Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 18
வரம்பு மீறிய செயலே! ஆனால் மனதில் காதலின் கொள்ளளவு பற்றாமல் போக, நிரம்பி ததும்பி வழியும் உணர்வுகளைப் பாதுகாக்கிறேன் பேர்வழி எனச் சிந்திக்கும் திறனை மொத்தமாய் இழந்திருந்தான். அவன் மனமும் மூளையும் அவன் கட்டுப்பாட்டிலேயே இல்லை. அவனுடைய ஒரே இலக்கு மதுமிதாவாக மட்டுமே இருந்தாள்.
‘இவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. இவள் எனக்கானவள்’ என்ற ஒன்றே அவனின் மதியில் மிதந்து கொண்டிருந்தது. மற்ற எதிர்மறை எண்ணங்களைத் தூக்கிப் போட்டு மிதித்து, மதுமிதாவை மட்டுமே தன் மதியாக்கிக் கொண்டான். என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று பகுத்தறிந்து பார்க்கவில்லை.
அன்று மதுமிதா தன் மனதைத் திறந்ததற்கு இன்று பதில் சொல்கிறான். காலம் தாழ்த்திய செயல். அவ்வளவே!
அவன் உடனே பதில் தராவிட்டால் எங்கே அவள் தன்னை விட்டுத் தூரம் போய் விடுவாளோ என்ற பயம் ஏற்கனவே அவனைச் சூழ்ந்திருந்தது. பயம், காதல், ஆசை என அனைத்தும் அவன் கண் முன்னே நின்று சீண்ட, அவளைத் தீண்டிவிட்டான்.
அவள் முகத்தையே இமைக்காமல் நோக்கியிருந்தவன் பட்டென்று அவளை அப்படியே இழுத்து அணைத்தான். அவனின் அருகாமையே அவளைப் பாடாய்ப்படுத்த, அவனின் இந்தத் திடீர் தாக்குதலை மதுமிதா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
உறைபனியாய் உறைந்து நின்றாள். அந்த நிலையை அவனுக்குச் சாதாகமாகிக் கொண்டு மெல்ல அவளது குளிர்ந்த கன்னங்களைப் பற்றினான். அவள் விழிகள் அப்படியே விரிய, இதழ்கள் நோக்கி குனிந்து, கரைபுரண்ட ஆசையையும் விருப்பத்தையும் காதலையும் இதழ் முத்தத்தில் கடத்த முயன்றான் நிரஞ்சன்.
மதுமிதாவின் இதயம் டமார் டமார் என்று அடித்துக் கொண்டிருந்தது. சத்தியமாக இந்தத் திருப்பத்தை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. நிரஞ்சன் என்ன நினைத்து இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான் என்றும் அவளுக்குப் புரியவில்லை.
‘அவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதா?’ எனத் தனக்குத் தானே கேட்டுவிட்டு, ‘மறுபடியும் முதலில் இருந்தா? வேண்டவே வேண்டாம். ஒரு முறை தவறாகக் கணித்து அல்லல்பட்டதே போதும்’ எனச் சுதாரித்துக் கொண்டாள்.
அவன் மார்பின் மீது கை வைத்து அவனைத் தள்ள முயல்கையில் அவளால் முடியவில்லை. எங்கே விட்டால் தன்னை விட்டு விலகிச் சென்றுவிடுவாளோ என்ற பயத்தில் அவனின் பலம் கூடியிருந்தது. அதனால் அவன் மொத்த எடையையும் அவள் மேல் சரித்து அவளை நகரவிடாமல் சிறைப் பிடித்திருந்தான் நிரஞ்சன்.
அவள் அவசர அவரசமாக ஆழ்ந்த மூச்சுகளை எடுக்க, அவள் சுவாசத்துக்குத் திணறுகிறாள் எனப் புரிந்து நிரஞ்சன் சுய உணர்வு பெற்றான். அதற்குள் தோளிலிருந்த மதுமிதாவின் கைப்பையிலிருந்து கைபேசி அலற, நிரஞ்சன் மெல்ல அவளிடம் இருந்து இதழ் பிரித்தான்.
ஆனாலும் போட்டிருந்த அரணை விலக்கவில்லை. “கொஞ்சம் தள்ளி நிக்கறீங்களா?’ என அவள் சிடுசிடுக்க, இரண்டே இரண்டு இன்ச் நகர்ந்தான்.
அவள் கைபேசியை எடுக்க, அண்ணன், விவேக் அழைத்துக் கொண்டிருந்தான். ‘இவனிடம் பேசுவது நேர விரயம்’ என்று முடிவுக்கு வந்தவள் அதற்குமேல் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றாள்.
“ஹே மது... என்ன பண்ணிட்டிருக்க?” எனக் கேட்ட விவேக் அவளின் பதிலை எதிர்பாராமல், “நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா? உனக்குப் பிடிச்ச சாக்லேட் நட்ஸ் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்கேன்.... ரொம்ப டேஸ்டியா இருக்கு” என அவளை வெறுப்பேத்தினான்.
“ப்ச்... என்னை வெறுப்பேத்தறதுக்கு அமெரிக்காவிலிருந்து ஃபோன் செஞ்சீங்களா என்ன? அதை விட பெட்டரா இங்க ஹைதராபாத்ல ஐஸ்கிரீம் கிடைக்குது” எனக் கடைபெயரைச் சொல்லி, “நான் வேணா இங்கிருந்து உங்களுக்குப் பார்சல் பண்ணறேன். இப்போ நான் ஃபோனை வைக்கிறேன்” என மதுமிதா சிடுசிடுத்தாள்.
“மது நீ தனியா இருக்கறதுனால உனக்கு இப்போவெல்லாம் ரொம்பக் கோபம் வருது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ. இன்னும் எத்தனை நாள் இப்படி டிமிக்கி கொடுத்துட்டே இருப்ப?” என ஆலோசனை வழங்கினான்.
“இது நல்லா இருக்குது. கோபம் வரவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சா கோபம் தீர்ந்துடுமா சூப்பர்... டாக்டர்களுக்கு எல்லாம் வேலையே இருக்காது” எனத் தன் அண்ணனைப் பரிகாசம் செய்தாள்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்தச் சம்மருக்கு நாங்க வரும் போது மரியாதையாக் கல்யாணம் பண்ணிக்கோ. சும்மா சும்மா லீவ் போட்டுட்டு இந்தியாவுக்கு வர முடியாது” என விவேக் சொல்ல,
“சம்மருக்கு ஐஸ்கிரீம் கேளுங்க. வாங்கித் தர்றேன். இல்லை காபி கேளுங்க, இன்ஸ்டன்ட் காபி போட்டுத் தர்றேன். இன்ஸ்டன்ட் கல்யாணம் ரொம்பக் கஷ்டம். அதுவும் இன்ஸ்டன்ட் மாப்பிள்ளைக்கு எங்கே போறது?” என மதுமிதாவும் அவனைச் சும்மா விடவில்லை.
‘ஏன் நான் இங்கே உன் கண் முன்னே இருப்பது தெரியவில்லையா? புரிய வைக்கிறேன்’ என நிரஞ்சனுக்குக் கோபம் மூண்டது.
“மாப்பிள்ளைக்கு என்ன? நான் சொன்ன அந்த ஃப்ரெண்ட் ரெடியா இருக்கான். நீ ம்ம்னு சொல்லு நான் பேசி முடிக்கறேன்” என விவேக் தீவிரமாகப் பேச ஆரம்பித்தான்.
அருகிலேயே நின்று கொண்டிருந்த நிரஞ்சனுக்கு விவேக் பேசியது அனைத்தும் காதுகளில் விழுந்தது. ‘ஒருத்தனும் நம்மை நிம்மதியாகக் காதலிக்க விடமாட்டேங்கிறான்... எத்தனை ஃப்ரெண்டுடா இப்படிக் கிளம்பி இருக்கீங்க என் காதலுக்கு வேட்டு வைக்க?’ என நிரஞ்சன் சரமாரியாக மனதில் திட்டிக் கொண்டான்.
அதற்குள் அருகில் இருந்த மதுமிதாவின் தந்தை விவேக்கிடம், “விவேக் கண்ணா, உன் மனசுல யாராவது இருக்காங்களான்னு நேரா கேக்கறத விட்டுட்டு ஏன்டா இப்படிச் சுத்தி வளைச்சுப் பேசிட்டு இருக்கிற? எதையுமே நேரா பேசத் தெரியாதா உனக்கு?” எனக் கடிந்து கொள்வது கேட்டது.
“அய்யோ அப்பா, உங்களுக்குப் புரியலை.நேரடியாக் கேட்டா ஆமா, இல்லைன்னு சொல்லுவா? அதுல என்ன இன்ட்ரஸ்டிங்கா இருக்கப் போகுது? இது மாறி நாலு பிட்டு போட்டா நமக்கு டிராமா களை கட்டும். அதுக்காக ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கிட்டு வந்து உட்கார்ந்திருக்கேன். நீங்க வேணா உங்களுக்குப் பிடிச்ச பாப்கார்ன் எடுத்துட்டு வாங்க” என்றான் விவேக் தந்தையிடம்.
மதுமிதா மேற்கொண்டு பதில் சொல்லும் முன்னர், “ஹலோ மிஸ்டர் விவேக்... அப்படியெல்லாம் அவசரப்பட்டு யாரையும் அவளுக்கு மாப்பிள்ளையாப் பார்க்காதீங்க. நானும் அவளும் விரும்பறோம்” என நிரஞ்சன் பட்டென்று சொல்லிவிட்டான்.
அவனை எது உந்தியது என்று தெரியாது. ஆனால் இதற்குமேல் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவனே அவன் வாழ்க்கையைத் தகர்ப்பதற்கு வெடிகுண்டை தயார் செய்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.
இருவரும் காதலை பரிமாறிக் கொண்டார்கள் என நம்பிய விவேக், “ஏய் மது, எதுவும் சொல்லவே இல்ல. நீ சொன்ன அந்த ஆபீஸ் பாயா? சொல்லு யார் அந்தப் பார்ட்டி?” என அவளைக் கேலி செய்தான்.
அவள் பேசாமல் இருப்பதைப் பார்த்த நிரஞ்சன், “ஆபீஸ் பாயா? இது நல்லா இருக்கே” என மதுமிதாவைப் பார்த்து இளநகைப் புரிந்தவன், “அந்தப் பார்ட்டி நானே... நீங்க எப்ப வர்றீங்கன்னு சொல்லுங்க அதே சமயத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம்” என நிரஞ்சன் கச்சிதமாகத் திட்டமிட்டுக் காரியத்தை முடித்துக் கொண்டான்.
‘டேய், சின்னதா ஒரு கோடு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி போட்டேன். ஆனால் நீ அதுல ரோடு போட்டு பிளேனே ஓட்டறியே...’ என்பதைப் போல் நிரஞ்சனைப் பார்த்தாள்.
விவேக் உற்சாகமாகி சற்றுநேரம் நிரஞ்சனிடம் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தான். பின்னர், “இருங்க அப்பாகிட்ட கொடுக்கிறேன்” என அலைபேசியைத் தன் தந்தையிடம் தந்தான் விவேக்.
நிரஞ்சனிடம் பேசிய மதுமிதாவின் தந்தைக்கும் அவனைக் குறித்துத் திருப்தியாக இருந்தது. அடுத்த வாரம் தாங்கள் இந்தியாவுக்கு வரப்போவதாகவும் நேரில் வந்து பேசிக் கொள்ளலாம் என்றும் சொன்னார்
விஷயம் தன் கை மீறிப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்த மதுமிதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
முதலில் இந்த நிரஞ்சனை வாய்க்கு வந்தபடி திட்ட வேண்டும். பிறகு மற்றதைப் பார்க்கலாம் என எண்ணியவள், “அப்பா, நான் நைட் உங்ககிட்ட பேசுறேன்” என அழைப்பை அவசரமாக வைக்கப் போக,
“ஆமா ஆமா இனிமேல் நம்மகிட்ட எல்லாம் பேச எங்கே நேரமிருக்கும்?” என விவேக் மறுமுனையிலிருந்து சீண்டினான்.
“நேர்ல வந்தேன்னு வையி...” என மிரட்டலாகச் சொன்னவள், முடிக்காமல் அழைப்பை துண்டித்தாள்.
பின்னர், கோபத்துடன் நிரஞ்சனை ஏறிட்டுப் பார்த்தவள், “உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நான் எப்போ சொன்னேன்?” எனச் சீறினாள்.
“காதலிக்கிறேன்னு சொன்னியே” என அவன் குறும்பு கூத்தாடும் விழிகளுடன் சொன்னான். பின்னே, இவளிடம் போராடுவதற்கு முதலில் அவனுக்குத் தெம்பு வேண்டும். அதற்கு அவள் வீட்டு ஆட்களையே தன் பக்கம் சேர்த்துக் கொண்டால் அவன் எண்ணியது சுலபமாக நடந்தேறும் அல்லவா?
“இப்போ சொல்லறேன்.. நான் யாரையும் காதலிக்கலை” என அவள் கோபத்துடன் சொல்ல, “நீ என்னைத் தவிர யாரையும் காதலிக்கலைன்னு தெரியும்” என்றான் நிரஞ்சன்.
“இங்க பாருங்க... ஏற்கனவே நான் சொன்னதையெல்லாம் மறந்துடச் சொன்னேனே. எனக்கு இப்போ கல்யாணம் பண்ண விருப்பமில்லை” எனக் கடினமாகப் பேச, “அப்போ அதுவரைக்கும் காதலிக்கலாம். நான் ரெடி” என்றான்.
இவனிடம் என்ன சொல்லிப் புரிய வைப்பது? மதுமிதாவுக்குப் படபடப்பாக இருந்தது. எதற்காகத் திடீரென்று இப்படி நடந்து கொள்கிறான்? இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவள் தன் காதலைச் சொன்ன போது அதைப் பொருட்படுத்த கூட இல்லை. ஆனால் இன்று ஏதோ உரிமை உள்ளவன் போல் நடந்து கொள்கிறானே.
இரண்டு வாரங்களில் அப்படியே அவனுக்குள் மனமாற்றம் வந்துவிடுமா என்ன? அதுவும் அவளைக் கேட்காமலேயே முத்தம் எல்லாம் வைத்து எல்லைக் கோட்டைத் தாண்டுகிறான்.
அவள் ஏதோ யோசனையில் உழன்று கொண்டிருக்கிறாள் எனப் புரிய, “ரொம்ப யோசிக்காத...” என அவள் தலையைச் செல்லமாகத் தட்டியவன், மீண்டும் குனிந்து அவள் இதழ்களில் முத்தம் வைத்தான்.
மீண்டும் தாக்குதலா? அவள் திமிறி விலகும் முன்னரே நிரஞ்சனின் அலைபேசி சிணுங்க, அவனே அவளைவிட்டு விலகினான். அவள் சுவாசிக்க மறந்ததைப் போல் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“மூச்சு விடு மது. இதயத்துல இருக்கிற எனக்கு ஆக்ஸிஜன் ரொம்ப முக்கியம். இல்லைன்னா மூச்சு திணறிச் செத்துடுவேன்” என அவள் காதருகில் கிசுகிசுத்தவன், அழைப்பை ஏற்றான். கௌரி அழைத்திருந்தார்.
‘என்ன பேச்சுப் பேசுகிறான்? எடுத்தவுடனேயே செத்துவிடுவார்களா என்ன?’ என அவள் துணுக்குற்று அவனைப் பார்த்து முறைக்க, புன்னகைத் ததும்பிய முகத்துடன் இதழ் குவித்து முத்தம் வைப்பதைப் போல் செய்துவிட்டுக் கௌரியிடம் பேச ஆரம்பித்தான்.
“நிரஞ்சன் கொஞ்சம் கீழே வாப்பா. வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் கொஞ்சம் வாங்கிட்டு வந்திருக்கிறோம். மேலே தூக்கிட்டு வரணும்” எனச் சொல்ல, “இதோம்மா” என அவருக்குப் பதிலளித்துவிட்டு,
“பவி வந்துட்டா. எங்கேயும் ஓடிடாத. இங்கேயே இரு” என மதுமிதாவிடம் சொல்லிவிட்டுக் கீழே இறங்கிச் சென்றான்.
பவித்ரா வரவும் அதற்குமேல் அவளால் எதையும் சிந்திக்க முடியவில்லை. அவளுக்குத் தனிமை தேவையாக இருந்தது. அதனால் எப்படியோ இயல்பாக இருக்க முயன்று வெற்றியும் பெற்றாள்.
மறுநாள் அலுவலகம் சென்றால், நிரஞ்சனின் பார்வையில் நிறைய மாற்றங்களைக் கண்டாள். பார்வையில் மட்டுமா? பேச்சிலும், நடத்தையிலும்.
அதன்பின்னர் அவன் அவளை நெருங்கி முத்தமிடவில்லை, ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்லவில்லை. ஆனால் அவனது நடவடிக்கை மொத்தமும், ‘நீ எனக்கானவள்’ என்ற உரிமையைப் பறைசாற்றுவதாய் இருந்தது. அவளுக்காக அவன் யோசித்துச் செயல்படுவது போல் தெரிந்தது.
‘எதற்காக மது தயங்குகிறாய்?’ தன்னிடமே கேட்டுக் கொண்டாள் மதுமிதா.
அன்று அவள் தன் காதலை அவனிடம் சொல்கையில் அவன் அவளை உதாசீனப்படுத்தியதை விடவும் அவன் கடந்த காலம் அறிந்த பின்னரே இந்தத் தயக்கம் தோன்றியிருக்கிறது.
அவன் ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்பி, திருமணம் வரையில் சென்றிருக்கிறான். ஒரு சிறிய பிரச்சனைக்காகப் பிரிந்துவிட்டனர். எதிர்காலத்தில் அவள் நேரில் வந்து நின்று மன்னிக்கச் சொன்னால் இவன் அவள் பின்னால் செல்லமாட்டான் என என்ன உத்திரவாதம் இருக்கிறது?
அவளின் தயக்கத்துக்கான காரணத்தைப் பற்றி அறிந்ததும் அவளுக்கு மூச்சு முட்டுவதைப் போலிருந்தது. ‘உலகில் காதலிப்பவர்கள் எல்லாம் இப்படியாச் சிரமப்படுகிறார்கள்?’ என நொந்து கொண்டாள்.
மறுகணமே பவித்ராவின் நிலையை எண்ணி தன்னைத் தேற்றிக் கொண்டாள். இதில் அவன் அண்ணன், விவேக் வேறு சும்மா சும்மா அலைபேசியில் அழைத்து, “என்ன மது, லவ் சக்ஸஸ் போல” என அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான்.
என்ன ஆனாலும் அவளுக்குத் தனிமையில் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. ஆகவே அடுத்து வந்த வாரத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி நிரஞ்சனிடம் சொல்லாமல் சென்னைக்குக் கிளம்பிவிட்டாள்.
அவள் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வருவதால் முன்பே அலுவலகத்தில் விடுப்பு வேண்டும் என்று கேட்டிருந்தாளே.
இதை அறியாத நிரஞ்சன் அவளைக் காணாமல் திகைத்துப் போனான். சற்றுநேரம் அமர்ந்து யோசித்த பின்னரே அவன் தான் விடுமுறைக்கு ஒப்புதல் அளித்தான் என ஞாபகத்துக்கு வந்தது. அவள் சென்னை சென்றதைப் பற்றிப் பவித்ராவிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். அவளை உடனே பார்க்க வேண்டும் எனத் துடித்தான்.
அவள் பெற்றோர்கள் இந்த வாரம் வருவதாக அவள் தந்தை அன்று அலைபேசியில் சொன்னார் என்பதும் அவன் ஞாபகத்துக்கு வந்தது. தன்னிடம் எதையும் சொல்லாமல் போனால் அவனால் கண்டுபிடிக்க முடியாதா என்ன?
‘என்னை விட்டு எங்கேயும் உன்னால் போக முடியாது’ என உல்லாசமாக விசிலடித்தான் நிரஞ்சன்.
அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருக்கிறது. அவளுடன் எந்நேரமும் பேச வேண்டும், நேரம் செலவழிக்க வேண்டும் என்றிருந்தது. அவளை ஆசையாய் வம்புக்கு இழுக்கப் பிடித்திருக்கிறது. அவளைச் சீண்ட பிடித்திருக்கிறது. இந்த உணர்வு அவனுக்குப் புதிதாய் இருந்தது. பிடித்தமாய் இருந்தது.
இப்படியொரு உணர்வை அவன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்ததில்லை. அஞ்சனாவுடன் முன்பு பழகியிருக்கிறான் என்றாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவளுக்காக ஓட வேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் மதுமிதாவுக்காகத் தன்னை மறந்து, தன் வேலையை மறந்து ஓட வேண்டும் போலிருந்தது.
அன்று மதுமிதாவின் மூச்சுக் காற்று அவன் சுவாசத்தில் கலந்த போது அவன் நெஞ்சின் அடி ஆழம் வரையில் தித்தித்தது. இந்தத் தித்திப்பை ஒரு நாளும் அஞ்சனாவுடன் இருந்த போது நுகர்ந்ததில்லை.
‘வேண்டாம்... வேண்டவே வேண்டாம். அஞ்சனாவைப் பற்றிய நினைப்பை ஒதுக்கிவிடு. ஒப்பிட்டுப் பார்க்காதே. நீ மதி கெட்டு இருக்கையில் நடந்து கொண்ட விஷயம். இப்போது உன் மதி உன்னிடம் வந்துவிட்டது. புத்தியாகட்டும், சித்தியாகட்டும் அனைத்தும் உனக்குக் கிடைத்துவிட்டது’ அவன் மனம் அவனை நேர்வழியில் செல்வதற்கு வழி நடத்தியது.
இது காதல்! மதுமிதாவின் மேலிருப்பதே காதல். இது அவனுக்குப் பிடித்திருக்கிறது. இனித்தும் இருக்கிறது!
தொடரும்...
Last edited: