Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 19
மதுமிதா சென்னைக்குச் சென்று ஒரு நாள் தான் ஆகியிருந்தது. ஆனால் என்னவோ பல யுகங்களாக அவளைக் காணாமல் தவித்ததைப் போல் தவித்திருந்தான் நிரஞ்சன். சொல்லாமல் ஏன் கிளம்பினாள் என அவளை அழைத்துத் திட்டலாமா என்று ஒரு கணம் அவசரப்பட்டு யோசித்தான்.
‘டேய்.. அவசரக்குடுக்கை. இத்தனை வருடம் நீ அவசரப்பட்டுப் பட்டு அனைத்தையும் கெடுத்துக் கொண்டது பத்தாதா? இன்னும் உனக்குப் புத்தி வரவில்லையா?’ என அவன் மனசாட்சி நடு மண்டையில் ஓங்கி அடிக்க, சற்று நிதானமாகச் சிந்திக்க ஆரம்பித்தான்.
காதல் சொன்னவள் அவனிடம் முறுக்கிக் கொண்டிருக்கிறாள். அவனே பணிந்து போக வேண்டும். அவளை மீண்டும் தன் வசம் திருப்ப வேண்டும். அதற்கு அராஜகமும், கோபமும் கை கொடுக்காது. அவன் அன்பால், அனுசரணையான பேச்சால், காதலால் அவள் மனதை மாற்ற வேண்டும்.
அவனை வேறொரு பயமும் பூதாகரமாக ஆட்டிக் கொண்டிருந்தது. மதுமிதா ஹைதராபாத்தில் இருந்த பொழுதே அந்த அரவிந்த் அவளை மெனக்கெட்டுப் பார்க்க வந்திருந்தான். இப்போது அவள் சென்னையிலேயே இருக்கிறாள். அவன் அடிக்கடி மதுமிதாவைச் சந்தித்து அவள் மனதை தன் வசம் இழுத்து விடுவானோ என்ற திகிலில் ஆழ்ந்திருந்தான்.
அரவிந்த்தை நினைத்த பின்னர் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உடனே மதுமிதாவின் எண்ணை அழுத்தினான். நிரஞ்சனின் கெட்ட நேரமோ என்னவோ அன்று மாலை அரவிந்த்தைச் சந்திப்பதாகச் சொல்லி அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அவன் நாயகி.
அவள் சென்னைக்கு வந்ததைப் பற்றி அறிந்த அரவிந்த் அவளைச் சந்திக்க வேண்டும் என்றான். அவளிடம் காதல் சொல்லியது வேறு. ஆனால் அவள் மனவருத்தத்தில் இருக்கையில் அர்ஜூனின் தோழி என்ற முறையில் அவள் மேல் கண்டிப்பாக அக்கறை இருக்கிறது என்றான். அதனாலேயே அரவிந்த்திடம் நட்பு பாராட்டினாள் மதுமிதா.
அவள் தன் தோழி மதுரவாணியைச் சந்திக்கப் போவதாகவும் அதன்பின்னர் தன் பெற்றோரை அழைக்க விமான நிலையம் செல்லப் போவதாகவும் சொல்லவும், அவள் தனித்து விமான நிலையம் செல்ல வேண்டாம் என்றும் அவனும் விமான நிலையம் வருவதாகச் சொன்னான் அரவிந்த்.
அதனால் அவளை மாலையே வந்து சந்திப்பதாகச் சொல்ல, அவளும் சம்மதித்தாள். ஆகவே மதுமிதா மதுரவாணி மற்றும் அரவிந்த் மூவரும் ஒரு காபி கடையில் சந்தித்தனர்.
அரவிந்த் போய் அவர்கள் மூவருக்கும் வேண்டியதை ஆர்டர் கொடுத்துவிட்டு வருவதாகச் சொல்லி அங்கிருந்து எழுந்து சென்றான். அந்தச் சமயத்தில் நிரஞ்சன் மதுமிதாவை அழைத்திருந்தான்.
நிரஞ்சன் அழைக்கிறான் எனத் தெரிந்ததும் அவள் அதை ஏற்கவில்லை. அலைபேசி சற்றுநேரம் சிணுங்கி அடங்கியது. அழைப்பை நிராகரித்த மதுமிதாவைப் பார்த்த மதுரவாணி, “என்ன மது யோசிச்சிட்டு இருக்கிற? ஃபோனை எடு” என்றாள்.
மதுமிதா, “ப்ச்” எனச் சொல்ல, “நீ முன்ன மாதிரி கலகலன்னு இல்ல மது. இந்த ஒரு மாசத்துக்குள்ள உனக்குள்ள நிறைய மாற்றம் தெரியுது. உன்கிட்டே இருந்த துள்ளல் மிஸ்ஸிங்” என்றாள் மதுரவாணி வெளிப்படையாக.
அது அவளுக்கே தெரியுமே. ஆனால் அவளால் என்ன செய்ய முடியும்? மனம் ஒன்று நினைக்க, மூளை அதை எதிர்க்க என அவள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறாளே.
“நீ நிரஞ்சனை விட்டு விலக நினைக்கிற. ஆனா எடுத்த முடிவு சரின்னு உன்னால ஏத்துக்க முடியலை. அதுக்காக உன் குணத்தையும் சுயத்தையும் மாத்திச் சுத்திட்டு இருக்க மது. உனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதே சமயத்துல அவர் மேல நிறையக் கோபமும் இருக்கு. கரெக்டா?” எனத் தோழி அவள் நாடியைச் சரியாகப் பிடித்துவிட்டாள்.
அதற்குமேல் மதுமிதா எதையும் மறைத்து வைக்கவில்லை. ஊஞ்சலாடும் மனதை அவளிடம் சொல்லிவிட்டாள்.
“தெரியலை வாணி... அன்னைக்கு உதாசீனப்படுத்தினப்போ வலிச்சது. இல்லைன்னு சொல்லலை. ஆனால் அவர் ஏற்கனவே வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க இருந்தார்னு கேட்டதுக்கு அப்புறம் ஒரு மாதிரி நெஞ்சை அடைக்குது” என்றாள்.
“எல்லோருக்கும் ஒரு கசப்பான கடந்த காலம் இருக்கும் மது. எனக்கில்லையா?” என அவள் தன்னையே உதாரணமாகச் சொல்ல, “அப்படியில்லை வாணி. அது புரியுது. ஆனால், அவர் ஏதோ ஒரு கோபத்துல அந்தப் பொண்ணை விட்டுப் பிரிஞ்சிருக்கலாம்.
மறுபடியும் அவங்க சந்திக்க நேர்ந்தா பழைய காதல் திரும்பவும் மொட்டுவிடாதா? அப்போ மறுபடியும் அவர் என்னை எல்லோர் முன்னாடியும் விட்டுக் கொடுத்துடுவாருன்னு பயமா இருக்கு” என மறைக்காமல் சொல்லிவிட்டாள்.
“அவர் தங்கச்சியைப் பத்திச் சொன்னேன் இல்லையா? நேரடியாகக் காரணம் இல்லைன்னாலும் நிரஞ்சனால நந்தகுமாருக்கு எவ்வளவு பிரச்சனை. இருந்தும் அவர் நிரஞ்சனை மன்னிச்சிட்டார். அதே மாதிரி நிரஞ்சனும் நாளைக்கு அந்த அஞ்சனாவை மன்னிச்சு ஏத்துக்கிட்டா?” என அவள் அலைபுறுதலுக்கான காரணத்தைச் சொன்னாள்.
“அதுக்காக நீ இப்படி அவரோட பேசாம ஓடி ஒளிஞ்சிட்டு இருந்தா உன் பிரச்சினைக்குத் தீர்வு கிடைச்சுடுமா?” என்றாள் மதுரவாணி.
“கிடைக்காது...” என அவளுக்கும் நிதர்சனம் புரிந்தது.
“நிரஞ்சன் என்ன சொல்ல வர்றாருன்னு பாரேன். அவரோட எப்போதும் போல நீ பேசிட்டு இருந்தா ஒருவேளை அதுவே உனக்கு ஒரு தீர்வைக் கொடுக்கும் மது” என அறிவுரை வழங்கினாள் தோழி.
உண்மையே! அவள் பிரச்சனையை உள்ளுக்குள் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதனாலேயே அவளுக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை. சற்று வெளியில் நின்று எட்டிப் பார்த்தால் ஒருவேளை அவளுக்குத் தீர்வு கிடைக்குமோ என்னவோ.
“நீ சொல்றது சரி வாணி. அப்படியே செய்ய முயற்சிக்கிறேன்” என அவளிடம் சிரித்தவள், “சரி சொல்லு உன்னோட வேலை எப்படியிருக்கு?” எனத் தோழியைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
தன் முன்னாள் காதலன் எவ்வாறு அலுவலகத்தில் அனைவரின் முன்னாலும் அசிங்கப்படுத்த பட்டான் என்று பகிர்ந்து கொண்டாள் மதுரவாணி. அன்று மாலில் தங்களிடம் அறிமுகப்படுத்திய பெண் இவன் அத்துமீறி நடந்து கொண்டதாகப் புகாரளித்து நிறுவனத்தில் பெரிய பிரச்சனையாகிவிட்டது.
அவன் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவனை யாரும் நம்பவேயில்லை. அந்தப் பெண் இவனை விட்டுப் பிரிவதற்குத் திட்டம் போட்டே அப்படிச் செய்திருக்கிறாள். மதுரவாணியிடம் மீண்டும் திரும்பி வந்து மன்னிப்பை வேண்டி அவனை ஏற்றுக் கொள்ளச் சொல்லியிருக்கிறான் அவன்.
வந்த ஆத்திரத்தில் அவனை அனைவரின் முன்னாலும் ஓங்கி அறைந்துவிட்டாள் மதுரவாணி. பின்னே அலுவலகத்தில் அவளைப் பற்றி என்னவெல்லாம் பரப்பிவிட்டான். அவனால் தன்னம்பிக்கையை இழந்து எத்தனை நாள் வேதனைப்பட்டிருப்பாள்?
அவளுக்கு நடந்ததை எல்லாம் அலுவலகத்தில் அனைவரின் முன்னாலும் கொட்டிவிட்டாள் மதுரவாணி. எப்படி அந்த இன்னொரு பெண் இவனை அவள் பக்கம் இழுத்தாள் என்பதை, அவள் எப்படியெல்லாம் துன்பப்பட்டாள் என்பதை, எப்படி அவளைச் சீண்டினான் என ஒன்றுவிடாமல் மதுரவாணி சொல்லிவிட்டாள். அப்பொழுது தான் அவனின் உண்மையான சுயரூபம் அனைவருக்கும் தெரிய வந்தது.
அவன் உண்மையில் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டானா என்று தெரியாது. ஆனால் அவனுக்கு இந்தத் தண்டனை தேவையே என்றாள் மதுரவாணி. அவளுக்கு மதுமிதா கொடுத்த தைரியம் பக்கபலமாக இருந்ததால் அப்படியே வெகுண்டாள்.
அவமானம் தாங்காமல் அவன் வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். மதுரவாணியும் திருப்தியுடன் பணிபுரிகிறாள்.
அவள் சொல்லி முடித்ததும் மீண்டும் நிரஞ்சனிடம் மதுமிதாவிற்கு அழைப்பு வர, இம்முறை யோசிக்காமல் அழைப்பை ஏற்றாள்.
“மது, ஏன் சொல்லாமக் கிளம்பிட்ட” என அவன் ஏக்கம் நிறைந்த குரலில் வினவ, “உங்ககிட்ட சொல்லி பெர்மிஷன் கேட்டுட்டு வந்தேனே” என்றாள் மதுமிதா.
“நான் அதைச் சொல்லலைன்னு உனக்குத் தெரியும். புரியாத மாதிரி நடிக்காத மது. தூங்கறவங்களை எழுப்ப முடியும். தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை என்னால எழுப்ப முடியாது. சொல்லு மது, எப்போ நம்ம எதிர்காலத்தைப் பத்திப் பேசலாம்” என நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
அவன் இப்படி நேரடியாக விஷயத்திற்கு வரவும் மதுமிதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“உங்க எதிர்காலத்தைப் பத்தி உங்க வீட்டுல பேசுங்க. என் எதிர்காலத்தைப் பத்தி என் வீட்ல பேசறேன்” என அவள் இடக்காகப் பதில் தர, மதுரவாணி அவளைப் பார்த்து முறைத்தாள்.
“தனித் தனியா இருந்தா அதுக்குப் பேரு எதிர்காலம் இல்ல. புதிர்காலமாகிடும்” என எதிர்முனையில் நிரஞ்சன் சொல்லிச் சிரிக்க, “நான் இன்னும் ரெண்டு நாள்ல ஹைதராபாத் வந்துருவேன் . அப்போ பேசலாம்” என நிரஞ்சனிடம் ஒருவழியாக இறங்கி வந்து பதில் சொன்னாள் மதுமிதா.
அதற்குள் அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு அங்கே வந்த அரவிந்த, “மது, இந்தா இது உன்னோட காபி... எடுத்துக்கோ” என்றான்.
அதற்குள் மதுரவாணி, “அரவிந்த், அது என்னோடது” என வாங்கிக் கொண்டாள்.
அரவிந்த்தின் குரலைக் கேட்டதும் நிரஞ்சனின் தலையில் அபாயமணி அடிக்க ஆரம்பித்தது. அவன் எண்ணியதைப் போல் அரவிந்த்துடன் இருக்கிறாளா என்ன என அவனின் நெஞ்சம் தீயாய்க் காந்தியது.
“யாரு அது அரவிந்தா?” என நிரஞ்சன் கேட்டுவிட்டு, “நிஜமாவே என்னைக் கைவிடப் போறியா மது” எனத் தவிக்கும் குரலில் அவன் கேட்டதும் பெண்ணவளின் மனம் அசைந்தது.
இதற்கு மேல் பேசினால் எங்கே அவள் மனதை மீண்டும் நழுவவிட்டு விடுவாளோ எனப் பயந்தாள்.
“ஃப்ரண்ட்டா பழகினாலே இப்படிப் பேசற உங்களை நம்பி எப்படி என் எதிர்காலத்தைத் தர்றது? அப்புறம் ரெண்டு பேரோட வாழ்க்கையும் உதிர்காலமாகிடும்” எனச் சொல்லிவிட்டு அழைப்பை வைத்துவிட்டாள். உடனே அலைபேசியைத் தூக்கிக் கைப்பையில் வைத்துவிட்டாள்.
அதன்பின்னர் மதுரவாணி நேரமாகிறது என வீட்டுக்குச் செல்ல, அவர்கள் இருவரும் விமான நிலையம் சென்றனர்.
ஆறு மாதங்கள் கழித்துப் பெற்றோரைப் பார்க்கப் போகிறோம் என்பதால் ஒருவித பரவசத்துடன் காத்திருந்தாள் மதுமிதா.
*****
மறுநாள் காலையில் யாரோ வீட்டுவாயில் மணியைத் தொடர்ந்து அடிக்க, மதுமிதா தூக்கக் கலக்கத்துடன் போய்த் திறந்தவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
நேற்றிரவு அவள் பெற்றோர் வந்ததும் அதிகாலை வரையில் அவர்களுடன் பேசி, வம்பிழுத்து அவள் உறங்க காலை ஐந்து மணியாகிவிட்டது. அதனால் அவள் மதியமான பின்னரும் வெகுநேரம் நித்திரையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
தூக்கத்தை யார் கலைக்கிறார்கள் என எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தவள் சத்தியமாக நிரஞ்சனை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவள் தந்தை எங்கோ வெளியில் சென்றுவிட்டார். அன்னை குளியலறையில் இருந்தார்.
“ஹாய்..” எனப் பளீரென்ற புன்னகையுடன் அவள் முன்னே ஓர் ஐஸ் பெட்டியை நீட்டினான் நிரஞ்சன்.
அவனுக்கு வழிவிடாமல், ‘இது என்ன?’ என்பதைப் போல் பார்த்தாள் மதுமிதா.
குளித்துவிட்டு அங்கே வந்த அவள் அன்னை, வெளிவாயிலேயே ஒருத்தனை நிற்க வைத்து மகள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “யாரும்மா இது? ஸ்விக்கில ஏதாவது ஆர்டர் பண்ணினியா என்ன?” என்றார்.
அதைக் கேட்டதும் மதுமிதாவின் இதழ்களில் புன்னகை அரும்ப, நிரஞ்சனின் முகத்தில் அசடு வழிந்தது. அதற்குமேல் அவனைச் சோதிக்க விரும்பாமல், “இவர் நான் வேலை செய்யற ஆபீஸ்ல எனக்குப் பாஸ்மா” என்றாள்.
“யார் யாருக்கு பாஸ்ன்னு எதிர்காலத்துல பார்க்கலாம்” என அவளுக்கு மட்டும் கேட்குமாறு உரைத்தான் நிரஞ்சன்.
“அப்புறம் ஏன் வெளில நிக்க வச்சுப் பேசிட்டிருக்க? உள்ள வாங்க தம்பி” என வரவேற்றார்.
வீட்டுக்குள் நுழைந்தவன் கையிலிருந்த ஐஸ்பெட்டியை மதுமிதாவிடம் நீட்டி, “இந்தா மது உனக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீம். ஹைதராபாத்திலிருந்து கொண்டு வந்தேன்” என்றான்.
‘டேய் லூசு... ஹைதராபாத்தில் இருந்து வாங்கிட்டு வந்த ஐஸ்கிரீம் இன்னும் உருகாம இருக்குமா? எனக்குன்னு வந்து சேர்ந்தான் பாரு... மாக்கான். இங்க வந்து வாங்கிட்டு படம் போடறான் பாரு’ என அவனை மனத்திற்குள் சரமாரியாகத் திட்டிக் கொண்டாள் மதுமிதா. இருந்தும் எதுவும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டாள்
மதுமிதாவை ஒருமையில் அழைத்தும், நெருக்கமாகப் பேசுவதைப் பார்த்தும் இவன் தன் மகள் விரும்பும் பையனா எனச் சந்தேகம் கொண்டார் அவள் அன்னை.
“பிரிச்சு சாப்பிடு மது. நேரமாச்சுனா உருகிடும்... ” எனச் சத்தமாகச் சொன்னவன், அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில், “என்னை மாதிரி” என முணுமுணுத்தான்.
‘உன்னைப் போய் அறிவாளின்னு நெனச்சேன் பாரு’ என மீண்டும் மனதுக்குள் திட்டிக் கொண்டவள் அதைப் பிரித்துப் பார்த்தாள்.
அதில் அன்று அவள் அண்ணனிடம் சொன்ன கடையிலிருந்து அவளுக்குப் பிடித்த சாக்லேட் கலந்த ஐஸ்கிரீம், பாதாம் பருப்பு போட்டு உருகாமல் அப்படியே அவளைக் குளுமையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.
‘எப்படி?’ என விழிகளாலேயே அவனைப் பார்த்து வினவ, ‘எப்படி என் சமார்த்தியம் ?’ என அவளைப் பெருமிதத்துடன் பார்த்தான்.
“என் திறமையைப் பார்த்தியா மது? இந்த ஐஸ்பாக்ஸ்ல பேக் பண்ணி ஃப்ளைட்ல வர்றப்போ ஏர் ஹோஸ்டஸ்கிட்ட தாஜா பண்ணி, பிளேன்ல இருக்கிற ஃபிரிஜ்ல வச்சு, இறங்கினதும் அப்படியே அதை எடுத்துட்டு நேரா இங்க வந்தேன்” எனச் சிரித்தான்.
அதைக் கேட்டதும் மதுமிதா உருகினாளோ, இல்லையோ, அவளது அன்னைக்கு அவன் மேலிருந்த அபிப்பிராயம் பன்மடங்கு உயர்ந்து போனது. தன் மகளுக்காகப் பார்த்து அனைத்தையும் செய்கிறான் இவன் எனப் பூரித்துப் போனார்.
“ஏன் மது அப்படியே நின்னுட்டிருக்க? அவர் கஷ்டப்பட்டு அங்கிருந்து வாங்கிட்டு வந்திருக்கிறார். சாப்பிடு, இல்ல உருகிடும்” என அவர் சொல்ல வேறு வழியில்லாமல் அதைப் பிரித்து, நிரஞ்சனுக்கும் வேண்டுமா எனக் கேட்க, அவன் மறுத்தான்.
அவள் அன்னை சாப்பிடமாட்டார் எனத் தெரியுமென்பதால் அவளுக்கு மட்டும் ஒன்றை எடுத்துக் கொண்டு மிச்சத்தைக் கொண்டு போய்க் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாள்.
குளியலறை சென்று விறுவிறுவென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், ஐஸ்க்ரீமை ருசித்தாள். அதுவரையில் அவள் பொறுமை காத்ததே பெரிய விஷயம். ஏனோ அந்த ஐஸ்க்ரீம் எப்பொழுதையும் விட இன்று தித்திப்பு சற்றுக் கூடுதலாக இருப்பதைப் போலுணர்ந்தாள்.
அது ஐஸ்க்ரீமின் மகிமையா, அல்லது, கொண்டு வந்தனின் மகிமையா என்று அவளுக்கே வெளிச்சம்.
மெதுவாக ஐஸ்க்ரீமை ருசித்தவாறே உணவறையிலிருந்து முன்னறைக்கு வர, நிரஞ்சன் தன் அன்னையிடம் பேசியதைக் கேட்டு அவள் கால்கள் வேரூன்றிப் போயின.
“ஏற்கனவே அங்கிள்கிட்டேயும் விவேக்கிட்டேயும் போன வாரம் பேசினேன். உங்களோட பேச வாய்ப்புக் கிடைக்கலை. நான் உங்களுக்கு மருமகனா வந்தா ஒத்துக்குவீங்களா ஆன்ட்டி?” என அவன் அவரிடம் வினவ, அவரும் அப்படியே அதிர்ந்து போய் மகளைப் பார்த்தார்.
மதுமிதாவும் திகைத்த விழிகளால் அவனை ஏறிட்டு நோக்கினாள். ‘டேய் கடங்காரா இப்படியா வந்து பேசி வைப்ப?’ என அவனைப் பார்த்து முறைத்தாள்.
மகள் எதுவும் பேசாமல் அவனையே பார்த்திருப்பதைப் பார்த்த அன்னை, “மதுவுக்குப் பிடிச்சிருந்தா எங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை” என்றார்.
“உங்க பொண்ணுக்கு முதல்ல என்னைப் பிடிச்சிருந்தது. ஆனா இப்ப முகம் கொடுத்துப் பேச மாட்டேங்கிறா” என அவரிடமே கோள் மூட்டினான்.
“ஏன்?” என அவர் அனிச்சைசெயலாக அவனிடம் கேட்க, நடந்தது அனைத்தையும் சுருக்கமாக அவரிடம் மூச்சு விடாமல் சொல்லிவிட்டான்.
அவரோ அவன் தன் அன்னை மற்றும் தங்கையின் மேல் வைத்திருக்கும் பாசத்தில் உருகியே போய்விட்டார். தவறு செய்யாதவர்களே கிடையாது. தவறு செய்தவன் திருந்த நினைக்கிறான். திருந்தியும் விட்டான்.
அப்படி இருக்கையில் அவனை மன்னிக்க வேண்டும். அவனைப் போய் மறுத்துக் கொண்டிருக்கிறாளே என மகளைப் பார்த்து முறைத்தார்.
‘ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, அவள் அன்னைக்கு ஐஸ் வைத்து அவளுக்கு ஐஸ்லாந்தில் கல்லறையை எழுப்பி விட்டானே’ என அவளால் மனதிற்குள் சிடுசிடுக்க மட்டுமே முடிந்தது.
“என் பொண்ணுக்குக் கொஞ்சம் பிடிவாதம் ஜாஸ்தி” என அவள் அன்னை பேச, ‘ஏது...?’ என அவள் அன்னையைப் பார்த்து முறைத்தாள்.
அதைச் சட்டை செய்யாமல், “நாங்களும் அவ அண்ணனும் அவளுக்கு நிறையச் செல்லம் கொடுத்துட்டோம்” எனச் சொன்னதும் மதுமிதா தன் அன்னையைப் பார்த்து, “நீங்க எனக்கு அம்மாவா, இல்ல, அவருக்கு அம்மாவா?” எனக் கேட்டாள்.
பக்கெனச் சிரித்த நிரஞ்சன், “பொறாமையா மது?” எனக் கேலியாக வினவ, “ரொம்ப நல்லா இருக்கு நீங்க பரிதாப அலைல வாங்கின ஓட்டு” என அவளால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது.
ஐஸ்கிரீம் வேறு வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். இல்லையென்றால் நடு மண்டையில் நச்சென ஒன்று போட்டிருப்பாள். மற்றவர்களுக்கெல்லாம் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். ஆனால் இவனுக்கு ஐஸ்கிரீம் புண்ணியத்தில் தலை தப்பியது.
“உங்களைப் பத்தி ஏற்கனவே எங்ககிட்ட சொல்லியிருக்கா மது. அவங்க அப்பா வரட்டும். பேசி முடிவெடுக்கலாம். இருங்க போய்க் குடிக்க எடுத்துட்டு வரேன்” என அவன் மறுப்பதைக் காதில் வாங்காமல் உள்ளே சென்றார்.
அவள் அன்னை சொன்னதைக் கேட்க நிரஞ்சனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பின்னே பேசினால் தானே ஒரு முடிவெடுக்க முடியும்? மதுமிதா விலக விலக அவனுக்குப் பயம் சூழ்ந்து கொண்டது. இப்போது தான் அவன் மனம் நிம்மதியை உணர்ந்தது.
அந்தச் சமயத்தில் மதுமிதாவின் கைபேசிக்கு அவளது தோழி மதுரவாணி அழைத்திருந்தாள்.
“ஹே மது, உனக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் பாரேன். இப்போ வைரலாகிட்டு இருக்கு. இப்படியெல்லாம் பசங்க இருக்காங்க. இந்த மாதிரி ஒருத்தன் நமக்குக் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்?” என எடுத்ததுமே படபடவென்று பேசினாள்.
“நான் பார்க்கிறேன் வாணி” என அவளிடம் தெரிவித்தவள், வீட்டில் விருந்தினர் இருப்பதாகவும் அப்புறம் அழைப்பதாகவும் கூறிவிட்டு அழைப்பை வைத்தாள்.
ஏதோ ஒரு யோசனையுடன் மீண்டும் அவன் வாங்கி வந்த ஐஸ்கிரீமை ஒரு வாய் அவள் சாப்பிட, பட்டென்று எழுந்து அவளருகில் வந்த நிரஞ்சன், அதைத் தன் இதழ் கொண்டு மூடித் தன் வாய்க்கு இடம் மாற்றிக் கொண்டு நல்லபிள்ளையாக மீண்டும் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
இதை எதிர்பார்க்காத மதுமிதா திகைத்த விழிகளுடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அங்கே வந்த அவள் அன்னை, “எதுக்கும்மா நின்னுட்டு சாப்பிடற. உட்காரு” என்றார்.
அவளைப் பார்த்துக் கண்ணடித்த நிரஞ்சன் அவர் தந்த காபியை வாங்கிக் குடித்துவிட்டு, அதன்பிறகு அதிக நேரம் அங்கே இருக்கவில்லை.
மதுமிதாவின் அன்னையிடம் தன் மனதை வெளிப்படுத்தியாகிவிட்டது. இனி அவர்கள் தனித்துப் பேசட்டும் என விரைவிலேயே கிளம்பிவிட்டான்.
மகளாகத் தன்னிடம் வந்து ஏதாவது சொல்வாளா என அவள் அன்னை அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்க, அவள் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
அவளுக்கு அப்போது தனிமை தேவைப்பட்டது. நிரஞ்சன் தனக்காக இத்தனை மெனக்கெடுகிறான் என அவள் உள்ளம் அசைந்தது உண்மையே. அவள் நெஞ்சம் வழுக்கிக்கொண்டு அவனிடமே மீண்டும் மீண்டும் சென்றது.
அவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டாம் என்றெண்ணி அவள் தன் அலைபேசியை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். அப்பொழுது மதுரவாணி சற்று முன்னர்ச் சொன்னது ஞாபகத்திற்கு வர அவள் அனுப்பிய காணொளியைப் பார்த்தாள்.
அதில் ஒரு ‘யூட்யூபர்’ ஒருவன், தன் காதலிக்காக எப்படியெல்லாம் காதலன் ஒருவன் மெனக்கெடுகிறான் பாருங்கள் என அவன் செய்த செயலைப் பற்றிப் பெருமை படப் பேசிக் கொண்டிருந்தான்.
‘இவர்களுக்கு வேறு வேலையே இல்லை. அவர்கள் பணம் சம்பாதிக்க மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் படமெடுத்து இப்படிப் பொதுவெளியில் வைக்கிறார்கள்’ என எண்ணியவாறே தொடர்ந்து அந்தக் காணொளியைப் பார்த்தாள்.
அதை முழுவதுமாகப் பார்த்ததும் திக்கென்று இருந்தது அவளுக்கு.
தொடரும்...
Last edited: