Pochampalli
Member
- Joined
- Sep 3, 2024
- Messages
- 48
அத்தியாயம் – 1
மதுமிதாவும் அவளது தோழி, மதுரவாணியும் அன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல மாலுக்குச் சென்றிருந்தனர். இருவரின் பெயரில் மது இருப்பதாலோ என்னவோ அதில் ஈர்க்கப்பட்டுக் கல்லூரியில் இணைபிரியாத் தோழிகளாக மாறிவிட்டனர்.
இளங்கலை படித்து இப்போது இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் பணியில் இருக்கின்றனர். எனினும் அவர்களின் நட்பு தடம் புரளாமல் அப்படியே நீண்டு கொண்டு இருக்கிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.
அப்படி அவள் தோழியைச் சந்திக்கவென்றே மதுமிதா அவசரப் பயணமாகச் சென்னைக்கு வந்திருந்தாள்.
ஆம்! மதுரவாணி அலைபேசியில் தேம்பி தேம்பி அழவும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அண்ணனின் வீட்டுக்குச் சென்றிருந்த பெற்றோர்களிடம் அனுமதி கேட்டுவிட்டு உடனே சென்னைக்குக் கிளம்பிவிட்டாள்.
என்ன ஒன்று, தந்தையிடம் அனுமதியை உடனே வாங்க முடிந்தவளால் பணிபுரியும் இடத்தில் அத்தனை எளிதாக விடுப்பை எடுக்க முடியவில்லை. அதனால் உடம்புக்குச் சரியில்லை என்று பொய் சொல்லியே விடுப்பு எடுத்திருந்தாள்.
அவளிடம் கேட்டால், ‘பொய்மையும் வாய்மையிடத்த’ என வள்ளுவரையும் இன்னும் பல அறிஞர்களையும் இழுத்து, உதாரணம் காட்டி வாதாடுவாள். ஆனால் சற்றுநேரத்தில் அவளே வாயடைத்துப் போய் நிற்பாள் என்று அவளிடம் யாராவது சொல்லியிருந்தால் அவர்களைப் பார்த்து கெக்கபிக்கவெனச் சிரித்திருப்பாள்.
தோழியின் பிரச்சனை என்னவென்றால், உடன் பணிபுரியும் ஒருவன் அவளது தோழியை விரும்புவதாகவும் அவள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவனால் உயிரோடு இருக்க முடியாது என்றும் அவளிடம் பேசியே அவளைக் கரைத்திருந்தான்.
மதுரவாணியும் அவனின் சர்க்கரைப் பேச்சில் மதிமயங்கி, மனமிரங்கி அவனைக் காதலிக்கத் தொடங்கியிருந்தாள். அவள் காதலை ஏற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே அவளுடனான காதல் வாழ்க்கை போரடித்துப் போனதாகவும், கசந்துவிட்டதாகவும் அவளிடம் தெரிவித்தான்.
அதுமட்டுமல்லாது, அவன் எண்ணியதைப் போல் அவளில்லை என்றும் அவளைப் பிடிக்கவில்லை என்றும் அவளிடமிருந்து பிரிந்தும்விட்டான்.
அத்தோடு விட்டிருந்தால் தோழி, ‘தொலையட்டும்’ என அமைதியாகக் கடந்து போயிருப்பாள். ஆனால் அவளைப் பார்க்கையில் எல்லாம் அவளைச் சீண்டுவதும், அவளை மற்றவர்களின் முன்னிலையில் மட்டம் தட்டுவதுமாக இருந்தான்.
அதை மதுரவாணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனஉளைச்சலில் சிக்கித் தவித்தாள். எதற்கும் சட்டென்று அழாதவள், இப்போது அழுகையில் கரைந்து கொண்டிருக்கிறாள். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே கிளம்பி வந்துவிட்டாள் மதுமிதா.
கஷ்ட காலத்தில் கூட உறவுகளுக்கு உறுதுணையாக இல்லையென்றால் அப்படி என்ன வாழ்க்கை வாழ்கிறோம், அல்லது, சாதிக்கிறோம் என்ற எண்ணம் மதுமிதாவுக்கு எப்போதும் உண்டு.
ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பு, வேலை, சொந்த விஷயம் எனப் பல வேலைகள் கழுத்தை நெறிக்கும். அதனால் எந்நேரமும் பரபரப்பாகவே இருக்கிறான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் யாருக்காக?
ஓர் உறவுக்கு நம் அனுசரணை மிகவும் தேவைப்படும் நேரத்தில், கஷ்ட காலத்தில் உடனிருந்து ஆறுதல் சொல்லவில்லை என்றால் நாம் மனிதர்களாகப் பிறப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது? இதை வெகுவாய் நம்புபவள் மதுமிதா. அதைக் கடைப்பிடிக்கவும் செய்வாள்.
யாராவது உதவி, ஆறுதல், அனுசரணை என்று அவளிடம் வந்தால் அவளால் முடிந்தவரையில் உடனிருந்து தைரியமளித்து உதவுவாள்.
சென்னைக்கு வந்த மதுமிதா தோழியின் அன்னை வீட்டில் இருப்பதால் அங்கே எதையும் மனம் விட்டுப் பேச முடியாது என எண்ணி மதுரவாணியைக் கிளப்பி வெளியில் இழுத்துச் சென்றாள். கல்லூரிக் காலத்தில் நடந்த விஷயங்களைப் பற்றிச் சற்றுநேரம் பேசி அவளை ஓரளவுக்கு இயல்பு நிலைக்குத் திருப்பினாள்.
வரும் வழியெல்லாம் இப்படித் தகுதியே இல்லாத ஒருவனை நினைத்து எதற்காக அவள் தன் மனநிம்மதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பேசி ஒருவாறு தேற்றி வைத்திருந்தாள். அழுவதை விட்டுவிட்டு அடுத்தமுறை அவன் உன்னைச் சீண்டினால் அவனை என்ன செய்யலாம், எப்படி மட்டம் தட்டலாம் என யோசி என ஆலோசனை வழங்கினாள்.
அவர்கள் இருவரும் மாலின் வாகனம் நிறுத்துமிடத்துக்கு வந்து சேர்ந்த அதே சமயத்தில் படுவேகமாக உள்ளே நுழைந்த காரொன்று அவர்களது இரண்டு சக்கர வாகனத்தை உரசுவது போல் அவர்களைக் கடந்து சென்றது.
மதுமிதாவே தோழியின் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தாள். தடுமாறி எப்படியோ தன்னைச் சமன்படுத்திக் கொண்டவள், “கண்ணு தெரியலையா உனக்கு? ஏரோப்ளேனா ஓட்டற இடியட்” எனக் கோபத்துடன் அந்தக் காரின் ஓட்டுநரைத் திட்டினாள்.
கார்க் கண்ணாடியை இறக்கிவிட்டிருந்ததால் மதுமிதா ஏதோ திட்டுவது அவனுக்குக் கேட்டது போலும். கையை மட்டும் வெளியில் நீட்டிக், கட்டை விரலைக் கீழ் நோக்கிக் காட்டி, ‘நீ தோற்றுவிட்டாய்’ என்பதாக அவளிடம் சைகை செய்தான்.
பின்னர் எதையும் சட்டை செய்யாமல் அவன் தன் காரை நிறுத்திவிட்டு இறங்கினான். காரில் இருந்து இறங்கியவனைப் பார்த்ததும் மதுமிதாவின் தோழி சில நொடிகள் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள்.
அவனை நோக்கிப் போகப் போன மதுமிதாவின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியிருந்த மதுரவாணி, மாலுக்குள் விசிலடித்தவாறே செல்லும் அந்த இளைஞனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏ வாணி” என அவள் தோளைக் குலுக்கவும் தான் தன்னிலைக்கு வந்தாள். “மது, நான் இத்தனை நேரமும் சொன்னது இவனைப் பத்தியே. என்னை ஏமாத்தினவன்... வாடி அவன் இருக்கிற இடத்துக்குப் போக வேண்டாம். இப்படியே திரும்பிப் போயிடலாம்” எனப் பதறினாள்.
பற்றியிருந்த அவளின் கைகள் லேசாக நடுங்குவதைக் கண்டாள். அவள் சொன்னதைக் கேட்டதும் மதுமிதாவிற்குக் கோபம் தலைக்கேறியது.
“ஏன் இந்த மாலுக்கு அவனா சொந்தக்காரன்? அப்படியே சொந்தக்காரனா இருந்தாலும் நம்ம என்ன திருடவா வந்திருக்கோம்? காசு கொடுத்து வாங்க வந்திருக்கோம்” என எரிச்சலுடன் மொழிந்தாள்.
தோழி அவளைப் பாவமாகப் பார்க்க, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் மதுமிதா. “வாணி, ஏமாத்தின அவனே இவ்வளவு ஜாலியா ஊர் சுத்திட்டு இருக்கிறான் பாரு. எதுவும் பண்ணாத நீ ஏன் பயந்து ஓடி ஒளியணும்? இதுல ஏதாவது நியாயம் இருக்கான்னு நீயே சொல்லு. இன்னைக்கு அவனை ஒரு கை பார்த்திடலாம் வா” எனத் தைரியம் சொல்லி அவளை மாலுக்குள் அழைத்துச் சென்றாள்.
சற்றுநேரம் அங்கிருந்த கடைகளுக்குள் நுழைந்து பேசியவாறே ஒவ்வொன்றாகப் பார்த்தனர். மதுரவாணியின் பிறந்தநாள் அந்த வாரத்தில் வருகிறது. ஆகவே அதற்கென்று சுரிதார் ஒன்றை வாங்கிப் பரிசாகத் தந்தாள். பின்னர் அங்கிருந்த உணவுக் கடைகளில் அவர்களுக்குப் பிடித்த உணவை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தனர்.
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து அமர்ந்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்த அந்த ஏமாற்றுக்காரனைப் பார்த்துப் பெண்கள் இருவருக்கும் எரிச்சல் சுரந்தது.
அந்த இளைஞனும் அப்போது மதுரவாணியைப் பார்த்தான். உடனே அங்கிருந்து எழுந்தவன் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கையைப் பற்றி, ‘வா’ என அழைத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்தான்.
மதுரவாணியின் முன்னால் நின்றவன், “எப்படி இருக்க மதுரவாணி?” என மிகவும் எகத்தாளமாக வினவியவன், அவளின் பதிலை எதிர்பாராமல், “மீட் மை கேர்ள் ஃப்ரெண்ட், மை லவ்வர்” என அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான்.
மதுரவாணி சற்றுப் பயந்த சுபாவம் கொண்டவள் என்பதால் அவள் யாரிடமும் இதுவரையில் பதிலுக்குப் பேசி அவன் பார்த்ததில்லை. அதனாலேயே அவளைச் சீண்டினான். அதில் ஒரு குரூர திருப்தி. குட்ட குட்டக் குனிவாள் என்று நம்பினான். ஆகவே இப்பொழுதும் அதுவே நடக்கும் என்று கருதினான்.
அவளைப் பற்றி அறிந்தவனுக்கு மதுமிதாவைப் பற்றி ‘அ. ஆ’ எதுவும் தெரியாது. அவளின் குணமோ கண்ணாடியைப் போன்றது. முகத்தில் உள்ள குறைகளையோ நற்பண்புகளையோ எப்படி உள்ளதை உள்ளபடியே கண்ணாடி காட்டுகிறதோ அப்படியே காட்டிவிடுவாள்.
ஒரு போதும் மிகைப்படுத்தியோ, குறைத்தோ காட்டாது கண்ணாடி. அது போலவே சக மனிதர்களிடம் இருக்கும் குற்றங்குறைகளையும் நற்பண்புகளையும் அப்படியே வெளியே சொல்லிவிடுவாள்.
சற்றுநேரம் அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதா, “அப்படியா? ரொம்பச் சந்தோஷம்... ஆமா, கிரிக்கெட் விளையாடாமலேயே செஞ்சுரி அடிக்கப் பிளான் பண்ணறீங்க போல. ஆல் தெ பெஸ்ட்” எனச் சொல்ல, அவனுக்கு இவள் என்ன சொல்கிறாள் எனப் புரியவில்லை. இருந்தும் ஏதோ புகழ்கிறாள் எனச் சிரித்து வைத்தான்.
“இந்தப் பொண்ணு உங்களுக்கு எத்தனாவது லவ்வர்? சீக்கிரம் செஞ்சுரி அடிச்சிடுவீங்க போல” எனக் கிண்டலான குரலில் சொல்லவும், “ஏய்...” எனக் கையை நீட்டிக் கொண்டு முன்னே வந்து விட்டான்.
“பார்றா கோபத்தை... உண்மையைச் சொன்னா எப்படிக் கோபம் வருது? பார்த்துப் பத்திரமாச் சேர்ந்து ஒண்ணா இருங்க. இப்போ நிறையப் பேர் மனுசங்களை டிஷ்யூ பேப்பர் மாதிரி உபயோகிச்சுட்டு தூக்கி வீசிடறாங்க. அவங்களுக்கே அது பூமராங்க் மாதிரி திரும்பி வரும் எனப் புரியாம” என அவள் சொல்லவும், மதுரவாணிக்குப் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.
அதைப் பார்த்ததும் அந்த இளைஞனின் முகம் அஷ்ட கோணலாகியது.
“வா” என அவன் தன் காதலியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
“சூப்பர் மது, அவன் மூக்கை நல்லா உடைச்ச” என அவளுக்கு ஹைபை கொடுத்தாள்.
“இதை நீயே செஞ்சா நான் இன்னும் சந்தோஷப்படுவேன். உன்னைச் சண்டை போட சொல்லலை. அதே சமயத்தில் வந்த சண்டையை விடச் சொல்லலை” என்றாள்.
“கண்டிப்பா மது” என்றாள் மதுரவாணி.
நேராக நண்பர்களிடம் சென்ற அந்த இளைஞன் அவன் கிளம்பப் போவதாகச் சொல்லிவிட்டு அவனது புதிய காதலியை இழுத்துக் கொண்டு அகன்றான்.
அப்போது செல்லும் வழியில் ஐஸ்க்ரீம் வேண்டும் என அவன் புதிய காதலி சிணுங்க, ‘உனக்கு இல்லாததா பேபி’ எனச் சொல்லி அவளை ஐஸ்கிரீம் கடைக்குள் இழுத்துச் சென்றான்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த மதுமிதா, “அந்தப் பொண்ணுக்குச் சுரணையே இல்லையா?” என முகச் சுளிப்புடன் கேட்க,
“அந்தப் பொண்ணும் எங்க ஆபீஸ்ல இருக்கா மது. எல்லோர் கூடவும் போட்டி போட்டுட்டே இருக்கிற கேரக்டர். அப்படி என்னோட போட்டி போட்டு போட்டு அவனைத் தன் பக்கம் இழுத்துட்டா. கொஞ்சம் வசதி வேற... ப்ச்..” என்றாள்.
“நீ கவலைப்படாத. அவன் காதல்ல உண்மையில்லை. அந்தப் பொண்ணோட காதல்லேயும் உண்மை இல்லை... நீ தப்பிச்சுட்டன்னு நினைச்சுக்கோ. கர்மா சும்மா விடாது” எனத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சற்று நேரத்திலேயே, “ஏண்டி அவன் வண்டி எங்கே நிறுத்தி இருக்கான்னு நமக்குத் தெரியுமில்லையா? உனக்கு அவன் கார் அடையாளம் தெரியுமா?” என மதுமிதா கேட்க, ‘ஆமாம்’ என மதுரவாணி தலையாட்டினாள்.
சீக்கிரம் சாப்பிட்டுட்டு அந்தக் குப்பையெல்லாம் எடுத்துட்டு என்னோட வா” என இருக்கையிலிருந்து எழுந்தாள் மதுமிதா. மதுரவாணியும் அவசர அவசரமாக அங்கிருந்த குப்பையெல்லாம் எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். செல்லும் வழியில் என்ன செய்ய வேண்டும் என மதுரவாணிக்கு அறிவுறுத்தினாள் மதுமிதா.
“சூப்பர் மது” என உற்சாகத்துடன் சென்றாள் மதுரவாணி. அங்கே ‘பார்க்கிங்’ வந்த பிறகு அந்த ஏமாற்றுக்காரனின் காரைக் கண்டுபிடித்து, “இந்த வெள்ளைக் கார் தானே... நல்லா தெரியுமில்லையா?” என ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அந்தக் காரின் கண்ணாடியின் மேல் அவர்கள் சாப்பிட்டக் குப்பையைப் போட்டு பரப்பி வைத்தனர்.
குடித்துக் கொண்டிருந்த தண்ணியில் தக்காளி சாஸ் மற்றும் ‘மேயோனேசை’க் கரைத்து எடுத்து அவனது கண்ணாடியில் ஊற்றி கார் முழுவதையும் அலங்கோலாமாக்கினார்கள். இறுதியாகத் தக்காளி சாஸ் எடுத்து ‘இடியட்...’ எனக் கண்ணாடியில் எழுதிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
“சீக்கிரம் வாடி, அவன் முகம் போறப் போக்க ஓரமா ஒளிஞ்சு நின்னு பார்க்கலாம்” என வேகமாக நகர்ந்து சென்று ஒதுக்குப்புறமாக நின்று தங்களை மறைத்துக் கொண்டனர். இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது. இரண்டு கைகளையும் வாயின் மேல் வைத்து வந்த சிரிப்பை அடக்க முயன்றனர்.
“அவன் முகம் போற போக்க நம்ம கண்டிப்பா போட்டோ எடுத்து எல்லோருக்கும் அனுப்பி வைக்கணும்” என மதுமிதா தன் அலைபேசியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள்.
வீடியோ எடுப்பதற்காகத் தயாராக நின்று கொண்டிருந்த மதுமிதா மெதுவாகத் தலையை மட்டும் நீட்டிச் சற்று எட்டிப் பார்க்க, எதிர்புறத்தில் இருந்து ஓர் இளைஞன் கார்ச் சாவியை வலது ஆட்காட்டி விரலில் மாட்டிச் சுழற்றிக் கொண்டு அவர்களை நோக்கி வருவது தெரிந்தது.
‘இவன் எங்கே இங்க வந்தான்?’ எனத் தலையை உள்ளே பட்டென்று இழுத்துக் கொண்டாள் மதுமிதா. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. சில நொடிகளில் மீண்டும் மெதுவாகத் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்க்க அந்த இளைஞன் அதிர்ச்சியில் உறைந்து போய்த் தன் காரின் மேலிருந்த அலங்கோலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“அய்யய்யோ” என மதுமிதா சற்றே உரக்கக் கத்தினாளோ என்னவோ? அந்தச் சத்தம் அந்தப் புதியவனுக்கும் சற்றுக் கேட்டுவிட்டதோ என்னவோ? கண்களைச் சுழற்றிச் சத்தம் வந்த திசையைக் கூர்ந்து நோக்கினான்.
“என்னடி ஆச்சு?” என மதுரவாணி குசுகுசுவென்று பேச, “ஏண்டி, அவசரக்குடுக்கை... உன்னை ஏமாத்தினவனோட கார் இதுன்னு சொன்ன. ஆனா, இது வேற ஒருத்தரோட கார்” என மதுமிதா சொல்லவும், “அய்யய்யோ, இப்போ என்னடி பண்றது?” என அவளும் பதற ஆரம்பித்தாள்.
மதுரவாணி மெதுவாக எட்டிப் பார்த்துவிட்டு, “இதே கார் கலர். இதே கார் மேக். எல்லாம் கரெக்ட்” எனத் திட்டவட்டமாகச் சொன்னாள்.
மதுமிதா மீண்டும் எட்டிப் பார்த்து அங்கிருந்த சூழ்நிலையை ஆராய்ந்தாள். அதே போன்ற கார் எதிர்ப்புற வரிசையில் வேறொன்று நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். அவர்கள் செய்த மடத்தனம் புரிந்தது. தலைமேல் கையை வைத்துக் கொண்டாள்
“லூசு.. அதே மாதிரி கார் எதிர்ப்புறம் இருக்குது. நான் அப்போவே எத்தனை தடவைக் கேட்டேன்? அவன் கார் எனக்குத் தெரியாதான்னு அடிச்சு சொன்ன. அந்தக் காருக்குப் பதில் இந்தக் கார்ல இப்படிப் பண்ணி வச்சிருக்கோமே” எனப் பதறினாள்.
“இப்ப என்ன மது? இதைப் பண்ணினது நம்மன்னு யாருக்கும் தெரியாது இல்லையா? நம்ம போய்ச் சொன்னா மட்டுமே தெரியும். இப்படியே கிளம்பிப் போயிடலாம் வா” என மதுமிதாவின் கையைப் பற்றி இழுத்தாள்.
என்ன செய்வது எனப் புரியாமல் சற்றுநேரம் கையைப் பிசைந்து கொண்டிருந்தாள் மதுமிதா. தவறு செய்தால் உண்மையை ஒத்துக் கொள்ளும் குணம் அவளது. ஆனால் இப்போது ஒத்துக் கொண்டால் விளைவுகள் அதிபயங்கரமானதாக இருக்குமே.
அந்த இளைஞன் என்ன செய்கிறான் என மதுமிதா மீண்டும் தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். அவன் அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
“ஆமான்டா... யாருன்னு தெரியல. எதுக்காக என் கார்ல இப்படிப் பண்ணினாங்கன்னு தெரியலை” எனச் சொல்வது கேட்டது.
“என்ன, என் காரைப் பார்த்துப் பொறாமையில செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறியா? எதுக்கும் நீ கம்ப்ளைன்ட் எழுதிக்கோ” என மீண்டும் அவன் சொல்வது கேட்க, மதுமிதாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
“நீயே இங்க வர்றியா? சரி வா. இங்கேயே இருக்கேன்” என அவன் அலைபேசியில் பேசுவதைக் கேட்டதும், மதுமிதாவிற்குக் கை காலெல்லாம் உதற ஆரம்பித்துவிட்டன.
நல்லவேளையாக அவர்கள் நின்றிருக்கும் இடத்திலும் சரி, கார் நிறுத்தியிருந்த இடத்திலும் சரி காமெராக்கள் எதுவும் இல்லை என்பதை முன்பே ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே இந்தச் செயலில் இறங்கினார்கள்.
இப்போது காவலர்களை அழைக்கவும் அதற்குமேல் மதுமிதா தயங்கிக் கொண்டிருக்கவில்லை.
“வாடி போகலாம்” என உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டாள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது எப்படியாவது இவனிடம் மன்னிப்பை வேண்டிவிட வேண்டும் என எண்ணியவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.
தொடரும்
Last edited: