Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் - 5
திடீரென்று உயர்ந்து ஒலித்த மதுமிதாவின் குரலைக் கேட்டு அனிச்சையாக அவள் பக்கம் நகரத் தொடங்கிய நிரஞ்சனின் கால்கள் அவள் மயங்கிச் சரிவதைக் கண்டதும், சற்றும் தாமதிக்காமல் தடதடவென்று ஓடிச் சென்றன.
அவன் ஓடுவதைப் பார்த்து அருகிலிருந்த மற்றவர்களும் துரிதமாகச் செயல்பட்டு அவளை நோக்கிச் சென்றனர். அதற்குள் நிரஞ்சன் போய் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தான். மதுமிதா நழுவவிட்ட அலைபேசியிலிருந்து, “மது.. மது..” என யாரோ கத்திக் கொண்டிருந்தது நிரஞ்சனுக்குக் கேட்டது.
மதுமிதாவை அப்படியே இருக்கையில் அமரச் செய்தான் நிரஞ்சன். அதற்குள் யாரோ ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து தர அவள் முகத்தின் மேல் அதைத் தெளித்தான். சில்லென்று குளிர்ந்த நீர் படவும் மூடியிருந்த இமைகளுக்குள் பதுங்கி கொண்டிருந்த கருமணிகள் மெல்ல அசைந்தன.
“கொஞ்சம் தள்ளி நில்லுங்க. காற்றோட்டமாக இருக்கட்டும்” என ஆங்கிலத்தில் சொன்ன நிரஞ்சன், கீழே இருந்த அலைபேசியை எடுத்து, “ஹலோ” என்றான்.
“மது எங்கே? என்னாச்சு?” என எதிர்முனையில் இருந்தவன் கேட்க, “நீங்க என்ன சொன்னீங்கன்னு தெரியலை. மயக்கமாகிட்டாங்க” என நிலவரத்தை உள்ளபடியே பகிர்ந்து கொண்டான் நிரஞ்சன்.
விஷயம் இது தான். அமெரிக்காவில் இருக்கும் மதுமிதாவின் அண்ணனும் பெற்றோரும் வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புகையில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இவர்களின் காரின் மீது வேறு ஒரு கார் வந்து மோதிவிட்டது.
அந்த அதிர்ச்சியில் அவளது தந்தை மயக்கமாகிவிட்டார். உடனே போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அன்றிரவு முழுவதும் அவரை அவசரச் சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தனர்.
இந்தக் களேபரத்தில் அன்றிரவு, அதாவது இந்தியாவில் காலை நேரம் மதுமிதாவுக்குப் பிறந்தநாள் என்பதை மறந்துவிட்டனர். இதை எதையும் அறியாத மதுமிதா ‘தனக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூடச் சொல்லவில்லையே. மறந்துவிட்டார்களா? ’ என்றே காலையில் முகத்தை உர்ரென்று வைத்திருந்தாள்.
ஆரம்பத்தில் அவர்களாக அழைக்கட்டும் என்று காத்திருந்தவள், அமெரிக்காவில் காலை ஏழு மணியாகிவிட்ட நிலையிலும் யாரும் தன்னை அழைக்கவில்லை என்றதும் அவளுக்குப் பதட்டம் தொற்றிக் கொண்டது. இப்படியெல்லாம் ஒருபோதும் அவளுக்கு நடந்ததில்லை.
இருந்த பொய்க் கோபமெல்லாம் காலாவதியாகிப் போக, உடனே தந்தையை அழைத்தாள். அவர் எடுக்கவில்லை என்றதும் அண்ணனுக்கு அழைத்தாள். அவனே நடந்த விஷயத்தைச் சொல்லவும் இதோ இப்போது அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்திருந்தாள்.
அவளிடம் மறைக்க வேண்டும் என்று அவன் எண்ணவில்லை. காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டான். இருந்த பதட்டத்தில் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவும் மறந்து போனான்.
விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்ன விவேக், “பிளீஸ் அவளைப் பார்த்துக்கோங்க. அவ கொஞ்சம் அனீமிக் வேற” எனத் தவிப்புடன் சொன்னான்.
“நீங்க உங்க அப்பாவைப் பாருங்க. இங்க நான் மதுவைப் பார்த்துக்கிறேன்” என வாக்குறுதி தந்து தைரியம் சொல்லி அழைப்பை வைத்தான் நிரஞ்சன்.
முதல் கட்டமாக, சற்றுத் தெளிந்திருந்த மதுமிதாவைப் பார்த்து, “அப்பாவுக்கு எதுவும் ஆகாது. ஜஸ்ட் அதிர்ச்சியில மயக்கமாகியிருக்கார். நீங்க உங்களுக்கு எதையாவது இழுத்து வச்சுக்காதீங்க. உங்க அண்ணனோட பேசினேன். பயப்படறதுக்கு எதுவுமில்லைன்னு சொன்னார்” என அவளைத் தேற்றினான்.
அவள் கண்களிலிருந்து கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்து கன்னத்தில் இறங்கி ஓடியது. அவர் இங்கே எதிரில் இருந்திருந்தால் அவளுக்கு இத்தனை பயம் இருந்திருக்காது. கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருப்பதால் இப்படி உணர்ச்சிகரமாக உணர்கிறாளோ என்னவோ?
மற்ற நண்பர்களும் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்ல, ஓரளவுக்குத் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.
“மது, நீங்க முதல்ல வீட்டுக்குக் கிளம்புங்க” என அவளைக் கிளம்பச் சொன்ன நிரஞ்சன், அவனே அவளை அழைத்துச் செல்வதாகச் சொன்னான். அவள் எவ்வளவோ மறுத்தும் முதலில் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவள் உடல்நிலையைப் பரிசோதிக்கச் சொன்னான்.
பரிசோதனையின் முடிவில் அவளுக்கு ஒன்றுமில்லை என்று மருத்துவர் உறுதியாகச் சொன்ன பிறகே அவன் மனம் அமைதியானது. மருத்துவமனையில் பேசிவிட்டுக் காருக்கு வந்ததும், மதுமிதாவின் அலைபேசியில் அவள் அண்ணனுக்கு அழைத்துப் பேசச் சொன்னான்.
அவள் அழைத்ததும், “மது குட்டி, எப்படிடா இருக்க?” என விவேக் பரிவுடன் கேட்க, “புட்டியோட இருக்கேன்” எனப் பரிகாசமாகச் சொன்னாள்.
அவளுக்குக் குடிக்க ஏதாவது வேண்டுமா என்று கேட்டு மருத்துவமனையின் கேன்டீனில் குடிக்கத் தண்ணீர் வாங்கித் தந்தான் நிரஞ்சன். அந்தத் தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டிருந்ததை அப்படிக் கிண்டலாகச் சொன்னாள் மதுமிதா.
கலகலவென்று விவேக் சிரிக்க, தன் தந்தையின் நலன் பற்றி விசாரித்துக் கொண்டாள். பின்னர் அவள் பிறந்தநாளுக்கு அவர்கள் குழு உணவகம் சென்றது பற்றிச் சொல்லவும், “பர்த்டேக்கு கிஃப்ட், பிரியாணி வேணும்னா வாய் திறந்து கேட்கணும் மது. இப்படி மயங்கி சீன் போட கூடாது” என அவள் காலை வாரிவிட்டான்.
“மயங்கி விழறதுக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டேன்” எனச் சிலிர்த்துக் கொண்டாள் மதுமிதா.
“ஓஹ்... உண்ட மயக்கத்துல மயக்கம் போட்டுட்டியா? அளவாச் சாப்பிடணும்” என அவன் மேலும் அவளைக் கலாய்க்க, “கையில கிடைச்சீங்க... கொத்துப் பரோட்டா போட்டுடுவேன்.” என அவள் அண்ணனை கோபத்துடன் மிரட்டினாள்.
“அப்போ கூடத் திங்கறதை மறக்கறதில்லை... நமக்குச் சோறு முக்கியம் பாஸ்” என விவேக் விடுவதாக இல்லை.
அருகிலேயே இருந்ததால் விவேக் பேசுவது அனைத்தும் நிரஞ்சனுக்கும் கேட்டது. அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டவனுக்கு அவர்களின் பாசப் பிணைப்பும், பரிவும் ஆச்சரியத்தைத் தந்தது. அண்ணனும் தங்கையும் இப்படியெல்லாம் இருப்பார்களா என்ன என அவனுக்கே உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுத்தது.
“ஹாப்பி பர்த்டே மது” என வாஞ்சையுடன் சொல்ல, “தேங்க்ஸ் அண்ணா... அப்பாவைப் பார்த்துக்கோங்க” என நெகிழ்ந்து போய்ச் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தாள் மதுமிதா.
நிரஞ்சனின் கார் தன் வீட்டுக்குச் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் செல்வதைப் பார்த்து, “இது என் வீட்டுக்குப் போற வழியில்லை” என்றாள் மதுமிதா.
தன் எண்ண வலையில் சிக்கிக் கொண்டிருந்தவன், அவளின் பேச்சால் நடப்புக்கு வந்தான். “தெரியும்” என்றவன், பவித்ராவுக்கு அழைக்கச் சொன்னான்.
‘எதற்கு?’ என்ற கேள்வி எழுந்தாலும் மறுக்காமல் அவளை அழைத்தாள் மதுமிதா. அழைப்பு எடுக்கப்பட்டவுடன், “பவி, மது கொஞ்சம் ஆபீஸ்ல மயக்கமாகிட்டாங்க” என நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவன்,
“அவங்க அப்பா-அம்மா யாரும் ஊர்ல இல்லை. இன்னைக்கு நைட் ஒரு நாள் உங்க வீட்ல இருக்கச் சொல்லுங்க” என நிரஞ்சன் சொல்லவும், “அதெல்லாம் வேண்டாம்” என உடனே மறுத்தாள் மதுமிதா. தோழியே என்றாலும் அவர்களுக்கு அவளால் எந்தச் சங்கடமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
“என்ன வேண்டாம்? நீ மட்டும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பழகுவ, நாங்க மட்டும் எதுவும் செய்யக் கூடாது. நீ இப்போ எங்க இருக்கற? சொல்லு... நானே வந்து கூட்டிட்டுப் போறேன்” எனச் சற்றுக் கண்டிப்புடன் பவித்ரா பேச,
“நானே கூட்டிட்டு வரேன். ஒரு பத்து நிமிஷத்துல உங்க வீட்டுல இருப்பேன்” என அவள் எதையும் மறுத்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் அவனே அழைப்பைத் துண்டித்தான் நிரஞ்சன். அவனையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதா அவனின் அக்கறையில் நெகிழ்ந்து போனாள்.
“தேங்க்ஸ் நிரஞ்சன். எவ்வளவு கரிசனையோட நடந்துக்கறீங்க. நீங்க இங்க இல்லைனா இப்போ நான் எந்த நிலைமைல இருந்திருப்பேன்னே தெரியாது. எனக்கு என் அப்பாவை ரொம்பப் பிடிக்கும்” என்றவளுக்குக் கண்களில் குளம் கட்டிக் கொண்டது.
“இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அதைப் பெரிசு படுத்தாதீங்க” என அதை ஒதுக்கியவன், “குடும்பத்துல ஒருத்தருக்கு ஏதாவது நேர்ந்தா எப்படி இருக்கும் என எனக்கு நல்லாவே தெரியும். என் அப்பா ஹார்ட் அட்டாக்ல கிட்டத்தட்ட ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார். அப்போ அந்தக் கருப்புக் காலத்தை வலியோட நான் கடந்து வந்திருக்கிறேன்.
யார் தோளாவது கிடைக்காதா என அவ்வளவு ஏங்கினேன். ரொம்பவும் அடிபட்டுட்டேன் மது. அதே வலியை என் கண் முன்னாடி யாரும் படக் கூடாதுன்னு நினைப்பேன். அதுவும் உங்களுக்குன்னு தெரியும் போது எப்படிச் சும்மா இருக்கிறது?” என்றான்.
அதைக் கேட்டதும் அவள் மனதில் புதிய மலர்ச்சித் தோன்றியது. இவன் அருகில் இருக்கும் போதும் உலகத்தில் உள்ள எதையும் தைரியமாக எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. அவளுக்குப் பெரிய அரணாகவும், பாதுகாவலனாகவும் இருப்பான் என்ற உணர்வு அவளுள் எழுந்தது,
அதே போல் அவள் மனதில் வேறொன்றும் தோன்ற அதை அவனிடத்தில் வெளியிட்டாள். “நம்ம சந்திக்கிற ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு போரை எதிர்கொண்டு போராடிட்டுத் தான் இருக்காங்க இல்லையா?” என மதுமிதா சொல்ல, அவளை அர்த்ததுடன் திரும்பிப் பார்த்தான்.
“அதனால் நம்மால் முடிஞ்ச வரையில மத்தவங்ககிட்ட கனிவோட நடந்துக்கணும்” என முடித்தாள். அதற்குள் காரைக் கொண்டு போய் ஒரு துணிகடையின் முன்னர் நிறுத்திருந்தான்.
‘இங்கே எதற்கு?’ என்பதைப் போல் அவனைப் பார்க்க, “உங்களுக்கு மாற்றுத் துணி வாங்கிட்டு வாங்க. நான் காரிலேயே இருக்கேன்” என்றான்.
அவளுக்கும் அது அப்பொழுது உறைத்தது. “ஐஞ்சு நிமிஷம்” எனச் சொன்னவள் குடுகுடுவென்று கடைக்குள் ஓடினாள். அவனின் இந்த அக்கறை, கரிசனம், கனிவு அனைத்தும் அவளை வெகுவாய்ப் புரட்டிப் போட்டது. தனக்காக எவ்வளவு யோசித்துச் செயல்படுகிறான் எனப் பாவை நெஞ்சம் அவன் வசம் தஞ்சமானது.
அவள் மனதில் அவன் மேலிருந்த பிடிப்பு, அடுத்தக் கட்டத்தை நோக்கியும் நகர்ந்தது. இன்று யாராவது வந்து அவளிடம், ‘நீ அவனை விரும்புகிறாயா?’ என்று கேட்டிருந்தால், சென்ற வாரம் இருந்த ஊஞ்சலாடும் நிலை சத்தியமாக அவளிடம் இப்போது இல்லை. ‘ஆமாம்’ என்று அடித்துச் சொல்லியிருப்பாள்.
சொன்னபடியே ஐந்து நிமிடங்களில் மதுமிதா வந்துவிட்டாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் பவித்ராவின் அடுக்குமாடிக் குடியிருப்பும் வந்திருந்தது.
காரிலிருந்து இறங்கியதும் பவித்ராவை அழைத்த மதுமிதா, பவித்ராவின் வீட்டு எண்ணைக் கேட்டுவிட்டு மேலேறிச் சென்றனர்.
மதுமிதாவை எதிர்நோக்கிக் காத்திருந்த பவித்ரா, நிரஞ்சனும் உடன் வருவான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. வந்தவனை, ‘ஏன் வந்தாய்?’ என மதுமிதாவின் முன்னால் கேட்கும் துணிவுமில்லை.
மதுமிதா வீட்டினுள் சென்றதும், பவித்ராவின் அன்னை முகமெல்லாம் மலர்ச்சியுடன், “வாம்மா மது. எத்தனை நாளா வரச் சொல்லிட்டு இருந்தேன்” எனச் சொன்னவர், “அப்பாக்கு எதுவும் ஆகாது. தைரியமா இரு” என அவள் கையைப் பற்றிப் பேசினார்.
அந்தத் தொடுகை அவளுக்கு அப்போது தேவையாக இருந்தது. ஏனோ அன்னையின் அரவணைப்பைப் போலிருந்து அவரது தொடுகை.
“அண்ணாகிட்டே பேசினேன் ஆன்ட்டி. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களாம். அது திடீர்னு கேட்டதும் கொஞ்சம் பயந்துட்டேன். இப்போ அவர் நல்லா இருக்கார்” என விஷயத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
அப்போது தான் அவள் பின்னால் நின்றிருந்த நிரஞ்சனைப் பார்த்தார். அப்படியே திகைத்துப் போய்ச் சிலையென நின்றுவிட்டார் கௌரி.
“அதான் இப்போ வந்துட்டேனே ஆன்ட்டி...” என்றவள், அவர் பேசாமல் நிரஞ்சனைப் பார்த்துக் கொண்டிருப்பதை நோக்கினாள்.
“மறந்துட்டேன் பாருங்க. இவர் நிரஞ்சன். எங்க ரெண்டு பேருக்கும் பாஸ்” என மதுமிதா நிரஞ்சனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
நிரஞ்சன் அவரைப் பார்த்து வணக்கம் என இரு கைகளையும் அவர் முன்னால் கூப்பி நின்றான். “நல்லா இருக்கீங்களாம்மா?” என்ற அவனது கேள்விக்குத் தலையை மட்டும் அசைத்தார் கௌரி.
“இன்னைக்கு ரெண்டு பேருக்கும் பர்த்டேன்னு அவருக்குப் பட்டையைத் தீட்டிட்டோம்” என மதுமிதா தொடர்ந்து சொல்ல, கௌரி மகளின் முகத்தில் விடையைத் தேடினார். அவளும் அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
“உட்காரும்மா மது... உட்காருப்பா” என உபசரித்தார் கௌரி.
வீட்டில் ஏதோ பலகாரம் வாசனை வரவும், “வாசனை எல்லாம் பலமா இருக்கு. அம்மாவோட சமையல் சாப்பிடறதுக்குன்னே சீக்கிரம் பெர்மிஷன் போட்டுட்டு வந்துட்ட போல” எனப் பவித்ராவிடம் பரிகாசமாகக் கேட்டவள்,
“என்ன ஆன்ட்டி, உங்க பொண்ணுக்கு மட்டும் தான் கொடுப்பீங்களா?” என நகைத்தவாறே வினவினாள். தன் ஒருத்தியால் அனைவரின் நல்ல மனநிலையும் கெட்டுவிடக் கூடாதே என மதுமிதா தன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள்.
“உனக்கு இல்லாததா?” என உடனே சமையலறைக்குச் சென்று தட்டில் அவர் செய்திருந்த வாழைக்காய் பஜ்ஜி மற்றும் பாயாசம் எடுத்து வந்து இருவருக்கும் தந்தார்.
அவசரமாக அதை எழுந்து வாங்கிக் கொண்ட நிரஞ்சன், ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல் சாப்பிட ஆரம்பித்தான்.
அதைப் பார்த்த மதுமிதா, ‘நம்ம தான் சாப்பிட இப்படிப் பறப்போம்னு பார்த்தா, இவர் என்னை விட ஸ்பீடா பறப்பார் போல’ என எண்ணிச் சிரித்துக் கொண்டாள்.
அவன் ஏன் அப்படிப் பறந்தான் எனத் தெரிய வருகையில் அவள் நெஞ்சக்கூடு முழுவதையும் தீயிலிட்டுப் பொசுக்கியதைப் போன்றதொரு உணர்வு எழும் என்று அவள் அப்போது அறியவில்லை.
“ரொம்ப நாள் ஆச்சும்மா இப்படிச் சாப்பிட்டு. ரொம்ப நல்லா இருந்தது.” திடீரென்று ஒலித்த நிரஞ்சனின் குரலில் கௌரி அப்படியே அவனை விழியகலாமல் நோக்கினார்.
“நமக்கு நம்ம அம்மாவோட கைப்பக்குவம் அவங்க பக்கத்துல இல்லாதப்ப நல்லா தெரியுது. இல்லைங்களா நிரஞ்சன்?” என மதுமிதா அவனைப் பார்த்துக் கேட்கவும், “ஆமாம்... அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணறேன்” என்றவனின் ஏக்கக் குரலில் மதுமிதாவின் மனம் நெகிழ்ந்தது.
அதன்பிறகு சிறிது நேரத்திலேயே அவன் பவித்ராவின் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் மதுமிதா மிகவுமே தேறிவிட்டாள். அதுவும் அவள் தந்தை தினமும் காலையும், மாலையும் அவளை அழைத்துப் பேச மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.
அதற்குள் அவர்கள் குழுவிலிருக்கும் அர்ஜூனுக்குச் சென்னையில் திருமணம் ஏற்பாடாகியிருந்த திருமண நாளும் வந்தது.
அவர்கள் கிளம்பிப் போய்த் திருமணத்திலும், அன்று மாலையே நடக்கவிருக்கும் ரிஷப்ஷனிலும் கலந்து கொண்டு இரவு ரயிலைப் பிடித்து மறுநாள் காலையில் திரும்பிவிடலாம் எனத் திட்டமிட்டனர்.
என்ன திருமணம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கள்கிழமையும் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது அவர்களுக்கு. அதன்படி அனைவரும் கிளம்பி மாலையில் ரயில் நிலையம் செல்ல அங்கே நிரஞ்சனும் காத்திருந்தான்.
அவனை ஹைதராபாத் ரயில்நிலையத்தில் பார்த்ததும் ஆனந்த், “என்ன நிரஞ்சன், உங்க ரேஞ்சுக்கு நீங்க ஃப்ளைட்ல போவீங்ன்னு நினைச்சோம். ஆனா, எனக்கு ஒரு சந்தேகம். நாங்க நிஜமா கல்யாணத்துக்குப் போறமா, இல்லை, பொய்ச் சொல்லிட்டு டூர் போறமான்னு உறுதிபடுத்தறதுக்கு நீங்க எங்களைத் தொடர்ந்து வந்த மாதிரி இருக்கே... உண்மையைச் சொல்லுங்க” என்றான்.
கலகலவென்று சிரித்த நிரஞ்சன், “அப்படியிருந்திருந்தா லீவுக்கு ஒத்துக் கொண்டிருக்க மாட்டேனே. காலேஜ் படிக்கறப்பவும் சரி, அதற்கு அப்புறமும் லைஃப்ல நிறையச் சந்தோஷங்களை இழந்திருக்கிறேன். பணம் மட்டுமே முக்கியம்னு இருந்திருக்கேன்.
இப்போ இழந்ததையெல்லாம் மீட்டு சந்தோஷத்தை அனுபவிக்கணும்னு நினைக்கிறேன்.
அதான் நீங்க எல்லோரும் ஒன்னா போறது பத்தி அப்போவே மதுமிதா சொன்னாங்க. நானும் அதுலேயே புக் பண்ணிட்டேன். ஜாலியா இருக்கும் இல்ல” எனச் சிரித்தான் நிரஞ்சன்.
அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் பவித்ரா கைபேசியில் மூழ்கியிருக்க, நிரஞ்சன் அவளைக் கூர்ந்து கவனித்தான். அவள் முகத்தில் எந்த மாறுதலையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்குள் ரயில் புறப்படத் தயாராக அனைவரும் பரபரப்பானார்கள். திரும்பி வருகையில் தான் கட்டி வைத்த மொத்தக் கோட்டையும் சில்லுச் சில்லாக உடைந்து நொறுங்கிப் போயிருக்கும் என்பதை மதுமிதா அறியவில்லை.
தொடரும்...
Last edited: