்டோ யாரோ இதைச் செய்திருக்கிறார்கள் என்று புரிந்தது. அவள் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறாள் என்று ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஆனால் நிரஞ்சன் அப்படியல்ல, அவன் முகம் அதில் நன்றாகவே தெரிந்தது. அவனை அறிந்தவர்களும் ஏராளம்.
யாராக இருக்கும்? ஒருவேளை அஞ்சனாவாக இருக்குமோ என முதலில் அவள் மேலே சந்தேகம் வந்தது. அவளால் இன்னும் நிரஞ்சனை மறக்க முடியவில்லையா? அவனிடம் பேச முடியாமல் தன்னிடம் பேச முயற்சிக்கிறாளா? சற்றுத் தெளிந்திருந்த மனம் மீண்டும் குழம்ப ஆரம்பித்தது.
என்ன செய்வது எனத் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். புகைப்படங்கள் அனுப்பி இத்தனை நேரமாகியும் அந்தப் பெண்ணிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லையே என அஞ்சனாவுக்குப் பரபரப்பாக இருந்தது.
ஒருவேளை அவள் அதைப் பார்க்கவில்லையோ? சற்றுநேரம் பொறுமையுடன் காத்திருந்தவள் அதற்குமேல் தங்க முடியாமல் அவளே மதுமிதாவுக்கு அழைத்தாள்.
அந்தப் புதிய எண்ணிலிருந்து அழைப்பு வரவும் எடுப்பதா வேண்டாமா என மதுமிதா யோசித்தாள். அதே சமயத்தில் மதுரவாணி அன்று சொன்ன, ‘பிரச்சனையில் இருந்து ஓடி ஒளிந்தால் மட்டும் பிரச்சனைக்குத் தீர்வு கிட்டிவிடுமா?’ என்ற வாக்கியமே ஞாபகத்திற்கு வந்தது.
அதனால் மனதை திடப்படுத்திக் கொண்டு அழைப்பை ஏற்று “ஹலோ” என்றாள்.
“என்ன அனுப்பி வச்ச போட்டோஸ் எல்லாம் பாத்தியா?” என அஞ்சனா எடுத்ததுமே ஏக வசனத்தில் பேச ஆரம்பிக்க, மதுமிதாவுக்கு எரிச்சல் வந்தது.
“யார் நீ?” என எரிந்து விழுந்தாள்.
“ஃபோட்டோல நிரஞ்சன் கட்டிப்பிடிச்சுட்டு இருக்கிற பொண்ணு பேசறேன்” என அவள் எரிச்சலுடன் பதில் சொல்ல, “அதெல்லாம் இப்போ ஒரு தகுதியா போயிடுச்சு போல” என மதுமிதா எகத்தாளத்துடன் பதிலடி கொடுத்தாள். அதைக் கேட்ட அஞ்சனாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது?
எவ்வளவு பெரிய விஷயத்தைப் பகிர்ந்து இருக்கிறாள். அதைப் பார்த்து இவள் சற்றும் மனம் மாறவில்லையா? கொஞ்சம் கூடப் பிசிறில்லாமல் இப்படிப் பேசுகிறாளே. அதுவும் அவளைக் கேலி செய்து வேறு பேசுகிறாள்.
“என்ன நக்கலா? நிரஞ்சன் உன்னை உருகி உருகி காதலிக்கிறான் அப்படிங்கிற ஆணவத்துல பேசறியா? ஒரு காலத்துல என்னையும் இப்படி உருகி உருகி காதலிச்சான் தெரியுமா?” என அவள் நேரடியாக விஷயத்திற்கு வரவும்,
“அது மிகப் பெரிய தப்புன்னு இப்போ உணர்ந்துட்டாரே. தப்பான பெண் மேல தெரியாம நம்பிக்கை வச்சு அவளை வாழ்க்கைத் துணையா ஏத்துக்கணும்னு நினைச்சுருந்தார். அந்த நம்பிக்கை உடைஞ்சதும் இப்ப புரிஞ்சிகிட்டு விலகிட்டார். அதுக்கு என்ன?” என அவள் நிரஞ்சனுக்காகப் பரிந்து கொண்டு வரவும், அஞ்சனா சில கணங்கள் பேச்சற்றுப் போனாள்.
இவர்களைப் பிரிப்பது சற்றுக் கடினமான வேலை போல அவளுக்குத் தோன்றியது.
“உனக்கு ஒரு பக்கம் கதை மட்டுமே தெரியும். இன்னொரு பக்கக் கதையை நிரஞ்சன் என்ன சொல்லிட்டா இருப்பான்?” என வேண்டும் என்றே உருக்கமாகப் பேசிவிட்டு, “அதுக்கப்புறம் உன் இஷ்டம்” என அழைப்பை வைத்துவிட்டாள் அஞ்சனா.
ஒருகணம் தனக்காக இவள் சொல்கிறாளோ என எண்ணி ஏமாந்து போனாள் மதுமிதா. ஆனால் அடுத்தக் கணமே பவித்ராவும் அஞ்சனாவைப் பற்றிப் பெரிதாக எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இதுவரையில் அவளிடம் சொல்லியதில்லை.
அதைப் போலவே நந்தகுமாரின் நிலைக்கு அஞ்சனாவே முழுக் காரணம் என நந்தகுமார் பேசுகையில் அவளுக்குப் புரிந்தது.
ஆகவே இந்த அஞ்சனா வேண்டுமென்றே தன் மனதை கலைக்கப் பார்க்கிறாள் என உணர்ந்து கொண்டாள். அது மட்டுமல்லாமல் இத்தனை நாளாக விட்டுவிட்டு இன்று புதிதாக ஏன் இப்படிப் பேசுகிறாள்?
தன் யோசனையில் உழன்று கொண்டிருந்தவள் நிரஞ்சனை போய்ச் சந்திக்க வேண்டும் என்பதையே மறந்து போனாள்.
தொடரும்...
Last edited: