Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 3
அன்றிரவு தூங்கச் சென்ற மதுமிதாவின் சிந்தனையை நிரஞ்சனே ஆக்கிரமித்து அட்டூழியம் செய்து கொண்டிருந்தான். அவள் இங்கே பணியில் சேர்கையில் அவன் இவளிடம் இயல்பாகவே பழகினான்.
ஆனால் சமீப காலமாக அவளை மேலும் நெருங்கி நட்பு பாராட்ட ஆரம்பித்திருந்தான். ஒருவேளை அவள் மேல் பிடித்தம் இருப்பதால் அவ்வாறு நெருங்கினானோ? அவள் மனம் குளிர்ந்து சந்தோஷத்தில் குதியாட்டம் போடத் தொடங்கியது.
இப்போது யோசித்துப் பார்த்தால் அவன் அலுவலகத்தில் உள்ள வேறு பெண்களிடம் இத்தனை நெருக்கமாகப் பழகிக் கண்டதில்லை. ஒரே குழுவில் இருக்கும் பவித்ரா யாரிடமும் பேசுவதில்லை. ஆகவே அவன் தனக்காகவே பார்க்கிறான் என்ற சிந்தனையில் அவள் மதி மயங்க ஆரம்பித்தது.
அதற்குச் சிகரம் வைத்தாற்போல் வேறொரு விஷயமும் குற்றாலச் சாரலாய்த் தீண்டி மனதைக் குளிவித்தது.
அலுவலகத்தில் இதுவரையில் யாரின் பிறந்தநாளையும் கொண்டாடும் வகையில் குழுவாக இப்படி வெளியில் சென்றதில்லை என அவள் குழுவில் உள்ளவர்கள் பேசிக் கொண்டனர். அதைக் கேட்க நேர்கையில் அவளுக்குப் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஆனால் கள்ளுண்டதைப் போல் மயங்கியிருந்த மனம் இப்போது முற்றிலும் கிறங்கிப் போனது.
நிரஞ்சன் தனக்காகச் செய்கிறானோ என்ற எண்ணமே அவள் இதயத்தைச் சர்க்கரைப் பாகில் முக்கியெடுத்ததைப் போல் தித்திக்கச் செய்தது.
அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்ததாலோ என்னவோ அன்று கனவிலும் அவனே வந்து குறும்பாய்ச் சிரித்தான். புருவத்தைக் கொக்கி போல் உயர்த்தி அவள் மனதைக் கட்டியிழுத்தான். இதயத்தைக் களவு போக விடாமல் தடுப்பதற்குத் திக்குமுக்காடித் திணறினாள் என்றே சொல்லலாம்.
அவள் காலையில் எழுகையிலேயே ஒரு புதுவிதப் பரவசம் அவளைத் தொற்றிக் கொண்டதை உணர்ந்தாள். நிரஞ்சனைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே கட்டிக் கரும்பாய் இனித்தது. இதற்கு முன் இப்படி அவள் உணர்ந்ததில்லையே. இந்த ஆழமான ஆழ்மனதின் உணர்வு பிடித்திருந்தது.
அதே சமயத்தில் தேவையில்லாமல் தோழி தன் மனதில் தீயை மூட்டிவிட்டாளே என அவளைத் திட்டவும் மறக்கவில்லை. சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்ததைப் போலிருந்தது அவளது நிலை.
எதேச்சையாக நடக்கும் செயல்களுக்கு இப்படியெல்லாம் அவளே ஒரு முலாம் பூசத் தேவையில்லை என மனதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள். பொறுத்துப் பார்க்கலாம் என எண்ணியவாறே கிளம்பிக் கொண்டிருக்க, அமெரிக்காவிலிருந்து அவள் தந்தை அழைத்திருந்தார்.
“மது குட்டி, எப்படிடா இருக்க?” என மகளிடம் நலம் விசாரிக்க, “என்ன மது புட்டியா?” எனப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. அண்ணன் விவேக் அவள் தந்தை குட்டி என்று இவளை அழைத்தால் போதும் உடனே அவளை ‘மது புட்டி’ என்றே கிண்டலாக அழைப்பான்.
“புட்டியிலேயே ஒருத்தரோட புத்தி இருக்குது. என்னன்னு கேளுங்கப்பா” என மதுமிதா அவன் அண்ணனை மாட்டிவிட, “அவளை வம்புக்கு இழுக்கலைன்னா உனக்குத் தூக்கம் வராதே” என மகனிடம் சொன்னவர், “அவன் கிடக்கிறான் விடும்மா” என அவனைத் தூசியைப் போல் ‘யூஃப்’ என ஊதித் தள்ளினார்.
“மது, உனக்குப் பொருத்தமா இங்கே ஒரு மாப்பிள்ளை இருக்கார். பேசிப் பார்க்கட்டுமாம்மா?” எனக் கேட்க, “ஐயோ, இப்போ வேண்டாம்ப்பா” என மின்னல் வேகத்தில் பதறிக் கொண்டு பதில் சொன்னாள்.
“ஏன்டா... இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப் போறதா உத்தேசம்? யாரையும் லவ் பண்ணறதாவும் சொல்லலை” என அவர் மேற்கொண்டு பேசும் முன்னால், “இனிமேல் லவ் பண்ணினா ஒத்துக்க மாட்டீங்களாப்பா?” எனப் பட்டென்று அவள் வாயிலிருந்து வந்துவிட்டது.
சற்றுநேரம் இரண்டு பக்கமும் மௌனம் நிலவியது.
“அடிப்பாவி.. யாரு அது? நல்லவனா, என்ன படிச்சிருக்கான்? எங்க மீட் பண்ணின, என்ன வேலைல இருக்கான்?” என அவள் அண்ணன், விவேக் மௌனத்தை உடைத்து, கேள்விகளைக் கொண்டு அவள் காதுகளை அடைத்தான்.
“நீங்க என்ன வேலைக்கா ஆள் எடுக்கறீங்க? பேர் என்ன, எங்க பார்த்த, எப்படி மீட் பண்ணினன்னு எதுவுமில்லை. என்னவோ வேலைக்கு ஆள் தேடற மாதிரி இப்படிக் கேள்வியா அடுக்கறீங்க?” என அவனைச் சீண்டினாள்.
அவள் தந்தையின் அமைதி அவளை என்னவோ செய்தது. அதுவுமில்லாமல் இப்படிப் பட்டென்று உள்ளத்தில் உள்ளதை வெளியிட்டுவிட்டாளே. அவளைச் சமன்படுத்திக் கொள்ளவே அவள் அண்ணனை வம்புக்கு இழுத்தாள்.
“நான் முன்னாடியே லவ் பண்ணி, போராடி, விடுதலை வாங்கி உனக்கு அழகா வழி போட்டு வச்சிருக்கேன் மது. அதுக்கு நீ உன் காலமெல்லாம் எனக்கு நன்றி சொல்லணும்” எனக் குதூகலத்துடன் ஆர்ப்பரித்தான்.
“ஆமாம்மா ஏன் கேட்கறீங்க? அம்மா-அப்பா ரெண்டு கட்டையைத் தூக்கிட்டு, கார் சேசிங் எல்லாம் செஞ்சு உங்களைத் துரத்தினாங்க. அப்படியே போராடி சண்டை போட்டு வீரப் புண்களோட எனக்காக விடுதலை வாங்கியிருக்கீங்க. அந்தச் சுதந்திர காத்தை நான் சுவாசிக்கிறேன். பெரிய வீரர் பாருங்க” என நொடித்துக் கொண்டாள்.
மதுமிதாவின் பெற்றோர்களே காதலித்து மணம் புரிந்தவர்கள். அதனால் பிள்ளைகளின் காதலுக்கு ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அதுவும் விவேக் திருமணம் செய்திருந்த பெண் அவர்களுக்கு நன்கு பரிச்சயமான குடும்ப நண்பரின் மகள்.
அப்படியிருக்கையில் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதைப் போல் மறைத்துப் பேசினால் முறைத்துக் கொள்ள மாட்டாளா என்ன?
“சரி சொல்லு, ஆளு தெலுங்கா? எனக்குத் தெலுங்கு பதா ஹை (தெரியும்). நான் வேணா உனக்குத் தெலுங்கு சொல்லித் தர்றேன்?” என அவள் ஹைதராபாத்தில் இருப்பதால் அங்கே தான் அவனைச் சந்தித்திருக்கிறாள் என ஊகித்து அவளைச் சீண்டினான்.
“ஹிந்திக்கும் தெலுங்குக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிற உங்களையெல்லாம் அறிவாளின்னு அமெரிக்காவுக்கு அனுப்பி வச்சிருக்காங்க பாரு அவங்களைச் சொல்லணும்” என அவன் காலை வாரினாள்.
“ஓஹ்... இதை இப்போ ஹிந்தி சிலபஸூக்கு மாத்திட்டாங்களா?” என அவன் அசராமல் பதில் தந்தான். தொடர்ந்து, “ஆனா மது, எனக்கு ஒரு டவுட். ஒரு பார்சல் பிரியாணிக்காக அண்ணனுக்கே லவ் லெட்டர் வாங்கிட்டு வந்து கொடுத்த உன்னையா அறிவாளின்னு சொல்வாங்க?” என அவனும் விடுவதாக இல்லை.
உண்மையே! அவள் பள்ளியில் படிக்கும் பொழுது அவளை விட இரண்டு வகுப்புப் பெரியவளான நித்யா மதுமிதாவுக்குப் பிரியாணி வாங்கித் தருவதாகச் சொல்லி அவள் அண்ணனுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினாள்.
நித்யா அவளுக்குத் தெரிந்த பெண்ணே. அதனால் பாதகமில்லை என்று எண்ணினாள். அதுவுமில்லமல் அவள் பிரியமுடன் பிரியாணி எனக் காதலில் சிக்குண்டிருந்தாள். ஆகவே பிரியாணியின் மென்மனதை நோகச் செய்யக் கூடாது என்ற காரணத்தால் அதைச் சாப்பிட்டுவிட்டுக் கடிதத்தைத் தன் அண்ணனிடம் போய்ச் சேர்த்து நம்பிக்கையான தூதுவனானாள் மதுமிதா.
கூடுதலாக அவள் அண்ணனின் அலைபேசி எண்ணிலிருந்து ஆரம்பித்து மொத்த பயோடேட்டாவையும் பகிர்ந்து கொண்டாள்.
கடிதத்தைப் பெற்றுக் கொண்ட விவேக், ‘இனிமேல் என் நம்பரை யாருக்காவது கொடுத்துப் பாரு?’ என முகம் சிவந்து போய்த் தங்கையை மிரட்டினான். அப்போதைக்கு மதுமிதாவைத் திட்டிய விவேக் பின்னாளில் அதே நித்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். அதை இப்போது சொல்லிக் காட்டுகிறான்.
“அதெல்லாம் வேலைக்குக் கூலி. இங்கே பணத்துக்குப் பதிலா எனக்குப் பிடிச்ச பிரியாணி. பண்டம் மாற்று முறையைப் பத்திக் கேள்விப்பட்டதில்லை? என்னத்தைப் படிச்சீங்களோ?” என அவளும் சிலிர்த்துக் கொள்ள,
“எப்படியோ உனக்குச் சாப்பாடு கொடுத்தா போதும் ஈசியா உன்னை ஏமாத்திடலாம்” என அவனும் சரிக்குச் சரி கேலி பேசினான்.
மதுமிதாவுக்கு விதவிதமாகச் சாப்பிடப் பிடிக்கும். அதற்காக அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு உடல் எடையை எல்லாம் கூட்டிக் கொள்ளவில்லை. அளவாக ஆனால் விதவிதமாகச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்யும் ரகம் அவள்.
அவளுக்கு யாராவது உணவு கொடுத்தால், ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற அதர பழசான பழமொழியைக் கடமையெனக் கடைப்பிடிப்பவள்.
விவேக் மேற்கொண்டு எதுவும் பேசும் முன்னர், “அவளைப் பேசவிடேன்பா” என அவர்களின் தந்தை சொல்லவும், விவேக் அமைதியானான். சற்றுநேரம் மதுமிதா எதுவும் சொல்லாமல் இருக்க, “மைக் ஏதாவது வேணுமா மது?” என அவன் மீண்டும் வம்புக்கு இழுத்தான்.
குழப்பத்தில் இருக்கும் மதுமிதாவுக்கு, ‘ஆமாம். இவனைப் பிடிச்சிருக்கு’ என நிரஞ்சனைப் பற்றித் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. அதுவும் அவன் செய்யும் செய்கைகளைப் பார்த்தால் அவனுக்கும் பிடித்திருக்கிறது என்றே தெரிகிறது.
எதற்கும் கொஞ்ச நாள் போகட்டும். அதற்குள் அவளுக்கும் தெளிவு கிட்டிவிடும் என நம்பினாள்.
ஆகவே, “தெரியலைப்பா... இப்போதைக்கு அப்படி எதுவுமில்லை. ஒரு ரெண்டு மாசம் டைம் கொடுங்களேன். பிளீஸ்... அப்புறம் சொல்லறேன்” எனப் பட்டும் படாமல் பேசினாள்.
மகள் ஒருவித குழப்பத்தில் இருக்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. அதற்காகவே அவகாசம் கேட்கிறாள் என்றும் தெரிந்தது.
“அப்போ உனக்குப் பிடிச்சிருக்கு...” எனக் குறுகுறுப்புடன் விவேக் சொல்ல, “அவளே வந்து சொல்லட்டும். போ.. போய்த் தூங்கற வழியைப் பாரு” என மகனை விரட்டிவிட்டார் தந்தை.
மகளே வந்து தன்னிடம் சொல்வாள் என அத்துடன் அந்தப் பேச்சை விட்டுவிட்டுப் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசி முடித்து அழைப்பை வைத்தார்.
புத்துணர்ச்சியுடன் கிளம்பி அலுவலகம் சென்றால் அங்கே வேலையில் ஒரு பிரச்சனை காத்துக் கொண்டிருந்தது. அவளும் பவித்ராவும் சேர்ந்து செய்து கொண்டிருந்த ஒரு பிராஜக்டில் பெரிய குளறுபடி ஒன்று நடந்திருந்தது.
தவறு இவர்கள் மீதே. அதைச் சரி செய்ய வேண்டியதும் இவர்களே. இருவரில் யார் தவறு செய்தார்கள் என விலாவரியாக ஆராய்ந்து கொண்டிருக்க நேரமில்லை. ஆராய்ந்து குற்றம் சாட்டி நேரத்தை விரயம் செய்வதிலும் பிரயோஜனமில்லை.
விஷயமறிந்த நிரஞ்சன் கோபத்தில் அவர்களைத் திட்டவெல்லாம் செய்யவில்லை. அவனால் இயன்றவரையில் அவர்களுடன் இருந்து உதவினான். அதுவே மதுமிதாவிற்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.
தவறு அவர்களே செய்திருந்தாலும் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய நேரத்தில் கோபத்தைக் கக்கினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையும் மூலையில் போய்ப் பதுங்கி வெளிவராமல் சிக்கிக் கொள்ளும்.
இப்போது அவர்களால் சுதந்திரமாகச் சிந்தித்து வேலையில் கவனம் செலுத்த முடியும். ஆகவே அவளும் பவித்ராவும் மடமடவென்று வேலையில் இறங்கிவிட்டனர்.
மதியம் வயிறு பசிக்க ஆரம்பித்தது மதுமிதாவுக்கு. அவளால் பசியுடன் வேலை செய்யவே முடியாது. ஒரு பத்து நிமிடம் கிடைத்தால் போதும். வயிறு சந்தோஷமாகிவிடும். ஆனால் இடையில் எழுந்து சென்று உணவு சாப்பிடவும் பிடிக்கவில்லை.
பவித்ரா ஏதாவது சொன்னாலும் பரவாயில்லை. உணவை மறந்து வேலை செய்து கொண்டிருந்தாள். மதுமிதாவின் வயிற்றின் அலறல் கேட்டுவிட்டதோ என்னவோ நிரஞ்சன் அவர்களுக்கு மதிய உணவை அவர்களின் இருக்கைக்கே வரவழைத்தான்.
கூடவே, “பசியில இருந்தா எதுவும் ஓடாது. முதல்ல சாப்பிட்டுட்டு வேலையைப் பாருங்க” எனக் கரிசனையுடன் வேறு சொன்னான். அவனது அக்கறையான இந்தப் பேச்சில் மதுமிதா உருகியே போனாள்.
இத்தனை புரிந்துணர்வுடன் இருக்கும் ஒருவனை எங்குத் தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது என்றே எண்ணினாள். அவள் மனதில் அவனைப் பற்றிய எண்ணம் உயர்ந்து கொண்டே சென்றது.
ஆனால் சொந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் அவள் அப்போது இல்லை. முடிக்க வேண்டிய வேலை மட்டுமே கண்முன்னே தெரிந்தது மதுமிதாவுக்கு.
உணவைப் பார்த்த பவித்ரா எப்பொழுதும் போல் எதுவும் பேசவில்லை. அதே போல் அதைச் சாப்பிடவும் முயற்சிக்கவில்லை. மதுமிதா அவளைச் சாப்பிடச் சொல்லிப் பலமுறை கட்டாயப்படுத்திய பின்னரே பவித்ரா சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பிறகே நிரஞ்சனுக்கு நிம்மதியாக இருந்தது.
வெற்றிகரமாக அவர்கள் வேலையை முடித்து வீடு திரும்புவதற்கு இரவு வெகுநேரமாகிவிட்டது. இரவு உணவையும் நிரஞ்சன் அக்கறையுடன் வரவழைத்து இருந்தான். வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் நிரஞ்சனிடம் சென்று,
“நானும் இரண்டு இடத்துல வேலை செஞ்சுருக்கேன் நிரஞ்சன். ஆனா உங்களை மாதிரி அக்கறையோடும் கரிசனத்தோடும் எந்த மேலதிகாரியும் நடந்துகிட்டது இல்லை. நீங்க திட்டி ஏதாவது சொல்லியிருந்தா இப்போ இந்த வேலையே எங்களால சரியா முடிச்சிருக்கக் கூட முடியாது.
ஆனால் எங்களைத் திட்டாம தட்டிக் கொடுத்து உறுதுணையாச் செயல்பட்டீங்க. யூ ஆர் ரியல்லி கிரேட்” என மனதில் தோன்றியதை அவனிடம் மதுமிதா அப்படியே சொல்ல,
“அது...” என ஏதோ சொல்ல வாய் திறந்த நிரஞ்சன் பவித்ராவைப் பார்த்தான். அவளோ வெகு சிரத்தையுடன் தன் கைப்பையை எடுத்து வைப்பதில் மும்முரமாக இருந்தாள்.
“தேங்க்ஸ் நிரஞ்சன். கிளம்பறோம்” என அவனுக்கு நன்றி உரைத்துவிட்டுக் கிளம்பினாள் மதுமிதா.
“மது நில்லுங்க. ரொம்ப லேட்டாயிடுச்சு. தனியா டூ வீலர்ல போக வேண்டாமே. நானே உங்க ரெண்டு பேரையும் ட்ராப் பண்ணறேன்” என அவளைத் தடுத்து நிறுத்தினான்.
மணியைப் பார்க்க, அது பத்தரை என்று காட்டவும் அவளுக்கும் அது சரியே என்று பட்டது. இத்தனை நேரமான பின்னர் இரண்டு சக்கர வாகனத்தில் தனியாகச் செல்வது அவ்வளவு உசிதமில்லை.
அதனால் மதுமிதா உடனே சம்மதித்தாள். ஆனால் பவித்ரா உடனே ஒத்துக் கொள்ளவில்லை.
எடுத்ததுமே, “தேவையில்லை. நானே பார்த்துக்கிறேன்” என அவள் மறுக்க, “என்ன பவி பேசற? நம்ம வண்டி திடீர்னு ரிப்பேர் ஆகி நின்னுடுச்சுன்னா பிரச்சனையாகிடும். பேசாம நிரஞ்சன் சொல்லற மாதிரியே செய்யலாம்” என மதுமிதா பவித்ராவிடம் பேசி அவளைச் சம்மதிக்க வைத்தாள்.
ஒருவழியாக பவித்ராவின் சம்மதம் கிட்டியதும் மிகவும் உற்சாகமாக நிரஞ்சன் தன் காரை நோக்கிச் சென்றான். அவர்கள் காருக்கு அருகில் சென்றதும், பவித்ரா படக்கென்று பின் இருக்கையில் ஏறி அமர்ந்து, “என்னை முதல்ல இறக்கிவிட்டுடறீங்களா?” என அவள் தன் வீட்டு முகவரியைச் சொன்னாள்.
உள்ளே ஏறி அமர்ந்த நிரஞ்சனின் விழிகள் அவளைக் கண்ணாடியில் நோக்க, பார்வையை விலக்கிக் கொண்டாள் பவித்ரா.
மதுமிதாவிற்குத் தோழியின் அருகில் சென்று அமரவும் ஒரு மாதிரி இருந்தது. பின்னே நிரஞ்சன் என்ன அவர்களுக்குக் கார் டிரைவரா? ஆகவே அவள் முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டு பயணித்தாள். அவளையுமறியாமல் அவள் உள்ளம் குதியாட்டம் போட்டது.
செல்லும் வழியெல்லாம் மதுமிதாவின் வாய் மட்டுமே நிற்காது வேலை செய்து கொண்டிருந்தது. நிரஞ்சன் கண்ணாடியில் பவித்ராவைப் பார்க்க, அவளோ கண்களை மூடிக் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்தாள்.
சலிப்புடன் நீண்ட பெருமூச்சை அவன் எடுத்து விட, அவன் வேலை நிமித்தம் அப்படி செய்கிறான் என நினைத்த மதுமிதா, “சாரி நிரஞ்சன், உங்களுக்கு ரொம்பச் சிரமம். உங்களுக்கும் டயர்ட்டா இருக்குமில்ல. அப்படி இருக்கிறப்போ எங்களையும் கூட்டிட்டுப் போறீங்க. நீங்க வீட்டுக்குப் போக ரொம்ப லேட்டாகிடும்” எனப் பரிதாபம் கொண்டாள்.
“எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை” எனச் சிறுமுறுவல் பூத்தான் நிரஞ்சன். அந்தப் புன்னகை அவள் மனதின் அடி ஆழம் வரையில் விர்ரென்று பாய்ந்து தீண்டியது. எங்கே அவள் விழிகளில் தெரியும் உணர்ச்சிகளைக் கண்டுபிடித்து விடுவானோ எனப் பட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.
முதலில் பவித்ராவை அவள் வீட்டின் முன்னால் இறக்கிவிட்ட நிரஞ்சன் உடனே கிளம்புவதற்கு அவசரம் காட்டவில்லை. ஏன் இன்னும் இங்கேயே இருக்கிறோம் என்பதைப் போல் மதுமிதா அவனைப் பார்க்க, “இல்ல, அவங்க நாலாவது மாடிக்குப் போயிட்டாங்களான்னு இங்கிருந்து பார்த்தா தெரியும். அங்கே போனதும் கிளம்பலாம்” என்றான்.
அதைக் கேட்டதும் அவள் உருகியே போனாள். இவனின் இந்த அக்கறை அவளுக்கு நிறையப் பிடித்தது. உடனே பவித்ராவுக்கு அழைத்து அவள் வீட்டினுள் பத்திரமாகச் சென்றுவிட்டாளா எனக் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள் மதுமிதா.
அதன்பின்னர் மதுமிதாவை இறக்கிவிட்ட நிரஞ்சன் காத்திருந்து அவள் வீட்டினுள் சென்ற பின்னரே அங்கிருந்து காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.
சும்மாவே அவனைப் பற்றிக் கொளுத்திப் போட்ட தீப்பொறி நேற்றிரவு கனவில் வந்து திகுதிகுவென்று பற்றி எரிந்து மத்தாப்புகளை வாரியிறைத்தது. இன்று கேட்கவா வேண்டும்? சங்கு சக்கரம் போல் நாலாப் பக்கமும் சுற்றிப் பரவ ஆரம்பித்தது.
அன்றிரவும் அவள் கனவில் நிரஞ்சனே முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தான்.
நிரஞ்சனின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. அவன் சிந்தனை முழுவதையும் பவித்ராவே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். இயலாமை அவன் மனதில் வலியை உண்டாக்கியது.
சற்றுநேரம் அலைபேசியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், ‘நந்தா’ எனச் சேமித்து வைத்திருந்த எண்ணுக்கு அழைத்தான்.
அழைப்பு எடுக்கப்படவில்லை. அப்பொழுது தான் அவனுக்கு இரவு வெகு நேரமாகிவிட்டது என உறைத்தது. காலையில் பார்த்துக் கொள்ளலாம் என அழைப்பை வைத்தவனுக்கு நித்திராதேவி எளிதில் மனம் இறங்கவில்லை.
ஏதேதோ எண்ணங்கள், ஞாபகங்கள் அவனை வந்து வாட்டியது. எப்போது இதற்குத் தீர்வு கிடைக்குமோ என்று பெருமூச்சு விட்டான்.
அதே சமயத்தில் மதுமிதா அவன் சிந்தனைக்குள் நுழைந்தாள். எந்நேரமும் கலகலப்பாக இருக்கிறாள். அவளுடன் சற்றுநேரம் பேசினாலே போதும் மனதில் உள்ள பாரமனைத்தும் குறைந்துவிடும். மனமும் உற்சாகமாகிவிடும்.
உடன் இருக்கும் மனிதர்களையும், சூழலையும் அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறாள். அதுவரையில் அவனைத் தொற்றிக் கொண்டிருந்த சோர்வு பட்டென்று அவனைவிட்டு நீங்கியதைப் போலுணர்ந்தான். எதையும் சாதிக்கலாம் என்ற துணிவும் பிறந்தது.
அந்த வாரம் முழுவதும் வேலை கழுத்தை நெறிக்க, அனைவருக்குமே வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. ஒருவழியாகப் பிரச்சனைக்குத் தீர்வு கிட்டியதும் அனைவரும் ‘அப்பாடா’ என ஆசுவாசமடைந்தனர்.
தொடரும்...
Last edited: